“கல்யாணம் பண்ணின அன்னைக்கு கூட இந்த சந்தோஷத்தை பார்க்கலை நான்…” ஆவுடையப்பன் சொல்லிவிட ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“என்னதான் பிடிச்சவங்களோட கல்யாணமாகி இருந்தாலும் அது நடந்த விதம், சூழ்நிலை இப்படி இருக்கே. எனக்கு நம்ம கல்யாணம் இப்படி நடக்கனும்னு தான் ஆசை…”
“இப்படின்னா இவ்வளோ பிரமாண்டமான்னு கூட இல்லை. ரெண்டுபக்க சொந்தங்களோட எல்லாரோட ஆசிர்வாதம், கேலி, கிண்டல், சந்தோஷம், கொஞ்சம் கண்ணீர் இப்படி நடந்திருக்கனும்…”
“ஊர் பார்க்க மேடையேறி கொஞ்சமா வெட்கப்பட்டு, நிறைய எதிர்பார்ப்போட, சின்னதா படபடப்பு இருக்கும் போது நீங்க தாலி கட்டுற அந்த நிமிஷம் லேசா உங்களை நிமிர்ந்து பார்க்கனும். இப்படி நிறைய கனவு. அது எல்லாம் ஒண்ணுமில்லாம போயிடுச்சுன்னு தான் அன்னைக்கு ரொம்ப ஏமாற்றம்…”
“கல்யாணம் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம். ஒரே ஒருமுறை வர கூடிய சந்தோஷம். பிறந்ததுல இருந்து வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறும் போது எப்படி இருக்கனும்? அதுதான் அதை ரொம்பவே மிஸ் பண்ணினேன்…”
“வீட்டை எதிர்த்து லவ் மேரேஜ் பண்ணிருக்கறவங்கட்ட கூட கேளுங்க. இதை தான் சொல்லுவாங்க. வாழ்நாள் முழுக்க நினைச்சு சந்தோஷப்பட்டு பேசக்கூடிய நினைச்சு பார்க்க கூடிய ஒரு நிகழ்வு…”
படபடவென அவள் பேச பேச கேட்டுக்கொண்டிருந்தவனுமே நெகிழ்ந்து போயிருந்தான்.
“அச்சோ கண்ணெல்லாம் கலங்குது. மேடையில வச்சு இதை கேட்டு. ப்ச், போங்க லேசா கண்ணீர் வந்திருச்சு…” என கண்ணை டிஷ்யூ வைத்து ஒற்றி எடுத்தாள்.
“அதை எல்லாம் இந்த ரிசப்ஷன் போக்கிருச்சா மோகினி?…” ஆவுடையப்பன் கேட்க,
“போக்கிருச்சு தான். சொன்னா சிரிக்க கூடாது. இது ஒரு ஜாலி. இன்னைக்கு கதாநாயகியே நான் தான்னு ஒரு ஃபீல். இன்னைக்கு எல்லார் பார்வையும் என் மேல தான் இருக்கும். ஒவ்வொருத்தரும் நான் என்ன போட்டிருக்கேன், என்னன்னு பேசிப்பாங்க…”
பிரனித்தா சொல்ல சிரிப்பை அடக்க முடியவில்லை ஆவுடையப்பனுக்கு. இந்த பெண் என்னவெல்லாம் நினைக்கிறாள் என தோன்றாமல் இல்லை.
“என்ன சிரிக்கறீங்க? நிஜமாவே இதெல்லாம் பேசிப்பாங்க. ஏன்னா நான் கூட செஞ்சிருக்கேன், பேசிருக்கேன். ஒரு காமன் திங்கிக் இது…” என்று சொல்ல தலையாட்டி சிரித்தவன் மேடையில் ஏறுபவனை பார்த்து புன்னகைத்தான்.
“ஹலோ ஸார், கங்க்ராட்ஸ்…” என்று இருவருக்கும் வாழ்த்து சொல்லி அவன் பரிசை நீட்ட,
“தேங்க்ஸ் பவன்…” என்று வாங்கிக்கொண்ட ஆவுடையப்பன்,
“ஸார் வரலையா?…” என்றான்.
“பாஸ் கொஞ்சம் பிஸி. அதான் வரலை, உங்களுக்கு இன்னும் டூ ஹவர்ஸ்ல கால் பன்றேன்னு சொல்லியிருக்கார்….” என்றான்.
“ஓகே, நான் பேசிக்கறேன்…”
“அப்பறம், நிரஞ்சன் கம்ப்லீட்லி சேஃப். உங்களுக்கு அவரோட வாழ்த்தை சொல்ல சொன்னார். இன்னும் ஒன் வீக்ல எழுந்து நடக்க ட்ரெயினிங் ஆரம்பிக்கலாம்ன்னு பிஸியோல சொல்லிருக்காங்க…”
“டேக் கேர் ஸார்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் பவன்.
“என்னாச்சு? ஏன் ஒருமாதிரியாகிட்டீங்க?…” என அவனையே கவனித்துக்கொண்டிருந்த பிரனித்தா கேட்க,
“ஒரு முக்கியமான நபர். மேபி நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணுவோம். அப்ப சொல்றேன்…” என புன்னகைக்க தூரத்தில் சிங்காரம் வந்துகொண்டிருந்தார்.
முகத்தில் என்னவோ புதிதாய் சாதித்ததை போலிருக்க இங்கே ஆவுடையப்பன் கண்கள் இடுங்கியது.
“என்னவோ பண்ணிட்டார்…” என சத்தமின்றி மீசைக்கடியில் முனுமுனுத்தவன் அவரை பார்த்தபடி நின்றான்.
சிங்காரத்திற்கு விஷயம் கசிந்திருக்கிறது என அவரின் முகத்திலேயே தெரிந்து போனது.
‘இனி எங்கும் தப்பிக்க முடியாது. வரட்டும்’ என ஆவுடையப்பன் முகம் மாறாமல் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நிற்க மேடையேறி வந்துவிட்டார்.
“அப்பறம் செஞ்சுட்டல?…” என சிங்காரம் வன்மத்துடன் கேட்க,
“நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்…” என கை கூப்பினான் ஆவுடையப்பன்.
“கும்பிடுடா. இன்னும் எவ்வளோ நேரம் இந்த சிரிப்புன்னு பார்க்கறேன்…” என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்தை பார்த்தார்.
பத்ரியுடன் பேசியபடி இங்கே பார்த்துக்கொண்டிருந்த நேகாவை பார்த்தவர் முகத்தில் அக்னி கனல்.
நேகாவை பார்த்த பார்வையை ஆவுடையப்பனும் கண்டுகொள்ள சட்டென உள்ளூர ஒரு பதட்டம் உருவானது.
“தலைக்கு மேல போயாச்சு. இனி என்ன செய்யனும்னு நான் பார்த்துக்கறேன். எனக்கே விலங்கு போட பார்க்கறியா நீ? என்னால உடைக்க முடியாதா என்ன?…” என்று சொல்லிய சிங்காரம்,
“இதுக்கு பெருசா அனுபவிப்படா…” என சிரித்துக்கொண்டே கை கூப்பியவர்,
“சாப்பிட இந்த பக்கம் தானே?…” என்று சொல்லிவிட்டு உணவருந்தும் இடம் நோக்கி செல்ல ஆவுடையப்பனின் பார்வையை கவனித்து புருஷோத்தமன் சிங்காரத்தின் பின்னே சென்றான்.
பத்ரியை பார்த்தவன் தலையசைத்து தன் அருகே அழைக்க நேகாவுடன் வந்தான் அவனும்.
“நீங்க சாப்பிட போகலையா?…” என்றதும்,
“உங்களோட சேர்ந்து சாப்பிடலாம்ன்னு அம்மா சொல்லிருக்காங்க…” என்றான் பத்ரி.
“ஓகே, உங்க அப்பா சாப்பிட போயிருக்காங்க. என்னன்னு கொஞ்சம் பார்த்து கூட இருங்க…” என அனுப்பி வைத்தவன்,
“நேகா பிரனித்தாவுக்கு ஒரு ஹெல்ப்…” என்று அவளை அங்கேயே நிறுத்திவைத்தான்.
“நீங்க போங்க, வரேன்…” என்ற நேகா பத்ரி செல்லவும்,
“என்னண்ணா?…” என்றாள் அவனிடம்.
“அப்பா எங்கம்மா?…”
“கிளம்பிட்டாரே? உங்ககிட்ட சொல்ல வந்தார். கூட்டமா இருக்குன்னு என்கிட்டே சொல்லிட்டு கிளம்பிட்டார்…”
“ஓஹ்…” என்றவன்,
“ஓகே கால் பண்ணு…” என்றான்.
“என்னண்ணா மாமாவுக்கு தெரிஞ்சிருச்சா?…”
“மேபி. அவர் உன்னை பார்த்த பார்வையே சரியில்லை. என்னவோ இருக்கு…” என்றவர்,
“அப்பாவை காண்டேக்ட் பண்ணு. நான் கால் பண்ணிட்டு வரேன்…” என சொல்லிவிட்டு தனது மொபைலை எடுத்து பவனுக்கு அழைத்தான்.
என்ன நடக்கிறது என எதுவும் புரியாமல் பிரனித்தா மாற்றி மாற்றி முழிக்க நேகா தகப்பனிடம் பேசிவிட்டு பிரச்சனை எதுவுமில்லை என்றதும் நிம்மதியாக ஆவுடையப்பனை பார்த்தாள்.
“ப்ராப்ளம் இல்லைண்ணா…” என சொல்ல,
“ஹ்ம்ம், இதுவரைக்கும்…” என்றவன் தானும் பேசிவிட்டே வந்தான்.
முகத்தில் ஏகத்திற்கும் கடுமை. அவனிடம் இத்தனை ஆக்ரோஷம் யாரும் கண்டிராதது.
எதிரே கட்டப்பட்டிருந்தவன் குற்றுயிராய் தீனமான குரலில் கெஞ்சிக்கொண்டிருந்தான் தன் உயிருக்கு.
ஆவுடையப்பன் உடை, கைகள் என எல்லாம் குருதியின் அடையாளம் வழிந்திருந்தது.
“சிங்காரம் சொல்லி தான் ஸார் செஞ்சேன். போலீஸ் தான் பிடிப்பாங்க. சீக்கிரம் ஜாமீன்ல வந்திடலாம்ன்னு சொன்னார். இல்லைன்னாலும் ஜெயில்ல இரு, உன் குடும்பத்துக்கான பணத்தை நான் செட்டில் பன்றேன்னு சொன்னார். என்னை போலீஸ்ல குடுத்திருங்க ஸார்…”
“என் பிள்ளைங்களுக்கு தகப்பன் இல்லாம பண்ணிடாதீங்க. சத்தியமா தப்பு தான். இனிமே பண்ணவேமாட்டேன்…” என்றவனை ஆவுடையப்பன் விட்ட அறையில் கடவாய் பற்கள் தெறித்து வெளியே விழுந்தது.
“குடும்பம் உனக்கு மட்டும் தான் இருக்காடா ராஸ்கல்…” என்றவன் மீண்டும் அறைவிட கட்டப்பட்டிருந்தவனின் தலை தொங்கியது.