“சேரவா? இனியுமா?…” இளங்கோ பேசுவதை கேட்டு பயம் தான் ஷோபாவிடம்.
“என்னவோ இனி எதுவுமே வேண்டாம்ன்ற மாதிரி பேசறீங்க. ஓவியா நம்மோட மருமக…”
“அதான் வேண்டாம்ன்னு சொல்றேனே?…”
“அதை நாம மட்டும் முடிவு பண்ணிட கூடாது. முகில் இருக்கான். அவன்கிட்ட சொல்ல முடியுமா உங்களால?…”
“இதை நான் ஒன்னும் முதல்ல சொல்லலை. என் பிள்ளை வேண்டாம்ன்னு அந்தாள் சொல்லலாம். அவர் பிள்ளை வேண்டாம்ன்னு நான் சொன்னா தப்பா?…”
“இப்படியே பேசினா பிரச்சனை வளரத்தான் செய்யும். நாங்க போய்ட்டு வரோம். உங்ககிட்ட ஒரு சாவி இருக்குது தானே? திறந்து வந்துக்கோங்க…” என சொல்லி போனை வைத்துவிட்டு பார்க்க முகிலன் நின்றுகொண்டு இருந்தான்.
“என்னம்மா செம்ம ஆர்க்யூமென்ட் போல?…” என அவன் சிரிக்க அதன் பின்னர் தான் மூச்சே வந்தது ஷோபாவிற்கு.
எங்கே தான் பேசியதை கேட்டு மகனும் கோபப்படுவானோ என எண்ணி அவனை கண்டதுமே திடுக்கிட்டு போனார்.
இப்போது சிரித்த முகமாக அவன் கேட்டு நிற்கவும் தான் நிம்மதியானது. மெதுவாக அவனிடத்தில் வந்தவர்,
“அப்பாக்கிட்ட சொல்லாம போக முடியாதுல. அதான் சொன்னேன். நீ ஒன்னும் கோவிக்கலையே?..”
“ம்மா, எவ்வளவு நாள் கழிச்சு அப்பாட்ட நீங்க இவ்வளோ நீளமா பேசியிருக்கீங்க? அதுவும் அவருக்கு பிடிக்காததை. நீங்க இப்படித்தான் கேள்வி கேட்கனும்…” என்றான்.
“என்னவோ பேசிட்டேன். எங்க போக கூடாதுன்னு அதட்டி சொல்லிட்டா உன் பேச்சை கேட்கவா அவர் பேச்சை கேட்கவான்னு ஆகிடும். அதோட அவர் நினைக்கிறதும் தப்பு தானே?…”
“தப்பு தான். அதே நேரம் சஞ்சுவும் சொல்லிருக்கனும். ஆனா அவன் சூழ்நிலை வேறம்மா…”
“என்ன முகில், என்னவோ சொல்ற? நீயும் இவ்வளவு பிடிவாதமா போகனும்னு சொல்ற. வேற ஒரு பிரச்சனையும் இல்லை தானே?…”
“காபி நல்லா இருந்துச்சும்மா. இப்ப நான் போய் காரை எடுத்து வெளில நிறுத்துவேணாம். (Xanax) பின்னாடியே நீங்களும் வாங்க கதவை பூட்டிட்டு…” என்று கார் சாவியை சுழற்றியபடி இன்னொரு கையால் சஞ்சய்க்கு அழைப்பு விடுத்தான் முகிலன்.
இரண்டு மூன்று என அழைப்புகள் சென்றதே தவிர சஞ்சய் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
“பூட்டிட்டேன்ப்பா. ஆமா யார்க்கு கூப்பிடற?…”
“ம்மா, வேதாத்தைக்கு போன் பண்ணுங்க. அங்க வரோம்ன்னு சொல்ல வேண்டாம். என்ன செய்யறாங்கன்னு மட்டும் கேளுங்க…” என்றான் முகிலன்.
ஏனெதற்கு என தெரியவில்லை என்றாலும் மகன் சொல்லியதை அப்படியே கேட்டார் ஷோபா.
தனது போனில் இருந்து வேதாவிற்கு அழைக்க காரை ஓட்டியபடி ஸ்பீக்கரில் போட சொன்னான் சைகையில். தலையசைத்து அவரும் அதை செய்ய அழைப்பை ஏற்றது ஓவியா.
“அத்தை சொல்லுங்கத்தை…” என்றாள்
“ஓவிம்மா எப்படி இருக்கடா?…”
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க த்தை. என்னால இங்க வந்த பின்னால பேச முடியலை. ஸாரி த்தை…” என்றாள்.
“இருக்கட்டும்டா. ஆமா அம்மா எங்க?…”
“அம்மா அண்ணா ஊருக்கு போறான்ல. அதுக்கு பேக்கிங்க்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க…” என்றதும் ஷோபா மகனை பார்க்க அவன் மேலே பேசுமாறு சொன்னான்.
“என்ன ஊருக்கா?…” என தெரியாதைதை போல கேட்க,
“உங்களுக்கு சொல்லலையா த்தை?…” என்றாள் அவள்.
ஓவியாவின் குரலிலும் அதிர்ச்சி தான். எப்படி சொல்லாமல் விட்டான் தன் அண்ணன் என்று.
“இல்லம்மா…” என மகனின் முகத்தை கவனித்துக்கொண்டே அதை வைத்து ஷோபா பேச,
“அச்சோ, எனக்கு இது தெரியாதுத்தை. சொல்லிருப்பான்னு நினைச்சேன். அத்தான்கிட்ட கூட சொல்லலையா?…” என்றாள் வருத்தமாய்.
“எனக்கு அது தெரியலைம்மா. சரி எப்போ போறான்?…”
“இன்னைக்கு நைட் ப்ளைட் த்தை. அதான் எடுத்து வச்சிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டுமணி நேரத்துல கிளம்பிருவான்…”
“ஹ்ம்ம், சரிடா. அம்மாக்கிட்ட பேசுவோம்ன்னு தான் கூப்பிட்டேன்…”
“ஓவி, இங்க என்ன பன்ற?…” என்ற சஞ்சய் குரல் கேட்டது.
“ஷோபாத்தை தான் ண்ணா லைன்ல. நீ சொல்லலையா ஊருக்கு போறதை பத்தி?…” என்ற குரலும் கேட்க என்ன பதில் என முகிலன் கவனித்தான்.
“இப்பவே சொல்லனுமா? அதெல்லாம் ஊருக்கு போய் பார்த்துக்கலாம்ன்னு இருந்தேன். நீ போனை வச்சுட்டு வந்து எடுத்து வை….”
“ண்ணா அத்தைட்ட பேசு…”
“நான் தான் சொல்றேன்ல. இங்க வச்சு எதுக்கு? கிளம்பற டென்ஷன்ல. உடனே சொல்லனுமா? எல்லாரும் எல்லாருக்கும் சொல்லிட்டா எல்லாம் செய்யறாங்க?. போனை வை முதல்ல…” என்றான் படபடப்புடன்.
சஞ்சய்யின் இந்த பேச்சும் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது ஷோபாவிற்கு. இளங்கோ சொல்லியது மனதினுள் வர சட்டென கண்கள் கலங்கி போனது.
“ம்மா…” என தாயின் கையை பற்றிக்கொண்டான் முகிலன்.
ஒன்றும் சொல்லாமல் போனை கட் செய்துவிட்டார் ஷோபா. அவருக்கு இதை தாங்கமுடியவில்லை. தனக்கு தான் மனிதர்களை பிரித்தறிய தெரியவில்லையோ என நினைத்தார்.
“இல்லை எனக்கு நீ சொல்லு. அங்க போய் வேதாவை நான் பார்க்கனும்னா ஓரளவுக்காவது என்னன்னு எனக்கு தெரிஞ்சிருக்கனுமே?…” என்றார்.
முகிலனும் இதற்கு மேல் மறைக்க எதுவுமில்லை என நினைத்தவனாக விஷயத்தை சொல்ல முடிவெடுத்தான்.
“சஞ்சய்க்கு நாளைக்கு டெல்லில வச்சு கல்யாணமாம்…”
“முகிலா?…” என அதிர்ச்சியுடன் நெஞ்சை பிடித்துவிட்டார் ஷோபா.
“ஹ்ம்ம் ம்மா. எனக்கே இன்னைக்கு மதியம் தான் தெரியும். வீட்டுக்கு தெரியாம போகாதன்னு சொல்லியும் அவன் கேட்கலை. அதான் நாமலே போய் என்னன்னு பேசிருவோம்ன்னு…”
“முகிலா இது அவன் தனிப்பட்ட விஷயம். இதை நாம எப்படி பேச?…”
“ஆனா இது வேதாத்தை சம்பந்தப்பட்டது. தனிப்பட்ட விஷயம்ன்னு தான் எனக்கு தெரிஞ்சும் இத்தனை நாள் யாருக்கும் சொல்லாம இருந்தேன்…”
“புரியுதுப்பா, ஆனா…”
“ம்மா, அவன் பயந்து சொல்லலைன்னா பரவாயில்லை. இது முழுக்க முழுக்க ஏமாத்தறது…” என சொல்லியபடி அடுத்த ஐந்து நிமிடத்தில் காரை அனலரசு வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தான் முகிலன்.
வாசலில் கார் வந்து நிற்கும் சத்தத்தில் ஓவியா வந்து எட்டி பார்க்க காரில் இருந்து முகிலனும் ஷோபாவும் இறங்குவதை கண்டு அவள் முகம் மலர்ந்தது.
“ம்மா அத்தானும், அத்தையும் வந்திருக்காங்க…” என்று சத்தத்துடன் வெளியே வந்தவள் ஷோபாவின் கைகளை பிடித்துக்கொண்டாள்.
“உள்ள வாங்கத்தை…” என முகம் கொள்ளா புன்னகையுடன் அழைத்தவள் முகிலனை பார்த்து தலையசைக்க பதில் முறுவல் புரிந்தவன் அவளுடன் வீட்டிற்குள் நுழைய அவர்களை கண்டு பேயறைந்ததை போல நின்றான் சஞ்சய்.