நல்ல உறக்கம், எத்தனை மணிநேரம் என்று தெரியாதளவிற்கு மதிய உணவு நேரம் வரை உறங்கியிருந்தாள் பிரனித்தா.
எப்போதும் இப்படி உறங்கும் சுபாவமில்லை. இரவு உறங்கவில்லை என்றாலும் பகலுறக்கம் என்பது அரிதானது அவளிடம்.
இன்று இப்படி உறங்கிக்கொண்டிருந்தவள் மெதுவாக கண் விழிக்க முயன்று இமைகளை பிரிக்க அவள் விழிகளுக்குள் எதிரே ஆவுடையப்பன்.
கை இல்லா வெள்ளை நிற பனியனுடன் போனில் பேசிக்கொண்டு லேப்டாப்பில் பார்வையிட்டபடி இருந்தான்.
முகத்தில் அத்தனை தீவிரம். அரவமின்றி அசையாமல் அவனை கலைக்காமல் பார்த்துக்கொண்டே விழித்திருந்தாள்.
“தேங்க்ஸ் யூ மேம். கண்டிப்பா ஸாரோட நீங்களும் ரிஷப்ஷனுக்கு வரனும்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவன் யாருக்கோ உடனே செய்தியை அனுப்பிவிட்டு போனை வைத்தவன் தன்னிரு கைகளையும் மேலே தூக்கி நெட்டி முறித்தான்.
அலுப்பு குறைவதை போலிருக்க உடலை இங்கும், அங்குமாக கைகளை முறுக்கி திருப்பியவன் அப்போது தான் மனைவியில் கவனம் வைத்தான்.
இன்னும் உறங்குகிறாள் என நினைத்தபடி எழுந்து நின்று பார்க்க அவள் நன்றாக விழித்திருந்தாள்.
“குட் ஆஃப்டர் நூன் மோகினி…” என முகமெல்லாம் புன்னகையுடன் உல்லாச சீட்டிகையுடன் அவளை நெருங்கினான்.
அருகே வருபவன் முகம் பார்க்க வெட்கியவள் போர்வையை முகத்தில் போர்த்திக்கொண்டு சுருண்டுகொள்ள அட்டகாசமான சிரிப்பு ஆவுடையப்பனிடம்.
“வெட்கம் கூட வருதே மோகினிக்கு…” என்று அவளை நெருங்கியவன் போர்வையை இழுக்க உருண்டு வந்து அவன் நெஞ்சில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“அப்ப ஓகே, எழுந்துக்கோ. குளிச்சிட்டு வா. லஞ்ச் சாப்பிடுவோம்…” என்று சொல்ல படக்கென முகத்தை உயர்த்தியவள்,
“லஞ்சா?…” என திகைத்து கேட்க,
“பின்ன ப்ரேக்பாஸ்ட்டா? லஞ்ச் டைம் அதானே சாப்பிடனும்?…” என்று அவள் நெற்றியில் முட்டியவன் அங்கே அழுத்தமாய் முத்தமிட அதை உணராமல்,
“அவ்வளோ நேரமா தூங்கிட்டேன்?…” என எழுந்தாள் தூக்கிவாரிப்போட நேரத்தை பார்த்துக்கொண்டே.
“நான் சொன்னேன்ல. நல்லா தூங்குவன்னு. இந்த ரெண்டுநாள் உன்னை நல்லா தூங்க வைக்கவேண்டியது என் பொறுப்பு…” என்று சீண்டியவன் கைகளை தள்ளிவிட்டவள்,
“அம்மா, அப்பா தேடிருப்பாங்க. போச்சு. என்ன நினைப்பாங்க என்னை பத்தி?…” என புலம்பிக்கொண்டே இறங்கி குளியலறை செல்ல புன்னகையுடன் அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான்.
போனை எடுத்து இருவருக்கும் குடிக்க ஜூஸ் சொல்லிவிட்டு வைத்தவன் லேப்டாப்பில் அமர்ந்தான்.
அன்று வெளியே எங்கும் செல்லவில்லை. இன்னொரு முக்கியமான விஷயத்தில் இருக்க அதனை தாண்டி மற்றவற்றை தனக்கு கீழிருப்பவர்கள் பொறுப்பில் விட்டிருந்தான்.
அவனது ரிசப்ஷன் வெறும் வரவேற்பு மட்டுமல்லவே. அதில் எத்தனை திட்டங்கள்.
சிங்காரத்தின் பெயரின் மேல் அவன் போட்டு வைத்திருக்கும் வட்டம் மிக பெரியது.
அதற்குள் சிங்காரத்தை கொண்டுவந்து நிறுத்த அத்தனை மெனக்கெட்டிருந்தான் ஆவுடையப்பன்.
முகத்தில் அமைதி ஒட்டியிருந்தாலும் மனதிற்குள் உலைக்களம் தான். சிங்காரம் பற்ற வைத்த நெருப்பில் எரிந்து வெந்து மீண்டிருப்பவனை மீட்பதற்குள் எத்தனை போராட்டங்கள்.
இனி அவன் எதிர்காலம் பற்றி எல்லாம் யோசிக்கும் நிலை இல்லை. எல்லாவற்றையும் மீறி வாழ வைக்க வேண்டிய கட்டாயம்.
வாழ்ந்து சாதிக்க வேண்டியவனின் எதிர்காலம் இன்னொரு பேராசைக்காரனின் சூழ்ச்சிக்கு இரையாகிவிட கூடாது.
மூன்றாமவனாக இருந்தாலே விடமாட்டான். உயிராய் உறவாடியவனை எப்படி விடமுடியும்?
சுடும் நினைவின் தாக்கத்தில் கண்களை மூடியவன் லேசாய் உடல் தளர பின்னால் சாய்ந்தமர்ந்தான் அவன்.
பதவியேற்று இத்தனை மாதங்கள் காத்திருந்தது இதற்காக தானே? அவனின் விரல் மற்ற விரல்களின் மீது உரசிக்கொண்டது.
“அச்சோ என்ன இது?…” என்றவளின் சத்தத்தில் விழி மலர்த்தியவன் அவளின் தோற்றத்தை பார்த்து கண்கள் சிரிக்க எழுந்து நின்றான்.
“என்னது என்ன இது?…” என சாவகாசமாக வந்து அவளின் முன்னே நிற்க,
“என்ன இப்படி வரைஞ்சிருக்கீங்க?…”
“ஏன் நல்லா இல்லையா?…” என்று அவள் பின்னே வந்து நின்று அணைத்தவன் அவள் தோளில் தன் முகத்தை ஊன்றிக்கொண்டான்.
“நல்லா இல்லைன்னு எல்லாம் இல்லை. ஆனா பார்க்கறப்போ கூச்சமா இருக்கு…”
“நெத்தில கிஸ் பண்ணிருக்கேன். என் கை உன் கன்னத்தை பிடிச்சிட்டிருக்கு. நீ கண்ணை மூடியிருக்க. உன் பொட்டு என் கன்னத்தில ஒட்டியிருக்கு. அவ்வளோ தானே? அதுவும் ஷோல்டர் வரை தான் ட்ராயிங். இதுல என்ன கூச்சம்?…” என்றான் ஆராயும் விதமாய்.
வரைபடத்தை பார்த்துக்கொண்டே இன்னும் அதிலேயே லயித்து நின்றவளின் மயக்கத்தை கலைத்தவன்,
“ஹேய் மோகினி, எப்படி வேணும்னு சொல்லு. வரையலாம். எனக்கு தோணினதை வரைஞ்சா நீ என்னடான்னா?…”
“அச்சோ, நல்லாயில்லைன்னு சொல்லவே இல்லை. அவ்வளோ க்யூட். சத்தியமா பிடிச்சிருக்கு தான்…” என்று அவள் கடைசியில் இழுக்க,
“ஏன் முழுசா வரையலைன்னு வருத்தமோ? ஓகே செஞ்சிருவோம்…” என்று சிரிக்க,
“என்னது?…” என்று அரண்டு போய் கலவரமாய் அவனை பார்க்க அதில் வெடித்து சிரித்தவன்,
“சும்மா சொன்னேன். கூல்…” என்றதும் பெருமூச்சுடன் அவன் தோளில் சாய்ந்தாள்.
“ஹேய் மோகினி, இங்க பார். இது நமக்காக, நமக்கான தனிப்பட்ட விஷயம். இதை நீயும், நானும் மட்டுமே பார்க்க போறோம். அதனால என்ஜாய் தி மொமென்ட் மோகினி…” என்று அவளின் கன்னம் தட்டினான்.
“ஆனா எல்லாரும் பார்க்கற மாதிரி நீ ஒன்னு செஞ்சிருக்க…” என்று தன் பக்கம் திருப்பியவன்,
பார்த்ததுமே பிரனித்தா விழிகள் விரிந்துகொள்ள தன் வேலை என புரிந்துபோக முகத்தை மூடிக்கொண்டாள்.
“வேணும்னு சத்தியமா பண்ணலை நான்…” மூடிய கைகளுக்குள் இருந்து தீனமான குரல் திணறியபடி வந்தது.
“ஓகே, நீ வேணும்ன்னு பண்ணலை. ஆனா இப்ப என்ன பண்ணலாம்?…” உடல் குலுங்க அப்படி ஒரு சிரிப்பு ஆவுடையப்பனிடம்.
“வேற தான் வாங்கனும். ஆனா வேணும்னு பண்ணலை…” என மறுபடியும் பாவம் போல சொல்ல,
“ஓகே, ஈஸி…” என அவளின் தலையை பிடித்து ஆட்டினான்.
“இன்னும் நீங்க கிளம்பலையா எங்கயும்?…” என கேட்டுக்கொண்டே அவனை விட்டு நகர்ந்தவள் தலையை உலர்த்த ஆரம்பித்தாள்.
“ம்ஹூம். நீ எழுந்தா தேடுவன்னு இருந்தேன். அதான். அதோட இப்ப உன் கூட இருக்கனும்னு தோணுச்சு. கிளம்பிட்டா பட்டுன்னு விட்டுட்டு போன மாதிரி இருக்கும் எனக்கும்…” எனும் பொழுதே ஜூஸ் வந்துவிட்டது.
“குடிச்சிட்டு மத்ததை பாரு. காலையில இருந்து சாப்பிடாம இருக்க…” என்று சொல்லி அவளிடம் தந்தவன் தானும் எடுத்துக்கொண்டு சோபாவில் அமர புருஷோத்தமனிடமிருந்து அழைப்பு.
“உங்க பி.ஏ தான்…” என அவனிடம் மொபைலை எடுத்து நீட்டியவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தாள்.
“ஒரு விஷயம் கேட்கனுமே?…” என ஆரம்பிக்க,
“கேளேன்…” என லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருந்தான்.
தனது கட்சி அலுவலகத்தில் நடப்பதை இங்கிருந்து கவனித்தபடி ஜூஸை குடிக்க,
“உங்க பி.ஏ புருஷோத்தமனை நீங்க ஷார்ட்டா எப்படி கூப்பிடுவீங்க?…” என கேட்டதும் சட்டென அவனுக்கு புரையேற ஜூஸ் உடையில் சிதறியது.
குடித்த ஜூஸ் மூக்கில் ஏறிவிட்டது ஆவுடையப்பனுக்கு. கண்ணீர் வரும் வரை அப்படி இருமினான்.
“போச்சு…” என்று எழுந்து அவனின் தலையில் தட்டியவள்,
“இதுக்கெல்லாம் புரையேறுமா? என்ன மினிஸ்டர் நீங்க?…” என்று சொல்ல சிரிப்பு வந்தது அவள் வியாக்கியானத்தில்.
“உருப்படியா யோசிக்கிறதே இல்லை நீ. நீயே ஷார்ட் பண்ணி பாரேன். என்ன வருதுன்னு…” என்று சொல்லியவன் புன்னகை கொஞ்சமாய் குறைந்து வேலையில் கவனம் செல்ல பிரனித்தா முகம் சுருங்கிவிட்டது.
“என்னாச்சு? திடீர்ன்னு ப்யூஸ் போன பல்ப் மாதிரி இருக்க?…” என்றவன்,
“என்ன யோசிக்கிற நீ?…” என்றான்.
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை…” என சொல்லிவிட்டு எழுந்து செல்ல,
“ஹேய் நில்லு…” என கை பிடித்தவன்,
“என்னன்னு சொல்லிட்டு போகனும். மனசுல ஒன்னை வச்சுட்டு சொல்லாம மறைக்க நினைக்காத. அது தப்பாகிடும்…” என்று அழுத்தி சொல்லவும் மீண்டும் அமர்ந்தாள்.
“நீங்க பேசினது தான். இப்ப உருப்படியா யோசிக்கலைன்னு வேற சொன்னீங்களா? அதான் உருப்படியா என்ன செய்யலாம்ன்னு நினைக்கறேன்…”
“பிரனித்தா…”
“ப்ச், அதான் சொன்னேனே, ஒரு ப்யூட்டிஃபுல் லைஃப். அதுவும் நீங்க சொன்ன மாதிரி. அப்படி என்னால உங்களை இம்ப்ரெஸ் பண்ண முடியுமான்னு யோசிக்கறேன். சின்ன விஷயம். இது கூட உருப்படி இல்லைன்னு சொன்னீங்களா? அதான்…”
தன் வார்த்தையில் அவள் மீண்டும் எவ்விடம் சென்று நிற்கிறாள் என புரிந்தது ஆவுடையப்பனுக்கு.
“ஏன் இவ்வளோ யோசிக்கனும் நீ? நம்ம கல்யாணம் நடந்தது வேணா வேற மாதிரி இருக்கலாம். ஆனா நமக்குள்ள பிடிச்சு தானே செஞ்சுக்கிட்டோம்? விருப்பம்ன்னு ஒன்னு எங்க போச்சு இதுல? இன்னொருத்தர் வாழ்க்கை மாதிரி வாழனும்னு நினைக்கிறது…”
ஆவுடையப்பன் கொஞ்சம் கண்டிப்புடனே இதனை அவளிடம் பேச ஆரம்பிக்க தன்னை புரியாமல் பேசுகிறான் என தெரிந்துபோனது பிரனித்தாவிற்கு.
“இன்னொரு வாழ்க்கையை பார்த்து நாம வாழ நினைச்சா அது ரீப்ளேஸ்மெண்டா போய்டும். நம்மோட வாழ்க்கையை யார் வாழ? நான் நீங்க நினைக்கிற மாதிரி நினைக்கலை…”
“பின்ன?…”
“நான் இல்லைன்னா என்னை நீங்க தேடுவீங்களா? தேடுறதுன்னா அது வந்து எப்படி சொல்ல?…” என்று அவள் கைகள் புரிய வைக்க முடியாத இயலாமையில் அலைபாய கண்களும் அதற்கு ஏற்ப அசைந்தாடியது.
ஆவுடையப்பனின் மனதில் அவளின் தவிப்பு சிறப்பாக சென்று அமர்ந்து அவள் எண்ணங்களை விவரிக்க கண்மூடி கிரகித்தான்.
“எனக்கு தெரியலை. நான் நம்மோட ப்யூச்சர், நம்ம எப்படி இருப்போம். இப்படி தான் யோசிக்கறேன். உண்மையா சொல்லனும்ன்னா உங்களை ரொம்ப விரும்பி தான் கல்யாணம் செஞ்சுகிட்டேன். ஆனா சிலநேரம் தோணும் அன்னைக்கு எவ்வளோ ஈஸியா வேண்டாம்ன்னு சொன்னோம்ன்னு…”