“என்னன்னு விஷயத்தை சொல்லாமலே கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லட்டும்?…” என்றதும் அவனை தாண்டிக்கொண்டு சில எட்டுக்கள் வைத்துவிட்டாள்.
அத்தனை கோபம் வந்தது. கொஞ்சமும் இறங்கி வந்தோ, கோபப்படமாட்டேன், சரி கேள் என்றோ எதுவும் சொல்லாமல் எதிர்கேள்வி கேட்பவனை நங்கென்று கொட்டு வைத்தால் என்னவென்று தோன்றியது.
நடந்துகொண்டிருந்தவள் திரும்பி பார்க்க அதே சீரான நடையுடன் வேஷ்டியின் ஒருபக்க நுனியை ஒரு கையால் தூக்கிப்பிடித்தபடி வந்துகொண்டிருந்தான்.
அவள் முன்னே சென்றதற்கு கூட எட்டி நடையை போடவில்லை அவன். அவன் வழமை போல தான் வந்துகொண்டிருக்க அதிலும் பிரனித்தாவின் மனம் மெல்ல சுருண்டது.
திருமணம் என்றால் எத்தனை எத்தனை கனவுகள் இருக்கும். தனக்கென்று வருபவன் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவளுள்ளும் ஆசைகள் அணிவகுத்துக்கிடந்தன.
இந்த திருமண பேச்சில் இருந்தே அவை எல்லாம் சாத்தியமா என்று தோன்றினாலும் பிடித்து கேட்பவன் தனக்கும் பிடித்ததை போலிருப்பான் என்று தான் ஒரு ஓரத்தில் நினைத்திருந்தாள்.
இப்படி சிறு வார்த்தைக்கும் கூட அவன் இடத்திலிருந்து இறங்காததை போலிருக்க எதிர்பார்ப்பு கொண்ட மனது அடிவாங்கியது.
கரிசனை, அபிமானம், பிடித்தம் மட்டும் இருந்தால் போதுமா? விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என எதுவுமில்லை அவனிடம்.
சோர்வுடன் அவன் வரவை பார்த்து நிற்க வந்தவனின் புன்னகையில் மனதில் இன்னும் அழுத்தம்.