சோர்வுடன் பிரனித்தா தன்னிருக்கையில் அமர்ந்திருக்க மொபைலை பார்க்க பார்க்க அத்தனை கோபம் வந்தது.
‘இதுதான் கூப்பிடறேன்னு சொன்னதா?’ என ஆவுடையப்பனிடம் சண்டை போடும் ஆத்திரமும் கிளர்ந்தது.
எவ்வளவு கோபம் வந்ததோ, அவ்வளவு தூரம் தளர்ந்து போனாள். ஒரு பேச்சுக்கேனும் கூட தான் சொல்லியதில் உண்மை இருக்கும் என தோழி யோசிக்கவில்லையே என எண்ணியபடி நேரத்தை பார்த்தவள் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் கிளம்பிவிட்டாள்.
கிளம்பும் நேரம் தான். ஆனால் அரைமணி நேரம் முன்பே வெளியேறியிருந்தாள் அந்த வளாகத்தை விட்டு.
நேராக வீடு வந்து சேர்ந்தவளுக்கு தலைவலித்தது. வந்ததும் சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
உள்ளே இருந்த வாசுகி வெளியில் வந்து எட்டி பார்த்தவர் மகளிடம் நெருங்கினார்.
“குட்டிம்மா, என்ன இவ்வளோ சீக்கிரம் வந்திட்ட?…” என கேட்கவும் நெற்றியை பிடித்தபடி,
“ம்மா, காபி…” என்றாள்.
“தலை வலிக்குதா? நல்லவேளை இப்பத்தான் டிகாஷன் இறக்கினேன்…” என சொல்லிக்கொண்டே காபி கலக்க சென்றார்.
தலையை இரு கையிலும் தாங்கி பிடித்திருந்தவள் பார்வையில் டீப்பாயில் இருந்த பத்திரிக்கைகள் தென்பட்டது.
இன்னும் உள்ளூரிலும், அருகில் இருப்பவர்களுக்கும் தர ஆரம்பிக்கவில்லை. அதற்கானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் வாசுகி.
அதை கையில் எடுத்தவள் பார்வையில் அவன் பெயரும் அவனருகே துணையாய் தன் பெயரும்.
விரல்களால் வருடியவளுக்கு அவ்வளவு நேரத்தின் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் தொனிக்க லேசாய் கண்கள் கலங்கியது.
“பிரனிக்குட்டி…” தாயின் அழைப்பில் நிமிர்ந்து பார்க்க கலங்கிய கண்கள் தெளிவாய் தெரிந்தது.
“என்னம்மா ரொம்ப வலிக்குதா?…” என கேட்டுக்கொண்டே காபியை தந்தவர் மகளின் நெற்றியை பிடித்துவிட்டார்.
“நாளையில் இருந்து உள்ளூருக்குள்ள குடுத்திடலாம்ன்னு சொல்லிருக்காங்க அப்பா. அதான் ஒவ்வொரு ஏரியாவாரியா பிரிச்சு கவர் போட்டுட்டிருக்கேன். கூடவே ஒரு பேப்பர்ல யாரும் விட்டு போயிடக்கூடாதேன்னு எழுதிட்டிருந்தேன்…”
வாசுகி சொல்ல சொல்ல தலையசைத்தபடி காபியை பருகினாள். அழுத்தம் கூடியிருந்தது மனதில்.
“வெளியூர் சொந்தத்துல ஓரளவு தெரியும்ன்னாலும் இடம் தகையாதுன்னு நினைச்சிருப்பாங்க போல. பேச்சுலையே அவ்வளோ பொறாமை…” வாசுகி சொல்லிக்கொண்டே அவற்றை எடுத்து வைத்துவிட்டு,
“ஆமா நீ என்னைக்கு உன் ஆஃபீஸ்ல குடுக்க போற? லீவ் சொல்லியாச்சா?…” என கேட்டார்.
“நாளைக்கு குடுக்கலாம்ன்னு இருந்தேன்ம்மா. அதுக்குள்ள ஒரு விஷயம்…” என்று சொல்ல,
“ஏன் உன் முகமே டல்லாருக்கு பிரனிம்மா?…” வாசுகிக்கு மகளின் சோர்ந்த முகம் கவலையளித்தது.
“நத்திங் ம்மா…” என்றவள்,
“ஆபீஸ்ல ப்ரமோஷன் குடுத்திருக்காங்க…”
“சரி, யாருக்கும் குடுக்கட்டும். அதுக்கு தான் இவ்வளோ சோகமா?…” என்றவர்,
“இன்விடேஷனை குடுத்துட்டு ரிசைன் பண்ணிட்டு வந்திடுடா…” என்றார்.
“ம்மா ப்ரமோஷன் எனக்கு…” என்று சொல்லும் பொழுதே மீண்டும் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.
அவளின் கையில் வைத்திருந்த நிச்சயப்பத்திரிக்கை ஒருபுறம் கனத்தது பிரனித்தாவிற்கு.
“இப்ப ப்ரமோஷன் கிடைச்சு?…” என்ற வாசுகிக்குமே வேறு என்ன சொல்வதென்று பிடிபடவில்லை.
மேலும் பேசி மகளை நோக செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டார்.
எத்தனை ஆசையுடன் பிரமோஷனை எதிர்பார்த்திருந்தாள் மகள் என்று அவருக்கும் தெரிந்தது தானே? வருத்தமாக இருந்தது.
“என்ன செய்யட்டும் ம்மா?…” என கேட்க வாசுகி விழித்தார்.
“மாப்பிள்ளைக்கு சொன்னியா நீ?…” என கேட்க,
“ம்ஹூம், இல்லை…”
“என்ன பொண்ணுடா நீ? முதல்ல இதை சொல்ல வேண்டாமா?…”
“சொன்னா வேலைக்கு போன்னு சொல்லிடுவாரா? இல்லை நிச்சயம் முடிஞ்ச பின்னாடி தான் போக முடியுமா? என்னம்மா நீங்க?…” சலிப்புடன் சொல்லியவள் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
தன்னறைக்கு வந்தவள் உடை மாற்றிவிட்டு மொபைலை எடுத்து பார்க்க அழைப்பு வந்திருக்கவில்லை.
போனை படுக்கையில் விட்டெறிந்தவள் அங்கிருந்த லேப்டாப்பில் தனக்கு பிடித்த வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தாள்.
“வா கோவிலுக்கு போய்ட்டு வருவோம். சாமி கும்பிட்டு வந்தா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். உனக்கும் ரிலாக்ஸா இருக்கும்…” என்று சொல்லவும் அவருடன் கிளம்பினாள் பிரனித்தா.
கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பெற்று வீடு வந்து சேருகையில் இரவு உணவு நேரத்தை எட்டியிருந்தது.
வெளியே சென்று வந்ததில் இன்னும் தலைவலி கூடியது தான் மிச்சம். இரவு நேரம் உணவிற்கு அழைக்க வாசுகி வரவும் எழுந்து சாப்பிட சென்றாள்.
மனோகரன் இன்னும் வந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும் உண்டுவிட்டு உறங்க செல்ல பத்தரை மணி போல தான் மனோகரன் வந்த சப்தமே கேட்டது பிரனித்தாவிற்கு.
மற்றொரு சமயமாக இருந்தால் எழுந்து சென்று சிறிது நேரம் பேசிவிட்டு வந்திருப்பாள். இப்போது மனதில்லாமல் செல்லவில்லை.
வாசுகியும் அந்த நேரம் எதையும் மனோகரிடம் சொல்லமாட்டார் என்பதால் காலை பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.
வெளியே சப்தங்கள் அடங்கிவிட்டது. ஹாலின் விளக்கும் அணைக்கப்பட்டிருக்க பதினோரு மணியாகியிருந்தது.
மாத்திரை ஒன்றை எடுத்து போட்டவள் கண்ணை மூடி உறங்க முற்பட மனக்கண்ணில் அவன் வரைந்த ஓவியம்.
கைகளை இறுக்கமாய் பிடிக்க விரல்களின் உராய்வில் ரேகைகளின் உரசல் அவளை இம்சித்தது.
“இந்த மனுஷனோட பேசாமலாச்சும் இருந்திருக்கலாம்…” தன்னையே நொந்துகொண்டு புரண்டு படுக்க மொபைலில் அழைப்பு வரும் அதிர்வு.
வைபரேட்டில் போட்டிருந்தவள் அந்த நேரம் யார் அழைப்பார்கள் என தெரிந்தும் வெறித்த பார்வையுடன் எடுக்கவில்லை.
மீண்டும் மீண்டும் அழைப்பு வர அடக்கப்பட்ட சீற்றத்துடன் நான்காம் முறை எடுத்துவிட்டாள்.
“மோகினி…” என்றவனின் குரலை கேட்டதும் அமிழ்ந்திருந்த ஏமாற்றம் ஆதங்கமாய் உடைப்பெடுக்க இப்போது பேசினால் பெரிதாய் சண்டை போட்டுவிடுவோம் என வார்த்தைகளை அடக்கினாள்.
“மோகினி…” மீண்டும் ஆவுடையப்பனின் அழைப்பு.
“ராங் நம்பர்…” என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவள் மொபைலையும் அணைத்துவிட்டாள்.
இல்லையென்றால் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுப்பான் அவன். வேண்டாம், எதையும் பேசி அவனை காயப்படுத்தி சிக்கலாக்கிக்கொள்ள விரும்பவில்லை.