“சொல்லுங்க…” என்று அவர் பக்கம் திரும்பி அமர்ந்தான் ஆவுடையப்பன்.
“இப்பவே எல்லாம் பேசிடலாம். அதுதான் முறையும் கூட. நிச்சயம் வரைக்கும் பேசிட்டு இதை பேசாம இருக்க முடியாதே?…” வாசுகி சொல்ல மனோகரனுக்கும் புரியவில்லை.
அவருக்கு நிதானமே இல்லை. ஒவ்வொன்றிற்கும் சிங்காரத்தின் பாடத்திற்கும் இதற்கும் வேறாக இருக்க எப்படி சூழ்நிலையை கையாள்வது என புரியாமல் திணறிக்கொண்டு இருந்தார்.
இப்போது மனைவி தானாக பேச ஆரம்பிக்கவும் என்னவாக இருக்குமென அவரை பார்க்க வாசுகி இப்பக்கம் திரும்பிவில்லை.
“வழக்கமா கல்யாணத்துல செய்யற சீர்வரிசை பத்தி தான் தம்பி. பேசிடனும்ல…”என்றார் வாசுகி.
“என்னம்மா நீங்க? பொண்ணை பிடிச்சிருக்கு எங்களுக்கு. அது போதுமே. பொண்ணை மட்டும் குடுங்க, தங்கமா பார்த்துப்போம்…” என்றார் அசோகன்.
“அது உங்க பெருந்தன்மை. ஆனா எங்க பொண்ணுக்குன்னு நாங்க சேர்த்து வச்சது. ரெண்டு பிள்ளைங்க பிறந்திருந்தாலும் நிலைச்சது என்னவோ பொண்ணு மட்டும் தான்…” என்ற வாசுகி கண்கள் கலங்கி,
“மூத்தவன் சின்ன வயசுலையே காச்சல்ல விழுந்தது தான். மீளலை. அதுக்கப்பறம் உலகமே எங்க பொண்ணுன்னு ஆகி போச்சு. அவளுக்கு பார்த்து பார்த்து சேர்த்து வச்சிருக்கோம்…” என உணர்ச்சிவசப்பட்டு சொல்ல,
“வாசுகி, என்னம்மா இது?…” மேகலை அவரின் தோளோடு சேர்த்து ஆறுதல் படுத்தினார்.
“நல்ல விஷயம் பேசும் போது இப்படியா?…” சிங்காரம் வாசுகியை என்னவோ திட்ட வர,
“இதுல என்ன இருக்கு? அவங்க என்கிட்ட சொல்றாங்க. நானும் தெரிஞ்சுக்கனும் தானே?…” என ஆவுடையப்பன் அவரின் மூக்கை உடைத்தான்.
“சரி, என்ன செய்வீங்க உங்க பொண்ணுக்கு? ம்ஹூம், எவ்வளவு குடுப்பீங்க வரதட்சணை?…” என்றான் முகம் மாறாமல் சாந்தமாக.
“எல்லாமே எங்க ஒரு பொண்ணுக்கு தான். நகைநட்டு, சீர்வரிசை, நிச்சயத்துக்கு, கல்யாணத்துக்கு, மாப்பிள்ளைக்கு, மோதிரம், பிரேஸ்லெட், செயின் இப்படி. வேற…” என வாசுகி அந்த நிமிடம் வார்த்தை வராமல் யோசிக்க,
“சரி செய்ங்க. உங்க விருப்பம்…” என்றவன்,
“எனக்கு மோதிரம் செயின் ரொம்ப பெருசா இல்லாமல் இருந்தா சரி….” என சிரித்தான்.
அவன் உடனே சரி என்றதும் வாசுகிக்கு அத்தனை திருப்தி. மனோகரனுக்கு இதனை தவறாக நினைக்காமல் இயல்பாக எடுத்துக்கொண்டு பேசியது மருமகன் மீதான நல்ல அபிமானத்தை வளர்த்தது.
சிங்காரத்திற்கு எல்லாம் தன் கையை மீறி சென்றுகொண்டிருப்பதை போல மனதை பதைபதைக்க செய்தது.
கையை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தவரின் பார்வையில் ஆவுடையப்பன் கண்ணாடி திரை வழியே வெளியே பார்ப்பதும் இங்கே பேசுவதுமாக இருக்க அத்திசையில் பார்க்க பத்ரி நேகாவிற்கு நடுவில் நின்றபடி பிரனித்தா பேசிக்கொண்டிருந்தாள்.
வெகுநேரம் இப்படியே இருக்க சிங்காரத்தின் மூளையின் மூலையில் அத்தனை வன்மம்.
‘இது போதும்டா எனக்கு. இத தெரிஞ்சு தான இந்த பேச்சையே எடுத்தேன்’ என்று நினைத்தபடி மனோகரனை பார்த்தார்.
இப்போதைக்கு எதையும் செய்ய வேண்டாம், நடப்பது அதன் போக்கில் நடக்கட்டும்.
எங்கே பிடிக்கவேண்டுமோ அப்போது பிடித்துக்கொள்வது என்ற முடிவிற்கு வந்த பின் தான் நிம்மதியாக இருக்க முடிந்தது.
மற்றவர்களின் பேச்சுக்கள் ஆவுடையப்பனை தாண்டி அசோகனிடம் இருக்க அவன் அமைதியாக எழுந்து அப்படியே வெளியே வந்தான்.
ஒரு அளவிற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. முக்கியமானதை பேசி முடித்து எழுந்து வந்துவிட்டான்.
“இல்ல இல்ல, எதுவும் பண்ணமாட்டானுங்க. நான் சொல்லிவைக்கறேன்…”
“நான் ஏற்கனவே சொல்லி வச்சுட்டேன் சிங்காரம். அடுத்தவாட்டி எதாச்சும் இடைஞ்சல் குடுத்தா என்கிட்டே சொல்லவே தேவையில்லை, பொட்டலம் போட்டுடுங்கன்னு சொல்லிட்டேன். இதெல்லாம் என் காதுக்கு திரும்ப திரும்ப வரதை நான் விரும்பமாட்டேன்னு உங்களுக்கும் தெரியும்…”
அவன் சிரித்துக்கொண்டே கூறினாலும் அந்த புன்னகை முதுகுத்தண்டை ஜில்லிடவைத்தது.
‘இவன்கிட்ட போய் இப்படி என்னை வசமா சிக்க வச்சிட்டானே அந்த ஆண்டவன்?’ என ஆயிரத்தோராவது முறையாக நொந்துகொண்டார்.
“அதெல்லாம் இருக்காது தம்பி. இப்பவே சொல்லிடறேன்…”
“சொல்லுங்க சொல்லுங்க. முடிவெடுத்தா உடனே சொல்லனும் பாருங்க. இப்பவே சொல்லிடுங்க. அப்பறம்…”
“இல்ல தம்பி, பேசிடறேன்…” என்று போனை எடுக்க,
“கல்யாணம் நல்லபடியா நடக்கனும். புரியுதா சிங்காரம்?…” சிரிப்பு மறைந்து அதிகாரம் தொனிக்க அவமானப்பட்ட உணர்வுடன் சிங்காரம் பார்த்தார்.
“வேண்டாம், சரிப்படாதுன்னு சொல்லியும், என் சித்தப்பாவை ஏத்திவிட்டு என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கீங்க. எதுவும் தெரியாம சம்மதிக்கலை. இது வார்னிங் இல்லை. புரிஞ்சிருக்கும்…” என்று எச்சரிக்கையுடன் சொல்ல,
“இல்ல அதெல்லாம் நல்ல எண்ணத்துல தான்…” என்றதும் அதனை கண்டுகொள்ளாமல் மொபைலை எடுத்துக்கொண்டு நகர்ந்தான் ஆவுடையப்பன்.
“போடா, போ. இந்த பதட்டம். கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு என்னை நீ மிரட்டினதும் கூட ஏன்னு எனக்கு தெரியாதா? இதான்டா வேணும் எனக்குமே…” என முனங்கியவர் போனில் பேசிவிட்டு உள்ளே வந்தார்.
ஆவுடையப்பன் பிரனித்தா பேசிக்கொண்டிருந்த இடம் நோக்கி தன்னைப்போல வர பத்ரி அவனை பார்த்துவிட்டு புன்னகைத்தவன்,
“நீங்க பேசிட்டிருங்க. அப்பறம் பெரியவங்க கிளம்புங்கன்னு சொல்லிருவாங்க…” என்று சொல்ல பத்ரியிடம் சிரித்தவன் பிரனித்தாவை பார்த்தான்.
“என்ன நின்னுட்ட? வா, இவ்வளோ நேரம் நடந்திட்டே இருந்த…” என சொல்ல,
“சுத்தி பார்த்துட்டேன். ஒரு ரூம்க்குள்ள ஓயாம இந்த கடைசில இருந்து அந்த கடைசிக்கு போய்ட்டு இருந்தா போரடிச்சிரும்…” என்றாள்.
“குட் குட். போரடிக்கும் தான். ஆனா எதுவுமே செய்யாம சும்மா நடந்துட்டு இருந்தா போரடிக்க தான் செய்யும்…” என்றான்.
“இங்க செய்ய என்ன இருக்கு? சும்மா வெளில பார்க்கலாம்ன்னு வந்தேன்…”
“என்ன பார்த்த?…” பேசிக்கொண்டே அவன் நகர அவனுடன் அவளும் நடந்தாள்.
“பார்த்தாச்சு. நாலஞ்சு பூ செடி இருக்கு. தூரத்துல கடல். காலுக்கு கீழே மணல். அலங்காரத்துக்கு லைட்ஸ். அவ்வளோ தான்…” விட்டேற்றியாக அவள் சொல்ல சற்று சத்தமாக சிரித்தவன்,
“இதை பார்க்க தான் வந்தியா நீ? நான் கூட எல்லாம் சுத்தி கவனிச்சிருப்பன்னு நினைச்சேன்…” என்றதும் பிரனித்தாவின் முகத்தில் தெளிவில்லை.
“இனிமே நிறைய கவனிக்கனும் நீ. கண்காணிப்புக்குள்ள வந்துட்டா நாமளும் கண்காணிப்போட தான் இருக்கனும்….” என்றவன்,
“சரி சொல்லு…” என்றான்.
“நான் ரொம்ப கவனிச்சு எல்லாம் பெருசா பார்க்கலை…”
“சரி வேற என்ன பார்த்த மோகினி?…” என்றதும்,
“நாங்க நடக்கும் போது உங்க செக்யூரிட்டி காட்ஸ் எல்லாம் எங்களையே பார்த்திட்டிருந்ததை பார்த்தேன். அவங்க நின்ன இடத்தை தாண்டி போயிடாம இருக்கோமான்னு கவனிச்சேன். வேறென்ன கவனிக்க இதுல?…” என்று வார்த்தைகளை சிதறவிட நிதானமாக பார்த்தான் அவன்.
அவனின் பார்வையில் அதுவரை மறைத்து வைத்திருந்த கலக்கத்தை அவள் விழிகள் பிரதிபலித்தது.
“இந்த அரசியல்ன்னாலே இதுதான் பயம் எனக்கு…” என்று முகத்தை திருப்பிக்கொண்டு சொல்ல,
“பயம்ன்னு ஏன் சொல்ற? உனக்கு பிடிக்காதுன்னு நிஜத்தை சொல்லேன்…” என்றதும் பட்டென்று அவனை திரும்பி முறைத்தாள்.
“அதானே உண்மை மோகினி…” ஆவுடையப்பனின் புன்னகையில் அவளின் மனது லேசாய் காயம் பூண்டது.
“என்னாச்சு?…” அவன் கனிவாய் கேட்க,
“வேகமா கல்யாண பேச்சு எடுத்துட்டாங்க…”
“ஹ்ம்ம்…”
“இவ்வளோ சீக்கிரம் மேரேஜ், இதை நான் நினைக்கவே இல்லை…”
“இது உனக்கு வயசு தானே? நானில்லைன்னாலும் எப்படியும் இன்னும் ஒருசில மாசத்துல ஆரம்பிச்சிருப்பாங்க…”
எல்லாவற்றிற்கும் அவனிடம் பதில் இருந்தது. அதிலும் அவளால் மறுக்கமுடியாத பதிலாக இருந்தது.
அவளின் கேள்விக்கு அவன் திணறி நிற்பது என்றும் நிகழாது போல என நினைத்தவள் அவனை அவ்விடத்திற்கு கொண்டுவந்தும் நிறுத்தியிருந்தாள் ஒருநாள்.
அந்த நாள் அவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒரு நாளாக கசப்பான நாளாக அமைந்து போனது என்னவோ நிஜம்.