“சரி சொல்லு…” என தன் கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான்.
“உங்களுக்கு தெரியாம புதுசா ஒன்னும் நான் சொல்லை. ஒரு எக்ஸ் மினிஸ்டரை அதுவும் இப்ப கவர்மென்ட் அரஸ்ட் வாரன்ட்டோட தேடிட்டிருக்கற மினிஸ்டரை இப்படி நீங்க அடைச்சு வச்சிருக்கறது சட்டத்துக்கு புறம்பானது தானே?…”
“எஸ், தெரியுமே….”
“தெரிஞ்சும் ஏன் பண்ணிருக்கீங்க? உங்களுக்கு அவரை போலீஸ்ல ஹேண்டோவர் பண்ணனும். அதுக்கு தானே எல்லாம் பண்ணினீங்க. அப்பறம் ஏன் அடைச்சு வச்சிருக்கீங்க. அதுவும் எவ்வளோ அடி?…”
“சிங்காரம் மேல ஒரு அடி படலை…”
“இல்லைன்னாலும், இது எவ்வளோ பயத்தை குடுக்கும்? ஒவ்வொரு நிமிஷமும் என்ன நடக்குமோன்னு பயந்து பயந்து சாகறதுக்கு சமம். இந்த பாவம் நமக்கு ஏன்?…”
“பாவமா? இது பாவம் புண்ணியம் பார்க்கிற நேரமில்லை. பார்க்கிற அளவுக்கு அந்தாள் வொர்த்தும் இல்லை. அப்பறம் போலீஸ்ல கண்டிப்பா குடுப்பேன். ஆனா இப்படி இல்லை…” என்று சொல்ல இன்னும் அடிவயிறு கலங்கியது.
“உங்கப்பாட்ட தான். நான் வந்து கூட்டிட்டு போனேன்னு சொன்னேன். சரிங்க மாப்பிள்ளைன்னு சொல்லிட்டார்…”
“எவ்வளோ பெரிய பொய். புளுகுமூட்டை அரசியல்வாதி…” என பில்லோவை எடுத்து அவனை மொத்த,
“பில்லோவுக்கு வலிக்கும்டி மோகினி. கைல அடியேன்…” என்று கண் சிமிட்ட பிரனித்தாவிற்கு இன்னும் அவனின் அலட்சியத்தில் பயந்து வந்தது.
“என்ன பார்க்கற?…” என கேட்க,
“தெரியலை. இதனால உங்களுக்கு எதுவும்…” என சொல்லும் பொழுதே கண்ணில் நீர் ததும்பிவிட்டது.
“ப்ச், பைத்தியமாடி நீ. இங்க வா…” என்று அணைத்துக்கொண்டான்.
“யாருக்கும் எதுவும் ஆகாது. நீ பயப்பட ஒண்ணுமே இல்லை. என்னாகிடும்ன்னு நினைக்கிற?…”
“இது தப்பு தானே? தேடப்படற குற்றவாளியை அடைச்சு வச்சிருக்கறது. அதுவும் அவர் செஞ்சிருக்கற விஷயங்கள் எல்லாம். சப்போஸ் வெளில தெரிஞ்சா சொந்தக்காரர்ன்னு நீங்க பாதுகாப்பு குடுக்கற மாதிரி ஆகிடுமே?…” என்றாள்.
“எனக்கு இதெல்லாம் தெரியாதா? தெரிஞ்சும் பண்ணறேன்னா யோசிக்கனும் மோகினி. சில தப்புக்களுக்கு பதில் தப்புக்கள் தான். அது முடிவுல சரியா மாறும் வரைக்கும் தப்பா தான் தெரியும்…” என்றான்.
“என்னால இங்க இருக்க முடியலை…”
“நானும் நீயும் மட்டும் இருக்கறதா நினைச்சுக்கோ…” அவளின் தலையை கோதிவிட,
“வீட்டுல கூட யார்கிட்டயும் சொல்லலை. நான் போறேனே? ப்ளீஸ்…”
“எங்கயும் போகலைம்மா. இங்க தான் உன் கூடவே இருக்கேன்…” என அருகே அமர்ந்துகொன்டாலும் கீழே நடப்பதை தனது மொபைல் வழியே பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
மறுநாளும் பிரனித்தா செல்ல அவன் அனுமதிக்கவில்லை. வீட்டினருக்கு அவனே பதிலளித்துவிட்டான்.
அத்தனை பிடிவாதம் அவளை அனுப்ப முடியாதென்று. அதற்கு மறுநாள் காலை அவள் விழிக்கையிலேயே சுட சுட செய்தியாக சிங்காரத்தின் செய்தி தான்.
தலைமறைவாகியிருந்த முன்னாள் அமைச்சர் ஹார்பர் வழியே பணத்துடன் தப்ப முயன்று போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிபட்டார்.
போலீசாரிடமிருந்து தப்ப முயன்றதில் விபத்து ஏற்பட உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சிங்காரம்.
மேலும் செய்திகளுக்கு என ஊடகங்கள் சிங்காரத்தையும், அவர் எப்படி தப்ப முயன்றார் என்பதையும் வரைபடம் கொண்டு விளக்காத குறையாக அலசி ஆராய்ந்துகொண்டிருந்தது.
டிவியை பார்த்தபடி அதிர்ச்சியில் பிரனித்தா இருக்க பாலை ஆற்றியபடி வந்தான் ஆவுடையப்பன்.
“காபி எல்லாம் போட தெரியாது. அதான் பால். குடிச்சிட்டு குளிச்சிட்டு கிளம்பினா வீட்டுக்கு போகலாம். இல்லைன்னா இங்கயே ஹனிமூன் செலிபரேட் பண்ணிடலாம் மோகினி…” என்று புன்னகையுடன் சொல்ல,
“நீங்க மனுஷனே இல்ல தெரியுமா? எவ்வளோ ப்ளான்?…” என்று செய்தியை காண்பித்து அவனை திகைப்புடன் பார்க்க,
“ஹ்ம்ம், நிறைய யோசிச்சு போட்ட ப்ளான் தான். எப்படியும் சிங்காரம் தப்பிக்க என்ன வேணா செய்வார். போலீஸ்ல சும்மா மாட்டினா அவருக்கு தண்டனை என்ன கிடைச்சிடும்?…”
“அதுக்கு இதுவா தண்டனை?…”
“நிச்சயம் தண்டனை தான். தன் மேல தப்பில்லைன்னு நிரூபிக்க அவருக்கு இப்ப வாய்ப்பில்லை. உயிரை காப்பாத்திக்கவே போராட கூடிய நிலைமை….” என்றவன்,
“அடுத்ததா சும்மா போலீஸ்ல ஒப்படைச்சிருந்தா ராஜபோகமா முன்னாள் அமைச்சர்ன்ற அதிகாரத்துல சுகமா கஷ்டமே இல்லாம ஜெயிலுக்கு போட்டு கையாட்டிட்டு வருவார். அதுக்கா இத்தனை கஷ்டப்பட்டேன்…” என கூறினான்.
“ஹ்ம்ம், வெல்…” என்றாள் பிரனித்தா.
“பாராட்டா? எதுக்கு, உன்னையும் இங்க ஹவுஸ் அரஸ்ட் பண்ணினதுக்கா மோகினி?…” என்று கேட்க,
“நீங்க மினிஸ்டரே இல்லை…” என்றவள் அடுத்து சொல்ல வரும் முன் அவனின் பார்வையில் அதனை விழுங்கிக்கொள்ள,
“நெக்ஸ்ட் நிக் நேமா? உதை தான்…” என்று காதை பிடித்து திருகவும்,
“அதான் சொல்லலையே விடுங்க ப்ளீஸ்…”
“ஓகே, குளிச்சிட்டு கிளம்பி வா. நான் புருஷோத்தமனை வர சொல்றேன்…” என சொல்லிவிட்டு மொபைலுடன் தள்ளி செல்ல பிரனித்தா படுக்கையில் அமர்ந்தபடி அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவன் மீதான அந்த பயம் இன்னும் உள்ளுக்குள் இருந்தாலும் அதனையும் மீறிய நேசம் பெருகிக்கொண்டே தான் இருந்தது இப்போது வரை.
ஒவ்வொன்றிலும் தனித்துவம் காட்டி வளைய வருபவன் மீதான காதல், ஆம் அவன் மீது அவள் அத்தனையும் காதலாம்.
நினைக்கையில் உள்ளத்தின் பூரிப்பு முகத்தில் விகசிக்க ஆவுடையப்பன் விரும்பிய அந்த புன்னகை அவளின் முகம் முழுவதும்.
போனில் பேசியபடி அவளை அவளின் பார்வையை கவனித்தவன் கண்கள் மின்ன ‘ வரவா’ என்றான் சைகையில்.
“அய்யோடா…” என அடித்து பிடித்து எழுந்து குளிக்க சென்றவளை புன்னகை தூவ பின் தொடர்ந்தான் ஆவுடையப்பன்.