சென்னை வரும் வரை எதுவும் பேசவில்லை அனலரசு. அத்தனை கோபம், ஆத்திரம். எல்லாம் இப்போது வேதாவின் மேல் தான் அதிகமாக இருந்தது.
உள்ளே வந்ததுமே வேதாவை தடுப்பதை போல வாசலில் நிற்க வேதா அவரின் கையை தள்ளிக்கொண்டு முன்னேறி சென்றார்.
“சாவியே என்கிட்டே தான் இருக்குது. சும்மா எதாச்சும் பண்ணி வாசல்ல எல்லாம் முன்னாடியும் பேச வைச்சிடாதீங்க. இங்க தானே இருக்க போறேன். எதுவானாலும் உள்ள வந்து பேசுங்க…”
அவருக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொல்லிவிட்டு கதவை திறக்க போக பிள்ளைகளும் சேர்ந்து சென்று இவர் வாசலிலேயே நின்றார்.
“உள்ள வாங்கப்பா…” சஞ்சய் தான் அழைத்தான்.
அவனையும் முறைத்துக்கொண்டே உள்ளே சென்றவர் தங்கள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்ள வேதா எதையும் கண்டுகொள்ளவில்லை.
பிள்ளைகளுக்கு தான் அவரின் அமைதியும், அப்பாவின் கோபமும் கலவரத்தை உண்டுபண்ணியது.
“எவ்வளவு நேரம் என் முகத்தையே பார்த்துட்டு இருப்பீங்க ரெண்டுபேரும்?…” என பிள்ளைகளை அதட்டியவர்,
“என் போனை கார்லயே வச்சுட்டு வந்துட்டேன். எடுத்துட்டு வா சஞ்சு…” என மகனை அனுப்பியவர் மகளுடன் உள்ளே வந்தார்.
“என்னை வச்சு ஏன்ம்மா? அப்பா எவ்வளவு பேசிட்டார்? எதுக்கும்மா எதுக்கு இவ்வளவு பிரச்சனை? நீங்களும் அப்பாவோட கோவத்தை வாங்கிட்டீங்க…”
“உங்கப்பா கோவப்படறது புதுசா? எனக்கு இதெல்லாம் பழகி போனது தானே?…”
“ஆனா அது வேற இது வேறம்மா…”
“எதுவா இருந்தாலும் எனக்கு ஒன்னு தான். ஆமா, இது வேற தான். என் மகளோட என் மருமகனோட வாழ்க்கை. அப்போ இது வேறதான்…” என்றவர்,
“இங்க பார் ஓவி, இதையே நினைச்சுட்டு இருந்தா ஒன்னும் செய்ய முடியாது. நடந்திருச்சு. இதை உங்கப்பா பெரிய பிரச்சனை ஆக்கிட்டார். செஞ்சதுக்கு வாங்கியும் கட்டிக்கிட்டார். அவ்வளோ தான்…”
“ரொம்ப ஈஸியா சொல்லிட்டீங்கம்மா. ஆனா இங்க இனி ஒவ்வொரு நாளும்…”
“என்ன என்ன பண்ணிடுவார்? பேசுவார். வழக்கம் போல நானும் பதிலுக்கு பேசுவேன்…”
“எனக்கு கஷ்டமா இருக்கேம்மா…”
“இப்படி கஷ்டப்பட்டுட்டே இருந்தா உங்கப்பா இன்னும் ஆடுவார். வருத்தப்படுரியா? மனசுக்குள்ள வச்சுக்கோ. முகத்துல காமிக்காத. பயப்படாதே. உன் அப்பா இனி உனக்கு வேற ஒருத்தனை மனசால கூட நினைக்க கூடாது அவர்…” என்றவர்,
“நான் எதுவும் தப்பா பேசிடலையே? நீயும் இப்படியே இருக்காத…” என சொல்ல சஞ்சய் வந்துவிட்டான்.
“கொண்டா, சார்ஜ் இருக்கு தானே?…” என வாங்கி பார்த்துவிட்டு,
“சரி சஞ்சு நீ ப்ரெஷ் ஆகிட்டு வா. அம்மா ஏதாவது சமைக்கிறேன்…”
“ஒன்னும் வேண்டாம். நானே செய்யறேன். நீங்க கால் வலியோட ஒன்னும் செய்ய வேண்டாம்…” என ஓவியா சொல்ல அப்போதுதான் தனது காலையே கவனித்தார் வேதா.
அடுத்தடுத்த ஓய்வில்லா பயணம் அவரின் காலை வீங்க செய்திருந்தது. வலியையும் அப்போதுதான் உணர்ந்தார்.
இடது கையால் ஒரு காலை பிடித்து லேசாய் நீவி விட சஞ்சய் அதற்குள் ஹீட்டரில் இருந்து ஒரு பாக்கெட்டில் வெந்நீரை பிடித்துக்கொண்டு வந்தான்.
“ம்மா, லேசா இருக்கு. இதுல காலை வைங்க…” என தாயின் இரு கால்களையும் தூக்கி நீரினுள் வைக்க இதமாய் இருந்தது.
“போதும்ப்பா, நீங்க போய் குளிச்சுட்டு வாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் நேரம் உக்கார்ந்திருக்கேன்…” என சொல்லி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் தலையை சாய்த்துக்கொண்டார்.
“ண்ணா, நீ அம்மா கூட இரு. நான் டிபன் ரெடி பன்றேன்…” ஓவியா செல்ல,
“ஒன்னும் வேண்டாம். இப்போ ஆடர் பண்ணிடலாம். இருக்கற நீயும் டயர்டா இருக்க. ரெஸ்ட் எடு…” என்று சொல்லி தனது மொபைலில் சாப்பாட்டுக்கு ஆடர் கொடுத்துவிட்டு குளிக்க சென்றுவிட்டான்.
ஓவியாவும் குளிக்க செல்ல முகிலனிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது வேதாவிற்கு.
“சொல்லு முகில்…” சோர்வுடன் அவர் பேச இன்னும் பிரச்சனையோ என பதறினான் முகிலன்.
“இன்னும் என்ன த்தை? என்னவாம் அவருக்கு? அங்கயும் போய் சண்டையா?…” என அவன் கேட்க,
“அட இருப்பா, ஏன் குதிக்கிற? அதெல்லாம் ஒண்ணுமில்லை. சண்டை போட்டா உன் அத்தை குரல் இப்படியா இருக்கும்?…” என கேட்டவிதத்தில் முகிலனுக்கும் புன்னகை.
“என்ன சிரிப்பு?…”
“இல்லை நீ ஒரு பார்ம்ல தான் த்தை இருக்க…” என்று வாய்விட்டே முகிலன் சிரித்தான்.
“சத்தமா சொல்லாத முகில். நானே எவ்வளவு கஷ்டப்பட்டு அவரை ஆஃப் பண்ணிருக்கேன். நீ என்னை போட்டு குடுத்துருவ போல. ஒரு ரெண்டு நாளைக்கு சைலண்டா இருந்துக்கறேன். கோவத்தை பிடிச்சு வச்சுக்கனும்…”
“என்னை டா சொல்லி பேசாம இருக்க நீயும் ரொம்ப கஷ்டப்படற இல்லையா?…” முகிலன் கண்டுகொண்ட பாவனையில் வேதாவை கேட்கவும் ஒருநொடி மௌனம் அவரிடத்தில்.
“இல்லைன்னு சொல்ல முடியாது. நான் பேசிருவேன் உரிமையில. ஆனா அவரும்ல பேசுவாரு போட்டிக்குன்னு. என்னோடதுல முழுக்க பாசம் இருக்கும் அவர் பேசறதுல என்னன்னு உனக்கு தெரியாதா?. அதனால இதுவே இருக்கட்டும்…” என்றவர்,
“அதைவிடு, என்ன சொல்றார் என்னோட உடன் பிறப்பு? ஓவரா இன்னைக்கு பொங்கின மாதிரி இருந்துச்சு? வச்சு தாளிச்சிருப்பேன். போதும்ன்னு தான் விட்டேன். இருக்கட்டும் இன்னொருதடவை சிக்காமலா போவான்…”
“அதானே? செஞ்சிருங்க…” முகிலனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
“அங்க எல்லாரும் ஓகே தானே முகில்?…”
“ஹ்ம்ம், த்தை. ஒரு பிரச்சனையும் இல்லை. அப்பாவும் கூட அதுக்கப்பறம் என்னை எதுவும் சொல்லலை. சைலண்டா போய்ட்டாங்க…”
“இருக்கட்டும், இனி பேச யோசிப்பான்ல. சும்மா கூடவே சுத்திட்டு திடீர்ன்னு கோவம் வருதோ? எல்லாம் இவனால தான். உன் அப்பா ஆரம்பிச்சு வச்சது. எல்லாத்துக்கும் என்ன எதுன்னு கேட்காம தலையாட்டி இப்ப எங்க வந்து நிக்குது பாரு…”
“ஹ்ம்ம், சரி விடு. உனக்கு ஒன்னும் என்னோட முடிவுல வருத்தம் இல்லையே?…” என முகிலன் கேட்க,
“முதல்ல இந்த கேள்வி கேட்கிறதை விடு. நீ முடிவு செஞ்சியா எடுத்த முடிவை சக்சஸ் பண்ணி காட்டு. அப்போ எல்லாருக்குமே அவங்கவங்க நினைப்பு தப்புன்னு ஆகிடும்…”
“எதெ? உன் புருஷனுக்கும், என் அப்பாவுக்கும் நான் ப்ரூவ் பண்ணனுமா? போவியா…” என்றான் முகிலன்.
“சரி, அது கூட வேண்டாம். உன்னோட மனசுக்கு ஒரு திருப்தி, உன்னோட விருப்பத்துக்கு நீ நியாயம் செய்யனும். அது எப்போ கிடைக்கும். உன்னோட வெற்றில தான். முகிலனுக்கு இருக்கிற இடமும், செய்யிற வேலையும் முக்கியமில்லை. அவன் ஒருவிஷயம் பண்ணினா அதை சிறப்பா செய்வான்னு தெரியும். அதை நீயும் உணரனும் தானே?…”
அந்த நேரத்தில் வேதாவின் வார்த்தைகள் அத்தனை உத்வேகமாக இருந்தது முகிலனுக்கு.
எப்போதுமே வேதா அவனை இதை செய்யாதே என்றெல்லாம் சொல்லியதில்லை. உன்னால முடியும்டா என அவனின் நிழல் போல இருப்பவர்.
ஷோபாவை விட வேதாவிடம் அத்தனை இணக்கமும், ஒட்டுதலும் உண்டு முகிலனுக்கு.
இருவருமே பெரிதாய் காண்பித்துக்கொள்ள மாட்டார்களே தவிர்த்து தாய் மகனுக்கும் மேலான புரிதல் அவர்களிடையே.
“என்ன சைலன்ட் ஆகிட்ட?…” முகிலனை கேட்க,
“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை. அம்மா வந்து எட்டி பார்த்துட்டு போனாங்க…”
“என்ன சொல்றாங்க என் அண்ணி? பாவம் பயந்திருப்பாங்க…” வேதா ஷோபாவிற்காக கவலைப்பட,
“ரொம்ப பாவம் தான். நீங்க என்ன நினைச்சு சொன்னீங்களோ? அம்மா அதை கொஞ்சமும் பிசிறாம செஞ்சிட்டாங்க…”
“நானா? நானா என்ன சொன்னேன்?…”
வேதாவிற்கே ஷோபாவிடம் என்ன சொல்லி வந்தோம் என்று நியாபகம் வரவில்லை. என்ன என்று யோசிக்க,
அப்போதுதான் தன் அறையில் இருந்து வெளியே வந்த அனலரசுவும் சத்தம் கேட்டு எட்டி பார்க்க காதில் போனை வைத்துக்கொண்டு பக்கெட்டில் காலை லேசாய் அலைந்தபடி பேசிக்கொண்டிருந்த வேதாவை கவனித்தார்.
முகத்தில் அப்படி ஒரு தெளிவும், சிரிப்பும். அவரின் சிரிப்பு பிள்ளைகளையும் தொற்றியதோ என்பதை போல அவர்களும் தாயை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றார்கள்.
“நான் நிஜமா இதை நினைச்சு சொல்லலையே…” என இன்னுமே அவர் சிரிக்க,
“நீங்க வேற, இங்க வேண்டுதல் பலமா இருக்குது. நல்லவேளை நான் தப்பிச்சேன்…” என்று சொல்லி முகிலனும் சிரித்தான்.
“ம்மா, என்கிட்டே குடுங்க. பேசனும்…” என போனை வாங்கிக்கொண்டு சஞ்சய் பால்கனிக்கு செல்ல வேதா தண்ணீரில் இருந்து காலை எடுத்தார்.
“போதும் ஓவி, இப்போ பரவாயில்லை…” என சொல்லவும் அதை எடுத்து பாத்ரூமில் ஊற்றிவிட்டு வந்தவள்,
“நீங்களும் குளிங்கம்மா. ப்ரெஷா இருக்கும்…” என சொல்லி உடை எடுத்து தந்தாள்.
“நான் பார்த்துக்கறேன். நீ போய் உன் அப்பா என்ன செய்யறார்ன்னு லேசா எட்டி பாரு…” ஓவியாவின் கையில் இருந்த உடையை வாங்கியபடி சொல்லி திரும்ப அனலரசு முறைப்புடன் நின்றிருந்தார்.
“ம்மா…” என்ற மகளை கண்டுகொள்ளாமல் கணவரிடம் வந்தவர்,
“என்னங்க? எதாச்சும் வேணுமா? சஞ்சய் சாப்பாடு வெளில ஆடர் பண்ணிட்டான். அது வர வரைக்கும் வெய்ட் பண்ணுங்க. வந்திடறேன்…” என சொல்லியே அவர் செல்ல அனலரசுவிற்கு இன்னும் ஆத்திரம் பொங்கியது.
அவர் பதில் சொல்லும் முன்னர் வேதா கதவை அடைத்துகொண்டார். மகளை அவரிடம் விட்டால் ஏதேனும் பேசி காயப்படுத்துவார் என வேண்டுமென்றே செய்ய அனல் அனல் தான்.
பல்லை கடித்தபடி அனைவரையும் மனதிற்குள் திட்டி தீர்த்தவர் ஹாலில் அமர்ந்துகொண்டார்.
“நீ நான் வர வரைக்கும் வெளில போகாத. இல்லை உன்னை பிச்சி பிடிங்கிருவார். பேசாம இரு. வந்திடறேன்…” என பாத்ரூமிற்கு செல்ல ஓவியா ஊருக்கு கொண்டு சென்ற பேக்கை பிரிக்க ஆரம்பித்தாள்.
இங்கே தனியே போனை எடுத்துக்கொண்டு வந்த சஞ்சய் முகிலனிடம் கோபமாய் சண்டை போட்டுக்கொண்டு இருந்தான்.
“உனக்கு நேரம் காலமே இல்லையா? நானே ட்ரான்ஸ்பர் லெட்டரை அவர்க்கிட்ட காமிச்சு பேசறதுக்குள்ள என்ன உனக்கு அவசரம்னு ரிசைன் பண்ணின? ஒரு ஒரு வாரம் பொறுக்க முடியாதா?…” என பொங்கிக்கொண்டு இருக்க முகிலனின் சிரிப்பு அதிகமாகியது.
இத்தனை களேபரத்தில் அவன் வாய்விட்டு சத்தமாக சிரித்துக்கொண்டிருக்க அவனை பார்த்த குடும்பத்தினர் மனதும் நிறைந்துவிட்டது.
வேதாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான் என நினைத்து தனியே விட்டுவிட்டு எதுவும் வந்து பேசாமல் சென்றுவிட்டனர்.
“உனக்கு இது ஒரு நல்ல சான்ஸ் சஞ்சு, நிஜமா என் மேல இருக்கற கோவத்துல உன்னோட ட்ரான்ஸ்பர் விஷயத்தை அக்சப்ட் பண்ணிப்பார் உன் அப்பா…” முகிலன் அவனுக்கு தைரியம் சொல்ல,
“கிழிச்சாரு. நீ வேற ஏன்டா? இப்ப அங்க போறதுக்கு என்ன சொல்லி பேசுவேன் நான்?…”