“ம்மா எல்லாம் சரியா தானே போய்ட்டிருக்கு?…” என கேட்க,
“எல்லாம் சரியா தான் போகுது. இதுதான் உன் லைஃப். கல்யாணம் நாம நினைச்சதும் நடந்திடறது இல்லை. அததுக்கு நேரம் வரனும். அந்த நேரம் உனக்கு இப்போ வந்திருச்சு. சந்தோஷமா இருக்கனும்…” என மகளின் முகத்தை துடைத்துவிட்டார்.
“திரும்பு நான் தலை வாரி விடறேன்…” என்று சொல்லவும் திரும்பி அமர்ந்தவள்,
“ஏன் ம்மா, அன்னைக்கு நைட் நான் அந்த பர்த்டே பார்ட்டிக்கு போகலைன்னா நான் மினிஸ்டரை பார்த்திருக்கமாட்டேன்ல?…”
“பிரனிம்மா?…” வாசுகி திகைத்தார்.
“ச்சே, ச்சே. மினிஸ்டர் என்னை பார்த்திருக்கமாட்டார்ல…” என்றதும் வாசுகி மகளின் முகத்தை திருப்பினார்.
“என்னம்மா?…”
“ஒண்ணுமில்லை. நீ எதையாச்சும் நினைச்சு குழம்பாத…” என்றவர் தலையை வாரிவிட்டு,
“ப்ரிட்ஜ்ல பூ இருக்கு. எடுத்துட்டு வா…”
“நேத்து இல்லைன்னு கோவில்ல வாங்கினீங்க…”
“காலையிலையே அப்பாட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்லிட்டேன். கல்யாண பொண்ணு இருக்கற வீட்டில பூ இல்லாம எப்படி? டெய்லி குடுக்க சொல்லியிருக்கேன்…” என்றதும் பிரனித்தா வெளியேறினாள் பூவை எடுத்துவர.
மகள் சென்றதும் வாசுகியின் பார்வை மகளின் படுக்கையின் மறுபுறமிருந்த சிறிய புக் ஷெல்ப்பை பார்த்தது.
அதில் ஆவுடையப்பன் அன்று வரைந்திருந்த ஓவியமும் அதன் கீழ் மகள் எழுதியிருந்ததும் இன்றும் நினைவில் வந்தது.
அவன் வரைந்த ஓவியத்தின் கீழ் அவனின் கையெழுத்தின் அருகே ‘மிஸ்டர். வொய்ட், ஐம் நாட் பெர்பெக்ட். பட் ஐ’ என எழுதியிருந்தவள் அருகில் இதயம் ஒன்றை வரைந்து துணையாய் புள்ளிகளை வைத்திருந்தாள்.
மகளுக்கு பிடிக்கிறது. ஆனால் இன்னும் தெளிவில்லை என்பதை புரிந்துகொண்டிருந்தார் வாசுகி.
“ம்மா…” என்று பூவை சுற்றியிருந்த கவருடன் வரவும்,
“உட்கார்…” என்று மொத்த பூவையும் எடுத்தார்.
“ம்மா, அவ்வளவும் வச்சிட வேண்டாம். கட் பண்ணிருங்க. என்ன தான் கல்யாண பொண்ணுன்னாலும் நான் போறது ஆபீஸ்க்கு. அப்பறம் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க…”
“ஹ்ம்ம், சரிடா…” என சொல்லியவர் பாதி பூவை கத்தரித்து மகளுக்கு வைத்துவிட்டு எஞ்சிய பூவை கவரில் சேர்த்தார்.
“ஜாப் ரிசைன் பன்றோமேன்னு உனக்கு கஷ்டம் ஒன்னுமில்லையே?…” மீண்டும் வாசுகி கேட்க,
“கஷ்டம் தான். அதுக்கு அழவா முடியும்? சமாளிச்சுப்பேன். ஆனா இந்த ஒன் மந்த் நான் வெய்ட் போட்டிடாம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு…”
“முதல்ல சமைக்க கத்துக்கோ. சமைக்கிறதை நீ தான் சாப்பிட போற. அப்பறம் வெய்ட் ஏறுதா இறங்குதான்னு பார்ப்போம்…” என வாசுகியும் கிண்டல் பேசியபடி வெளியே வந்தனர்.
மனோகரனும் தயாராக இருந்தார் வங்கிக்கு செல்வதற்கு. மகள் வரவும் அவளின் முகத்தில் ஒளிர்ந்த புன்னகையில் தானும் நெகிழ்ந்தவர் பத்திரிக்கைகளை எடுத்து அவளுக்கு தந்துவிட்டு தானும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
“ஓகே, பார்த்து வண்டி ஓட்டு. போய்ட்டு கால் பண்ணு…” என வாசுகி விடைகொடுக்கவும் பிரனித்தா ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வெளியே மலர்ந்த புன்னகையை காட்டிக்கொண்டிருந்தவள் மனதிற்குள் பெரும் ஓலம்.
இதுதான் இறுதிநாள் வேலைக்கு செல்வதற்கு, இப்படி தானே ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சுதந்திரமாக செல்ல முடியுமா? நினைத்த நேரம் பீச்சிற்கு சென்று வர முடியுமா?
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கண்ணில் கூட எட்ட விடவில்லை. மனதை தைரியப்படுத்திக்கொண்டாள்.
அலுவலகம் வரவும் சிறிது நேரத்தில் தன்னுடைய நிச்சயம், திருமணம் பற்றியும், வேலையை ராஜினாமா செய்வதை பற்றியும் அவளின் பாஸிடம் தெரிவித்துவிட்டு நிச்சயத்திற்கு அழைப்புவிடுக்க நம்பவே முடியவில்லை அவருக்கு.
அவ்வளவு ஆச்சரியமும், அதிர்ச்சியும். இது எப்படி என்று யோசித்தவர் பெருமிதமாக அவளிடம் பேசினார். வெளியே வந்தவள் வர முதலில் சென்றது அபிநயாவிடம் தான்.
“என்னடி இன்விடேஷனையே அப்படி பார்த்திட்டு இருக்க? என்கேஜ்மேன்ட்க்கு வருவ தானே? இல்லை இதுவும் உதார்ன்னு டீல்ல விட்டுடுவியா?…” என அபிநயாவிடம் சிரிப்புடன் கேட்க,
“சத்தியமாவா? சத்தியமாவா? அட ஆமா. நம்பவே முடியலையே?…” என அபிநயா.
“நீ புலம்பிட்டே இரு. நான் எல்லாருக்கும் குடுத்துட்டு வரேன்…” என்று மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்க மேலதிகாரி வந்து மற்றவர்களையும் அழைத்து அனைவரும் சேர்ந்து பிரனித்தாவிற்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பெருத்த கரகோஷத்துடன் உற்சாகமும், சிரிப்புமாய் அவளை வழியனுப்பி வைத்தனர்.
“ஏய் பிசாசு, மயக்கம் தெளியவும் வீட்டுக்கு வந்து சேரு. என் கூட நீ தான் நிக்கனும்…” என அபிநயாவின் தலையில் தட்ட,
“ஏன் மினிஸ்டரம்மா இது அரேன்ஜ்ட் மேரேஜா? லவ் மேரேஜா? இல்லை லவ் கம் அரேன்ஜ்டா? எதாச்சும் ஒன்னு சொல்லேன்…”
“அரேன்ஜ்ட் மேரேஜ் தான். என் அப்பாவோட ரிலேட்டிவ் ஒருத்தர் இருக்கார். அவர் மூலமா வந்த அலையன்ஸ்…” பிரனித்தா சொல்லவும் அபிநயா பத்திரிக்கையை திருப்பி திருப்பி பார்த்தாள்.
அதிர்ந்த அபிநயாவின் முகத்தை கண்டு அத்தனை சிரிப்பு வந்தது பிரனித்தாவிற்கு.
“சிரிக்காதடி. நேத்து சொல்லும் போது கூட நம்பலை. இப்ப நம்பாமவும் இருக்க முடியலை…” என்றவள்,
“உங்காளுக்கிட்ட சொல்லி எனக்கொரு வேட்டி, சட்டையை பார்த்து அவர் தலைமையில கல்யாணம் பண்ணிவைக்க சொல்லு. உன் கூடவே அங்க வந்து குப்பை கொட்டிக்கறேன்..” என பேச பேச அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள் பிரனித்தா.
“என் பொழைப்பு உனக்கு சிரிப்பா இருக்கா? இருக்கட்டும், ஈவ்னிங் வீட்டுக்கு வந்து பேசறேன். அம்மாக்கிட்ட சொல்லி இடியாப்பமும், சொதியும் செய்ய சொல்லிரு. கூடவே கொஞ்சம் தக்காளி குருமா…”
“போதுமா? இப்ப நான் போகலாமா?…”
“கிளம்பு கிளம்பு. உன்னை யார் பிடிச்சு வச்சா?…” என்று அபிநயா பின்னால் நகர்ந்து தோழிக்கு வாழ்த்தி விடைகொடுத்தாள்.
அன்று மாலையே நண்பர்கள் பட்டாளம் வீட்டை நிறைத்தது. அவ்வளவு கேள்விகள்.
பிரனித்தா சொல்லியதை போலத்தான் வாசுகியும், மனோகரனும் கூட மற்றவர்களிடம் சொன்னார்கள்.
சிங்காரத்தின் மூலமாக வந்த வரன் என்று கூற சிங்காரத்தை அத்தனை பெருமையாக பேசினார்கள் அனைவரும்.
நிச்சயதார்த்தம் கோலாகலமாக, பெரும் விமரிசையாக நடந்தேறியது. பாண்டிச்சேரியில் உள்ள அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என வந்து நிச்சயதார்த்தத்தை சிறப்பித்தனர்.
இவ்வளவு பெரிதாய் நடக்கும் என யாருமே எதிர்பாராத அளவிற்கு பிரமாண்டமாக நடந்தேறியது ஆவுடையப்பன், பிரனித்தாவின் நிச்சயதார்த்தம்.
பாண்டிச்சேரி, தமிழ்நாடு என அத்தனை ஊடகர்களும், பத்திரிக்கையாளர்களும் அதனை பிரசுரித்து தங்களின் வாழ்த்தையும், வியப்பையும் காண்பித்தனர்.
நிச்சயதார்த்தத்தின் மறுநாளே திருமணத்திற்கு பத்திரிக்கைகளும் வந்து சேர ஆவுடையப்பன் முதல் பத்திரிக்கையை முதலமைச்சருக்கு தான் கொண்டு சென்று வைத்தான்.
மனோகரன், வாசுகி இருவரும் அசோகனுடன் திருமண அழைப்பிதழை ஆவுடையப்பன் உறவுகள் பெரும்பாலானோருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வந்திருந்தனர்.
இன்னும் இருபது நாளில் திருமணம். பத்திரிகைகள் எல்லாம் ஏனையோருக்கு வைக்கப்பட்டு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்த சூழலில் தான் சிங்காரம் தனது புத்தியை காட்டினார்.
“பொண்ணு வேணும்னா, அதுவும் உயிரோட வேணும்னா நான் சொல்றதை செய்யனும் ஆவுடையப்பா…” என்ற பேச்சில் ஆவுடையப்பனின் சர்வாங்கமும் ஆடியதென்னவோ உண்மை.
“அவ உங்க வீட்டு பொண்ணு. இப்படி பேச உனக்கு வெக்கமாயில்லையா?…” அடக்கப்பட்ட சீற்றத்துடன் அவன் கேட்க,
“எனக்கு முதல்ல நான் தான் முக்கியம். அதுக்கப்பறம் தான் யாரும். என்னை என்ன ப்ரோக்கர்ன்னா நினைச்ச? உன்னால முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோ. ஆனா கண்டுபிடிக்கும் போது அவ இருக்கனுமே?…” என்றவரின் சிரிப்பில் எரிமலை குழம்பாய் இருந்தான் ஆவுடையப்பன்.