“இங்க பாருங்க, நீங்க நேகாவை கூப்பிட கூப்பிட பத்ரிக்கு உங்க மேல இருக்கற ஆதங்கம் கோபமா மாறிடும். சூழ்நிலை இன்னைக்கு மாதிரியே இருக்காது. அதுக்காக தான் சொல்றேன்…” என்றான்.
“ஹ்ம்ம், சரிப்பா…”
“சந்தோஷமா அனுப்பி வைங்க. வேணும்னா நீங்களும் கூட கொஞ்ச நாள் இருங்க. அவங்களுக்கு ஆதரவா ஆறுதலா இருக்கும். பத்ரி மனசுல உங்க மேல அபிமானம் இன்னும் நல்லவிதமா இருக்கும்…”
“புரியுதுப்பா…”
“இப்ப கூட உங்க மேல உள்ள மதிப்பால தான் பத்ரி அமைதியா இருக்கறது. உங்களை புரிஞ்சுக்கற அவரையும் நீங்க புரிஞ்சுக்க வேண்டாமா?…”
“ஹ்ம்ம் புரியுதுப்பா…” என்றார் அவர்.
“ஹ்ம்ம், இதோடையே நீங்க உள்ள போய் சொல்லுங்க. ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நேகாவுக்கு இன்னும் நிம்மதியா இருக்கும்…” என்றவன்,
“பொண்ணுங்க பாவம். அப்பாவுக்கு பார்க்கவா, புருஷனுக்கு பார்க்கவான்னு ரொம்ப கஷ்டப்படுவாங்க. யாராச்சும் ஒருத்தர் அவங்க உணர்வுக்கு மதிப்பு குடுத்து விட்டுக்குடுத்தாலே போதும். இப்பவும் உங்க உணர்வுக்கு மதிப்பு குடுத்து தான் பத்ரி விட்டுக்குடுத்து எதுவும் பேசாம இருக்கார்…”
ஆவுடையப்பன் சொல்லவும் மனம் நெகிழ்ந்து, கண்கள் கலங்கி நின்றார் அந்த உண்மையில்.
“அப்படி ஒரு நல்ல மருமகன் கிடைச்சிருக்கு. சம்பந்தியம்மாவும் அப்படிதான். அப்ப நாமளும் கொஞ்சம் இறங்கி போறதுல தப்பில்லை…” என்றான்.
“சரிப்பா…”
“எல்லாத்துக்கும் சரின்னுட்டு திரும்ப அங்க போய் நேகாவை கஷ்டப்படுத்த கூடாது…”
“என் பொண்ணு சந்தோஷமா இருக்கனும்னு தானே இத்தனையும் பன்றேன்…”
“ஓகே, உள்ள போங்க, வரேன்….” என்றவன் பிரனித்தாவை பார்த்து வெளியே நின்றுகொண்டான்.
அவர் உள்ளே நகர்ந்ததும் பிரனித்தா அவனிடம் நெருங்க புருவம் உயர்த்தி என்னவென்றான்.
“பயங்கர டயலாக்ஸ். ஊருக்கு தான் உபதேசம்…” என்றாள் வந்ததும்.
“உனக்கும் பண்ணலாமே? எனக்கு என்ன தோணுதோ அதான் சொல்லித்தருவேன். ஆனா நீ இடையில பேசவே கூடாது…” என்று அளவான சிரிப்புடன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே கைகளை கட்டியபடி சொல்ல,
“நான் என்ன பேசறேன், நீங்க என்ன சொல்றீங்க?…”
“நீ பேசறதுக்கு எனக்கு என்ன தோணுதோ அதை சொல்றேன்…” என்றவன்,
“சரி கிளம்புவோமா?…” என்றான் அவளிடம்.
“ஓகே, போகலாம்…” என்றாள் உடனே.
“சொல்லிட்டு கிளம்புவோம்…” என உள்ளே செல்ல அங்கே பத்ரியின் கையை பிடித்தபடி நேகாவின் தந்தை.
பார்க்கவே மனதிற்கு இதமாக இருந்தது. அனைவரின் கண்களிலும் சந்தோஷ கண்ணீர்.
“ஓகே, எல்லாம் ஓகே தான் போல…” என ஆவுடையப்பன் சிரிக்க,
“பத்ரிண்ணா கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே? வீட்டோட மாப்பிள்ளையா போயிருந்தா கெத்து காமிச்சிருக்கலாம்….” என கண் சிமிட்டி பிரனித்தா சிரிக்க,
“இப்பவும் போலாமே. நான் ரெடியா தான் இருந்தேன். ஆனா என் மாமனார் தான் வேண்டாம்னுட்டார்…” என்று பத்ரி சொல்ல,
“இப்ப கூட வாங்க மாப்பிள்ளை. அது உங்க வீடு…” என நேகாவின் அப்பாவும் சொல்ல மணிமேகலை கண்ணை துடைத்தபடி பிரனித்தாவை கட்டிக்கொண்டார்.
“ப்ரூக்குட்டி…” என்ற நேகா,
“இங்க வா…” என்று அவளை அணைத்து விடுக்க,
“உங்களுக்குமா? என்னை பிரனின்னு தானே கூப்பிடுவீங்க நேகாக்கா…” என பிரனித்தா .
“இப்ப இப்படித்தான் கூப்பிட தோணுச்சு…” என்ற நேகா,
“சின்னதுல இருந்து அவ பேரை இப்படியே அவ சொல்லி சரியா கூப்பிடற எல்லாரையும் ப்ரூன்னு சொல்லி குடுத்த தானே? அப்பறம் என்னவாம்?…” என்றாள்.
“உங்களுக்கு தெரியும் தானேண்ணா…” என நேகா ஆவுடையப்பனிடம் கேட்க புன்னகையுடன் தலையசைத்தான் அவன்.
“பேரை கூட ஒழுங்கா சொல்ல விடாம அப்பவே அழிச்சாட்டியம் பண்ணினவ. இப்ப என்னவாம்?…” என்று பத்ரியும் நேகாவுக்கு சப்போர்ட் செய்ய,
“சரி சரி ரொம்ப பெருமைப்படுத்த வேணா. ஏற்கனவே இதை நான் எக்ஸ்ப்ளைன் பண்ணி மொக்கை வாங்கிட்டேன். இப்ப திரும்பவும் ரிப்பீட்டா?…” என்றதும் அனைவரும் சிரித்துவிட,
மற்றவர்களிடம் சொல்லிவிட்டு மணிமேகலையிடம் வந்தவன் அவரருகே வந்தான்.
“உங்களுக்கு சிங்காரத்தை பார்க்க போக தோணலையா?…” என கேட்க வருத்தமாய் புன்னகைத்தவர் மறுப்பாய் தலையசைத்தார்.
அவரின் பேச்சுக்கள் சிங்காரம் செய்த செயல்கள் தெரிய வந்த பொழுதே வெகுவாய் குறைந்துவிட்டது.
அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை பார்க்க கூட செல்லவில்லை.
பத்ரி மட்டும் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தான். சிங்காரத்தின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவரின் உடல்நிலை கருத்தில் கொண்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின் அவரை பார்க்கவே செல்லவில்லை. செல்லவும் தோன்றவில்லை. ஒருவித அவமானமாக இருந்தது.
பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறி குறுகி போய் வந்திருந்தான் பத்ரி.
விசாரணை வளையத்திற்குள் பத்ரி மட்டுமல்லாது, மணிமேகலை, நேகா, நேகாவின் தந்தை என அனைவருமே கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இனி அதன் வழக்குகள் வேறு ஆரம்பித்துவிடும். எதையும் தாங்கும் திராணியின்றி தான் மணிமேகலை இருந்தார்.
“விசாரணைக்கு கூப்பிடுவாங்க. நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை தைரியமா சொல்லுங்க. இதுல பயப்பட எதுவும் இல்லை. பார்த்துப்போம்…” என்றான் நம்பிக்கையுடன்.
“ஹ்ம்ம், சரிங்க தம்பி…” என்றார் கை கூப்பி.
“கேஸ் முடியற வரைக்கும் வேணும்னா நீங்க எங்க கூட வந்து இருங்களேன் அத்தை…” பிரனித்தா சொல்ல,
“இருக்கட்டும் டா. நீ கேட்டதே போதும்…” என்றுவிட்டார்.
“சரி கிளம்பறோம். எதுவும் அவசரம்ன்னா கால் பண்ணுங்க…” என சொல்லியவன் பிரனித்தாவிற்கு தலையசைத்துவிட்டு முன்னே செல்ல பிரனித்தாவும் அவனுடன் சென்றாள்.
மருத்துவமனை வெளியே ஊடகங்கள் கையில் மைக்கை பிடித்துக்கொண்டு கேமராவுடன் அலைமோதியபடி இருக்க நடையை வேகப்படுத்தினான் ஆவுடையப்பன்.
அவன் வாசலை நெருங்கும் முன் சல்லென்று அவனின் கார் அவ்விடம் வந்து நிற்க வந்த வேகத்தில் காரில் ஏறிக்கொண்டான்.
“எல்லாரும் உங்களை தான் கேட்கறாங்க. பதில் சொல்லாம இப்படி வந்துட்டீங்க?…” பிரனித்தா சொல்ல,
“எப்ப பதில் சொல்லனுமோ அப்ப தான் பேசனும், இவங்க இஷ்டத்துக்கு எல்லாம் பதில் சொல்லிட்டிருந்தா வேலை நடந்த மாதிரி தான். சிலர் கொஷின்ஸ் ப்ரவோக் பன்ற மாதிரி இருக்கும். அதுக்கு இது பெட்டர்…” என்றான் அலட்சியமாக.
“ரொம்ப தான்…” என்று உதட்டை சுழித்துக்கொண்டாள் பிரனித்தா.
அவளின் முக பாவனையை கண்டு புன்னகைத்தவன் மௌனமாக சிரிக்க அதில் அவன் தோள்கள் அசைந்தாடியது.
“அவ்வளோ பெரிய காமெடி இல்லை இது…” என சொல்ல ஒரு கையை எடுத்து மேவாயில் வைத்து மறைத்தவன் பார்வையை வெளியே திருப்பினான்.
“இப்பலாம் சைரன் சத்தம் பழகிருச்சு தெரியுமா?…” என பேசிக்கொண்டே அவள் வர தாளமாட்டாமல்.
“பேசாம வா மோகினி கொஞ்ச நேரத்துக்கு…” என்றுவிட்டான் ஆவுடையப்பன்.
“பேச்சும் போச்சா?…” என அலுப்புடன் தலையை உலுக்கிக்கொண்டவள் வெளியே பார்க்க அதன் திசை நன்றாக புலப்பட்டது.
“திரும்ப அங்க போறோமா?…” என்றாள் திகைப்புடன்.
“எங்க?…” ஆவுடையப்பனும் புரியாமல் கேட்க,
“அதான் நாம இருந்தோமே? அங்க. மினி பூத் பங்களா…” என்று விழிகளை விரித்து அவள் கேட்க ஆவுடையப்பனுக்கு சிரிப்பு வந்துவிட்டது அதில்.
“ஹேய்…” என மறுத்து சொல்லவிருந்தவன் இதழ்களுக்குள் புன்னகையை அடக்கி,
“ஹ்ம்ம், ஆமா. இன்னும் ஒரு ஒன் வீக் நான் ப்ரீ போல? அதான். உன்னையும் ப்ரீயா பார்த்துக்கலாம் பாரு…” என்றான் நமுட்டு சிரிப்புடன் மெல்லிய குரலில்.
“ப்ச், முடிவு பண்ணிட்டேன். பேசாம வர நீ…” என்று சொல்லிவிட்டு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு ஜன்னல் பக்கம் திருப்பிக்கொள்ள,
“தனியா போகவேண்டியது தானே? துணைக்கு நான் எதுக்காம்?…” என அவனிடம் கேட்க முடியாமல் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு முறைப்பாய் இருந்தாள்.
அதனை பார்த்தவன் முகத்தில் விஷமம் பரவ பிரனித்தாவை நிமிர்ந்து பார்க்க உஷாராகிவிட்டாள்.
“போச்சு, சொரிஞ்சுவிட்டுட்டேனா?…” என திருதிருவென முழிக்க,
“எதுக்குன்னு சொல்லிட்டா போச்சு. இப்பவே டெக்ஸ்ட் பண்ணி சொல்லவா? இல்லை நேர்ல சொல்லனுமா?…” என்று கேட்டு அனுப்பியவன் சிரித்துக்கொண்டே தன் டாலரை எடுத்து பற்களுக்கிடையே வைத்துக்கொண்டான்.
அவன் செய்கையையும், மொபைலில் அனுப்பியதையும் பார்த்தவள் போனை வைத்துவிட்டு வெளியே பராக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
அதை கண்ட ஆவுடையப்பன் மௌனமான புன்னகையுடன் மொபைலில் யாருக்கோ செய்தி அனுப்பிவிட்டு அமைதியானான்.
கார் அந்த பகுதியை கடந்து செல்ல பிரனித்தா திகைத்து அவனை திரும்பி பார்த்தாள்.
“முக்கியமான ஒருத்தரை பார்க்க போறோம் பிரனித்தா…” என்றான் ஆவுடையப்பன்.
யார் என யோசனையுடன் பிரனித்தா முன்னே பார்க்க அங்கே வானம் அறக்கட்டளை என்ற பெயர் பலகையை தாங்கி கம்பீரமாய் நின்றது அந்த கட்டிடம்.