“லன்ச் என்னம்மா?…” என்ற கேள்விக்கு ஒன்றும் சொல்லாமல் அவர் சாப்பிட,
“கோவமா இருக்கீங்களா?…” என்றவள் எதற்கு என யோசித்து கண்டுகொண்டு தானும் மௌனமானாள்.
இனி தானாக பேசினால் அவர்களும் வாயை திறக்கபோவதில்லை என உணர்ந்து அமைதியாகவும் வாசுகியே பேசினார்.
“உன்னை எவ்வளோ பொறுப்பான பொண்ணுன்னு நினைச்சிட்டிருந்தோம்? இப்படி பண்ணிருக்க?…” என்று அவர் திட்டவும்,
“நேத்து ஒரு டென்ஷன்ல…”
“வாயை மூடு பிரனி. என்ன டென்ஷன்? உன் வேலையில உனக்கு ஒரு டென்ஷன்னா அந்த தம்பிக்கு எவ்வளோ டென்ஷன் இருக்கும்? அது புரியாதளவுக்கா காமென்சென்ஸ் இல்லாம போச்சு உனக்கு?…”
“ம்மா ப்ளீஸ். வேணும்னு செய்யலை. நான் அவங்களுக்கு கால் பண்ணேன். அவங்களும் வெய்ட் பண்ண சொன்னாங்க. ஆனா திருப்பி கூப்பிடலை. அதோட…” என்றவள் இன்னும் தந்தை பேசாமல் இருப்பதில்,
“ப்பா எதாச்சும் சொல்லி திட்டிருங்க. பேசாம எல்லாம் இருக்காதீங்க…” என்றாள்.
“அப்பாவுக்கு அவ்வளோ சங்கடம். என்னதான் இருந்தாலும் அவர் அப்படி ஜாமத்துல இங்க வந்து நின்னது சரி கிடையாது. அதுக்கு காரணம்…” வாசுகியே பேச,
“ம்மா, ஒத்துக்கறேன். தப்பு என் பேர்லையும் தான் இருக்கு. இனிமே இப்படி நடக்காது…” என்றாள் அவர்கள் பேசுவதை தாங்க முடியாமல்.
“உடனே இப்படி சொல்லிட்டா சரியா போச்சா? செஞ்சதை கொஞ்சமாச்சு ஃபீல் பன்றியா பிரனி? விரும்பி பொண்ணு கேட்டா நாம நம்ம இஷ்டத்துக்கு அவங்களை இழுக்கலாம்ன்னு நினைக்க கூடாது….”
“ம்மா…” பிரனித்தா அதிர்ந்து பார்க்க,
“நிஜமாதான் சொல்றேன். நான் சொல்லும் போது உனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா எல்லாத்தையும் நாம யோசிக்கனும் பிரனி. இப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி, கல்யாணமாகவும் இதே தொடர்ந்தா நல்லாருக்காது…”
“ம்மா, என்ன நீங்க?…”
“இப்படி ஒன்னொண்ணுக்கும் நீ என்ன நினைக்கன்னு உன்னை தேடி சமாதானம் செய்ய அவர் வந்திட்டிருக்க முடியுமா? யோசி…” என்றவர்,
“இன்னைக்கு இன்விடேஷன் கொண்டு போய் ஆபீஸ்ல குடுத்திரு…” என்று வாசுகி முடித்துக்கொண்டார்.
அவருக்கு இன்னும் மகள் செய்ததில் உடன்பாடில்லை. எதுவாகவும் இருக்கட்டும். இப்படி வீடு வரை வரவழைத்திருக்க வேண்டாம் என்று தான் தோன்றியது.
“நீ ஸாரி கேட்கனும்னு இவ்வளோ சொல்லலை பிரனி. யோசிச்சு பார். அவருக்கு வேலை எப்போ முடிஞ்சதோ. இவ்வளோ தூரம் வந்தவருக்கு நேரமிருந்திருந்தா கூப்பிட்டிருக்கமாட்டாரா? நீ கால் அட்டன் பண்ணலைன்னு ராத்திரி கிளம்பி இங்க வந்திருக்கார். இன்னும் வீடு போய் சேர்ந்திருப்பாரா தெரியலை….”
“ப்ச், வாசுகி விடு. அவ இனி புரிஞ்சுப்பா…” என்று அப்போது தான் வாயே திறந்தார் மனோகரன்.
மகளிடம் இருந்த வருத்தத்தை இன்னும் கொஞ்சம் தான் பெரிதாக்கி இருந்தனர் பெற்றோர்கள்.
அதுவே கொஞ்சம் அச்சத்தை அவளிடம் கொண்டு சேர்த்தது. தன் குணத்திற்கும் அவனுக்கும் ஒத்துவருமா என்ற யோசனைகளை தாண்டி, அவனின் பொறுப்பிற்கு தன்னுடைய குணம் ஒத்து போகுமா என யோசிக்க ஆரம்பித்தாள்.
“சாப்பிடு பிரனி, அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்….”
“புரியுதும்மா. ஆனா இப்படி வருவாங்கன்னு நான் நினைக்கலை….”
“இருக்கட்டும், ஆனா உனக்கு கூப்பிட்டதுக்கு மதிச்சு பதில் சொல்றது தானே நாகரீகம். சொல்லு…”
“ஹ்ம்ம், ஆமா…”
“நீ கால் அட்டன் பண்ணலை, உடனே உன்னை பார்க்க கிளம்பி வந்திட்டாருன்னு மத்தவங்கட்ட சொன்னா பெருமைப்படுவாங்க. ஆனா அது பெருமையா? கிடையாதும்மா. முதல் சறுக்கல் அங்க தான் ஆரம்பிக்குது…” என்ற வாசுகி,
“எத்தனை தடவை உங்கப்பா பேங்க் வேலையா வெளியூர் எல்லாம் போயிருப்பாங்க. எனக்கு கால் பண்ணிட்டே இருக்காங்களா? நாம சொன்ன உடனே செஞ்சிடனும்னு எதிர்பார்க்க கூடாது. விட்டுக்குடுக்கறதுலையும் ஒரு இருக்கு…”
“நீ பேசலைன்னு தவிச்சு போய் அவர் கிளம்பி வரது ஒரு சந்தோஷம்ன்னா, அவரை இவ்வளோ அலைய வைக்காம புரிஞ்சுக்கிட்டு நிம்மதியை தரது பெரிய சந்தோஷம். உன்னோட நிதானமான புரிதல் அவருக்கு உன்கிட்ட இன்னும் அன்பை கூட்டும்…”
வாசுகி சொல்ல சொல்ல மௌனமாக கேட்டுக்கொண்டாள் பிரனித்தா. அவனை இப்படி கிளம்பி வர வைத்ததில் வருத்தம் தான்.
அதே நேரம் தாய் சொல்லிய இன்னொரு பக்கம் அந்த புரிதல், நிதானம். இவை எல்லாம் ஏற்றுக்கொள்ள தான் வைத்தது.
“வேலை இருந்தா அதை செய்யட்டும். வேலை இல்லைன்னா கூப்பிட போறாங்க. அலட்சியப்படுத்த ஆரம்பிக்கிற இடத்துல தான் நாம அவங்களை தொலைக்கவும் ஆரம்பிக்கறோம். எங்க பிடிவாதம் பிடிக்கனுமோ, கோவத்தை காட்டனுமோ அங்க காட்டனும். புரியுதா?…”
“ஓகே ம்மா…” என்றவள் சாப்பிட,
“இன்னொன்னு வச்சுக்கோ. நான் பேசினதுல முகமே வாடிருச்சு…” என மகளை கவனித்தவர்,
“மத்தவங்களுக்காக சொல்லலை. இது மாப்பிள்ளைக்கு சங்கடத்தை தர கூடாதுல. அதான்…” என்று சொல்ல கிட்டத்தட்ட இப்போதே அந்த சிறைக்குள் அவளை புகுத்திகொண்டிருந்தனர் அவளின் பெற்றோர்கள்.