“அவன் சொன்னா உடனே தலையாட்டிட்டு வருவியா நீ? அப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லவேண்டியது தானே? அப்பன் நான் இருக்கேன்னு நினைப்பிருக்கா?…” என்ற தகப்பனை அழுத்தமாய் பார்த்தான் பத்ரி.
“அந்த நேரம் அது தப்புன்னு தோணலைப்பா. கல்யாணம்ன்னா எல்லாம் தானே? இதெல்லாம் இருக்கும் தானே?…”
“என்னடா எதிர்த்து பேசற? என்ன முடிவா இருந்தாலும் நம்ம முடிவா இருக்கனும். அவனுக்கு புடிச்சா பொண்ணை அப்படியே தூக்கி குடுத்திட முடியுமா?…” என்றவரின் முகத்தில் ஒளிந்திருந்த வஞ்சத்தை பத்ரியால் உணர முடிந்தது.
“நம்ம பிரனித்தாக்கு நல்லது தான் செய்யறீங்கன்னு நினைக்கறேன்ப்பா….” மகனின் கூற்றில் திரும்பி பார்த்தவர்,
“நல்லதுன்னா? அவளுக்கு மட்டுமா நல்லது? நாலையும் யோசிச்சு தான் செய்யறேன். உன் வேலையை பாரு…” வெடுக்கென்று சொல்ல,
“டின்னருக்கு போகனும்…”
“தலையெழுத்து போய் உன் மாமன்கிட்ட சொல்லு முதல்ல. சாயங்காலம் புறப்படனும்னு…” என்ற சிங்காரம்,
“இல்ல இல்ல. இங்க வர சொல்லு. நான் சொல்லிக்கறேன்…” என்றதும் பத்ரி பல்லை கடித்துக்கொண்டு தலையசைத்து கிளம்பினான்.
“வந்து சேருறானுங்க எனக்குன்னு, ச்சை…” என தலையிலடித்துக்கொண்டவர் எழுந்தார்.
ஆவுடையப்பனின் சாமர்த்தியத்தில் கோபம் கனன்றாலும் இந்த சந்திப்பை வைத்து என்ன செய்ய முடியும் என யோசித்தார். கூடவே மற்றொரு சிந்தனையும் அவரை உலுக்கியது.
“இந்த புள்ளை சம்மதம் சொல்லவுமே அவன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்கலாம்ன்னு பார்க்கறானே? இது சரிப்பட்டு வருமா?…” என்று தலையை சொரிந்துகொண்டவர் கதவை திறந்து வெளியேறினார்.
கீழே சென்று அமர்ந்ததும் மனோகரன் வேகமாக உள்ளே வர அவரை பார்த்ததுமே கொஞ்சமிருந்த யோசனையும் கலைந்தது.
‘இவன் என் பிடிக்குள்ள இருக்கற வரைக்கும் என் சொல்லுதான் அம்பலத்துல ஏறும்’ என உள்ளுக்குள் அத்தனை இறுமாப்பு.
“வர சொன்னீங்கன்னு பத்ரி சொன்னாப்ல. சொல்லுங்க மாமா…” என வந்ததும்,
“உக்காரு மனோகரா. நின்னுட்டே தான் கேட்பியா?…” பாசத்துடன் சொல்ல மனோகரனும் அமர்ந்தார்.
“எங்க உன் சம்சாரம்?…”
“அங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கா. பொண்ணோட பேசிட்டு…”
“என்ன சொன்னா உன் பொண்ணு? பையன் எப்படி பேசினாராம்?…”
“அதெல்லாம் நான் இன்னும் கேட்டுக்கலை மாமா…” சங்கடத்துடன் சொல்ல,
“ஹ்ம்ம்…” மனோகரனுக்கு இதில் வேறு என்ன பேச என்று தெரியவில்லை.
ஒருவித மாயை போல இருந்தது இந்த திருமண பேச்சு ஆரம்பித்த பொழுதுகளில் இருந்து இன்றுவரை.
‘என்கிட்டே கேட்டிருக்காங்க. உங்க குடும்பத்து பொண்ணை பிடிச்சிருக்கு. கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன்னு. நானும் சட்டுன்னு வாக்கு குடுத்துட்டேன். நீ என் பேச்சை மீறமாட்டன்னு. என் மரியாதையும் இதுல இருக்கு’ இப்படியான பேச்சுக்களில் துவங்கியது இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டது.
“என்ன மனோகரா யோசனை?…” சிங்காரம் விசாரிக்க,
“ஒன்னுமில்லைங்க மாமா. சொல்லுங்க…” எனும் பொழுதே மணிமேகலை மோருடன் வந்துவிட்டார்.
“சாப்பாடு ரெடியாகிருச்சு. வாசுகியை வர சொன்னா சேர்ந்தே சாப்பிட்டுடலாம்…” என்று அவர் சொல்ல,
“பிரனித்தா வெளில போகலாம்ன்னு கேட்டிருக்கா க்கா. அவ ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஷாப்பிங் மால் வராங்க. அங்க லஞ்ச்க்கு…” என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே,
“மனோகரா. என்ன இதெல்லாம்?…” என்றார் கடுமையாக சிங்காரம்.
“மாமா…” அவர் அதிர்ச்சியுடன் பார்க்க,
“உன் பொண்ணு இன்னும் கொஞ்சம் நாள்ல நிதியமைச்சரோட மனைவியாக போறா. அந்த பக்குவம் கொஞ்சமாவது வேண்டாமா? இது அவங்களுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?…” என்று சொல்ல பத்ரியும் வாசுகியும் வந்தனர்.
வாசுகியை பார்த்ததும் தெரிந்தது அவருமே வெளியே செல்ல கிளம்பி தயாராக இருக்கிறார் என்று.
“கொஞ்சமாச்சும் பொறுப்பான அப்பாவா நீயும் இருக்கனும். உனக்கு அரசியல் பிடிக்காதுன்னாலும் அரசியல்ன்னா என்னன்னு தெரியும் தானே? பாதுகாப்புன்னு ஒன்னு இருக்கு…” என்று சொல்ல நேகாவுடன் பிரனித்தாவும் வந்து சேர்ந்தாள்.
ஷார்ட் டாப், ஜீன்ஸ் என்று வந்து நின்றவளை கோபமாக பார்த்தவர் வாசுகியிடம் கண்டன பார்வையை செலுத்தினார்.
“ம்மா, போகலாம். டைமாகுது…” என்று வந்து நிற்க,
“இரும்மா, எங்க கிளம்பிட்ட?…” என சிங்காரம் கேட்கவும் மனோகரனை பார்த்தவள்,
“யாரும் எங்கயும் போகலை. உட்கார் இப்படி…” அதிகாரமாக கூற மனோகரன் மகளை கெஞ்சல் பார்வை பார்த்தார்.
“உட்கார், அவனை என்ன பார்க்க? நான் தான் சொன்னேன்…” என்று சத்தமாக சொல்லியும் அமராமல் நின்றிருந்தாள்.
“பரவாயில்லை, சொல்லுங்க. நிக்கறேன்…” என்று பிடிவாதத்துடன் சொல்ல பல்லை கடித்த சிங்காரம்,
“மனோகரா இன்னைக்கு நைட் டின்னருக்கு மினிஸ்டர் நம்மளை இன்வைட் பண்ணியிருக்கார்…” என தெரிவிக்க,
“இன்னைக்கா?…” மனோகரன் யோசித்தார்.
“ஏன் நீயும் வெளில எங்கியாச்சும் போறதா இருக்கியா?…” கடுகடுத்து கேள்வி வர,
“அதுக்கில்லை மாமா. பிரனித்தா அதுபத்தி எதுவும் சொல்லலையா. அதான்…” மனோகரனுக்கு என்னவோ போலானது.
அவரின் தயக்கமும், சங்கடமும் பிரனித்தாவை கோபம் கொள்ள செய்ய தாயின் கண்டிப்பான பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.
“இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம். அவக்கிட்டையா இதை பேசுவாங்க. என்னவோ அவ விருப்பத்தை தெரிஞ்சுக்க தான் வர சொன்னாரே தவிர்த்து எல்லாத்தையும் அவக்கிட்ட பேசுவாரா?…” என்றார் சிங்காரம்.
“அப்ப பெரிய பொண்ணா பார்த்து கட்டி வச்சிருக்கனும் அந்த செவ்வக செயலாளருக்கு. என்னை ஏனாம்?…” என்று பத்ரியின் காதில் பிரனித்தா முனங்க,
“ஷ் ப்ரூ…”
“ப்ச், போ ண்ணா…” என்று எரிச்சலடைந்தாள்.
ஆவுடையப்பனை சந்தித்துவிட்டு வந்ததில், அங்கே அவன் தனக்கு அளித்த முக்கியத்துவத்தில், தன் வார்த்தைகளுக்காக காத்திருந்ததில் என அவன் மீதான அபிப்ராயம் இனிமையாக பரவி இருந்தது.
இப்போது அது கொஞ்சம் குறைவதை போலிருந்தது. அதிலும் தன்னுடைய உடையை சிங்காரம் குறைவாக பார்த்ததில் எரிச்சல் இன்னுமே அதிகமாகியது.
தான் சொல்லியும் அவள் திமிராக நின்றதில் சிங்காரத்திற்கு இன்னும் கோபம் அதிகமாக பல்லை கடித்து தண்ணீரை குடித்து தன்னை சமன் செய்ய முயன்றார்.
“இங்க வா பிரனி…” என நேகா தன்னோடு நிறுத்திக்கொண்டாள் அவளை.
அதை எல்லாம் பார்த்திருந்த சிங்காரத்திற்கு இப்போது கோபத்தை வெளிப்படுத்தும் நேரமல்ல என்பதை உணர்ந்து மனோகரனிடம் திரும்பினார்.
“இங்க பாரு மனோகரா, அவங்க ரெண்டு குடும்பமும் நேர்ல பேசி பழகனும்னு நினைக்கறாங்க. கல்யாணம்ன்னா இதெல்லாம் இருக்கும் தானே?…” என மகன் கூறியதை அப்படியே தானாக சொல்ல,
“ஆமாங்க மாமா…” என்றார் மனோகரன்.
“அவங்க பொண்ணு பார்க்கறது, நாம மாப்பிள்ளை வீடு போறதுன்னு இந்த சம்பிரதாயம் எதுவும் நடத்தலை. என்னை முன்ன வச்சு இந்த பேச்சுவார்த்தை நடக்கும் போது நான் பொறுப்பா இதை கொண்டுபோகனும் தானே?…”
“ஆமாங்க மாமா…”
“அதான், பொதுவான ஒரு இடத்துல சந்திக்கலாம்ன்னு உன் மருமகப்பிள்ளை சொல்லிருக்கார். அடுத்த விஷயங்களை சேர்ந்து தானே பேசனும்….”
“நீங்க சொன்னா சரிதான் மாமா…”
“அப்படி நீ சொல்ற. ஆனா இது உன் பொண்ணோட கல்யாணம் மனோகரா. உன்னோட விருப்பம் என்னவோ அதை சொல்லு. அங்க நீயே பேசு. பொண்ணுக்கு தகப்பனா நீ தானே பேசனும்…”
மீண்டும் மீண்டும் சிங்காரம் அதனை கோடிட்டு காட்டுவதும், உன் மருமகன் என்று சொல்வதுமாக இருக்க மனோகரனுக்கு சிந்தனை எல்லாம் அவர்களிடம் தான் என்ன பேச என்று தான்.
சுத்தமாய் எதுவும் புலப்படவில்லை. வெளியில் செல்வதற்கே இத்தனை பேச்சுக்கள், மகளின் திருமணத்திற்கு பிறகு எப்படியோ? என அதில் சுழன்றது அவரின் நினைவு.
“என்ன மனோகரா நான் சொல்றது சரிதானே? என்ன இருந்தாலும் நான் மூணாவது மனுஷன். இதுவரை ரெண்டுபக்க சார்பா நான் பேசின மாதிரி இனி பேச முடியுமா?…” சிங்காரம் அத்தனை நெகிழ்வாய் மனோகரனை கவர,
“என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? இந்த வீட்டுல வளர்ந்தவன் நான். எப்படியோ போயிருக்க வேண்டியவன். நல்ல படிப்பு, உத்தியோகம்ன்னு எல்லாம் குடுத்தது இந்த குடும்பம்…” மனோகரன் நன்றியுடன் பேசினார்.
“அதுக்குன்னு நான் நான் நான்னு எல்லாத்துலையும் நிக்க முடியுமா?…” என்றார் கனிந்து.
“நீங்க ஆரம்பிச்சு வச்சது. எனக்கு ஆரம்பத்துல தயக்கம்னாலும் நீங்க யோசிக்காம சொல்லமாட்டீங்க. உங்களை விட சிறப்பா என்ன செஞ்சிட போறேன் நான்? உங்க தலைமையில எல்லாம் நடக்கட்டும் மாமா…” என மனோகரன்.
“என்னப்பா இப்படி சொல்லிட்ட? உன் வீட்டுல கேட்டு…”
“வாசுகி என்ன சொல்ல போறா? இல்ல இங்க எனக்கு என்ன தெரியும்? சாதாரண இடம்ன்னா நான் பார்த்துப்பேன்….” என்று தயங்கி சொல்ல,
“தயக்கம் எதுக்கு மனோகரா. இனிமே மினிஸ்டர் மாமனார்ன்னு பெருமையா சொல்லிக்கலாம்…” என மனோகரனின் தோளை தட்டி சிங்காரம் சிரிக்க பிரனித்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“உங்க மாமனார் அவ்வளோ நல்லவரா நேகாக்கா?…” என அவளிடம் முணுமுணுக்க,
“எனக்கே இப்ப தான் தெரியும்…” நேகா தன் பங்கிற்கு புலம்பினாள்.
“அப்ப இன்னைக்கு லஞ்ச் போச்சா?…” பிரனித்தா தன் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேற,
“எங்கம்மா போற?…” சிங்காரம் கேள்வி கேட்கவும் திரும்பியவள்,
“ப்ரோக்ராம் கேன்சல்ன்னு சொல்ல தான்…”
“இங்கயே சொல்லேன். சொல்லிட்டு வா. சாப்பிடலாம்…”
“இல்லை, எனக்கு தலை வலிக்குது. பசிக்கலை…” என்றவள்,
“ம்மா, எனக்கு அப்பறமா எடுத்துட்டு வாங்க. இல்லைன்னா வேண்டாம். நான் போய் படுக்கறேன்…” என்று சென்றுவிட்டாள்.
மனோகரன் மகளின் இந்த செயலில் சிங்காரத்திடம் இறைஞ்சும் பார்வை பார்க்க,
“விடுப்பா, சின்ன பொண்ணு. நாம தான் சொல்லி புரிய வைக்கனும்…” என்றவர்,
“சரி வா சாப்பிட்டுட்டே பேசலாம்…” என எழுந்து செல்ல மற்றவர்களும் சென்றனர்.
உணவினூடே அங்கே எப்போது கிளம்பவேண்டும், எப்படி கிளம்பவேண்டும் என்பதில் இருந்து என்னவிதமான பேச்சுக்கள் என்பது வரை மனோகரனுக்கு பாடம் எடுப்பதை போல மனப்பாடம் செய்ய வைத்து மனதில் பதியவைத்தார்.
அவரின் அதிகப்படியை வாசுகியால் உணர முடிந்தாலும் சொல்லமுடியவில்லை. இத்தனை விளக்கங்கள் எதற்கு என யோசித்தபடி அமைதியாக இருந்தார்.