ஆவுடையப்பன் அமரவும் உணவு பரிமாறப்பட பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டு சாப்பிட்டனர்.
நொடிக்கொருதரம் சிங்காரம் அவனை பார்ப்பதும், யோசிப்பதுமாக இருக்க உணவினூடே சிங்காரத்தின் அவஸ்தையையும் மென்றபடி சாப்பிட்டான் ஆவுடையப்பன்.
சிங்காரம் தன்னையே நோட்டமிடுவதும், பிரனித்தா தன்னை நோட்டமிடாததையும் கவனித்தவன் உணவை கொஞ்சமாக உள்ளிறக்கினான்.
“சீக்கிரமே கல்யாணத்துக்கு தேதி முடிவு பண்ணிட்டு மத்ததை பார்த்துப்போம்…” மணிமேகலை பேச்சை மீண்டும் துவங்க,
“எல்லாரும் சாப்பிட்டதும் பேசுவோமே…” என்றவன் உண்டு முடித்து கையை துடைத்துக்கொண்டு வந்தமர்ந்தான் உணவுமேஜைக்கு அருகிலிருக்கும் அறைக்கு.
அதற்கு முன்பே உண்டுமுடித்தவர்களும் அவனுடனே எழுந்து வந்துவிட்டனர் முன் அறைக்கு.
“ஹ்ம்ம், சொல்லுங்க. என்ன தேதி முடிவு பண்ணிருக்கீங்க?…” என அசோகன் ஆரம்பிக்க,
“சித்தப்பா, இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே?…” என்றான் ஆவுடையப்பன்.
அனைவருக்கும் திகைப்பானது. இவ்வளவு நேரம் பேசி ஒருவழியாய் தேதி மட்டுமே முடிவு என்று நினைத்திருக்க ஆவுடையப்பனின் இந்த பேச்சில் அனைவரும் முதலிலிருந்தா என பார்த்தனர்.
“ராஜா, கல்யாணம் பத்தி தான் பேசிருந்தோம். எங்க எப்படி செய்யலாம்ன்னு சிங்காரம் சொல்லிட்டிருந்தார்….”
“நீங்க கேட்டிட்டிருந்தீங்களா? நான் கேட்கலையே சித்தப்பா?…” என்றவன்,
“போன்ல இருந்தேன். அதுக்குள்ளே நான் வரும் முன்னவே முக்கியமான விஷயம் பேசிருப்பீங்கன்னு நினைக்கலை…” என்றதும் சிங்காரத்திற்கு பற்றிக்கொண்டு வந்தது.
“ஓகே, இப்ப பேசலாம். அதுக்கு தானே இந்த மீட்டிங். என்ன மாமா?…” என்று மனோகரிடம் திரும்பியவன்,
“மாமான்னு கூப்பிடலாம் தானே?…” என்று கேட்தவன் பிரனித்தாவையும் பார்த்தான்.
“மாமான்னு கூப்பிடலைன்னா சித்தப்பான்னு கூப்பிடுவாராமா இந்த வொய்ட் வண்டு?…” அவள் வழக்கம் போல நேகாவிடம் முனுமுனுக்க அதற்குள்,
“ஓகே, உங்க பொண்ணுக்கும், எனக்கும் பிடிச்சாச்சு. ரெண்டுபேருக்கும் சம்மதம். பொண்ணு பார்க்கற பார்மாலிட்டி இதுலையே ஓவர். நெக்ஸ்ட் எங்கேஜ்மென்ட். அதை உங்க விருப்பப்படி பாண்டிச்சேரில வச்சுக்கலாம். இடம் உங்க டிசிஷன் தான். கல்யாணம் சென்னைல…”
படபடவென்று அவன் அடுக்கிக்கொண்டே செல்ல ஒருவரின் முகத்திலும் உணர்வில்லை.
சற்று முன்பு தான் சிங்காரம் தன் விருப்பத்தை சொல்லியிருந்தார் எப்படி செய்யவேண்டும் என்று.
இப்போது அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தது ஆவுடையப்பன் திருமணம் குறித்து பேசியது.
“என்ன எல்லாரும் சைலன்ட்டாகிட்டீங்க?…” என்றான் கை விரித்து கேட்டுக்கொண்டே.
“இல்ல ராஜா, சிங்காரம் வேற மாதிரி சொன்னார். அதான் எல்லாரும் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருக்கோம்…” அசோகன் சொல்ல,
“என்ன சொன்னாங்க?…” என சிங்காரத்தை பார்க்க அவர் முகம் வெளுத்திருந்தது.
“பொண்ணு பார்க்கறத சம்பிரதாயமா செய்யனும்னு சொன்னார். நாளைக்கு அவர் வீட்டுக்கு வந்து பொண்ணை பார்த்துட்டு…”
“அதான் நாங்க ஏற்கனவே பார்த்து பேசிட்டோமே சித்தப்பா. இதோ இப்பவும் என் முன்னாடி தானே பொண்ணு இருக்காங்க? பார்த்திட்டு தானே இருக்கேன்?…” ஆவுடையப்பன் சொல்லவும்,
“அதுவும் சரிதான்…” என்றார் சிங்காரம் உடனே.
இல்லையென்றால் இங்கேயும் தன்னை குட்ட வைத்துவிடுவான் என்று அவராகவே உடனே ஒப்புக்கொள்வதை போல சொல்ல ஆவுடையப்பன் ‘அது’ என்னும் விதமாய் தலையாட்டினான்.
“ஹ்ம்ம், அப்பறம்?…” என்றவன் மனோகரனை பார்க்க,
“மாமா…” அவர் சிங்காரத்தை குறித்து ஆரம்பிக்கவும்,
“நீங்க எனக்கு மாமனார். அதான் மாமா. சொல்லுங்க மாமா. நான் சொன்னதுல ஏதாவது ஆட்சேபனை இருக்கா?…” என்றான் அவரை பேசவிடாமல்.
அவர் சிங்காரத்தை பார்த்துவிட்டு பதில் சொல்லும் முன் ஆவுடையப்பனே தொடர்ந்தான்.
“எங்கேஜ்மென்ட் உங்க விருப்பப்படி உங்க ஊர்ல செய்ங்க. உங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வரவழைக்கலாம். பார்த்து, பேசி, பழக அது அவசியம் தேவைப்படும். அதுக்காக தான் அங்க வைக்க சொன்னேன். கல்யாணம் சென்னைல பொலிட்டிக்கல் சைட் எல்லாம் வருவாங்க…”
“சரிங்க தம்பி…” மனோகரன் சொல்ல,
“மாப்பிள்ளைன்னு கூப்பிடுப்பா…” அசோகன் உடனே திருத்தினார்.
“சரிங்க ஸார்…” என்று அசோகனையும் பதட்டத்தில் ஸார் என்று அழைக்க,
“அட, என்னப்பா நீ ஸார்ன்னு கூப்பிட்டுட்டு. முறை சொல்லி கூப்பிட்டா தான நமக்குள்ள மனசுக்குள்ள ஒரு நெருக்கம் உருவாகும். ஸார்ன்னு கூப்பிட்டா உனக்குள்ளையும் அப்படி தான் தோணும். அந்நியமாக்கிரும் அதுவே…”
அத்தனை உரிமையுடன் அதட்டலாக அவர் சொல்லவும் வாசுகிக்கு மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
“சரிங்க மாப்பிள்ளை…” மனோகரன் அவரிடமே சொல்ல,
“அடடா, உன் மாப்பிள்ளை உன் எதிர்க்க இருக்கான். என்னை சொல்ல சொல்லலை…” என்று கிண்டல் பேசினார் அவர்.
அனைவரும் அவர் சொல்லியவிதத்தில் சிரித்துவிட மனோகருக்குமே பதட்டம் குறைந்து இலகுவாக இருந்தது.
“உங்களுக்கு ஓகே தானே?…” மீண்டும் ஆவுடையப்பன் அவரிடம் கேட்க மனோகரனால் சிங்காரத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
“இது உங்க பொண்ணு கல்யாணம் மாமா. அவர் பொண்ணு கல்யாணம் தான் முடிஞ்சதே. அதனால நீங்க முடிவு சொல்லுங்க…” என்றவன்,
“மிஸ்டர் சிங்காரம் எதுவும் சொல்லமாட்டார். சொல்ல போனா இந்த கல்யாணத்தை கஷ்டப்பட்டு நடத்தறதே அவர் தான். வேண்டாம், இல்லைன்னு அவர் எப்படி சொல்லுவார்?…” என சொல்லி,
“என்ன சிங்காரம், என்ன நான் சொல்றது?…” என்று கேட்டான்.
“சரியா சொன்னீங்க தம்பி…” என்று சிங்காரம் சிரிக்கவும் ஆவுடையப்பன் விழிகளில் விஷமம்.
“வெடிங் டேட் பிக்ஸ் பண்ணிட்டு முடிவு பண்ணலாம். கல்யாணத்துக்கு என்ன தேவைன்னு நீங்களே முடிவு பண்ணுங்க. ட்ரெஸ், ஜுவெல்ஸ் எல்லாம் வீட்டுக்கே வந்திரும்…”