அவ்வளவு கோபம் இப்படி அனைவரையும் வர செய்துவிட்டு இப்போது தானே மறுப்பது.
அதிலும் தன்னுடைய சுதந்திரத்தை பறிப்பதை போலிருந்தது. கட்டுப்பட்டு, கட்டுப்படுத்தி என அவளால் அதனை ஏற்க முடியவில்லை.
தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். படபடவென காற்றில் காகிதம் அடித்துக்கொள்ளும் சத்தத்தில் திரும்பி பார்க்க டீப்பாயில் ஆவுடையப்பன் வரைந்திருந்த ஓவியம்.
கை நீட்டி அதனை எடுத்து பார்த்தவளுக்கு உருவமில்லா பயப்பந்து மீண்டும் சுழன்றது.
இன்னும் அவளின் நட்பு வட்டத்தில் யாருக்கும் இதனை பற்றி தெரிவிக்கவில்லை.
பேச்சுவார்த்தை எப்படி முடிகிறதோ அப்போது சொல்லிக்கொள்ளலாம் என்றிருந்தவள் இப்போது சொன்னால் அதனால் தான் எங்கும் வரவில்லை என்பதை போல தான் பேச்சுக்கள் எழும்பும்.
புரிந்துகொள்ள கூடிய நட்புகள் தான். ஆனால் கேலியாகவேணும் அதனை பேசத்தானே செய்வார்கள்.
பார்வையை அதன் போக்கில் ஓடவிட்டவள் கையில் வைத்துக்கொண்டே சரிந்து படுத்தாள்.
“மிஸ்டர்.வொய்ட் என் லைஃபே மாறிடுச்சு உங்களை மீட் பண்ணினதால…” புலம்பலோ, எரிச்சலோ எதுவுமில்லாத ஒரு கலக்கமான பாவனையை சுமந்து வந்திருந்தது அந்த குரல்.
அவனிடம் பேசிவிட்டு வந்ததில் இருந்த அடிமனத்தின் நம்பிக்கை எல்லாம் இப்போது ஆட்டம் கண்டது.
கட்சி அலுவலகத்தில் இருந்து கிளம்பியதுமே காரில் வரும் வழியிலேயே மனோகரனுக்கு அழைத்து தோழிகள் அழைக்கின்றார்கள் என்று சொல்ல உடனே மனோகரனும் வெளியே செல்லலாம் என்று சம்மதித்திருந்தார்.
இது எப்போதும் வரும் சென்னை பயணங்களில் அவர்களுக்கு வழக்கமான ஒன்று தான்.
இந்த முறையும் அப்படியே செய்ய சிங்காரத்தின் நுழையீட்டால் இப்படி ஒன்றுமில்லாமல் போனது.
“சிங்காரத்துக்கு எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு…” என பல்லை கடித்தவள் மனதோ இனி தன் வாழ்க்கை இவர்கள் கையில் தானோ என்று என்ன தோன்றியது.
அரைமணி நேரத்தில் மகளுக்கான உணவுடன் வாசுகி வர அயர்ந்த உறக்கத்தில் இருந்தாள் பிரனித்தா.
“தூங்கிட்டா ங்க…” மனோகரனிடம் சொல்ல,
“சின்ன பொண்ணு. ஏமாற்றமா தானே இருக்கும்…” மணிமேகலை சொல்ல,
“இருக்கட்டும் அண்ணி. இன்னும் கல்யாணம் தான் ஆகலையே? இன்னைக்கு போய்ட்டு வந்தா தான் என்ன? பாவம் இல்லையா அவ?…” இருக்கமாட்டாமல் வாசுகி உடைத்து சொல்லிவிட,
“வாசுகி…” அதட்டினார் மனோகரன்.
“கல்யாணம் முடிவாகிடுச்சு. அடுத்து நிச்சயம், கல்யாணம்ன்னு வேற ஒரு உலகத்துக்கு போய்டுவா. இதுவரைக்கும் அவ இருந்தது வேற. இனி எப்படி இருக்க போறான்னு உங்களுக்கு தெரியாதா?…” என்றதும் மனோகரன் அமைதியானார்.
“நம்ம நேகாவை பாருங்க. வெளில போகனும்னா இங்க பாதுகாப்பு. நினைச்சா எங்கயும் போக முடியாது. ஒன்னொண்ணுக்கும் கூட நாலு பேரை வச்சுக்கிட்டே தான் போகனும். இப்ப நம்ம பொண்ணு…”
வாசுகிக்கு மனது தாங்கவில்லை. கல்யாணம் செய்யட்டும், சந்தோசம் தான். ஆனால் அதற்கு முன்னான இந்த வாழ்க்கையை அவள் இன்னும் நன்றாக அனுபவித்துக்கொள்ளட்டுமே என்று நினைத்தார்.
“நம்ம பக்க சொந்தங்களுக்கு மட்டும் தெரிஞ்ச வரைக்கும் சரி. இனி எல்லாருக்கும் தெரியும். நம்மோட சூழ்நிலையும் மாறும். அதுக்கு முன்ன அவ விருப்பப்படி இருந்தா என்ன?…” அழமாட்டாத குறையாக வாசுகி சொல்ல,
“எனக்கு புரியுது வாசுகி. இன்னைக்கு அவங்களை பார்க்க போறோம். அவரை சேர்ந்தவங்க பார்த்துட்டு…”
“அதான் இன்னும் கல்யாணமாகலையே. இங்க யாருக்கு தெரியும் என் பொண்ணு யாருன்னு. அதுக்கு முன்னவே இப்படியாகிருமோ, இல்லையோன்னு பயந்து இருக்கனுமா? எனக்கு இப்பவே இப்படி. நிச்சயம் பண்ணிட்டா என்னாகுமோன்னு பயமா இருக்கு…” என்றார்.
“நீ அனாவசியமா பயப்படற வாசுகி, மாமா நம்ம நல்லதுக்கு தான் சொல்றார். யோசிச்சு பாரு. இதுவே சாதாரணமா ஒரு வரன் வந்து பூ முடிச்சா எவ்வளவு சம்பிரதாயம் பார்க்கறோம். அப்படி நினைச்சுக்கோ…”
மனோகரன் மனைவியை தான் சமாதானம் பேசினார். அவருக்கு கஷ்டமாக இருந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றிவிட்டது.
அதனால் பெரிதாய் எந்தவித பாதிப்பும் இல்லை. மகளின் வாட்டமான முகம் தான் அவருக்கு கஷ்டத்தை தந்தது.
“சரி சரி, புலம்பிட்டே இருக்காம முதல்ல பிரனியை எழுப்பி சாப்பிட வை. வெறும் வயித்தோட தூங்கறா பொண்ணு…” மணிமேகலை சொல்ல வாசுகி எழுப்ப சென்றார்.
“நீங்க தான் தம்பி அவகிட்ட சொல்லி புரிய வைக்கனும். பெரியவங்க நாமலே கலங்கினா பொண்ணு இன்னும் பயப்படுவா…” என்ற மணிமேகலை,
“இதோடவே இந்த மனநிலையோட நாம அவங்களை பார்க்க போறது சந்தோஷத்தை தராது. பிடிச்சு கேட்டிருக்காங்க. யாருக்கும் அமையாதது. நம்ம பொண்ணோட அதிர்ஷ்டம்ன்னு தான் நான் நினைக்கறேன்…” என்றார்.
“அவ நம்மக்கிட்ட பேசுவா. ஆனா அவளோட பொண்ணுக்கிட்ட இதை காமிச்சுக்கமாட்டா க்கா…” என்று சொல்லும் பொழுதே மகளுடன் வந்துவிட்டார் வாசுகி.
முகத்தை கழுவிவிட்டு கூந்தலை கேட்ச் க்ளிப்பில் அடக்கிவிட்டு வந்து அமர்ந்தாள் பிரனித்தா.
“உங்க மாநாடு முடிஞ்சதா? என்ன டிஸைட் பண்ணிருக்கீங்க?…” என்று கிண்டலாக அவள் கேட்டதும்,
“எதுவும் இல்லடா. எங்க வச்சு பார்க்க போறோம்ன்னு சொல்லிட்டிருந்தாங்க. அதான் பேசிட்டிருந்தோம். நீ இல்லாம என்ன பேச போறோம்?…” என்ற மனோகரன் உணவை எடுத்து மகளிடம் நீட்ட,
“ஊட்டுங்கப்பா. இல்லைன்னா இதுவும் நாளைப்பின்ன தப்புன்னு சொல்லிட போறாங்க. அதுவரைக்கும் நீங்களே தாங்க…” சோகமில்லை என்றாலும் அவள் அப்படி சொல்லியதில் பெற்றவர்களுக்கு கலங்கி போனது.
“பசிக்குது ப்பா. சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும். அப்பத்தான் ப்ரெஷா இருக்கும் அங்க கிளம்பும் போது…” என கூறவும் மனோகரன் அவளுக்கு உணவை பிசைந்து ஊட்டினார்.
“ஆமா, நைட் அங்க போக என்ன ட்ரெஸ் கோட் எல்லாம் சொல்லிட்டாரா மிஸ்டர்.சிங்?…” என்று கேட்டு கிண்டல் பேச,
“வாய்லையே போடுவேன் பார்த்துக்கோ…” என்று மகளின் தோளில் நறுக்கென்று கிள்ளி வைத்தார் வாசுகி.
“பிள்ளையை போட்டு அடிக்காத. இப்ப என்ன கேட்டுட்டா?…” என மேகலை அவளை தாங்கிக்கொள்ள பத்ரியுடன் நேகாவும் வந்துவிட மாலை வரை பேச்சுக்கள் களைகட்டியது.
———————————————
இரவு விருந்து ஏற்பாடாகி இருந்த அந்த பிரத்யோகமான இடத்தில் கடற்கரை காற்றும், அந்த சூழலும் மெல்லிய தூறலும் என புத்துணர்ச்சியும், ரசனையையும் தருவித்தது ஆவுடையப்பனுக்கு.
“கிளம்பிட்டாங்களான்னு கேட்டியா ராஜா?…” நான்காவது முறையாக அசோகன் கேட்டுவிட்டார் மகனிடம்.
“வந்துட்டே இருக்காங்க சித்தப்பா. கிளம்பும் போது சொன்ன டைம்க்கு பார்த்தா இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திருவாங்க…” என்றான் வாட்சை பார்த்து.
“சரி சரி…” என உள்ளே சென்றவர் மீண்டும் வந்து,
“இன்னைக்கும் இந்த வெள்ளை வேஷ்டி சட்டை தானா?…” என கேட்கவும் அவன் முறைக்க,
“சாப்பிட்டதும் குடிக்க மசாலா பால் ரெடி பண்ண சொன்னேன். எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ணிட்டு வரேன்…” அவர் உள்ளே செல்ல போக,
“சித்தப்பா சுகர்…”
“இருக்குப்பா, டெஸ்ட் தானே பன்றேன். என்னவோ அவ்வளவும் நானே டேஸ்ட் பன்ற மாதிரி தான்…” என திரும்பியே பார்க்காமல் சென்றுவிட்டார்.
அவர்கள் எல்லாம் அருகில் வந்துவிட கை கூப்பி அனைவரையும் வரவேற்றவன் பார்வையில் எதையும் வெளிப்படுத்தவில்லை.
ஒவ்வொருவராக சிங்காரம் அறிமுகப்படுத்த அசோகனுடன் சேர்ந்து அவற்றை கேட்டுக்கொண்டான் ஆவுடையப்பன்.
“எங்க எங்க வீட்டுக்கு வர போற பொண்ணை காணும்?…” அசோகன் வெள்ளந்தியாக கேட்டுவிட,
“இப்ப வந்திருவாங்க, கார்ல இருக்காங்க…” என்று சிங்காரம் சொல்லவும் குப்பென்று கூடை பனித்துகள்களை தன் மீது கொட்டியதாய் இருந்தது ஆவுடையப்பனுக்கு.
“உள்ள வாங்க…” என்று வரவேற்க அவனின் மொபைலில் அழைப்பு.
“உள்ள இருங்க. பேசிட்டு வரேன்…” என்றவன்,
“சித்தப்பா…” என்றதும்,
“நான் கவனிச்சிக்கறேன் ப்பா…” என்றார் உடனே அசோகன்.
மொபைலுடன் அவன் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தவன் பார்வையில் மெல்லிய கொலுசு சத்தத்தில் புடவையை தூக்கி பிடித்தபடி அதனை குனிந்து பார்த்துக்கொண்டே அவள்.
அவள் வரும்முன் அந்த முல்லை சரத்தின் வாசம் அவன் நாசியை அணைத்துக்கொண்டது.
அடர்ந்த இருளில் மெல்லிய வெளிச்சத்தில் நேகாவுடன் புலம்பிக்கொண்டு வந்தால் பிரனித்தா.
“இந்த புடவையோட முடியலை நேகாக்கா. இறங்கும் போது மடிப்புல கால வச்சு அதுலயே மிதிச்சு. சரியா திரும்ப கார்ல கட்டவும் முடியலை. வேண்டாம்ன்னா கேட்காறாரா அந்த சிங்…” என்று கடுப்பாய் சொல்லிக்கொண்டு வர பரபரத்த மனதை அடக்கிக்கொண்டு மொபைலில் பேசியபடி ஆவுடையப்பன்.
“மோகினி, காட் டேமிட்…” பேசி முடித்தும் மொபைலை காதிலேயே வைத்திருந்தவன் தன் மனதை கடிந்துகொண்டிருந்தான்.
ஒரு பொண்ணை இத்தனை தேடியிருப்போமென அவன் உணர்ந்துகொண்ட தருணத்தில் ஆவலை அடக்கி ஆர்ப்பரித்த மனதை தட்டி வைத்து பிடித்தவன் அவள் நெருங்கவும் மிக சாதாரணமாக பார்த்தான்.
“ஹாய்…” என பிரனித்தாவே அவனுக்கு சொல்ல ஒரு நொடி திகைத்து அவனும்,
“ஹாய்…” என்றவன்,
“உள்ள போங்க. பேசிட்டு வரேன்…” என்று கூறவும் மீண்டும் நேகாவுடன் சலசலத்தபடி சென்றாள் பிரனித்தா.
அதற்குள் அசோகன் திருமணம் வரை முடிவு செய்து ஒருமாதத்தில் வைக்கலாமா என்னும் விதமாக பேச மறுக்க காரணமில்லை என்பதால் ஆவுடையப்பனிடம் பேசிவிட்டு முடிவெடுக்க காத்திருந்தனர்.
திருமணத்தை அத்தனை எளிதாய் அவர்கள் முடிவெடுக்க நடப்பதெல்லாம் முடிவெடுப்பவர்கள் கையில் இல்லை என்பதை காலம் உணர்த்தவிருந்தது.
அரசியல் ஆடுகளத்தில் எதிர் எதிர் நிற்கும் இருவரின் இழுவிசையில் உயிரும், உயிர்ப்புமான பெண்ணின் உணர்வுகள் உயிர் கொள்வதும், உயிர் கொல்வதும் என விதிக்கப்பட்டது எதுவாகவும் இருக்கும்.