கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்தவனின் இடது கை, வலது கையிலிருந்த காப்பை இன்னும் அழுத்தமாய் மேலே ஏற்றிவிட்டுக்கொண்டு இருந்தது.
ஆவுடையப்பன் முகத்தில் அத்தனை ரௌத்திரம் கொட்டிக்கிடந்தது. இதழ்களில் வஞ்சின புன்னகை நெளிந்தாலும் கண்கள் கனலை பொழிந்தது.
“சிங்காரம் தான் ஸார்…” புருஷோத்தமன் ஆவுடையப்பனின் காதில் வந்து சொல்ல,
“நினைச்சேன்…” என்றான் ஆவுடையப்பன்.
“என்ன பன்றது ஸார்? சிங்காரத்துக்கு இவன் பிடிபட்டது தெரிஞ்சா?…” புருஷோத்தமன் கேட்க,
“தெரிஞ்சா?…” புருவம் உயர்த்தினான் ஆவுடையப்பன்.
“இல்ல தெரிஞ்சா உஷாராகிடுவாரே?…”
“ஆகட்டும். அனுப்பிவிடு…” என எழுந்துகொண்டவனை புரிந்துகொள்ள முடியவில்லை.
“இவ்வளோ கேஷ் நம்ம கண்ட்ரோல்ல இருக்குன்றப்போ சிங்காரம் இன்னும் முயற்சி செய்வார். இப்ப இந்த ஆளையும் நாம பிடிச்சிட்டதால…”
“புருஷோத்தமன், அவனை அனுப்பிட்டு ஆபீஸ் ரூம் வா…” என்று சொல்லியவன் எழுந்து மேலே சென்றுவிட புருஷோத்தமன் அரை உயிராய் கிடந்தவனை அள்ளி செல்ல ஆட்களை வரவழைத்தான்.
சற்று நேரத்தில் இடமும் காலியாக அதனை சுத்தப்படுத்த சொல்லிவிட்டு தானும் மாடிக்கு விரைந்தான்.
“சிங்காரம் மூவ் என்னன்னு டீப்பா வாட்ச் பண்ண சொல்லிருக்கேன். இவன் வரது எப்படி மிஸ் பண்ணினாங்க?…” புருஷோத்தமன் உள்ளே வந்ததும் அவனிடம் ஆவுடையப்பன் கேள்வி எழுப்ப,
“விசாரிக்கறேன் ஸார்…” என்றான் பவ்யமாக.
“கேஷ் மூவாகி எல்லாம் நார்மலைஸ் பன்ற வரைக்கும் கேர்ஃபுல்….”
“ஓகே, ஸார்…” என்று சொல்லிவிட்டு அவன் நிற்க விரலசைத்து அவனை வெளியேற்றினான் ஆவுடையப்பன்.
முகத்தில் இகழ்ச்சியான புன்னகை சிங்காரத்தை நினைத்து. ஒருபக்கம் சிரிப்பும், இன்னொருபக்கம் எரிச்சலுமாக இருந்தது.
“உன்னை என்னன்னு அடக்கறது சிங்காரம்?…” என கேட்டுக்கொண்டவன் தனது மொபைலின் அலாரத்தில் திரும்பினான்.
நேரத்தை பார்க்கவும் தான் ஞாபகம் வர உடனே மொபைலை எடுத்து அழைப்பு விடுத்தான் பிரனித்தாவிற்கு.
“ஏன் என் அப்பா இல்லையா? அவங்க பண்ணமாட்டாங்களா?…” என்றவள்,
“ஒருவேளை இந்த கல்யாண பேச்சு ஆரம்பிக்காம இருந்திருந்தா எல்லாம் நாங்களா தானே சமாளிச்சிருப்போம். இப்ப என்ன புதுசா?…”
“எக்ஸாக்ட்லி, ஆனா இப்ப தான் கல்யாணம் பேசியாச்சே? அதுவும் நைட் நான் பேசி வச்சதும் நீ தூங்கிருக்கமாட்ட?…”
“யார் சொன்னா? நான் நல்லா தூங்கினேன். சொல்ல போனா ரொம்ப நல்லா தூங்கினேன்….”
“நிஜமாவா?…” நம்பமுடியாத பாவனையுடன் அவன் சுழல் நாற்காலியில் சுற்ற,
“நம்பிக்கை இல்லைன்னா நான் என்ன பண்ண? ஒரு டவுட் இருந்துச்சு. அது க்ளியராகிருச்சு…” என்றவள் பேச்சிலிருந்து அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“என்ன டவுட்? என்ன க்ளியராச்சு?…”
“அதை நேத்து நீங்க சொன்ன மாதிரி பொசிஷன்ல நின்னு சொல்றேன். தெரிஞ்சுக்கோங்க…” என சொல்லிவிட்டு பட்டென்று அழைப்பை துண்டித்ததும் தான் அவள் சொல்லிய பொருளை உணர்ந்தான்.
“ஓஹ் காட்…” என நெற்றியை நீவிக்கொண்டவன் முகத்தில் சிறு வெட்கம்.
“மோகினி படுத்தற நீ…” என சொல்லிக்கொண்டவன் முகத்தில் ஆயிரம் மின்னல்கள்.
அதனை முழுமையாக அனுபவிக்கவிடாமல் அடுத்தடுத்த வேலைகள் அவனை கட்டி இழுத்தது.
பாண்டிச்சேரி வந்ததும் களைப்பு தீர குளித்துவிட்டு, ஊருக்கு கொண்டு சென்ற உடைகளை எல்லாம் பிரித்து எடுத்து வைத்தவள் அன்றும் அலுவலகத்திற்கு விடுமுறைக்கு சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்.
சற்று முன்னே ஆவுடையப்பனிடம் அவள் பேசிய பேச்சுவார்த்தைகள் எல்லாம் வலம் வர தன் தலையில் தட்டிக்கொண்டாள்.
“ஆனாலும் எனக்கு வாய் ஜாஸ்தி, கொஞ்சமாச்சும் மெல்ல பேசறேனா? இவ்வளோ கடிச்சா பொண்ணே வேண்டாம்ன்னு போய்ட போறார்…” என தனக்கே சொல்லிகொண்டவள் முகத்தில் புன்னகை.
அவன் வரைந்திருந்த அந்த பேப்பரை வெளியில் எடுத்தவள் முகத்தில் களைப்பு, கவலை என எல்லாம் மறைந்து கனவுகள் மிதந்தது.
அவனின் ஓவியம் இப்போதும் உள்ளுக்குள் ஊடுருவி உயிர் கலக்கும் உணர்வை தந்தது.
உடனே மொபைலை எடுத்தவள் அவனுக்கு செய்தி அனுப்பினாள். ‘ஹேவ் எ ப்ளசென்ட் மார்னிங்’ என்று அனுப்பிவிட்டு அவன் பார்க்கிறானா என்று காத்திருக்க இல்லை.
இரண்டு மணிநேரம் கழித்தும் பார்த்திருக்கவில்லை. மீண்டும் ஒரு ஸ்மைலியை அனுப்பி வைத்தாள்.
அப்போதும் பார்த்துவிட்ட அறிகுறி தெரிந்தும் மீண்டும் ஆஃப்லைன் சென்றுவிட்டான் பதில் தராமல்.
ஏமாற்றம் அவளை சூழ பின் அவனின் பொறுப்பை புரிந்துகொண்டவள் எழுந்து வெளியே வந்தாள்.
சமையலறையில் வாசனை வர அங்கே சென்றதும் மேடையில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
“இந்த பழக்கத்தை எப்ப தான் விட போறியோ நீ?…” என கடிந்த வாசுகி,
“அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுடி இப்பவாச்சும். அப்படியே கத்துப்ப…” என்றார்.
“ம்மா, அதெல்லாம் பழகிடலாம். இல்லைன்னா உங்களை ஒன்னொன்னா செய்ய சொல்லி வீடியோ எடுத்து வச்சு அதை பார்த்து குக்கிற மாட்டேனா?…” என்றவள்,
“அங்க குக்கிங்க்கு எல்லாம் ஆள் இருப்பாங்களே? நான் போய் தான் சமைக்க போறேனாக்கும்?…” என கிண்டலாய் சொல்லி பொரித்து வைத்திருந்த வடகத்தையும், அப்பளத்தையும் எடுத்து கடிக்க ஆரம்பித்தாள்.
“என்ன சமையல்?…” என வாசம் பிடித்தபடியே அதனை சாப்பிட,
“சாம்பார் சாதமும், சேனைக்கிழங்கு பொரியலும். இதோ இந்த அப்பளம்…” என்று சொல்லியவர் சமைத்ததை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு அடுப்பை துடைக்க ஆரம்பித்தார்.
யோசித்துக்கொண்டே துடைத்தவர் அப்போது தான் அணைத்திருந்த அடுப்பின் மேல் கையை வைத்துவிட சுட்டுவிட்டது.
“ஐயோ, ம்மா…” என துடைத்த துணியை போட்டுவிட்டு கையை உதற,
“ம்மா என்ன இது?…” உடனே இறங்கிய பிரனித்தா தாயின் கையை பிடித்து நீரில் வைத்தாள்.
“அட விடுடா…” என கையை உருவிக்கொண்டார் வாசுகி.
“இருக்குற வெயில்ல இது வேற இவ்வளோ சூடா வருது…” என பைப்பில் வந்த நீரை காண்பித்து சொல்லியவர் பிரிட்ஜை திறந்து அதில் கையை வைத்தார்.