மருத்துவமனையில் நேகாவின் தந்தை அத்தனை வேதனையுடன் மகளை பார்த்துக்கொண்டு நின்றார்.
“அப்பா சொல்றேன்லடா நேகாம்மா…” என கெஞ்ச,
“அப்பா இதுக்கும் அவருக்கும், அத்தைக்கும் சம்பந்தமில்லைப்பா. புரிஞ்சுக்கோங்க. அதுவும் மாமாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. இப்ப போய் வந்திருன்னு சொல்றீங்க…” என்றாள் நேகா.
பத்ரியும், மணிமேகலையும் இறுகி போய் நின்றார்கள் அங்கே. எதுவும் பேச முடியவில்லை. பேசும் நிலையிலும் இல்லை.
சிங்காரம் செய்யும் தகிடுதத்தங்கள் ஓரளவு அறிந்தது தான். ஆனால் சொந்த மருமகளை கொலை செய்யும் அளவிற்கு செல்வார் என்பது பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது.
“என்னம்மா பேசற? அந்த மனுஷன் அரஸ்ட்டானா வேற எதுவுமே பண்ணமாட்டாரா? எனக்கு சந்தேகமா இருக்கு. இப்பவுமே இந்த அரஸ்ட், ஆக்ஸிடன்ட் இதெல்லாம் கூட கண் துடைப்போன்னு…”
“அப்பா…”
“போதும்டா. ஒத்தை பொண்ணை பெத்து நான் படற பாடு. உன்னை அங்க விட்டுட்டு ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம். என் பொண்ணு நீ எப்படி இருக்கன்னு விடிஞ்சா, அடைஞ்சா உன்னை நினைச்சே என் உயிர் போகுது…”
பெற்றவராய் அவரின் கலக்கம் மற்றவர்களுக்குமே புரிந்தது. இதுவரை பத்ரி, மணிமேகலையை கொண்டு தான் அமைதியாக இருந்தார்.
இப்போது உயிரை பறிக்கும் அளவிற்கு என்னும் பொழுது அதற்கு மேல் அவரால் முடியவில்லை.
“சரி உனக்காக நான் உன்னை கூப்பிடலை. மாப்பிள்ளையும் வரட்டும். நம்ம வீட்டுல இருங்க. நான் ஒத்தையில தானிருக்கேன்…” என்று சொல்ல நேகா திகைத்து போனாள்.
“ம்மா…” என்ற அலறலில் பத்ரி அவளை நெருங்கி தாங்கியிருந்தான்.
“பார்த்தும்மா…” என்று நன்றாக அமர வைத்தவன் கையை பிடித்தபடி நிற்க வலியில் கண்ணிலிருந்து நீர் கொட்டிவிட்டது.
அவருக்கு புரிந்தது மகள் மருமகன் மீது வைத்திருக்கும் பிரியம் என்னவென்று. ஆனாலும் பெற்றவருக்கு அத்தனை பயமும் இருந்தது.
எங்கே சிங்காரம் மீண்டும் வந்துவிடுவாரோ என. இந்த பிரச்சனையில் தலை கொடுத்தது கூட ஷேஷாவின் சொல்லிற்கும், அமைச்சர் ஆவுடையப்பன் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் தான்.
அதுவும் மகளிடம் எதையுமே மறைக்காதவர் இதனை அவளிடம் கேட்டு செய்ய, அத்தனை தைரியம் தந்தாள் நேகா.
“கண்டிப்பா செய்ங்கப்பா. யாராச்சம் பூனைக்கு மணி கட்டனும். அதுல நாம ஒரு துரும்பா இருந்துட்டு போவோமே? நல்லது நடக்கனும் போது எல்லாருமே ஒதுங்கினா? பிரச்சனை எதுவும் வராது. நீங்க செய்ங்க…” என்றாள்.
பெரிய தொழிலதிபராக இருந்தாலும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தன்னுடைய ஊழியர்கள் மேல் அத்தனை அன்பு வைத்திருப்பவர்.
இல்லாதவர்களுக்கு தன்னாலான நற்காரியங்களை செய்பவருக்கு ஷேஷாவின் மேல் எப்போதும் பெரிய அபிமானம் உண்டு.
அதிலும் இது நிராதரவான குழந்தைகள் எதிர்காலமும் அடங்கி இருக்க மறுக்க எதுவுமில்லாமல் துணிந்துவிட்டார்.
நிரஞ்சனை பற்றி ஓரளவு தெரிந்து மனதிற்குள் மகளை எண்ணி அச்சம் இருந்துகொண்டே இருந்தாலும் நித்தமும் போன் செய்து மகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்பவர்.
இப்போது இத்தனை பேர் இருக்கையில் அமைச்சர் வீட்டு நிகழ்ச்சியில் இப்படி கொலை முயற்சி செய்பவர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார் தானே என தோன்றியது.
கதவு திறக்கும் சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கே ஆவுடையப்பனும், பிரனித்தாவும் வந்தனர்.
“அத்தை அம்மா உங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டு வர சொன்னாங்க…” என்று உணவு வைத்திருந்த கூடையை மணிமேகலையிடம் தர வாங்கிக்கொண்டார் கண்ணீருடன்.
அவர்கள் வந்தும் மற்றவர்களிடம் மௌனம் கலையாமல் இருவித இறுக்கத்துடனே இருக்க,
“என்னாச்சு? எதுவும் ப்ராப்ளம் இல்லையே?…” என்றான் ஆவுடையப்பன் நேகாவை பார்த்து.
லாரியின் டயர் ஏறி இருக்க கையின் எலும்புகள் உடைந்திருந்தது. அத்தனை விரைவில் அனுமதிக்கப்பட்டதால் உடனடி சிகிச்சையில் போல்ட் ப்ளேட் வைத்து கையில் ஆப்பரேஷனை செய்திருந்தனர்.
இயல்புநிலை திரும்ப சில மாதங்கள் ஆகலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்க இப்போது அதனை கொண்டு தான் பிரச்சனையோ என தோன்றியது.
“வரனும். இல்லைன்னா…” என்றவர் என்ன சொல்ல என மகளை பார்க்க பரிதவிக்கும் விழிகளுடன் நேகா விசும்பினாள்.
“அவங்க உடம்பு முதல்ல குணமாகட்டும். அதான் இத்தனை பேர் இருக்கோமே? அதுவும் சுயநினைவே இல்லாம இருக்கறவரால என்ன பண்ணிட முடியும்?…” என்றாள் பிரனித்தா.
“அதுவே எனக்கு நடிப்போன்னு தோணுதும்மா. அரசியல்ல இது ஒன்னும் புதுசில்லையே? உடம்பு நல்லாயிருக்கும் போதே முடியலைன்னு நாடகமாடி தப்பிக்க என்ன பண்ணன்னுன்னு பார்க்கறவங்க எடுக்கற முதல் முடிவு இது தான்…” என்றவர்,
“என்னப்பா, நான் ஒன்னும் தப்பா சொல்லலையே? உங்க பாலிட்டிக்ஸ்ல இதெல்லாம் நடக்கும் தானே?…” என ஆவுடையப்பனிடம் கேட்க தலையசைத்து ஆமோதித்தான்.
“ஹ்ம்ம், கேட்டுக்கோ…” என நேகாவின் தந்தை அவளிடம் சொல்ல,
“ஆனா இந்த ஆக்ஸிடென்ட் நிஜம்…..” ஆவுடையப்பன் சொல்ல,
பத்ரி, மணிமேகலையை வைத்துக்கொண்டு அவனால் இன்னும் சற்ற அழுத்தி எதையும் சொல்ல முடியவில்லை.
சற்று நேரம் கனத்த அமைதி நிலவ பிரனித்தாவிடம் கண்ணை காண்பித்தவன் நேகாவின் தந்தையுடன் வெளியே வந்தான்.
அவரின் முகம் இன்னும் தெளிவில்லாமலே இருந்தது. மகளும் வரமுடியாதென சொல்ல எப்படி தன் நிலையை உணர்த்த என்று தவித்து போயிருந்தார்.
“இப்ப ஏன் நீங்க இவ்வளோ டென்ஷனாகறீங்க?…” என ஆவுடையப்பன் கேட்க,
“டென்ஷனாகாம? என்னை என்னப்பா பண்ண சொல்ற? அத்தனைபேர் சுத்தி இருக்கும் போது, போலீஸ்காரங்களும் இருக்க ஒரு விபத்தை உண்டாக்கின மனுஷன் அந்தாள்…”
“புரியுது. புரியுது. ஆனா இப்ப அவர் இல்லையே?…”
“இல்லைன்னாலும் திரும்ப நினைவு திரும்பிட்டா? என்னால என் மகளையும் இழந்துட்டு வாழ முடியாதுப்பா. இந்த உசுரு இருக்கறதே அவளுக்காக தான். ஒத்த. பொண்ணை வச்சிட்டு…”
“ப்ச், அழாதீங்க…” என்றவன் சுற்றிலும் பார்வையை சுழலவிட்டான்.
அருகே யாருமில்லை தான். சற்று பாதுகாப்பு வீரர்கள் நின்றிருக்க அவர்களை பார்த்தபடி செருமியவன்,
“எப்படியும் அவர் திரும்பி வர போறதில்லை. உயிர் இருக்கும். உணர்விருக்கும். ஆனா பிரயோஜனமில்லை. எல்லாமே அவர் கண்ணுக்கும், புத்திக்கும் உரைக்கும். ஆனா எதிர்த்து அவர் விரலை கூட அசைக்க முடியாது…” என்றான் ஆவுடையப்பன்.
“வாட்?…”
“இவ்வளோ தான் சொல்ல முடியும். அப்பறம் உங்க பொண்ணு எங்க இருந்தா சந்தோஷமோ அங்க இருக்க விடுங்க…” என்றதும் அவர் மௌனமானார்.
“பத்ரி சிங்காரம் மாதிரி இல்லை. ரொம்ப நல்லவன். ஈவன் அவன் அம்மா கூட. பாவம் அவங்களாம். அதுவும் பத்ரி சொந்த உழைப்பில வாழறவர். ஏன் இவ்வளோ யோசிக்கறீங்க?…”
“யோசிக்காம எப்படிப்பா? அத்தனைபேர் இருக்கும் போதே துணிஞ்சு கொலை செய்ய முயற்சி செஞ்ச மனுஷன். என்னவேணா செய்வார் தானே?…”
“ஹ்ம்ம், அன்னைக்கு கவனமில்லாம போய்டுச்சு எல்லாருக்குமே. அதனால உண்டான விபத்து தான் இது. நீங்க கவலைப்பட வேண்டாம்…”