“எல்லாம் அந்த ஒனிடா மண்டையர் வந்ததனால தானே?…” என்றாள் அசால்ட்டாக.
“மரியாதையா பேசுடி. வாய்ல சூடு வச்சு இழுத்திருவேன்…” என மகளின் கையில் வலிக்க கிள்ளி வைத்தார்.
“ம்மா, மண்டையன்னு எங்க சொன்னேன்? மரியாதை ரெஸ்பெக்ட் குடுத்து மண்டையர்ன்னு தானே சொன்னேன். அதுவும் அந்த சிங்-குக்கு இந்த மரியாதை போதும்…” என தோளை குலுக்கினாள்.
“அப்பா கேட்டா வருத்தப்படுவாங்க பிரனிம்மா…”
“அதான் இல்லையே. ஆபீஸ் போயாச்சுல. ஒரு நாள் லீவ் எடுங்கன்னா கேட்கறதே இல்லை…” என்றவள் தானும் தாய்க்கு துணையாக அமர்ந்து மாதுளையை பிரிக்க ஆரம்பித்தாள்.
“ஹ்ம்ம், அங்க போய் என்ன பண்ணுவியோன்னு கவலையா இருக்குதுடா உன்னை நினைச்சு…”
“ம்மா, என்னால சமாளிக்க முடியாதா? நான் ஒரு நல்ல ஜாப்ல இருக்கேன். விட்டிருந்தா இன்னும் ஒரு வருஷத்துல எனக்கு ப்ரமோஷன் கூட கிடைக்கும். ஆனா புடிச்சு கட்டி வைக்கிறதுலையே தானே இருக்கீங்க?…”
“அப்ப உனக்கு இஷ்டமில்லையா குட்டிம்மா?…”
“ஹைய்யோ ம்மா, ஒரு பேச்சுக்கு சொன்னா கிண்டல் பேசினா சீரியஸா கேட்கறீங்க? அதுவும் இவ்வளோ தூரம் பார்த்து பேசி முடிவு பண்ணின பின்னால?…” என்றவளுக்கு தாயின் எண்ணங்கள் செல்லும் திசையும் புரிந்தது.
மனதில் திடுக்கெனும் உணர்வு. தன் மறுப்பு நிச்சயம் இந்த திருமணத்தை நிறுத்திவிடும்.
‘எனக்கு இஷ்டமில்லையா?’ நினைக்கையில் முதல்நாள் இரவில் ஆவுடையப்பன் அவளிடம் பேசிய வார்த்தைகள் தான் வந்து அவனிடம் அள்ளி சென்றது.
‘உன் கன்னத்தை பிடிக்கனும்’ என்ற வார்த்தையில் தன் விரல் கொண்டு தன் கன்னத்தை பற்றினாள்.
அவன் முகம் மனக்கண்ணில் எழுந்து கண் முன்னே விரிந்து நிற்க அந்த நீண்ட விரல்களின் ஸ்பரிசத்தை மனதளவில் ஸ்பரிசித்தவளால் அதற்கு மேல் தாயின் முன்னே அமர முடியவில்லை.
நினைவிலேயே உடல் லேசாய் சிலிர்த்து அடங்க வேண்டாம் என்று எழுந்து நின்றாள் உடனே.
“என்னடா?…” வாசுகியின் கேள்வியில்,
“ஹாங், ஒரு போன் பண்ணனும்…” என்றுவிட்டு அறைக்குள் வந்துவிட்டாள்.
எல்லாம் பேச்சிலேயே நின்றிருக்க அதற்குள் இத்தனை ஆசைகளை வளர்ப்பது நல்லதல்ல என்று அறிவு அறிவுறுத்தியது.
தலையை தட்டிக்கொண்டவள் இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தாள். அவ்வப்போதும் போனையும் பார்த்துக்கொள்ள எந்தவித செய்தியும் வரவில்லை.
மீண்டும் அவனிடம் பேச அவளின் மனது உந்தினாலும் மூளை அதற்கு விடவில்லை.
“அவ்வளவு பிஸின்னா ப்ரீயாகவும் கால் பண்ணட்டும்…” என பிடிவாதமாக இருந்துகொண்டாள்.
ஆனால் அவ்வப்போது அவனின் எண்ணை நோட்டமிடுவதும், எப்போதெல்லாம் ஆன்லைனில் இருக்கிறான் என கவனிப்பதுமாய் இருந்துகொண்டே தன் வேலையில் கவனமானாள்.
இன்னும் தோழிகள் யாருக்கும் சொல்லவில்லை. அலுவலகத்திலும் எதுவும் பகிரப்படவில்லை.
வாசுகி சொல்லிவிட்டார் நிச்சயதார்த்தத்தின் பொழுது அழைப்பு விடுத்து சொல்லிக்கொள்ளலாம் என்று.
அதனால் வாயை திறக்கவில்லை யாரிடமும். ஊருக்கு சென்று வந்ததை பற்றி கேட்ட பொழுது கூட சொந்தங்களில் விசேஷம் என்று மழுப்பிவிட்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து மனோகரனே சிங்காரத்திடம் தேதியை பற்றி பேச தேதியும் முடிவாகி அசோகனின் மூலம் ஆவுடையப்பனுக்கு தெரிவிக்கப்பட்டது.
பதினைந்து நாளில் நிச்சயதார்த்தம் என்றும், அதற்கு அடுத்த மாதம் திருமணம் என்றும் முடிவாகியிருந்தது.
இத்தனையிலும் சிங்காரம் ஆவுடையப்பனிடம் திருமணம் தவிர்த்து வேறு எதை பற்றியும் பேசவில்லை.
பேசும் தருணம் அதுவல்ல என்று பொறுமை காத்துக்கொண்டிருக்க, பேசும் தருணத்தை எதிர்பார்த்திருந்தான் ஆவுடையப்பன்.
இன்னும் பதினைந்தே நாட்கள். படபடவென்று அடித்துக்கொண்டது பிரனித்தாவிற்கு.
எப்படி தோழிகளிடம் சொல்ல போகிறோம் என்று ஒருபக்கமும், நிச்சயத்திற்கு பின்னான தனது வாழ்க்கை பற்றியும் குழப்பமும், பதட்டமுமாய் கழிந்தது.
நிச்சயம் பற்றி முடிவாகிய ஒரு வாரம் கழித்து ஆவுடயப்பன் தானாக அழைத்திருந்தான் பிரனித்தாவிற்கு.
அவ்வளவு நாள் அழைக்காமல் அன்று அழைக்கவும் முன்பே முடிவு செய்ததை போல எடுக்க வேண்டாம் என இருந்தவள் இருந்த பதட்டத்தில் அழைப்பை ஏற்றுவிட்டாள்.
“மோகினி, உனக்கு சேரீஸ் டிஸைன்ஸ் அனுப்பியிருக்கேன். எது வேணும்னு சூஸ் பண்ணு…” என்று அவள் எடுத்ததும் இவன் சொல்ல,
“நான்…” என்றவள் பேசும் முன்,
“கூடவே ஜுவெல்ஸ் டிஸைன்ஸ் கூட அனுப்பியிருக்கேன். எந்த சேரிக்கு எந்த ஜுவெல்ஸ் செட்டாகும்ன்னும் சொல்லிடு. நிச்சயத்துக்கு மாப்பிள்ளை சைட் தானே எடுத்து குடுக்கனும்?…”
பக்காவாக மாப்பிள்ளை வீட்டினரை போல பேசியவன் மாப்பிள்ளை போல பேசவில்லை அவளிடம்.
அத்தனை அவசரம் அவனின் பேச்சில். இத்தனை நாட்கள் கழித்து அழைக்கிறோமே என நலம் விசாரிக்கவெல்லாம் இல்லை அவளிடம்.
“ஹலோ மோகினி…” என அவளின் இருப்பை அவன் உறுதி செய்ய கேட்க,
“இருக்கேன்…” என்றாள்.
“ஹ்ம்ம், டிஸைன்ஸ் அனுப்பியிருக்கேன்னு சொன்னேன். செலெக்ட் பண்ணிட்டு எனக்கு அதை அனுப்பிவிடு…”
“உடனே அனுப்பனுமா? இல்லை நீங்க எனக்கு கால் பண்ணினதை போல ஒருவாரம் கழிச்சு அனுப்பனுமா?…” அடக்கப்பட்ட கோபத்துடன் சாதாரணம் போல கேட்க,
“உன் விருப்பம், நீ நிச்சயத்துக்கும் முதல் நாள் அனுப்பினாலும் கூட அது உனக்கு வந்துரும்…”
“நிச்சயத்தார்த்தம் முடிஞ்சதும் அனுப்பினா?…”
“சிம்பிள், என்னோட சாய்ஸ் தான் நம்மோட எங்கேஜ்மென்ட்ல உன்னோட மேக்கோவர்….” என்றதும் பற்றிக்கொண்டு வந்தது.
“ஏற்கனவே சூஸ் பண்ணிட்டு பேசற மாதிரி இருக்கு…”
“எஸ், உனக்கு எது நல்லாருக்கும்ன்னு எனக்கு ஒரு இமாஜின் இருக்குமே. அதை நான் செலெக்ட் பண்ணிட்டேன். இது உனக்கு பிடிச்சதுக்காக…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“அப்ப அதையே கொண்டு வாங்க…”
“மோகினி…”
“இல்லை, இதை எதையும் பார்க்க எனக்கு இஷ்டமில்லை. நீங்க செலெக்ட் பண்ணினதையே கொண்டு வாங்க…” என்றாள்.
“ஓகே, யூர் விஷ். பை, டேக் கேர்…” என்று போனை வைத்துவிடவும் அதனை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்று புலப்படவில்லை. தனக்கு நன்றாக இருக்கும் என்னும் ஆசையினால் அவன் தேர்ந்தெடுத்திருந்தது ஒருபக்கம் மகிழ்ச்சியை தந்ததும் உண்மை.
அதே நேரம் அவனின் இந்த அவசர பேச்சும், தன்னை கேட்காததும் எதிர்பார்ப்பு கொண்ட மனதில் அடுத்த கோடை கிழித்தது.
எதையும் காட்டிக்கொள்ளவில்லை பிரனித்தா. நிச்சயதார்த்த பத்திரிக்கைகள் ஒருபக்கம் தயாராகி வந்திருந்தது.
அவ்வப்போது ஆவுடையப்பனை நினைத்து சோர்வு கொண்டாலும் அதிலேயே மூழ்கிவிடும் இயல்பு அவளது இல்லை.
தன்னுடைய இயல்பை என்றும் மாற்றவில்லை. அவன் அப்படி இருந்தால் இருந்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள்.
அவ்வப்போது இடையிடையே எப்போதாவது பேசுவான், இரண்டு நொடி இருக்காது. அவ்வளவு தான்.
அதனை பெரிதுபடுத்தி இன்னும் தன்னை தொலைத்துவிட விரும்பவில்லை பிரனித்தா.
பேசினால் பேசுவோம், இல்லை என்றால் இல்லை. என முடிவெடுத்தவள் இன்னும் நான்கு நாளில் நிச்சயதார்த்தம் என்றிருக்க தானாகவே அழைக்கும் சூழ்நிலை.
அலுவலகம் சென்றிருந்தவள் பன்னிரெண்டு மணிவாக்கில் அவனுக்கு அழைத்துவிட வழக்கம் போல எடுக்கவில்லை.
மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைக்க ஐந்தாறுமுறை அழைப்பு சென்றதும் தான் அதனை ஏற்றான் ஆவுடையப்பன்.
“ஹ்ம்ம், சொல்லும்மா…” என மெல்லிய குரலில் அத்தனை மெதுவாய் பேசினான்.
அந்த கிசுகிசுப்பான குரலில் சொல்லவந்தது பின்னுக்கு போக சட்டென சிரிப்பு வந்துவிட்டது.
“நானும் இப்படி ரகசியமா சொல்லவா?…” என கிண்டல் பேச அவனின் முகத்திலும் புன்னகை.
வெகுநாளைக்கு பிறகான இலகுவான பேச்சு. அவளிடம் தானாக பேசும் சில சொற்ப நொடிகளில் கூட அவள் இவ்வளவு சிரித்து பேசவில்லை. இப்போது பேசவும் குழைந்தவன்,
“ஹேய் என்ன கிண்டலா? என்னன்னு சொல்லு மோகினி…” என்றான்.
“ஒரு முக்கியமான விஷயம். அதான் கூப்பிட்டேன்…” என்னும் பொழுதே ஆவுடையப்பன் குரலில் பரபரப்பு,
“நான் ஒரு டூ ஹவர்ஸ்ல கூப்பிடறேன். வைம்மா…”
“இல்ல நான்…”
“மோகினி சொல்றேன்ல…”
“ஒரு முக்கியமான விஷயம். நீங்க திரும்ப கூப்பிடமாட்டீங்க. கேட்டுட்டு போய்டுங்களேன். என்ன செய்யட்டும் நான்னு சொல்லுங்க…”
“இப்ப பேச டைமில்லை ம்மா…” அவன் குரலில் அத்தனை அவசரம்.
“நிஜமா கூப்பிடுவீங்களா?…” அதிலும் அவளிடம் கோபிக்காமல் பேச அதை உணர்ந்து பிரனித்தா இறங்கி வந்தாள்.
“கண்டிப்பா?…”
“அதுவரைக்கும் நான் என்ன பண்ண?…” தனக்கு தானே சலித்துக்கொள்ள அவனுக்கும் அது கேட்டது.
“உன் உள்ளங்கைல எத்தனை ரேகைகள், கிளை ரேகைகள் இருக்குன்னு எண்ணி அதை எழுதி வை. அதுக்குள்ளே என் வொர்க்கை முடிச்சுட்டு நான் வந்து கேட்கறேன். ஓகே…”
“உள்ளங்கையா? ஒன்றா? இரண்டா ரேகைகள்?…” என உல்லாச மனநிலையில் பிரனித்தாவும் பேச,
“எல்லாம் நான் வரவும் சொல்லுவியாம். இப்ப மீட்டிங், நான் கிளம்பறேன். பை…” என்று வைத்துவிட்டு சென்றுவிட்டான்.
அழைப்பு துண்டிக்கப்பட்டும் இன்னும் அவனின் குரல் அவளின் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க உள்ளங்கையை விரித்து பார்த்தாள்.
“வேகமா எண்ணிட்டேனா வண்டுமுருகன் உடனே வந்திடுவாராமா?…” என்றவள் வேலையை மறந்து உள்ளங்கையில் கவனமாகினாள்.
அவன் அழைக்கும் வரை அவள் மனதில் அவன் வருகையை எண்ணி விரல் கொண்டு இதயம் விழி வழியில் ரேகைகளின் நெளிவுகளை பார்த்திருந்தது.