“அதை சொல்ல வேண்டியது தானே. இன்னும் ஏன் பதறிட்டு வர?…” என்று சொல்லவும் போனை அவரின் கையில் தந்துவிட்டவள்,
“நான் போய் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கறேன்…” என்றுவிட்டு ஓடிவிட்டாள்.
“சொல்லு முகிலா….” என வேதா பேச ஆரம்பிக்க,
“சஞ்சுட்ட பேசிட்டு இருந்தேன். அதான் ஓவி என்ன பன்றான்னு கேட்க பேசினேன்…”
“அவகிட்ட பேச வேண்டாம்ன்னு உன்னை நான் எப்பவுமே சொன்னதில்லையே. இதே தான் அவகிட்டையும் உன்னோட பேசவேண்டாம்ன்னு சொன்னதே இல்லை. வேண்டாம்ன்னு சொன்னது நீ தான்…”
“ஹ்ம்ம் அப்போ நான் இருந்த மனநிலை அப்படி…”
“இப்போ சரியாகிட்டியா?…”
“பக்காவா…”
“சரி நீ படபடன்னு ஆரம்பிச்ச மாதிரி ஓவி பேச மாட்டா. அதுக்குன்னு போட்டு படுத்திறாத…”
“பேசமாட்டாளா?…” முகிலனுக்கு சிரிப்பு வந்தது.
“அவ கொஞ்சம் தயங்குவா முகிலா. உனக்கு தெரியாதா?…”
“ஹ்ம்ம், நல்லா தெரியுமே மேடம் எவ்வளவு தயக்கம்ன்னு…” என்று சொல்லியவனுக்கு தோப்பும், தொட்டியில் இருவரும் விழுந்த நாளும் ஞாபகம் வர இன்னுமே சிரிப்பு தான் வந்தது.
“என்ன? எதுக்கு திரும்ப சிரிக்கிற?…”
“உண்மையை நினைச்சேன். அதை விடு த்தை. இன்னும் ரெண்டு நாள்ல நான் ஊருக்கு வரேன். கொஞ்சம் வேலை இருக்கு…”
“ஹ்ம்ம், வா…”
“உன் வீட்டுக்கு வருவேன்…”
“இதை சொல்லனுமா?…” என்றவர்,
“நீ வரும் போது கண்டிப்பா வா முகிலா…” என்றார்.
“வருவேன். வரவேண்டி இருக்கே த்தை…” என சொல்லியவன்,
“சரி நீ போய் அங்க பாரு. நான் வைக்கறேன்…” என போனை கட் செய்துவிட்டான்.
ஓவியா பேச தயங்குகிறாளா? நினைக்கவே சிரிப்பாய் இருந்தது. ‘ஊர்ப்பட்ட வாய் பேசுவா போல. பார்க்கத்தான் அமைதின்னு ஏமாத்திட்டு இருக்கா’ என எண்ணி சிரித்துக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.
“முகிலா சாப்பிட வாப்பா…” கமலா பாட்டி அழைக்க,
“பசிக்கலை பாட்டி. நேரமாகட்டும்…” என சொல்லி ஊஞ்சலில் அமர்ந்தான்.
“வேதா என்னய்யா சொன்னா?…”
“அத்தை நல்லா இருக்காங்க. அவங்களும் இப்போ தான் ஊருக்கு போய் சேர்ந்திருக்காங்க. இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை…”
“இனியும் ஆகாம இருக்கனும். அந்த மனுஷன் வாயை வச்சுட்டு சும்மா இருக்கமாட்டாரே?…”
“என்ன பண்ணிடுவார்? பேசி அத்தைட்ட இன்னும் பேச்சு வாங்குவார்…”
“நீ சும்மா இருடா, கொம்பு சீவுவ போல நீயே. அவளுக்கும் வாய் ஜாஸ்தி ஆகிருச்சு. எல்லாரையும் வச்சிட்டு அவரை பேசினா எங்களுக்கு என்ன மரியாதை? இதான் பொண்ணை வளர்த்த லட்சணம்ன்னு எங்களை பேசுவார்…”
“நீங்க இப்படியே பேசுங்க அவர் இதுக்கும் மேல தலைல ஏறி நிப்பாரு…” முகிலனுக்கு கோபம் வர,
“அதுக்குன்னு இப்படியா? எல்லாத்துக்கும் சரிங்கன்னு போக அவர் என்ன முதலாளியா? போங்க பாட்டி…” என்றான்.
“உங்களுக்கு இதெல்லாம் புரியாதுப்பா. இளரத்தம். இப்படித்தான் எடுத்தோம் கவுத்தோம்ன்னு பேச தோணும்…”
“நாங்க எடுக்கிறோம், கவுக்கோம். நீங்கலாம் என்ன நிமிர்த்தி வச்சு சோறு பொங்கீருவீங்களா?…” என சிரித்தான்.
“விளையாட்டா போச்சு. ஆனா இப்ப புரியாது உனக்கு…” என சொல்லி கமலா எழுந்து செல்ல ஷோபா வந்தார்.
“வேதா நல்லா பேசினாளா? அங்க என்ன செய்யறாங்களாம்?…” ஷோபாவிற்கு இன்னுமே கவலை.
“அதெல்லாம் நல்லா பேசினாங்க. நீங்க தான் வந்து எட்டி பார்த்தீங்களே?…”
“எட்டி பார்த்தேன் தான். அது உன்னை சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தேன்…”
“உள்ள வந்திருந்தா அத்தைட்ட பேசிருக்கலாம்ல…”
“ஹ்ம்ம் பேசலாம் தான். அப்பா வேற இங்கிட்டும் அங்கிட்டுமா நடந்துட்டு இருந்தாங்க. என்ன பேச?…” என்றார் சோகமாய்.
“என்னம்மா நீங்க? இதுக்கு எல்லாம் பீல் பண்ணிட்டு. பாட்டி சொல்றதையே வேற மாதிரி சொல்லட்டா?…”
“எப்படி?…”
“குடும்பம்ன்னா ஆயிரம் இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் நினைக்கவே கூடாது. சும்மா எல்லாத்துக்கும் தலையசைச்சு சரின்னே போய்ட்டிருக்க முடியாது…”
“ஹ்ம்ம், புரியுது…”
“அதான் இப்போ இப்படி நம்மோட விருப்பத்தை பேசும் போது உரசல் வரத்தான் செய்யும் அனல் மாமா மாதிரி ஆளுங்கக்கிட்ட இருந்து. அதையெல்லாம் பார்த்தா வாழவே முடியாது…”
முகிலனின் பேச்சில் ஷோபா அமைதியா இருக்க, தான் என்ன பேசினாலும் தாய் மனது ஒப்புக்கொள்ளது என புரிந்தவன்,
“சரி வாங்க, போகலாம்…” என்றான்.
“எங்க?…”
“சாப்பிட்டு தூங்க தான்…” என எழுப்பி உணவு உண்ண அழைத்து செல்ல இளங்கோ அங்கே அமர்ந்திருந்தார்.
“முகிலை கூப்பிட போனேன். நீங்களே வந்துட்டீங்க…” என்றபடி கணவனுக்கு ஷோபா பரிமாற முகிலன் தனக்கு எடுத்து வைத்துக்கொண்டான்.
“நான் வரமாட்டேனா?…” என ஷோபா அவனை கடிந்துகொள்ள,
“இதுல என்ன இருக்கு? நீங்க அப்பாவை பாருங்க…” என மௌனமாக அவன் சாப்பிட சில நொடிகள் அவனையே பார்த்து கொண்டிருந்த இளங்கோ,
“உன்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லையா முகில்?…” என்றார்.
“ஓஹ், நான் இங்க லீவ் நேரம் வந்து போற மாதிரி நீயும். இருக்கட்டும், இருக்கட்டும். பதிலுக்கு பதிலா?…” என்றதற்கு முகிலன் பதில் சொல்லவில்லை.
“நான் உன்கிட்ட தான் பேசறேன் முகிலா?…”
“இது பேச்சே இல்லை. என்ன பதிலுக்கு பதில்?…” என்றான் நிதானத்துடன்.
“அப்படி சொல்லலை, எனக்கு தோணுச்சு. நானும் என் வேலைன்னு போய் தான் கிடைச்ச நேரத்துல இங்க வந்து போவேன்…” என்றவர்,
“என்னோடது லீவோட கூடிய வேலை. ஆனா விவசாயம் அப்படி இல்லை. எல்லா நேரமும் நம்ம கவனம் அங்க தான் இருக்கனும். ஒரு அடி சறுக்கினா பலமடங்கு நட்டம்…”
“அதை தான் நான் சரியா செய்யனும்னு பார்க்கறேன்…”
“இதுக்கு நீ அக்ரி படிச்சிருக்கலாம்…” என்றார் மறைக்க முடியாத எரிச்சலுடன்.
“நான் என்ன படிக்க விரும்பறேன்னு நீங்க கேட்டதா ஞாபகமே இல்லையேப்பா…”
இருவரும் மாறி மாறி விவாதம் செய்ய மீண்டும் ஒரு சண்டையா என கமலா பயத்துடன் பார்த்தார்.
“இப்போ எதுக்கு நீங்க சண்டை போடறீங்க?…” என்ற சம்பந்தம்,
“ஏன் இளங்கோ, நீ தானே என் மகன் அதான் செய்வான்னு பேசின. இப்போ என்ன?…”
“அப்பா அது ஒரு கோவத்துல அந்த நேரம் பேசினது. ஆனா நிதானமா யோசிக்கும் போது…” என்று சொல்ல முகிலன் காதில் வாங்கவில்லை.
பேசிக்கொள்ளட்டும் என்பதை போல அவன் அமர்ந்திருக்க இளங்கோ சாப்பாடு இறங்காததை போல கைகளால் அளந்துகொண்டு இருந்தார்.
“சாப்பிடு இளங்கோ, போதும். திரும்ப ஒரு சண்டையை பார்க்கிற தெம்பு எனக்கில்லை…” கமலா துவண்ட குரலில் சொல்ல இளங்கோவிற்கு வருத்தமாய் இருந்தது.
ஒருமனது மகனுக்கு சரி என்றாலும், இன்னொன்று வேண்டாம் என பிரச்சனை செய்தது.
“என்னவோ முடிவெடுத்தாச்சு. ஆசைக்கு வேணா கொஞ்ச நாள் இருந்து பார்த்துட்டு வா. எனக்கு தெரியும் உன்னால இங்க ரொம்ப நாள் இருக்க முடியாதுன்னு…” என்று சொல்ல,
“இப்போ எதுக்கு இந்த பேச்சு?…” என கமலா தடை செய்தார்.
முகிலன் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை. சொல்லி புரியவைக்க முடியாது இவர்களுக்கு என்று மௌனம் சாதித்தான் அவன்.
“சரி அதை விடுப்பா, ஊர்க்கு என்னைக்கு போகனும்?…” என சம்பந்தம் பேச்ச மாற்றினார்.
“வரும் போது கால்டாக்சில தான் வந்தோம். ட்ரைவ் பண்ண வேண்டாம்ன்னு ஷோபா பயந்துட்டா. அதான். போகும் போதும் அப்படித்தான் போகனும்…” என்றார் இளங்கோ.
“அதெல்லாம் வேண்டாம்ப்பா. ஒரு மூணு நாள் வெய்ட் பண்ணுங்க. நானே வந்து உங்களை ட்ராப் பன்றேன்…” என சொல்ல மறுநாளே கிளம்ப வேண்டும் என்றிருந்த இளங்கோவிற்கு மனதிற்குள் பளிச்சென்ற யோசனை.
ஊருக்கு வருபவனை பேசி எப்படியாவது அங்கேயே இருக்க வைத்துவிடலாம் என நினைத்தபடி அவர் இருக்க,
“அப்பாவுக்கு லீவ் இல்லை முகில். நாளைக்கே கிளம்பனும்னு சொல்லிட்டு இருக்காங்க. நீ இங்க பாரு…” என ஷோபா சொல்லவும் பல்லை கடித்தவர்,
“இல்லை இல்லை. ரெண்டுநாள் கழிச்சே போவோம். அவனும் வரேன்னு சொல்றான்ல. சேர்ந்தே போகலாம்…” என்று சொல்லியவர் சாப்பிட்டவரை போதும் என எழுந்து சென்றார்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நாளைக்கு கிளம்பனும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்குள்ளே என்ன ஆச்சோ?…” ஷோபா குழப்பத்துடன் பார்க்க முகிலனும் சம்பந்தமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.
“இவனை திருத்தவே முடியாது…” என சம்பந்தம் சொல்ல,
“என்னவாம்?…” கமலா புரியாமல் கேட்டார்.
“பேரன் அங்க ஊருக்கு கூட வரேன்னு சொல்லவுமே உன் மகனுக்கு மூஞ்சில பல்ப் எரியுது. இவனை எல்லாம்…” என சிரித்துக்கொண்டே எழுந்து அவர் சென்றதும் ஷோபாவும் கமலாவும் சிரித்தார்கள்.
“சரி அப்படியே நினைச்சுக்கட்டும். விடுங்க. போற வரைக்கும் இங்கயும் சந்தோஷமா இருப்பான். இல்லைன்னா ஊடால ஊடால எதையாச்சும் பேசி இருக்கறவங்களையும் கஷ்டப்படுத்தி அவனையும் கஷ்டப்படுத்திப்பான்…”
கமலா சொல்ல ஆமாம் என வேகமாய் தலையாட்டினார் ஷோபா. அவருக்குமே அதே எண்ணம் தான்.
“சரி நீயும் உக்கார்ந்து சாப்பிடு. நான் போய் பாத்திரங்களை எல்லாம் எடுத்து போடறேன்….” என கமலா எழுந்து செல்ல ஷோபாவும் முகிலனுமே அமர்ந்திருந்தார்கள்.
வேதாவிடம் பேசியதை எல்லாம் சொல்லியவன் சஞ்சய்க்கு கிடைத்த ட்ரான்ஸ்பர் பற்றியும் சொல்ல ஷோபாவிற்கு அவை எல்லாம் பெரிதாய் தெரியவில்லை.
“அதனால என்ன? இருக்கட்டும். ஒரே இடத்துல வேலை பார்க்க முடியாதே?…” என சொல்ல முகிலனுக்கு அதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்க வேண்டாம் என இருந்துவிட்டான்.
அடுத்த மூன்று நாட்கள் முகிலன் சம்பந்தத்துடன் வயல், தோப்பு என தங்களுடைய இடங்களுக்கு சுற்றி திரியவும் அதை பற்றிய மொத்த தொகுப்புகளை சேர்க்கவும் என்றே ஓடிவிட்டது.
மூன்றாம் நாள் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். சென்னைக்கு.
வந்த நாளும், சஞ்சய் டெல்லிக்கு கிளம்ப வேண்டிய நாளும் ஒன்றாய் இருக்க அவனுடன் தனியே பேச வந்துவிட்டான் முகிலன்.
அது ஒரு காபி ஷாப். சஞ்சய் பேசவேண்டும் என அவனை வரவழைக்க முகிலனும் கிளம்பிவிட்டான்.
“உன்கூட பேச கூடாதுன்னு இருந்தேன். ரெண்டுநாளா போனும் எடுக்கலை. நேத்து நைட்ல கிளம்பறேன்னு ஒரு மெசேஜ் மட்டும் தான்…” சஞ்சயின் கடுப்பில்,
“ஏன்டா என்னை பார்த்தா எப்படி தெரியுது? வேலை இருக்காதா எனக்கு? நேரம் இருந்தா திரும்ப கூப்பிட்டிருப்பேன் தானே?…” என்றவன்,
“என்ன இன்னைக்கே கிளம்ப போறேன்னு சொல்லிட்டு வர சொன்ன? என்ன அவசரம்?…”
“அவசரம் தான். நாளைக்கு டெல்லில வச்சு எனக்கும் ஸ்ரேயாவுக்கும் கல்யாணம்…” என சொல்ல,
“வாட்?…” என சாய்ந்தமர்ந்திருந்த முகிலன் முன்னே வந்துவிட்டான்.
“என்னடா உளர்ற?…”
“நிஜமா தான். நான் எந்த ஏற்பாடும் செய்யலை. எல்லாம் ஸ்ரேயா தான்…” என இன்னும் பயத்துடன் பார்த்தான்.
“இதை நம்பவே மாட்டேன். என்ன சொன்ன நீ? தனியா வீடு பார்த்துட்டேன்னு சொல்லும் போதே ரிஜிஸ்டர் மேரெஜ் பண்ணிப்பேன்னு சொன்னவன் தானே நீ? இதை நீ செய்யலைன்னா நம்பனுமா நான்?…” முகிலனுக்கு கோபம்.
அனலரசுவை நினைத்து அல்ல. வேதாவை எண்ணி மனதிற்குள் சஞ்சலம் புகுந்தது முகிலனுக்கு.
“அத்தை தாங்கமாட்டாங்கடா சஞ்சு. நீ பன்றது பைத்தியக்காரத்தனம். நீ காதலிச்சது தப்புன்னு சொல்லலை. ஆனா வீட்டுல சொல்லாமலே கல்யாணம். இது ரொம்ப தப்பு…”
“சொன்னா நடக்காதுடா…”
“ஏன் நடக்காது? நீயா ஒரு அஷம்ஷன்ல இப்படித்தான் ஆகும்ன்னு நினைக்கிற. வீட்டுல சொல்லி பாரு. ஸ்ரேயாவை இன்ட்ரோ பண்ணி வை. அவங்க பேமிலியோட பழகினா தெரியும். அதை விட்டு எதுக்குமே தயாரா இல்லாம நேரா உன்னோட இஷ்டப்படி கல்யாணம்ன்னு சொல்ற?…”
“இந்த கல்யாணம் என்னோட இஷ்டம் தான் . ஆனா நாளைக்கேன்றது ஸ்ரேயா டிசிஷன்…”
“நீ புரிய வை…”
“யாரும் புரிஞ்சுக்க தயாரா இல்லை முகி…”
“சொல்ல நீ தயாரா இல்லைன்னு சொல்லு…”
என்ன மனிதன் இவன் என எரிச்சல் மண்டியது முகிலனுக்கு. எதையுமே எதிர்கொள்ளமாட்டேன் என இருப்பவனை எப்படி சரி செய்ய என யோசித்தபடி இருந்தான்.
“ஓகே, அத்தைட்டயாச்சும் சொல்லு. அவங்கக்கிட்ட நான் போய் சொல்ல கூடாதுன்னு பார்க்கறேன். அதான் சைலண்டா இருக்கேன்…” கண்டனத்துடன் பேசியபடி முகிலன் எழுந்துகொண்டான்.
“இருடா காபி குடி…”
“ஒன்னும் வேண்டாம். ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வரோம். நீ சொல்ற. அவ்வளோ தான்…”
“அப்படின்னா என்னை ஊருக்கே அனுப்ப மாட்டாங்கடா…”
“சொல்லாம போறது தப்பு சஞ்சு…” என பேசிக்கொண்டே வெளியே வந்துவிட்டார்கள் இருவரும்.
“நான் கூடவே இருக்கேன். எதுக்கும் பயப்படாத. அத்தைட்ட நான் பேசறேன். நீ டெல்லி போக வேண்டியது என்னோட பொறுப்பு…”
“ம்ஹூம், என்னால நம்ப முடியலைடா. எனக்கு இது ரிஸ்க்ன்னு தோணுது…” சஞ்சய்க்கு மனதில்லை அப்போதும்.
இருவரும் பேசிக்கொண்டே நின்றிருக்க தூரத்தில் பார்த்துவிட்டார் அனலரசு இருவரையும் சேர்த்து.
அவர் பார்க்கும் நேரம் இருவரும் ஆரதழுவிக்கொள்ள பார்த்தவரின் கோபம் கூடியது.
“டெல்லி போக வேண்டியவனை பிடிச்சு இவனையும் அவன் வழிக்கு கொண்டு வந்திருவான் போல? பேசிக்கறேன்…” என அனலரசு தனது வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றார் அவர்.