“நீங்க இல்லாம இருக்க முடியாது, என்ன நடந்தாலும் உங்களோட தான் வாழனும்னு ஒரு எண்ணம் அன்னைக்கு எனக்கு இல்லாம போச்சே? அப்ப அந்தளவுக்கு நான் உங்களை விரும்பலையோன்னு நிறைய தோணுச்சு…” என்றாள் பரிதவிப்புடன்.
தன்னை புரிந்துகொள்வானா என்ற பிரயாசையுடன் அவனின் முகத்தை பார்த்துக்கொண்டே சொல்ல,
“இவ்வளோ யோசிக்கனும்னு அவசியமில்லை மோகினி. அன்னைக்கு உனக்கு அப்படி தோணினா என்னை வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டதா அர்த்தமா? இல்லையே…” என புன்னகைத்தான்.
“நமக்கான நேரம் அமையலை. ரொம்ப நம்மோட உணர்வுகளை பகிர்ந்துக்கலை. மனசுவிட்டு ஒப்புவிக்கலை. எல்லாம் நீ தான்னு சரணடையலை. காதல்ன்னு ஒன்னு நாம பேசிக்கவே இல்லை…” என்று சொல்ல அமைதியாய் இருந்தாள்.
“இதெல்லாம் செய்யலைன்னா நாம ஒருத்தரை ஒருத்தர் விரும்பலைன்னு அர்த்தமா என்ன? நாம என்ன சின்ன பிள்ளைங்களா பின்னாடியே சுத்திட்டு ப்ரப்போஸ் பண்ணிக்க?…” என்றான் கிண்டலாக.
“என்ன?…” என்று பிரனித்தா முறைக்க,
“ட்ரூ மோகினி, இதோ உன்னை நான் தேடுவேனான்னு தெரிஞ்சுக்க இவ்வளோ தவிச்சு போற. இதுல இருக்கே நம்மோட பிடித்தம் என்னன்னு. என்னை நீ எவ்வளோ தேடறன்னு. இது போதும்மா…” என்றான் அவள் கையை பிடித்துக்கொண்டு.
“அமைச்சருக்கு பேச சொல்லியா தரனும். சிறந்த மேடை பேச்சாளராச்சே…” என உதட்டை சுழித்தாள்.
“ஓகே, நீ கீழே போ. நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…” என எழுந்தவன் லேப்டாப்பை லாக் செய்தான்.
“சொல்ல மறந்துட்டேன், சித்தப்பா உன்னை ரிசப்ஷன் முடியவும் பேக்டரிக்கு வர சொன்னார்…”
“உடனேவா?…”
“ஆமா, அவருக்கும் உடம்பு படுத்துதே. கொஞ்சம் போய் பார்த்துக்கோ. போரடிச்சா வீட்டுக்கு வா. ஆனா கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கோ…” என்றவன்,
“எப்படியும் இந்த மாசத்தோட உன் வொர்க்கிங் பீரியட் முடியுது தானே?…”
“ஹ்ம்ம், எங்கேஜ்மென்ட் அப்பவே லெட்டர் குடுத்துட்டேன். ஆனாலும் கல்யாணம் வரை ஒருமாசம் வேலை பார்க்கறதா தானே சொல்லியிருந்தேன். இந்த மந்த் ரிலீவாகிருவேன்…”
“ஓகே, நீ கிளம்பு. ஜூஸ் கொட்டினது வேற கசகசன்னு இருக்கு. லைட்டா குளிச்சிட்டு வரேன்…” என்று பாத்ரூம் சென்றுவிட்டான்.
தனது மொபைலுடன் வெளியே சென்றவள் கீழே மதிய உணவிற்கு செல்ல அங்கே வாசுகி மட்டுமே இருந்தார்.
அசோகனுக்கும், மனோகரனுக்கும் மதிய உணவு பேக்டரிக்கே அனுப்பியாகிவிட்டது.
வாசுகி தேமே என அமர்ந்திருப்பதை பார்த்ததும் பாவமாக இருந்தது பிரனித்தாவிற்கு.
தங்கள் வீடென்றால் ஏதாவது ஒரு வேலை அவருக்கு இருந்துகொண்டே இருக்கும். இங்கே அப்படி இல்லாமல் பொழுதை நெட்டி தள்ளிக்கொண்டு இருந்தார்.
“ம்மா…” என்றதும் திரும்பி பார்த்தவர்,
“இப்பத்தான் வரியா நீ?…” என்றார் சோர்வுடன்.
“இப்ப பரவாயில்லையா? நல்லா தூங்கினியா நீ?…” என கேட்டார்.
பிரனித்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை இவ்வளவு நேரம் உறங்கியதற்கு பிடித்து காய்ச்சுவார் என நினைக்க இப்படி கேட்டதும் வாயை திறக்காமல் நின்றாள்.
தானாக ஒன்று சொல்லி மாட்டிக்கொள்ளவேண்டாமே என நினைத்து பவ்யமாக தண்ணீரை எடுத்து பருக,
“உட்கார் பிரனி, ஜூஸ் குடிச்சாச்சா? எங்க உன் வீட்டுக்காரர்?…”
“ஹ்ம்ம், இன்னும் எவ்வளோ நாள் உனக்கு வேலை?…” என அடுத்ததை வாசுகி கேட்க,
“ஏன் ம்மா?…”
“அவசியமா தான். சொன்னா புரிஞ்சுக்கோ பிரனிம்மா. உன்னோட டைவர்ஷனுக்கு வேலை பார்க்கேன்னு சொன்ன. ஓகே. ஆனா நைட்டெல்லாம் பார்க்கறது அவ்வளவா நல்லா இல்லை. அதுவும் இப்பதான் கல்யாணமாகியிருக்கு…” என்றார்.
என்றைக்கு தன்னையும் அழைத்து செல்லுங்கள் என மகள் சொன்னாளோ அன்றிலிருந்தே வாசுகி யோசித்து தான அவளிடம் பேசுவது.
இப்போதும் இதனை பட்டென்று போட்டு உடைக்காமல், வேலை பார்த்தவரை போதும் என்று அதட்டாமல் அமைதியாக எடுத்து கூறினார்.
“ம்மா…”
“போதும்டா. நீ அடுத்து உன் வாழ்க்கையை பார். உன் அப்பா, மாமாவோட அங்க போ. நேத்தே என்கிட்டே சொல்லிட்டிருந்தார் அசோகன் அண்ணா. சீக்கிரம் உன்னையும் பேக்டரிக்கு கூப்பிட்டு பொறுப்பை உன் கையில ஒப்படைச்சா தான் நிம்மதியா இருக்கும்ன்னு…”
“அவங்களும் சொன்னாங்கம்மா. பார்க்கறேன்…” உடனே அவள் சரி என சொல்ல,
“அப்பறம் இனிமே நைட்ல வேலை பார்க்காத. அதுவும் மருமகனோட இருக்கும் போது…” கொஞ்சம் தயங்கி தான் இதனை வாசுகி சொன்னதும்.
“ஓகே ம்மா…”
“அவருக்கும் தலைக்குடைச்சலான வேலை தான். வீட்டுக்கு வரப்போ அமைதியை தான் விரும்புவாங்க. உன்னோட நேரம் செலவு பண்ணனும்ன்னு நினைப்பாங்க. அப்படி இருக்கும் போது நீயும் வேலைன்னு இருந்தா நல்லாயிருக்காது…”
“ஓகே ம்மா…”
“காலையில நான் அவர்கிட்ட கேட்கும் போது நைட்டெல்லாம் லேப்டாப்லையே இருந்தா. மார்னிங் வேலை முடிச்சிட்டு தான் தூங்கினா. தூங்கட்டும்ன்னு உனக்காக யோசிக்கிறார் அவர். நீ என்ன பண்ணனும்? உனக்கு இதுக்கு மேல நான் சொல்லனுமா?…” என்று கேட்க தலையசைத்தாள் பிரனித்தா.
“அப்பறம் இன்னொன்னு…” வாசுகி சொல்ல,
“இன்னுமா?…” என மலைத்தவள் கணவனை எண்ணி பல்லை கடித்தாள்.
“எப்படி கோர்த்துவிட்டு வேலையை பார்த்திருக்கார் இந்த வொய்ட். வரட்டும் வச்சிக்கறேன்…” என முனுமுனுக்க,
“என்ன கேட்கிறியா நீ?…” வாசுகியின் சத்தத்தில் கவனத்தை அங்கே வைக்க,
“என்ன பிரனி?…” என்றார்.
“இல்லம்மா, நீங்க சொன்னதை தான் நினைச்சேன்…”
“என்ன நினைச்சியோ? அவங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வந்து போற வரைக்குமாச்சும் புடவை கட்டு. இது உனக்காக மட்டுமில்லை. உன் வீட்டுக்காரர் சொல்ற மாதிரி வச்சுக்காத பிரனி…” என்று சொல்லியவர் மேலும் பேசும்முன் சட்டென மௌனமானார்.
“சரி ரெண்டுபேரும் சாப்பிடுங்க. நான் உள்ள இருக்கேன்…” என்று நகர்ந்து சென்றுவிட,
“ரெண்டுபேரா?…” என பிரனித்தா திரும்பி பார்த்தால் அங்கே ஆவுடையப்பன் வந்துகொண்டிருந்தான்.
“மருமகனுக்கு மரியாதை போல?…” என சொல்லிக்கொண்டவள் அவன் அருகே வரும்வரை பார்வை அவனிடத்தில் தான்.
“மோகினிக்கு என்னவாம்?…” என புருவம் உயர்த்த,
“இல்ல இதுவே என் மேல ஜூஸ் கொட்டிருந்தா நான் வேற ட்ரெஸ் மாத்திட்டு வந்திருக்கனும். மாத்தினது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்…”
“சோ?…”
“ஆனா உங்களுக்கு அந்த கஷ்டமே இல்லை. வேற ஷர்ட், வேஷ்டி மாத்தினாலும் ஒரே கலர். யாரும் குறுகுறுன்னு பார்க்கவோ, கேட்கவோ மாட்டாங்க…” என்று சொல்லி சிரிக்க,
“அதான் நீ பார்த்தியே, குறுகுறுன்னு. ஏன் மாத்தினேன்னு உனக்கு தெரியுமே. கேட்கவும் செஞ்சுட்ட…” என்றவன்,
“உட்கார் பசிக்குது…” என சாப்பிட அமர்ந்தான்.
“மார்னிங் சாப்பிடலையா நீங்க?…” என தானும் அமர்ந்து இருவருக்கும் எடுத்து வைக்க,
“காலையில சாப்பிட்டா இப்ப பசிக்காதா?…” என்ற எதிர் கேள்வியில் அவனை முறைத்தாள்.
“சரி என்னவாம்? உன் அம்மா சாப்பிட்டாங்களா?…”
“ம்ஹூம், இல்லை. நீங்க உருட்டினதுல எங்கம்மா அட்வைஸோ அட்வைஸ்….”
“உனக்கா? கேட்ப நீ?…” என கேலியாக அவன் சிரிக்க,
“நைட் ஷிப்ட் பார்க்க கூடாதாம். வேலையை விடனுமாம்…” என்று அவனிடம் சொல்ல நமுட்டு சிரிப்புடன் தலையசைத்தவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
“நெக்ஸ்ட்?…” என கேட்க,
“சுடிதார் வேண்டாமாம். இங்க உங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வருவாங்களாம் ரிசப்ஷன்க்கு. அதுவரைக்குமாச்சும் புடவை கட்டனுமாம். நீங்களே சொல்ற மாதிரி வச்சுக்க கூடாதாம்…”
“நான் ஏன் சொல்ல போறேன்? எனக்கு எதுவானாலும் நோ அப்ஜெக்ஷன்…” என்று கண் சிமிட்டியவன்,
“குட் குட்…” என தலையசைத்து புன்னகையை அடக்கினான் ஆவுடையப்பன்.
“எதுக்கு சிரிக்கறீங்கன்னே புரியல எனக்கு…” என அவனின் சிரிப்பை கண்டு கேட்க,
“இனிமே கேட்காமலே என்ன எதுன்னு நல்லாவே புரிஞ்சுப்போம் மோகினி. இப்ப போய் நீ ரெஸ்ட் எடுப்பியாம். நான் கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு வருவேனாம்…” என்று சொல்லிவிட்டு உணவை முடித்துக்கொண்டு அலுவலக அறை நோக்கி சென்றான் ஆவுடையப்பன்.
வரவேற்பிற்கு முதல்நாள் ஆவுடையப்பன் பக்க நெருங்கிய சொந்தங்கள் வந்திருக்க மற்றவர்கள் வந்ததெல்லாம் மறுநாளே.
வரவேற்பன்று பிரனித்தாவே எதிர்பாராத வகையில் மணிமேகலை, பத்ரி, நேகா வந்துவிட்டனர்.
சிங்காரத்தை தவிர்த்து மற்றவர்கள் அதிகாலையே வந்து சேர சிங்காரம் நேரத்திற்கு மட்டும் வருவேன் என்பதை போல சொல்லி அனுப்பியிருந்தார்.
அதுவே இன்னும் ஆச்சர்யம் என்றால் பிரனித்தாவிற்கு ஆவுடையப்பன் தந்தது மற்றொரு இன்ப அதிர்ச்சி.
அந்த அதிர்ச்சியின் வரிசை அடுத்தடுத்து தொடரும் போல அன்று இரவே சிங்காரத்தின் மீதான நடவடிக்கை துவங்கியது.
ஹவாலா ஊழல் பிரிவில் பல மோசடிகள், கொலை முயற்சியும், இன்னும் பிற குற்றங்களும் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்க தேடப்படும் குற்றவாளியாக பிரசுரிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிங்காரத்தின் தலைமறைவு செய்தியும், அவரை தேடும் பணியில் காவலர்கள் என்னும் செய்தியும் முக்கிய செய்தியில் இடம்பெற்றது.