“பாஸ்போர்ட் எடுக்க தான். கல்யாணம் முடியவும் ரெண்டுபேரும் ட்ரிப் போகவேண்டாமா? அதான்…” என சாதாரணம் போல சொல்லி ஒரு பேப்பரை நீட்ட குப்பென்று வியர்த்துவிட்டது பிரனித்தாவிற்கு.
“ஓகே…” என தோளை குலுக்கியவன் வீட்டை சுற்றி பார்த்தான்.
அவன் அமர்ந்திருந்த விதத்தை பார்த்தால் இப்போது கிளம்புவான் என்பதே சந்க்தேகம் போலிருந்தது.
கையை பிசைந்துகொண்டு அவன் பார்வை செல்லும் வழியெல்லாம் இவளும் பார்க்க அவள் வேறுதிசையில் பார்த்த நேரம் அவன் அவளை பார்க்க என சில நிமிடங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு.
“என்னையும் நீ புரிஞ்சுக்கனும். வேணும்னு அவாய்ட் பண்ணலை. ஆனா சூழ்நிலை அப்படி இருக்கும் போது…” என்றவன்,
“இதுமாதிரி இனி நடக்காதுன்னு எல்லாம் சொல்லமாட்டேன். நடக்கும். அரசாங்க பணம் புரளும் இடம். காசு சம்பந்தப்பட்டது. கத்திமேல நடக்கற மாதிரி. அதுவும் இப்ப நான் பன்ற விஷயம். ஹ்ம்ம்…” என்றவன் மேலும் அதனை விவரிக்கவில்லை.
“கல்யாணம் முடியட்டும், உனக்கே புரியும்…” என்றான்.
“இல்லை, என் மேலையும் தப்பு தான். கொஞ்சம் கன்ப்யூஸாகிட்டேன். அதான் கால் அட்டன் பண்ணியும் அப்படி நடந்துக்கிட்டேன்…”
“எக்ஸ்படேஷன் இருக்கும் போது தப்பு சொல்லமாட்டேன். இது நேச்சர் தான் மோகினி…” என்றான் மென்னகையுடன்.
“இவ்வளோ தூரம் உங்களுக்கு அலைச்சல், என்னால தானே?….” என்று சொல்ல,
“எல்லாம் நல்லதுக்கு தான்…” என்றவன் இதழ்களில் கள்ளப்புன்னகை.
இருவிரல் கொண்டு மீசையை நீவுவதை போல அதனை மறைக்க முயன்று வேறுதிசையில் பார்வையை கொண்டு சென்றான்.
“அப்படியா? இங்கே வேற எதாச்சும் வேலை இருந்ததா? அதான் வந்தீங்களா?…” என்றாள் அப்படியும் இருக்குமோ என்று.
“ம்ஹூம், பர்ப்பஸா உன்னை பார்க்க மட்டுமே வந்தேன்…” என்றவன்,
“ஓகே, இதுக்கு மேல இங்க இருந்தா நல்லதில்லை…” என எழுந்துகொண்டான்.
நேரம் நான்கை தொடவிருந்தது. ஆவுடையப்பான் எழுந்ததுமே அவனுக்கு தண்ணீரை தவிர வேறு ஒன்றையும் தரவில்லையே என யோசித்தவள்,
“காபி குடிங்களேன். எதுவும் சாப்பிடாம போறீங்க? அதுவும் முதல் தடவை வந்திருக்கீங்க?…” என்றாள் பிரனித்தா.
“சமைக்க தெரியுமா உனக்கு?…” கிண்டல் போல அவன் கேட்க அவளின் முறைப்பு தான் பதில்.
“காபி போட்டுட்டு வரட்டும். நீங்க உக்காருங்க அத்தை. பேசலாம்…” என்று அவரை நகர விடவில்லை ஆவுடையப்பன்.
“ஹ்ம்ம்…” என மனமே இல்லாமல் தான் அவர் அமர்ந்தார்.
சின்ன சின்ன சமையல் எல்லாம் தெரிந்தாலும் இன்னும் அத்தனை சிறப்பாய் அவள் செய்ததில்லை.
அதுவே வாசுகிக்கு தர்மசங்கடத்தை தந்தது. மருமகனாக போகிறவர் முதன்முதலில் வந்திருக்க இப்படியா காபி தருவது என்று கவலை கொண்டு இருந்தார்.
அதற்குள் மனோகரனிடம் திருமணம் குறித்த பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்தான் ஆவுடையப்பன்.
அடுக்களைக்குள் வந்தவள் பாலை காய்ச்ச ஆரம்பித்து காபி பவுடர், சர்க்கரை என எடுத்து வைத்தவள் அளவுகளை ஞாபகத்தில் கொண்டுவந்தாள்.
‘சுகர் பேஷண்டுடா நானு’ என்னும் நகைச்சுவை ஞாபகம் வர சிரித்தபடி காபி கலக்கினாள்.
கப்களில் பாலை ஊற்றி காபி பவுடரை போட்டவள் ஒரு கப்பில் சர்க்கரையை போடும் பொழுது அவனின் பேச்சு ஞாபகத்தில் சிரித்துவிட்டாள்.
ட்ரேயில் மூன்றுபேருக்கும் காபியை கலக்கி எடுத்து வந்து சர்க்கரை அளவு குறைந்திருந்ததை ஆவுடையப்பனுக்கு விழிகளால் காண்பித்து எடுத்துக்கொள்ள கூறியவள் பெற்றோருக்கும் நீட்டினாள்.
வெகு சுமாரான காபி என வாசுகிக்கு முதலிலேயே தெரிந்து போனது. மகளை பார்த்துவிட்டு மருமகனிடம் அசட்டு புன்னகை சிந்த எதையும் முகத்தில் காண்பிக்காமல் அதனை குடித்துவிட்டு எழுந்துகொண்டான்.
“உங்க தூக்கத்தை கெடுத்துட்டேன்…” என்று சொல்ல,
“இருக்கட்டும்ங்க மாப்பிள்ளை…” என்றார் மனோகரன்.
“அப்பறம், இனிமே மொபைலை ஆஃப் பண்ணாதம்மா. சரியா?…” என்று போகிற போக்கில் மனோகரன், வாசுகியிடம் மகளை போட்டுக்குடுத்துவிட்டு,
“கிளம்பறேன் மாமா…” என்று கைகூப்பிவிட்டு அவன் கிளம்பினான்.
அதிலேயே புரிந்துபோனது மகளை சமாதானம் செய்ய தான் இந்த நேரத்தில் இத்தனை தூரம் வந்திருக்கிறான் என்று.
‘போட்டுக்குடுத்துட்டானே இந்த கதர்சட்டை கட்டதுரை. போச்சு போச்சு’ என விழிகளை உருட்டியபடி வாசுகியை பார்க்க அப்பட்டமாய் முறைத்தார் மகளை.
“ஒருவிஷயம் சொல்ல மறந்துட்டேன்…” என்று வாசலுக்கு சென்றவன் பிரனித்தாவை பார்த்து சொல்லவும்,
“போய் என்னன்னு கேளு…” என அங்கேயே நின்றுகொண்டனர் அவர்கள்.
வாசலை தாண்டி அந்த இருட்டில் காருக்கும், வாசலுக்கும் நடுவே அவள் நிற்க மற்றவர்கள் கண்ணில் படாமல் நகர்ந்தவன்,
“இனிமே மொபைலை ஆஃப் பண்ணாத மோகினி. இன்னொருதடவை இவ்வளோ தூரம் எல்லாம் வரமாட்டேன்…” என்றான் அவளிடம் கிசுகிசுப்பாய்.
“ரொம்ப நல்லது. வரவேண்டாம்…” கடுப்போடு அவள் சொல்ல,
“அதான், அதுக்கு தான் ஒரு யோசனை தோணுது…” குரலில் மாறுபாட்டில் லேசாய் பின்னகர்ந்தாள் பிரனித்தா.
“ஹ்ம்ம், அதுவும் இப்ப இப்படி உன்னை பார்த்துட்டு. நீ பேசலைன்னா சும்மா என்னால இங்க கிளம்பி உன்னை பார்க்க வந்திட்டிருக்க முடியாது பாரு. அதான், நீ சொல்லு. வச்சிப்போமா?…” என கேட்க வாயடைத்து நின்றாள்.
“மோகினி…”
“என்ன விளையாடறீங்களா? இனிமே நான் மொபைல் ஆஃப் பண்ணலை போதுமா?…” என கேட்க லேசாய் சிரித்தவனின் சப்தம் கூட அவளை சில்லிட வைத்தது.
“அதுக்காக மட்டும் நான் சொல்லலை…” என்றவன் கைகள் தலையை கோதிக்கொண்டு ஆழ்ந்த மூச்செடுத்து திரும்பியது.
“ஓகே கிளம்பறேன்…” என்றவன் மீண்டும் நின்றான்.
“நைட் ட்ரெஸ் எல்லாம் போடற பழக்கம் இல்லையா உனக்கு?…” என கேட்க,
“போடுவேனே?…” இன்னுமே அவனின் பேச்சின் திசையில் அவள் திணறியபடி பதில் தந்தாள் யோசனையுடன்.
“இன்னைக்கும் போட்டிருக்கலாம். இல்லைன்னா சுடிதார், ம்க்கும்…” என செருமியவன்,
“இந்த ட்ரெஸ் நல்லாயிருக்கு. இந்த லெமன் எல்லோ கலர் உனக்கு ரொம்ப சூட்டாகுது. இந்த முல்லை பூ, இன்னும் வாசமிருக்கோ?…” என ஆழமாய் சுவாசித்தான்.
அவளின் முகத்தை நெருங்கி வந்து வாசம் பிடிக்கவும் தன் இரு கைகளையும் இறுக்கிக்கொண்டவள் எங்கே இன்னும் நெருங்கிவிடுவானோ என அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.
சிரிப்புடன் அந்த வீட்டிலிருந்து கேட்டை தாண்டி வெளியே வந்தவன் காரில் ஏறியதும் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவைத்தான்.
“இப்படி ஒரு மார்னிங் என் லைஃப்ல வந்ததில்லை. லவ்லி மார்னிங் மோகினி…” என்று அனுப்பியிருக்க அதற்குள் பிரனித்தா மொபைலை ஆன் செய்தாள்.
அவனின் பேச்சுக்களோடு இந்த குறுஞ்செய்தியும் அவளை சிவக்க செய்ய பதில் எதுவும் அனுப்பாமல் அதில் அத்தனை முறை கைகளால் அடித்து தட்டினாள்.
“மிஸ்டர்.வொய்ட் நீங்க மினிஸ்டர் இல்லை. மின்னல்…” என சொல்லிக்கொண்டவளின் உள்ளங்கைகள் எல்லாம் வியர்த்தது.
பத்து நிமிடங்கள் கழித்து அவனிடமிருந்து அழைப்பு வர எடுக்கவா வேண்டாமா என்னும் அத்தனை யோசனைகளுக்கு இடையில் விரல்கள் மனதின் திசையில் அழைப்பை ஏற்றது.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே? கல்யாணத்தை சீக்கிரம் வச்சிடலாமா?….” அவன் மீண்டும் கேட்க,
“எனக்கு, எனக்கு தெரியலை. அப்பாட்ட பேசிக்கோங்க…” என,
“தாலி உனக்கு தானே கட்டுவேன் மோகினி…” என்றவன் புன்னகை சத்தத்தில் ‘எங்கே வேறெதுவும் பேசிவிடுவானோ?’ என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.
“மோகினி, மோகினி…” என சொல்லிக்கொண்டவன் இதழ்களில் உறைந்திருந்தது ரசனை புன்னகை.
தன்னை பார்த்ததும் அதிர்ந்து, திகைத்து, வியந்து, மலர்ந்து தன்னெதிரே வந்து நின்று கையை கிள்ளி பார்த்து என வர்ணஜாலங்களை காட்டிய மோகனப்பாவையின் பாவனைகளிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை ஆவுடையப்பனால்.