சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்தவனின் உயிர் இப்பவோ அப்பவோ என்னும் விதமாய் ஊசலாடிக்கொண்டிருந்தது. வாங்கிய அடியின் வலியில் அலறி மயங்கியிருந்தான்.
“ஸார் திரும்ப மயங்கிட்டான்….” லால் சொல்ல,
“தெளியட்டும்…” என கையை உதறியவன் மறுபக்கம் பார்க்க அங்கே மற்றொரு சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரின் கண்களில் உயிர் பயம் அப்பட்டமாய்.
“ச்சை இந்த ப்ளட் வேற?…” என அவரின் சட்டையில் தன் கையை துடைத்தவன் எதிரிருந்த சேரில் அமர்ந்தான்.
ஆவுடையப்பன் முகமெல்லாம் வியர்வை. சட்டையெல்லாம் நனைந்து உடலோடு ஒட்டி உள்ளிருக்கும் பனியனையும் காண்பித்தது.
“லால், தண்ணியை குடு…” என கேட்டவன் தனது கையை நீட்ட லால் வந்து நீரை ஊற்றினான்.
கையை நன்றாக கழுவிவிட்டு முகத்தையும் அலம்பிக்கொண்ட ஆவுடையப்பன் தண்ணீரை குடித்தபடி எதிரிருந்தவரை பார்த்தான்.
“என்ன சிங்காரம்?…” என புறங்கையால் வழிந்த நீரை துடைத்தபடி கேட்க,
“தண்ணி…” என்றார் அவர் தாகமாய்.
“தண்ணி வேணுமா? குடுப்போமே. ஏன் குடுக்காம?…” என்று எடுத்து நீட்ட வாங்கும் நிலையில் இல்லை சிங்காரம்.
“கட்டை வேணும்னா அவுக்க சொல்லவா? வாங்கி குடி. இல்லன்னா நானே தரவா?…” என எழுந்தவன்,
“பாரேன், என் பொண்டாட்டியை தூக்க நீ இவனை அனுப்பி வைச்சிருக்க. உனக்கு தாகத்துக்கு நான் தண்ணி குடுக்கறேன். என் நேரம்…” என்றான் ஆவுடையப்பன்.
தண்ணீரை தருவானா மாட்டானா என்னும் நிலையில் நாக்கு மேலே ஒட்டியிருந்தது சிங்காரத்திற்கு. எச்சிலை கூட விழுங்க முடியவில்லை.
“அடடா இந்த பாட்டில் தண்ணி காலியாகிருச்சே…” என்று தான் குடித்த தண்ணீர் பாட்டிலை கீழே வீசியவன்,
“லால் ஸ்பெஷல் தண்ணியை கொண்டு வா…” என்று கை நீட்ட சிங்காரத்திற்கு உயிரில்லை.
அந்த பாட்டில் மூடியை திறந்தபடி தன் அருகே வந்தவனை பார்த்து மிதமிஞ்சிய பயத்துடன் முகத்தை திருப்பினார் சிங்காரம்.
அந்த மண்டபத்தை விட்டு வெளியேறிய பத்து நிமிடம் தான் ஞாபகம் இருந்தது அவருக்கு.
கண்விழித்து பார்க்கும் பொழுது ஆவுடையப்பனின் கஸ்டடியில் தான் பிரனித்தாவை கொலை செய்ய ஏற்பாடு செய்தவனின் அருகே கட்டப்பட்டிருந்தார்.
அவனை தான் முடிக்க போவதாக நினைத்திருக்க அவன் அதற்கும் மேல் எத்தனுக்கு எத்தனாக இருப்பான் என நினைக்காமல் போன மடத்தனத்தை எண்ணி உள்ளுக்குள் பொசுங்கி போனார்.
“தண்ணியை குடி சிங்காரம்…” என்று சிங்காரத்தின் முகத்தில் நீரை ஊற்ற அதில் ஒரு சொட்டை கூட குடிக்காமல் துப்பியவர்,
“இதெல்லாம் நல்லதுக்கு இல்லை ஆவுடை. என்னை பேசாம போலீஸ்ல ஒப்படைச்சிடு…” என்று சொல்ல,
“அதுக்கா இவ்வளோ வேலை பார்த்தேன் நான்?…” என்ற ஆவுடையப்பன்,
“சிங்காரம் சிங்காரம், நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லை பாரேன்…” என சிரித்தான்.
“போலீஸ் என்னை தேடிட்டிருக்கு. என்னை நீ இப்படி கடத்தி அடைச்சு வச்சிருக்கறது தெரிஞ்சா உனக்கும் பிரச்சனை. என்னை போலீஸ்ல விடு. கோர்ட் என்ன பண்ணனுமோ பண்ணட்டும்…” என சிங்காரம் சொல்ல மௌனமாக ஒரு சிரிப்பு.
“ஹ்ம்ம், உன்னை லட்டாட்டம் கோர்ட்ல ஹேண்டோவர் பண்ணிட்டு நான் பொறி உருண்டை சாப்பிட்டு போகவா சிங்காரம்?…” என்று கேட்க,
“என்னவோ பன்ற, என்னவோ பண்ணிட்ட. உனக்கு என்ன? நான் தப்பை ஒத்துக்கிட்டு தண்டனையை அனுபவிக்கனும் தானே? அதுக்கு நான் உயிரோடவாச்சும் இருக்கனும். என்னை விடு…” என கெஞ்ச,
“வாரே வா…” என கை தட்டியவன்,
“அவ்வளோ பயம் உனக்கு உன் உயிர் மேல?…” என சிரித்தான்.
ஆவுடையப்பனின் இந்த புன்னகை ஒவ்வொன்றும் சிங்காரத்தை பீதியில் ஆழ்த்தியது.
“உன் உயிருனா உயிரு. மத்தவனுங்களுக்கு என்ன?…” என தன் தலைமுடியை காண்பித்தவன்,
“என்னை என்னன்னு நினைச்ச சிங்காரம்? என் வயசு உன் அனுபவம் அப்படின்னு சொல்லுவியே? எங்க போச்சு உன் அனுபவம்?…”
“ஆவுடை…”
“என்ன? எரியுதா? நல்லா எரியனும். உன் மேல ஒரு அடி விழலை. ஏன்னு யோசிச்சியா நீ? அரசியல்ல பெரிய கைன்னு உன்னை நீயே பீத்திப்ப தான? யோசி….” என சொல்ல கண்கள் வெளியே வந்துவிடும் அளவிற்கு சிங்காரம் பயத்தில் நடுங்கினார்.
“உன் கண்ணுல எச்சரிக்கையையும், பதட்டத்தையும் பார்த்துட்டு நான் தான் தப்பு பண்ணிட்டேன். இல்லைன்னா சுதாரிச்சிருப்பேன்டா. முதல்ல என்னை வெளில விடு. நானே போய் சரணடைஞ்சிடறேன். மூணு நாளா சோறு, தண்ணி இல்லாம சித்தரவதை பண்ணிட்டிருக்க நீ…”
சிங்காரத்தின் பார்வை தன்னை போல குற்றுயிராய் கிடந்தவன் மீது அச்சத்துடன் படிந்து ஆவுடையப்பனிடம் நிலைத்தது.
“எனக்கு பதட்டம் தான். நீ என்ன பண்ண போறன்னு யோசிக்காம, கவனிக்காம விட்டுடுவேனோன்னு பதட்டம். என் கண்காணிப்புல நீ இருக்கனும்ன்னு எச்சரிக்கை…” என்றவன்,
“உன்னை மாதிரி இருக்க சொல்றியா? உன்னோட அகம்பாவம், உன்னோட திமிர் எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கு பார். அதை நான் எப்பவும் செய்யமாட்டேன். அதனால பயம் இருக்கத்தான் செய்யனும். இதுல என்ன வெக்கக்கேடு?…”
“ஆமா, நான் சுதாரிக்காம விட்டுட்டேன் தான். அங்க நீ ஜெயிச்சிட்ட…” பல்லை கடித்தபடி சிங்காரம்.
“ஒருதடவை இல்லை. என்னை தெரிஞ்சும் நீ கோட்டை விட்டது மூணுதடவை. எந்த பணத்துக்காக என் ப்ரென்ட் நிரஞ்சனை உயிரோட எரிச்சியோ அந்த பணத்தை உன்கிட்ட இருந்து தூக்கினேன்ல அப்ப புத்தி வரலை…”
“ரெண்டாவது பிரனித்தாவை குடும்பத்தோட கடத்த முயற்சி பண்ணி அவங்களுக்கே தெரியாம அவங்களை பலிகடாவாக்கி என்னை பணிய வைக்க பார்த்து உன் முட்டாள்த்தனம் என்கிட்ட தோத்த. அப்பவும் புத்தி வரலை…”
“இத்தனை செஞ்சப்பவே கொஞ்சமாச்சும் உன் மூளை மூலையில எதாச்சும் மிச்சமீதி இருந்தா யோசிக்க வேண்டாமா சிங்காரம்?…” என்றான் கால்மேல் காலிட்டு அமர்ந்தபடி.
“நிரஞ்சனை கை வச்சப்பவே உன்னை ஒண்ணுமில்லாம செஞ்சு எல்லாத்தையும் என் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தேன். என் பொண்டாட்டி மேலையே கை வைக்க பார்த்தல்ல நீ…” என்றவன் மீண்டும் சுர்ரென்று நரம்பு புடைக்க அப்போது தான் மயக்கம் தெளிந்தவனின் கன்னத்தில் பளாரென விட்டான்.
சர்வாங்கமும் ஒடுங்கியது சிங்காரத்திற்கு. இந்த மூன்று நாட்களாக ஒரு அடி மேலே விழவில்லை.
ஆனால் பார்த்தும், பேசியும், தான் ஏற்பாடு செய்திருந்த ட்ரைவரை அடித்தும், அதன் துளிகள் தன் மீது தெறித்தும் என ஒவ்வொரு நொடியும் சிங்காரத்திற்கு நரகம் தான்.
“உனக்கு வேணும்னா என்னவேணா செஞ்சுப்ப நீ. அப்படித்தானே? இப்ப உன் உன் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுன்னு பார்க்காம நேகாவையும் சேர்த்து சாகடிக்க பார்த்திருக்க? சும்மா விடலாமா?…” என பல்லை கடித்தபடி கேட்க,
“ஆவுடையப்பா…” என்ற சிங்காரம் அதற்கு மேல் எப்படி கெஞ்சுவது என்றும் தெரியவில்லை.
“என்னமோ உன் அப்பன் வீட்டு சம்பாத்தியத்தை கட்டி ஆளற மாதிரி எவ்வளோ பேச்சு. அந்த பணம் யாருக்கு போகனுமோ அங்க போகனும்னு சேர்க்க நினைச்சவன் உயிரை எடுக்க பார்த்த தானே?…” என்றவன்,
“அப்பறம் முக்கியமான விஷயம் சொல்லனும். கேட்டா சந்தோஷப்படுவ நீ…” என்று கூற சிங்காரம் விழித்தார்.
எதை சொல்லுவானோ? என்ன செய்து வைத்துள்ளானோ? என்ன செய்ய போகிறானோ ஒன்றும் புரியவில்லை.
ஆதாரங்கள் இருந்தும், அதனை அரசாங்கத்தில் ஒப்படைத்தும், அவன் எதிர்பார்த்ததை போல தன்னை கைது செய்ய ஆணை பிறப்பித்தும் இத்தனை தாமதம் செய்வது ஏன் என்று புரியாமல் அடிவயிற்றில் புளியை கரைக்க இப்போது புதிதாய் என்ன என்று பயத்துடன் பார்த்தார்.
“நிரஞ்சன் உயிரோட இருக்கான்…” என்று சொல்லவும் சிங்காரத்தின் கண்களில் அப்படி ஒரு அதிர்ச்சி.
“என்ன?…” என சிங்காரம் கேட்க,
“புரியலையா சிங்காரம். நீ எரிச்சு கொலை செய்ய பார்த்த நிரஞ்சன் உயிரோட சௌக்கியமா இருக்கான்னு சொன்னேன். பார்க்கறியா?…” என கேட்ட ஆவுடையப்பன்,
“கண்டிப்பா பார்ப்ப. ஆனா அப்ப பதில் சொல்ற நிலையில நீ இருக்கமாட்ட…” என்றான் கர்ஜனையுடன்.
“கண்டிப்பா நான் வெளில வர முயற்சி பண்ண மாட்டேன். என்னை கோர்ட்ல ஒப்படைச்சிடு…” என சொல்ல ஆவுடையப்பனுக்கு அழைப்பு.
லால் கொண்டு வந்து போனை தர யார் என பார்த்தவன் வாங்கி காதில் வைத்தான்.
“ஹ்ம்ம், வாங்க…” என்று சொல்லவும் யார் என தெரியவில்லை.
பசி மயக்கம் ஒருபக்கம், தொண்டை எல்லாம் வறண்டு தலை சாய்ந்துவிடும் போலிருந்தது.
மூன்று நாளாக அதே இடத்தில் அமர்ந்திருந்ததில் முதுகு வலிக்க வயதான நேரத்தில் அவரால் முடியவில்லை.
தன் முன்னே அமர்ந்திருந்த ஆவுடையப்பன் எழுந்து நின்றதும் அவன் பார்த்த திசையில் திரும்பினார்.
அங்கே வந்துகொண்டிருந்தவனை முதலில் தனது பார்வையின் மங்கலான ஒளியில் கண்டுகொள்ளமுடியாமல் போனது.
இமை சிமிட்டி நன்றாக விழித்து பார்க்க அருகே நெருங்கிவிட்டவனின் முகத்தை பார்த்ததுமே மிச்சமிருந்த நம்பிக்கையும் வற்றி போனது.