திடீரென வந்து நின்றவனை எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை.
நொடிக்கு நொடி திகைப்பு கூட கூட அங்கே அவனின் முன் வந்து நின்றாள் பிரனித்தா.
கனவோ என்று தன் கண்சிமிட்டி லேசாய் கையை கிள்ளி பார்த்துக்கொண்டவள், ‘ஸ்ஸ்’ என்னும் சத்தத்தில் தேய்த்தும்கொள்ள ஆவுடையப்பன் முகத்தில் புன்னகை இன்னும் விரிந்தது.
அவளிடம் தலையசைத்தவன் மனோகரனை திரும்பி பார்த்தான். வாசுகியும், மனோகரனும் இன்னும் பிரமிப்புடன் பார்த்து நிற்க,
“ஒரு டென் மினிட்ஸ். இங்கயே பேசிட்டு கிளம்பிடறேன்…” என்றதும் மனோகரன் தலை தன்னைபோலாடியது.
“எதாச்சும் சாப்பிடறீங்களா?…” வாசுகி கேட்க,
“ம்ஹூம், நோ தேங்க்ஸ்…” என்றவன் ,
“வா உட்கார்…” என்றான்.
நடுசாமத்தில் இப்படி பெற்றவர்கள் முன்னிலையில் அவன் சட்டமாய் அமர்ந்து சொல்ல சங்கடத்துடன் அவர்களை ஏறிட்டாள் பிரனித்தா.
“இல்ல அப்பா…” என்றதுமே,
“நீ பேசிட்டிரும்மா. இங்க தான் இருக்கோம்…” என்ற மனோகரன் பக்கத்து அறையில் சென்று அமர்ந்துகொண்டார் வாசுகியுடன்.
உள்ளே வந்து அவர்களின் அறை கதவையும் சாற்றவில்லை. அது நன்றாக இருக்காது என்று.
இப்படி திடுதிப்பென்று இந்த நேரத்தில் வந்திருக்க மறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் ஒருவித அவஸ்தையுடன் இருந்தார்கள்.
அதிலும் அறையின் ஜன்னல் வெளியே எட்டி பார்க்க ஆவுடையப்பன் கார் நின்றிருந்தது.
பின்னால் இன்னொரு காரும் பாதுகாவலர்களுடன் அங்கே நிற்க யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்றானது.
இதுவே பகலில் என்றால் இவ்வளவு பதட்டம் அவசியமில்லை. நேரமும், காலமுமே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது என்பதை தெரிந்திருந்தவர்களுக்கு பதட்டம் தான்.
ஹாலில் ஆவுடையப்பனை பார்த்தபடி இருந்தவள் தாயும், தகப்பனும் உள்ளே சென்றதும் இன்னும் படபடப்பாக இருந்தது.
அவன் மீது கொண்டிருந்த கோபம், ஆற்றாமை, ஆதங்கம் என ஒவ்வொன்றும் இருந்த இடம் தெரியவில்லை.
விழிகள் தெறிக்க அவனை பார்ப்பதும் பெற்றவர்கள் சென்ற அறையை பார்ப்பதுமாக இருந்தாள்.
“உட்கார் மோகினி…” என்றவன் குரலில் அவனை புருவம் உயர்த்தி பார்த்தவள்,
“இந்த நேரம் வந்திருக்கீங்க?…” என்றாள் மெல்லிய சத்தத்தோடு.
“சொல்றேன், கொஞ்சம் தண்ணி கொண்டுவா…” என்றவன் இன்னும் வாகாக சாய்ந்து அமர்ந்தான்.
ப்ரிட்ஜில் இருந்த பாட்டிலை எடுத்து வந்து நீட்டவும் வாங்கி பருகியவன் அதனை மூடி வைக்கவும் பாட்டிலை வாங்க கையை நீட்டினாள்.
“உட்கார், தேவைப்படும். பேசுவோம்…” என்று சொல்ல,
“இல்ல நீங்க சொல்லுங்க. நான் நிக்கறேன்…” என்றவள்,
“இல்லைன்னா கிளம்புங்க. நானே கால் பன்றேன்…” என்றும் சொல்ல லேசாய் சிரித்தவன்,
“உட்கார் மோகினி…” என அழுத்தி சொல்ல அமர்ந்துகொண்டாள்.
அவளை மேலோட்டமாய் பார்த்தவன் மனதில் அவளின் இந்த எழிலும் ஓவியமாய் பதிந்து போனது.
முதல்நாள் கோவிலுக்கு சென்றுவந்த உடையிலேயே தான் உறங்கியிருந்திருந்தாள் பிரனித்தா.
கோவிலில் வாங்கி வைத்த பூ ஒருபுறம் கசங்கி கழுத்தில் நீளமாய் தொங்கிக்கொண்டிருக்க காட்டன் சுடிதார் நலுங்கி, நெற்றியில் முதல்நாள் வைத்திருந்த சந்தானம், குங்குமம் எல்லாம் லேசாய் உதிர்ந்தும் உதிராமல் இருந்தது.
அந்த நொடி நேரம் மேலோட்டமான பார்வையில் அவன் கண்டுகொண்டவை இவை எல்லாம்.
“பொக்கே…” அவன் நீட்டவும் எதற்கென்று புரியாமல் வாங்காமல் பார்க்க,
“உன் நம்பருக்கு ட்ரை பண்ணேன். ராங் நம்பர்ன்னு வந்துச்சு. அட்ரஸ் கரெக்ட்டான்னு செக் பண்ணிடலாமேன்னு வந்தேன். பார்த்தா கரெக்ட் தான். அதான் செலிபரெட் பண்ணலாமேன்னு. பிடி…” என்றான்.
“உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கலை. அதுவும் இந்த நேரம். அம்மாப்பா என்ன நினைப்பாங்க?…”
“நான் கால் பண்ணேன். நீ ஆஃப் பண்ணிட்ட. பேச முடியலை. அதான் பார்த்திடலாம்ன்னு கிளம்பி வந்தேன்…”
“ஓகே, பார்த்துட்டீங்க கிளம்புங்க…”
“ம்ஹூம், என்ன விஷயமா கால் பண்ணின? சொல்லு…” என்றான் பிடிவாதமாக.
அதை சுத்தமாய் மறந்துவிட்டிருந்தாள் பிரனித்தா. அதிலும் அவன் வந்து நின்றதும் எல்லாமே மறந்துவிட்டிருந்தது.
“என்ன?…”
“கால் பண்ணியிருந்தியே என்ன விஷயம்ன்னு கேட்டேன்…” என சொல்லிக்கொண்டே சாய்ந்திருந்தவன் நிமிர்ந்து முன்னே வர பிரனித்தா பார்வை அவனின் முகம், மீசை, தாடையை தாண்டி கழுத்தில் பதிந்தது.
லேசாய் அவன் நிமிர்ந்ததில் வெள்ளை சட்டையில் இரு பட்டன்கள் திறந்திருந்ததின் இடையில் லேசாய் துருத்தி அமிழ்ந்த கழுத்தின் எலும்பும் அதில் துவண்டு நெகிழ்ந்து கழுத்தை ஒட்டிய கனத்த தங்க சங்கிலியும் தான் கண்ணில் விழுந்தது.
கழுத்துவரை அடர்ந்த கருமையான முடியில் பிணைந்து மின்னிய சங்கிலியின் நுனியில் அழகாய் ஒரு டாலர்.
அதில் குட்டி குட்டியாய் ஒளிக்கற்றை வீசும் வெள்ளைநிற கற்கள். பிரனித்தாவின் கவனம் அங்கே குவிந்தது.
“இது என்ன டிஸைன்னு தெரிஞ்சுக்கனுமா மோகினி?…” என்றான் ஆவுடையப்பன்.
“ஹாங்…” என்றவள் ஒருநொடி தன்னை எண்ணி மூர்ச்சையாகி போனாள்.
“ரேகையை எண்ணியாச்சா? எத்தனை இருந்தது?…” அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டவன் பார்வையில் லேசாய் கூசி சிலிர்த்தவள் அதனை தொடர்ந்த ஞாபகத்தில் முகம் மாறினாள்.
அன்றைய நாள் காலை அலுவலகம் சென்றதும் பதவி உயர்வு பற்றிய தகவலும், அபிநயாவின் நம்பகமில்லாத கேலி பேச்சும், ஆவுடையப்பனின் அழைப்பின்மையும் என ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது.
“ஹ்ம்ம், சொல்லு…” என மீண்டும் சாய்ந்தமர்ந்தான்.
“ஆபீஸ்ல ப்ரமோஷன். அதை பத்தி சொல்ல தான் கால் பண்ணேன்…” எந்தவித உணர்வுமின்றி வந்தது அந்த குரல்.
இத்தனை அமைதியாக அவள் பேச கேட்டிருந்தவன் முகமும் யோசனைக்குள்ளாகியது.
“என்ன பண்ணலாம்?…” என கேட்டான் அவளிடமே.
“என்னை கேட்டா?…”
“வொர்க் பன்றது நீ தானே?…” என்றதும் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
“என்னை கேட்டா எல்லாம் நடக்குது?…” என்றாள் ஆற்றாமையுடன்.
மனதில் அவனை இவ்வளவு தூரம் வரவழைத்துவிட்டோமே என்னும் உணர்வு குறைந்து இந்த பட்டுக்கொள்ளா பேச்சில் கொதித்து போனாள்.
“உன்னோட விருப்பம்ன்னு சொன்னேன் மோகினி…” என்றவன்,
“இன்விடேஷன் குடுத்தாச்சா ஆபீஸ்ல?…” என்றான்.
“ம்ஹூம்…”
“ஏன்?…”
“குடுத்தா மட்டும் நம்பிருவாங்களா?…” என்றதும் திகைப்புடன் பார்த்தான் அவளை.
“என்ன நடந்துச்சு?…” என ஆவுடையப்பன் கேட்க,
“என்ன நடக்கனும்? உங்க கால்க்கு வெய்ட் பண்ணிட்டிருந்தேன். ப்ரென்ட் வந்து என்னன்னு கேட்டா. யாரயோ லவ் பன்றேன்னு நினைச்சுட்டா போல?…”
“ஹ்ம்ம், என்ன சொன்ன மோகினி?…” மிதமான உல்லாச குரல் அவனது.