“எல்லாம் சரி, போய் சந்தனத்தை தேய்ங்க. முகில் வந்தாச்சு…” வேதா சொல்லவும் நான் மாட்டேன், நீ மாட்டேன் என மாமியாரும் மருமகளும் மாற்றி மாற்றி மறுத்துக்கொண்டு இருந்தார்கள்.
குளித்துவிட்டு உடை மாற்றிவிட்டு அவர்களை நோக்கி வேகமாய் வந்தான் முகிலன்.
“மொட்டை எடுத்தா போதுமா? யார் சந்தானம் வைப்பாங்களாம்?…” என கேட்க,
“அவ்வளோ தானே? உட்கார், நானே பூசிவிடறேன். இதுக்கே ஏனாம் சிலிர்த்துக்கற?…” என்று பேரனுக்கு தானே சந்தனத்தை பூசிவிட்டதும் அவனும் எழுந்து நின்றவன்,
“சொல்லி வைங்க உங்க மருமகட்ட. இன்னொருதடவை வேண்டுதல்ன்னு என் தலையில கை வைக்கிற வேலை வச்சிக்கிட்டாங்க அவ்வளோ தான்…”
“இப்ப என்ன முகில்? அண்ணி பயந்துபோய் வேண்டிட்டங்க. இன்னும் ரெண்டுமாசத்துல முடி பழைய மாதிரி வளர்ந்திரும் தானே?…”
“சும்மா இரு த்தை. இப்படியே ஆபீஸ் போக முடியுமா? சொல்ல போன உன் புருஷனுக்கு தான் எடுத்திருக்கனும்…” என்றதும் மூன்று பெண்களும் திடுக்கிட்டு பக்கத்தில் அனலரசு இருக்கிறாரா என பார்த்துகொண்டார்கள்.
சிறு வயதில் இருந்தே வேதவல்லியை வா போ என்றே அழைத்து பழக்கப்பட்டவன் அனலரசு மாமன் என வந்து மரியாதையாய் கூப்பிடு என்றதும் அதை பழக்கிக்கொண்டான்.
என்றேனும் இப்படி வாய் தவறி வந்துவிடுவது அன்றும் வந்துவிட அவர்களின் பயத்தில் தன் தலையில் அடித்துக்கொண்டான்.
எப்போதும் தன்னை யாரும் எதுவும் சொல்லிவிட கூடாதென்பதில் கவனம் அதிகம் கொண்டவன்.
அதிலும் அனலரசு கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியதை போல முகிலனிடம் தேடுவார்.
“சரி விடு. அவர் தான் இல்லையே?…” வேதா சமாதானமாய் சொல்ல,
“அட போங்கத்தை. எல்லாம் உங்க புருஷன் பண்ணின வேலை. சும்மா இருந்தவரை பார்ட்டின்னு வர சொல்லி அவர் குடிச்சுட்டு வந்து கடைசியில கீழே விழுந்து அடிபட்டது தான் மிச்சம்…”
முகிலன் பட்டென்று சொல்லிவிட வேதாவிற்கும் மனதிற்கு சங்கடமாய் இருந்தது. உண்மை தானே முகிலன் சொல்வதும்.
நண்பர்களுடன் விருந்து என தன் இளங்கோவை வரவழைக்க அங்கே குடித்துவிட்டு பைக்கில் வந்துகொண்டிருந்த இளங்கோ வீடு திரும்பும் வழியில் நிலைதடுமாறி கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டார்.
விழுந்ததும் வழக்கம் போல ஷோபா வேண்டுதல் வைத்தது தன் மகனின் முடியை காணிக்கையாக தருகிறேன் என்பது தான்.
“அவர் கீழே விழுந்தா அவரோட முடியை குடுக்க வேண்டியது தானே? எப்ப பார்த்தலும் இதே வேலை. அப்படி என்ன குடிக்க வேண்டிக்கிடக்கு? அக்கம்பக்கத்துல அத்தனை கேள்வி. பதில் சொல்ல அசிங்கமா இருக்கு…” என்றவன்,
ஒருவயதிற்கு மேல் தகப்பன், மாமன் இருவரிடமும் பேச்சுக்கள் குறைந்து போனது. இப்போதுவரை ஏன் என்று தெரியாது.
கேட்டதற்கு பதில், ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் தாயின் மூலம் தான் சொல்லிவிடுவான்.
இளங்கோவின் இந்த சில பழக்கவழக்கங்கள் முகிலனுக்கு பிடிக்காது. தன்னை நிதானமிழக்க செய்யும் எதிலும் அவன் தலைகொடுப்பதிலை.
அனலரசிவிடம் முன்பிருந்தே ஒதுக்கம். அது அப்படியே தந்தையிடமும் ஒருகட்டத்தில் வந்துவிட முதலில் அதனை கர்வமாக நினைத்த இளங்கோ பின் மகனின் இந்த தன்மையில் தானும் நெருங்க முடியவில்லை.
“சரி சரி சாமி கும்பிடலாம் வா. வந்து சாப்பிட்டு கிளம்புவோம்…” என கமலா பேச்சை மாற்ற அதன் பின் முகிலனும் ஒன்றும் பேசவில்லை.
கிளம்பும் வரை ஓவியாவின் பக்கமும் திரும்பி பார்க்கவில்லை. அனலரசு ஓவியா தன்னிடம் வந்து பேசி சென்றதில் இருந்து இன்னுமே குறுகுறுவென பார்த்துக்கொண்டே இருக்க கடுப்பாகிவிட்டான்.
‘இப்படி இருக்கற மனுஷன் எதுக்கு பொண்ணை குடுக்கனும்?’ என வெடுவெடுத்தான் மனதிற்குள்.
இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை இருக்க அனைவரும் கிளம்பி தங்கள் கிராமத்திற்கு நேராக வந்துவிட்டனர்.
வீடு வந்ததும் வராததுமாக ஞானசம்பத்ததின் டிவிஎஸ் பிப்டியை எடுத்துக்கொண்டு தனக்கு பிடித்தமான தோப்பு வீட்டிற்கு வந்துவிட்டான் முகிலன்.
மாந்தோப்பும், தென்னந்தோப்பும் அதனை சுற்றிலும் அங்காங்கே வாழை மரங்களும் என குளுமையாய் இருந்தது.
சென்னை நகரத்தில் வளர்ந்தவனுக்கு இங்கே இந்த தனிமையும், சூழலும் அத்தனை விருப்பம். வீடு சேர்ந்த நிம்மதியை தரக்கூடிய இடம்.
வைரா, வைரவன். அங்கே தோப்பிற்கு என காவலுக்கு வளர்க்கப்படும் ராஜபாளையம் வகை நாய்.
“கட்டி போட்டிருக்கு. என்னடா இது துள்ளிக்கிட்டு அவுத்துவிட சொல்லுதேன்னு பாத்தேன். நீங்க இங்க நிக்கிதீங்க. இந்த கழட்டி விடுதேன். இல்லன்னா சங்கிலியை அறுத்துக்கிட்டு வந்துரும்…” என சொல்லி மாயன் வைரவனை நோக்கி சென்றான்.
வீட்டிற்கு சென்றதும் உடை மாற்றி கிளம்பியிருந்தவன் சொல்லிவிட்டு தான் இங்கே வந்தான். அவன் வந்ததும் இதைத்தான் செய்வான் என தெரியுமே அவர்களுக்கும்.
ஆனால் தெரியாத ஒன்று அனலரசுவின் அந்த பார்வையை பிடிக்காமல் இங்கே வருவதும் ஒரு காரணம் என்பது.
ஓவியாவிடம் கோவிலில் வைத்து பேசவும் செய்ய அதனை தொட்டு இப்போதுவரை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இருப்பவர் வீட்டில் இருந்தாலும் தன்னை நிம்மதியாக இருக்க விட போவதில்லை.
இருந்தும் தான் ஒன்றும் செய்ய போவதில்லை என தோப்பிற்கு வந்துவிட்டான். இன்னும் இரண்டு நாட்களுக்கு அவனுக்கு பிடித்தமான இடத்தில்.
பேண்டை முட்டிவரை தூக்கிவிட்டுவிட்டு அங்கே வரப்பில் அமர்ந்துகொண்டவன் நீரில் கால்களை நனைத்தபடி இருந்தான்.
வைரவன் நாலுகால் பாய்ச்சலில் இவனை நோக்கி ஓடி வர இடக்கையால் அதனை நோக்கி கை நீட்டியபடி சிரித்தான் முகிலன்.
“மிஸ் யூ டா வைரா…” என சொல்லி வைராவும் தான் அவனை தேடியதை காண்பித்தது.
அங்கேயே இரவு வரை இருந்தவன் தோப்பு வீட்டை திறந்து உள்ளே சென்றான். அவனுடனே வைராவும்.
ஒற்றை படுக்கை அறை. ஹால் அதனை ஒட்டி தடுப்பு. அங்கே சமைப்பதை போன்ற மேடை.
விடுமுறை நாட்களில் ஞானசம்பந்தம், கமலா இருவரையும் நச்சரித்து அங்கே வரவழைத்து அங்கே வைத்து தான் சமைக்க சாப்பிட எல்லாம்.
இப்போதும் நினைக்கையில் இனிக்கும் நாட்கள். நாளையும் இங்கே வர சொல்ல முடியுமா என யோசித்தான்.
அனலரசுவிற்கு அங்கே வந்தால் டிவி, இல்லை தூக்கம். தானும் எங்கேயும் செல்லமாட்டார். யாரையும் செல்லவும் விடமாட்டார்.
கோவிலுக்கு என வேதவல்லியும், ஷோபாவும் கிளம்பினாலும் எப்போதும் இதுதானா? ஒன்னும் வேண்டாம் என சொல்லி மறுத்துவிடுவார்.
மூத்த ஆண்கள் இருவருக்கும் பாதி பொழுதுகள் சீட்டு விளையாட்டில் கழிந்துவிடும்.
முகிலன் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. தானாக வந்துவிடுவான். மாயனிடம் வீட்டில் இருந்து உணவை வாங்கி வர சொல்லிவிட்டு அங்கே இருந்துகொள்வான்.
கிராமத்திற்கு இரு குடும்பமும் சேர்ந்து வந்துவிட்டால் அனலரசு முகிலனை பற்றி இளங்கோவிடம் குறை சொல்வது தான் அதிகம்.
“சாஃப்ட்வேர்ல வொர்க் பன்ற மாதிரியா இருக்கான் மாப்பிள்ளை. இதெல்லாம் சொல்லமாட்டீங்களா?…” என குறைபடும் போது மகனின் பிடித்ததிற்கும், தங்கை கணவனின் அசூயைக்கும் இடையில் இளங்கோ தான் தள்ளாடுவார்.
“அவன்கிட்ட சொல்லி வை ஷோபா. எப்ப பாரு தோப்பும் காடும். மனுஷங்களே வேண்டாமா? மாப்பிள்ளை என்கிட்டே சொல்லி வருத்தப்படறாரு….” என்று மனைவிடம் சொல்லி ஆற்றாமையை தீர்த்துக்கொள்வார் இளங்கோ.
இது தன்னிடம் வந்தாலும் பெரிதாய் அதை கண்டுகொள்ளமாட்டான். இது ஒன்று தன் விருப்பம் என அங்கு வரும் நாட்களில் அவன் தனித்து இருந்துகொள்வான்.
சென்னை வரை தான் உங்கள் விருப்பம். இங்கே எனது விருப்பம் என கோடுபோட்டு அதில் இருந்துகொள்பவனை இன்னும் நீருக்குள் பந்தாய் அமிழ்த்த நினைக்க காற்றடைத்த பந்து அடங்கிவிடுமா?