முகிலன் கிராமத்திற்கு கிளம்பிக்கொண்டு இருந்தான். ஷோபா அவனுக்கு பிடிக்குமென ஒவ்வொன்றாய் எடுத்து வைத்துக்கொண்டு இருக்க இளங்கோ எந்தவித எதிர்ப்பும் இல்லாது தானும் உதவிக்கொண்டு இருந்தார்.
அவர் மனது இன்னும் சஞ்சய் செய்து வைத்த ஏற்றுக்கொள்ள முடியாத வேலையில் இருந்து நீங்கவில்லை.
“எப்படி? எப்படி? இவனையும் பார்த்து பார்த்து தானே வளர்த்தாள் என் தங்கை…” என ஷோபாவிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.
அந்த பெருந்தவறை நினைக்கையில் தன் மகனின் மேல் அத்தனை மரியாதை வந்தது.
“நான் சஞ்சய்யை தான் பிழைக்க தெரிஞ்ச பிள்ளை. அவனை மாதிரி வேலையை பார்க்கனும்னு நினைச்சேன். இப்ப என் மகன் என்னை கௌரவப்படுத்திட்டான்…” என்றார் மனைவியிடம்.
கிராமத்திற்கு தகவல் சொல்ல அவர்களுக்கு அதிர்ச்சி. வேறிடத்தில் வேலைக்கு முயலுவதாக தானே பேசி கேட்டிருந்தார்கள். இப்படி செய்வான் என்று நினைக்கவில்லையே?
மகளுக்கு அழைத்து ஆறுதலாக பேச முயன்றால் வேதா எதுவுமே நடக்காததை போல வழக்கமான பேச்சை தான் பேசினார்.
“மனசு விட்டுடாதம்மா. அவனே தெளிஞ்சு வரட்டும்…” என கமலா ஆறுதல் பேச,
“ம்மா, அவன் எதுவும் தெரியாம செய்யலையே? சின்ன குழந்தையா அவன்? ஓவி சொன்னா அந்த பொண்ணை பத்தி. இது அவன் முடிவு. அதுவும் அவன் பேசின பேச்சு. விடுங்க. அது தேவையில்லாதது. போய்ட்டான். அவ்வளோ தான்…”
அவர் சாதாரணமாக முடித்துக்கொன்டாலும் அந்த வார்த்தைகளுக்கு பின்னால் ஒளிந்திருந்த வலியை தாயாய் கமலா உணரத்தான் செய்தார்.
மகளிடம் வேறு எதுவும் பேசவில்லை என்றாலும் மனதுக்குள் வைத்து மறுகினார்.
சம்பந்தத்திடம் பகிரலாம் என்றால் ஏற்கனவே சஞ்சயின் செயலால் துவண்டிருக்கும் வயோதிக மனிதனை தனது கஷ்டத்தையும் சொல்லி வருத்தமடைய செய்ய வேண்டாம் என மௌனமாகிபோனார்.
நான்கு நாட்கள் ஆகிற்று சஞ்சய் அப்படி கிளம்பி சென்று. அதுவரை முகிலன் அங்கேயே தான் இருந்தான்.
அவ்வப்போது வேதா, ஓவியாவுடன் போனில் பேசுவதும் கிடைத்த நேரத்தில் அங்கே சென்று சிறிது நேரம் இருந்துவிட்டும் வருவதுமாக இருந்தான்.
செல்லும் நேரம் அனலரசுவை காணவும் முடியவில்லை. அவரின் அறைக்கதவும் பூட்டப்பட்டே தான் இருக்கும்.
சஞ்சய் கிளம்பிய அன்று ஏர்போர்ட் போய்விட்டு அனலரசு வீடு வந்ததும் ஓவியா போன் செய்துவிட்டாள் முகிலனுக்கு.
“அப்பா இப்பதான் உள்ள வராங்க த்தான்…” என சொல்ல
“ஹ்ம்ம், நானும் உன் வீட்டு வாசல் பக்கத்துல தான் இருக்கேன்…” என சொல்ல வாசலில் இருந்தே எட்டி பார்த்தாள்.
முகிலனின் கார் அவர்கள் வீட்டிலிருந்து சற்று தள்ளி நின்றிருக்க அவன் உள்ளே அமர்ந்திருந்தான்.
“திரும்பவும் எதுக்கு த்தான்?…” என அவனின் வருகையை கேட்க,
“வேண்டுதல் தான். நீ வேற…” என சற்றே எரிச்சல் கலந்த குரலில் சொல்ல ஓவியாவிடம் மௌனம்.
“பின்ன என்ன ஓவி, ஏர்போர்ட் போய் இவரை தேடி பக்கத்துல போகவும் முகத்தலட்டிச்ச மாதிரி பேசறார். ஆனாலும் மனுஷன் கண்ணு நிறைய தண்ணி. அழுதுட்டார். வீம்பு, என் முன்னால உடைஞ்சிட கூடாதுன்னு…”
“த்தான், இங்கயும் வந்து எதுவும் பேசலை. ரூம்க்குள்ள போய்ட்டார்…”
“தெரியலை. அவர் சஞ்சய்யை பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம். என்னவோ சொல்லியிருக்கான். அதான் அப்படி இருந்தார்…”
“எனக்கும் அவர் முகத்தை பார்த்ததும் அப்படித்தான் தோணுது…” கவலையாக ஓவியா சொல்ல,
“அத்தை பார்த்தாங்களா?…”
“இல்லை, வெளில ஆட்டோ வந்து நிக்கற சத்தம் கேட்டதும் அம்மா உள்ள எந்திச்சு போய்ட்டாங்க. என்னையும் எதுவும் பேச கூடாது, கேட்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க….”
சஞ்சய்யை அழைக்க செல்லும் பொழுதே தன்னால் வண்டி ஓட்ட முடியாதென தெரிந்துவிட்டது அனலரசுவிற்கு.
அதனால் ஆட்டோவில் சென்றுவிட வரும் போழ்தும் கண்ணில் பட்ட ஆட்டோவில் ஏறி வீடு திரும்பிவிட்டார்.
“ஒரு வீட்டுக்குள்ள இருந்துட்டு பேசாம இருப்பீங்களா? முதல்ல போய் அவரை பாரு. நான் கிளம்பறேன். காலையில கால் பன்றேன்…” என சொல்லி போனை வைத்துவிட்டான்.
முகிலனின் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் ஓவியா நிமிர்ந்து அவனிருந்த இடத்தை எட்டி பார்க்க காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.
ஏற்கனவே நடந்த சலசலப்பில் வீட்டில் இருந்த பேச்சுவார்த்தைகள் வெளியே கேட்டிருக்க அக்கம்பக்கத்தினர் குறுகுறுவென பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
அனலரசு மகனை தேடி கிளம்பியதில் இருந்து ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீடு என தொட்டு தொட்டு அந்த ஏரியா முழுவதும் விஷயம் பரவியிருந்தது அந்த இடைப்பட்ட நேரத்தில்.
இப்போதும் அனலரசு வர அவரின் பின்னால் முகிலன் தொடர்ந்து வந்ததும், ஓவியா போன் பேசியபடி வெளியே வந்து நின்று பார்த்ததும் என கண்டும் காணாமல் கவனிக்கத்தான் செய்தார்கள்.
மீண்டும் வீட்டிற்குள் வந்தவள் தந்தையின் அறையை சென்று தட்டியவள் அவர் திறக்கவில்லை என்றதும் பலமாய் தட்டினாள்.
“ஓவி என்ன பன்ற?…” என வேதா வந்து கேட்க,
“அப்பா கதவை திறக்கலைம்மா…” என சொல்லும் பொழுதே அனலரசு கதவை திறந்துவிட்டார்.
கலங்கி சிவந்திருந்த விழிகளுடன் மகளை உக்கிரமாக பார்த்தவர் சுட்டுவிரல் நீட்டி போ என்னும் விதமாக முறைத்தார்.
ஓவியாவிற்கு அந்த நிமிடம் என்ன செய்வதென தெரியாமல் தாயையும் தந்தையையும் மாறி மாறி பார்க்க வேதா அவளின் கை பிடித்து அழைத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் வந்துவிட்டார்.
அவர்கள் செல்லவும் மீண்டும் அறைக்குள் முடங்கிய அனலரசு மகன் தன்னை விமானநிலையம் என்றும் பார்க்காமல் துச்சமாய் பேசி கீழே தள்ளிவிட்டு உள்ளே சென்றதை மறக்கமுடியாமல் அமர்ந்திருந்தார்.
‘இதற்கா வளர்த்தேன். இதற்கா இத்தனை பாடுபட்டேன்? இதற்கா இத்தனை கவனமாக இருந்தேன்?’ என தன்னை குறித்தே வெட்கியவருக்கு தோற்றுவிட்ட உணர்வு.
அவருக்கு அமைந்திருந்த உன்னதமான உறவுகளுக்குள் வெற்றி தோல்வி என பார்க்க ஆரம்பித்தவர் அடுத்த நிலைக்கு சென்றுவிட்டார்.
‘இல்லை, இவர்கள் முன் தான் தாழ்ந்து போவதா? இனி எத்தனை இளக்காரம் செய்வார்கள்? நான் சொன்னேனே கேட்டீங்களா? என நாளை தன் மனைவி தன்னிடம் எகத்தாளம் பேசுவாளே?’
அனலரசு அப்படி ஒரு வழியில் தான் யோசித்தார். இத்தனை நாட்கள் சின்ன விஷயமானாலும் வேதா கேள்வி கேட்காமல் இருந்ததில்லை.
‘இனியும் அப்படித்தானே இருப்பார். அதுவும் இப்படி ஒரு வாய்ப்பு. விடமாட்டாரே? தன்னை இறக்கி பேசுவாரே?’ என நினைத்தார் அனலரசு.
இல்லை தானாக இறங்கி பேசினால், ‘ பார் என் அண்ணன் மகனை பார்’ உன் வளர்ப்பும் பார்’ என தன்னை இகழ்ந்து பேசிவிட்டால்? அதற்கு வாய்ப்பளிக்க போவதில்லை என்ற முடிவிற்கு வந்தார்.
மீண்டும் சிக்கலான மனநிலைக்கு தான் அவர் சென்றுகொண்டு இருந்தார். இறுக்கம் தளர்ந்து யோசிக்கையில் தான், தன் தன்மானம் என்று தான் நினைத்தாரே தவிர மனைவி உடைந்துவிட்டிருப்பாள் பேசி நிலைமையை மாற்றுவோம் என எண்ணவில்லை.
தன் மனைவியை மனைவியாக பார்க்காமல் தன் எதிராளியாக உருவகித்து அந்த உறவை இழந்து போனார்.
அதன் விளைவு அவர்களை விட்டு இன்னும் தூரம் சென்றார் அனலரசு. மனது கொதித்தது.
தன்னை அவமதித்து ஏமாற்றி சென்றதோடு, முகிலன், அவனின் குடும்பத்துடன் சேர்ந்து மகளும் தன்னை பேசிவிட்டதில் வெகுண்டுகொண்டு இருந்தார்.
இத்தனை கோபத்தை மகள், மனைவி மீது வைத்திருந்தாலும் மகனை எண்ணுகையில் துக்கம் தாளமுடியவில்லை.
உண்மையில் அவரின் குற்றவுணர்வு அவரை மாறாக யோசிக்க வைத்திருந்தது. குறுக வைத்திருந்தது. அதனை வெளிக்காட்டிக்கொண்டு ஆதரவை தேட அனலரசு விரும்பவில்லை.
தனது இயலாமையை வெளிக்காட்ட முடியாத மனிதனின் வீண் வறட்டுத்தன்மை அடிவாங்கும் நேரம் அதன் பிரதிபலிப்பு மற்றவர்களை குற்றம் காண்பித்து தன் தவறை நினையாமல் தப்பித்துக்கொள்வதே ஆகும்.
அனலரசு அந்த மனப்பான்மையில் தான் அனைத்திற்கும் தன்னை தவிர அத்தனைபேரும் குற்றவாளி என சுட்டிக்காட்ட ஆரம்பித்தார்.
மற்றவர்களை பார்த்து யோசிக்காமல் ஒருவிரல் நீட்ட, மற்ற நான்கு விரல்களும் தன்னை நோக்குவதை அவர் புரிந்துகொள்ளவும் இல்லை.
இதில் உறவுகளிடம் விஷயம் எப்படி சென்றடைந்ததோ மாற்றி மாற்றி அழைப்பு அனலரசுவிற்கு.
அதன் மூலமாக தான் ஸ்ரேயா பற்றிய முழு விவரத்தின் சாரம்சத்தை அறிந்தார் அவர்.
அடுத்த பேரதிர்ச்சி. தன்னைபோல முகம் கன்றிவிட அசூயையான மனநிலை. மகனின் தேர்வு ஏன் இப்படி என்ற முக சுளிப்பில் இருந்தவருக்கு இப்படியே விட மனதில்லை.
வீட்டில் இருந்தவாரே தெரிந்தவர்களிடம் பேசி அவர்களின் ஒப்புக்கான ஆறுதல் வார்த்தைகளை கடந்து ஸ்ரேயாவின் எண்ணை வாங்கிவிட்டார் அனலரசு.
மகன் இன்னும் குடும்பத்தினரின் நம்பர்களை ப்ளாக் செய்து வைத்திருக்க ஸ்ரேயாவின் எண்ணிற்கு அனலரசு அழைக்க நான்கு ரிங்கில் எடுத்துவிட்டாள்.
“எஸ்…” என்றவளின் குரலில் அவளின் விவரங்கள் தான் முதலில் அனலரசுவின் மனதிற்குள் வந்தது.
“ஏம்மா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருந்தா இப்படி என் மகனை வளைச்சு போட்டு கல்யாணம் செய்வியா நீ? உனக்கென்ன ஊர்ல வேற யாருமேவா கிடைக்கலை?…” என்று எடுத்ததும் பேசிவிட்டார்.
“ஹலோ என்ன பேசறீங்க?…” என்ற ஸ்ரேயா குரல் ஏகத்திற்கும் எகிறியது.
“என்ன பேசறேன்னா உன் வண்டவாளம் எல்லாம் தெரியாதுன்னு நினைச்சியா? எல்லாம் இப்பத்தான தெரியுது. நீயெல்லாம் வாசல்ல இருக்க வேண்டியவ. என் வீட்டுக்கு விளக்கேத்த வர ஆசைப்படலாமா?…”
இஷ்டத்திற்கு வார்த்தையை விட்டார் அனலரசு. அந்தளவிற்கு கொதித்து போய் இருந்தார்.