“என்ன எனக்கு ரைட்ஸ் இல்லையா? என் மகனை கட்டிட்டு நான் கேள்வி கேட்க கூடாதுன்னு சொல்லுவியா?…”
“என்னை கேள்வி கேட்கிற அதிகாரம் உங்க மகனுக்கே இல்லைன்னு சொல்லி அதுக்கு அவன் சம்மதிக்கவும் தான் இந்த கல்யாணமே நடந்தது. என்னவோ இப்ப வந்து காச்சு மூச்சுன்னு குதிக்கிறீங்க?…”
“அவன் விவரம் இல்லாம செஞ்சிட்டான். எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்கு…” என்று சொல்ல,
“வெய்ட் எ மினிட்…” என்றவள்,
“சஞ்சய்…” என்று கத்தினாள்.
அவளின் குரலே எதற்கும் அஞ்சாதவள் என காட்டியது. அப்படி ஒரு கோபம் ஸ்ரேயாவின் குரலில்.
தன்னை சேர்ந்த பெண்களுடன் ஸ்ரேயாவை உடனே ஒப்பிட்டு பார்க்கத்தான் மனது முண்டியது அனலரசுவிற்கு.
“என்ன ரேயா?…” என மகனின் குரல் கேட்க இங்கே அத்தனையும் மறந்து உடல் பரபரத்தது மகனை தேடி.
“இங்க பார், நான் உனக்கே எந்த ஆன்ஸரும் குடுக்க மாட்டேன். உன் அப்பா என்னவோ என்னை கேள்வி கேட்கிறாரு. என் ப்ரைவேசில தலையிட மாட்டேன்னு சொல்லி என் கால்ல விழுந்து கெஞ்சின. இப்ப என்னன்னா உங்கப்பா என்னை பேசறார்…”
“என்ன என் மகன் உன் கால்ல விழுந்தானா?…” இங்கே அனலரசு கொந்தளித்து கூசி போனார்.
“நீயெல்லாம் ஒரு ஆளு, உன்னிது ஒரு பிழைப்பு. என் மகனை கால்ல விழ வைச்சியா நீ?…” என்று அத்தனை பேச்சு பேச,
“கேளு. இதுதான் உனக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு சொன்னேன். லிவ் இன் தான் பெட்டர்ன்னு. நீ தான் கேட்கலை…” என்றாள் இகழ்ச்சியாக.
“ஸாரி ரேயா, ஸாரி, ஸாரி…” என அத்தனை மன்னிப்பு கேட்டான். சஞ்சய்.
இங்கே பெற்றவரின் மனது துடியாய் துடித்தது. மகன் வாழ செல்லவில்லை. அடிமையாய் சென்றிருக்கிறான் என புரிந்துபோனது.
“சஞ்சய்…” என கதறலுடன் அவர் அழைக்க,
“என்ன வேணும் உங்களுக்கு? உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லி தானே ஏர்போட்ல இருந்து கிளம்பினேன்…” என்று படபடத்தான்.
அவனுக்கு எங்கே ஸ்ரேயா தன் வாழ்க்கையை விட்டு சென்றுவிடுவாளோ என்னும் பயம்.
திருமணம் ஒன்றே அவளை நிறுத்தி வைக்கும் என்றுதான் அத்தனை மெனக்கெட்டு திருமணத்தை சாதித்திக்கொண்டான்.
அவனுக்கு தெரியவில்லை. திருமணம் என்ற கட்டுக்குள் நிற்கமாட்டாள் ஸ்ரேயா என்று.
“சஞ்சய் இந்த பொண்ணு சரியில்லை. அவ ஏற்கனவே ஒருத்தனோட…”
“அப்பா எதுவும் தெரியாமலா கல்யாணம் செஞ்சிருக்கேன். எனக்கு அவளை பிடிச்சிருக்குது…” என சொல்லி ஸ்ரேயாவை பார்க்க அலட்சியமாய் அவனை பார்த்தாள் அவள்.
“என்னால ஸ்ரேயா இல்லாம இருக்க முடியாது. என்னோட மனைவியா அவ எப்பவும் என் கூட தான் இருப்பா. நீங்க எனக்கு கால் பண்ணாதீங்க. என்னை இனியாவது நிம்மதியா வாழ விடுங்க…”
“அப்பா சொல்றதை கேளு சஞ்சய். அவ சரிப்படமாட்டா. அப்படியே அவதான் வேணும்னா அவளை உன் பேச்சை கேட்க வைக்கிறதை விட்டு அவளுக்கு நீ பணிஞ்சு போவியா?…” என அனலரசு கத்த,
“ஹலோ, இனி என்னை பத்தி ஏதாவது பேச்சு வந்துச்சு? முடிஞ்சா வந்து கூட்டிட்டு போயா…” என்று சொல்லிவிட்டாள் ஸ்ரேயா.
அவளின் விளிப்பில் அனலரசு அதிர்ந்தார் என்றால் சஞ்சய் கொஞ்சமும் அதை பற்றி கவலைகொள்ளவில்லை.
“போதுமா? இதோட எங்களை பத்தி நினைக்கிறதை விடுங்க. என்னால விட்டுட்டு வர முடியாது. என்னை தேடியும் யாரும் வராதீங்க. வந்தாலும் நோ யூஸ்…” என சொல்லி வைத்துவிட்டான்.
ஸ்ரேயாவை சமாதானம் செய்ய மகன் சென்றுவிட அவனின் பேச்சிலும், மரியாதையற்ற ஸ்ரேயாவின் பேச்சிலும் நிலைகுலைந்து போனார் அனலரசு.
அழ வேண்டும் போல தோன்ற அடக்கிக்கொண்டவருக்கு நெஞ்சு வலிப்பதை போல வந்தது.
வெளியே வந்தவர் வீட்டில் தன் பெண்களை காணாது தேட ஒரு சிட்டையில் எழுதி ஒட்டபட்டிருந்தது ப்ரிட்ஜ் கதவில்.
“நானும் அம்மாவும் நாட்டியாலயா வந்துட்டோம். உங்க கதவை தட்டினோம். நீங்க திறக்கலை. சாப்பாடு எல்லாம் செஞ்சு இருக்குது. பார்த்துக்கோங்க…” என ஓவியாவின் கையெழுத்தில் அவள் எழுந்தியிருக்க எடுத்து கசக்கி குப்பையில் எறிந்தார்.
வீட்டின் மயான அமைதியும், மனதில் அழுத்தும் ரணமும் என அவரால் தனியே நேரத்தை கடத்த முடியவில்லை.
இந்த நான்கு நாட்களில் தான் இத்தனை பலவீனமாகி போவோம் என அவர் நினைத்தும் பார்க்கவில்லை.
வெளிப்படையாக தன் உணர்வுகளை கட்டிக்கொள்ளாமல் இறுமாப்பாய் வலம் வந்தவர் இனி தானும் முடங்கி கிடக்காமல் வேலைக்கு செல்லவேண்டும் என முடிவுக்கு வந்தார்.
அதிலும் தன் வீட்டு பெண்கள் தன்னிடம் சொல்லாமல் முடிவெடுத்து சென்றது இன்னுமே கோபத்தை தூண்டியது.
“இத்தனை தூரமா வந்துட்டீங்க? பார்த்திடறேன் என் தயவு இல்லாம எப்படி இருக்க முடியுதுன்னு…” என சொல்லிக்கொண்டவரின் காதில் ஸ்ரேயாவின் அதிகாரமான குரல் ஒலித்தது.
“இல்லை, இவங்களை இப்படியே விட்டா அவளை மாதிரி திமிரெடுத்து சுத்த ஆரம்பிப்பாங்க. தானா பேசட்டும். அப்பறம் வச்சுக்கறேன்…” என சூளுரைத்துக்கொண்டார்.
இத்தனை வருடத்தில் எத்தனை முறை சண்டையிட்டிருந்தாலும், அதை எல்லாம் மறந்துவிட்டு தானாகவே பேசிவிடுவார் வேதா.
சண்டை ஒன்று போட்டுக்கொண்டதை போலவே எப்போதும் அவர் இருந்ததில்லை என்ற தைரியத்தில் இப்போதும் அப்படி வந்து பேசுவார் என நினைத்திருக்க வேதாவின் மனதில் அனலரசு தன்னுருவத்தை ஏற்கனவே சுட்டு பொசுக்கிவிட்டதை அறியாமல் போனார்.
இங்கே முகிலனும் தன்னுடைய லட்சியத்தை நோக்கி அடுத்த அடி எடுத்து வைக்க மனமுவந்து மகனை வழியனுப்பினார் இளங்கோ.
கூடுதலாய் தனது ஆதரவையும் அவனுக்கு உத்வேகமான வார்த்தைகளாக துணையனுப்பியவர்,
“அப்பாவும் ரிட்டையர்ட் ஆகவும் உன்னோட வந்துடுவேன் முகிலா…” என்னும் அளவிற்கு பேசியிருந்தார்.
அந்தளவிற்கு நடந்தது அவரை மாற்றியிருந்தது. இடையே வேதாவிற்கு அழைத்து பேசியிருந்தார்.
ஓவியாவிடமும் பேசியவர் அன்றே அவளுக்கு தகப்பனுக்கு தகப்பனாய் தான் இருப்பதாய் தன்னை உணர்த்திவிட்டார்.
இப்படியாக நாட்கள் கடக்க அனலரசுவின் வீம்பும் பிடிவாதமும் குறையத்தான் இல்லை.
இப்பொதெல்லாம் மகனை நினைக்கையில் வேண்டாததை பார்த்துவிட்டதை போல முகத்தை சுளித்துக்கொள்வார்.
அதே நேரம் மனைவி, மகளிடம் வீம்புடனே இருந்து வந்தார். அவர்களும் இன்னும் பேசியிருக்கவில்லை.
ஓவியா மட்டுமே அந்த வீட்டில் அவருடன் பேசுவது. அதுவும் ஓரிரு வார்த்தைகள் தான். தகவல் சொல்ல மட்டுமே.
தனியாக கச்சேரிக்கு செல்வது, அதன் ப்ரோக்ராம் அனைத்தையும் தானே பார்த்துக்கொள்வது என இருக்க, இளங்கோ வேறு தானும் துணையாய் உடன் சென்று வர அனலரசு கொதிக்க ஆரம்பித்தார்.
‘எத்தனை நாள்? எத்தனை நாள்? பார்த்துவிடுவோம்’ என மனது இன்னுமே இறுமாந்து கிடந்தது.
இப்படியே இருந்துவிட முடியுமா இவர்களால்? என நினைக்கையில் அடிமனதில் வேதாவின் குரல் ஏன் அந்த வீட்டில் ஒலிக்கவே இல்லை என்பதும் தோன்றாமல் இல்லை.
ஆம், வேதாவின் குரலை அனலரசு சஞ்சய் சென்ற அன்று கேட்டது. அதன் பின்னர் இன்றுவரை கேட்கவில்லை.
எதையோ இழந்ததை போன்ற தொய்வு இருந்தாலும் இன்னதென்று உணரமுடியாத கண்மூடித்தனமான கோபத்தில் இருந்தார் அனலரசு.
ஐந்து மாதங்கள் கடந்திருக்க அடுத்து அவருக்கு தகப்பனாக அடியாக ஓவியா முகிலன் திருமண ஏற்பாட்டை பற்றிய தகவல், வெறும் தகவலாக வந்து சேர்ந்தது.
அதுவும் ஏற்பாட்டிற்கு முக்கிய காரணம் மகள் என்று தெரிந்ததும் அதுவரை இருந்த வெட்டி வீராப்பு அத்தனையையும் உதறிவிட்டு நேரடியாய் அவளிடம் வந்தார்.
அன்று ஒரு கோவிலின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் வந்திருந்தவளை வரும் வரை விழித்திருந்து பிடித்துக்கொண்டார்.
“உனக்கும் முகிலனுக்கும் கல்யாணம்ன்னு சொல்றாங்க. உண்மையா?…” என கேட்க,
“நான் தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னேன்…” என அவள் உறுதியுடன் சொல்லவும் இன்னும் அதிர்ந்தார்.
“என்ன? உனக்கு நீயே கல்யாணம் பேசுவியா?…”
“ஆமா, எனக்கு நானே பேசினேன். இது எல்லாரும் ஏற்கனவே பேசி வச்சது தானே? கல்யாணத்துக்கு நாள் குறிச்சே ஆகனும்னு நான் தான் பிடிவாதமா சொன்னேன். என்ன இப்போ?…” என்றாள் எதிர்த்து.
அனலரசு வேதாவை பார்க்க அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல அவர் நின்றார்.
“இதுக்கெல்லாம் நீ தான் உடந்தையா?…” என்று வேதாவின் முன் நிற்க,
“பேசினது நாள். கல்யாணம் எப்போன்னு முடிவு பண்ண சொன்னதும் நான். என்னை கேளுங்க…”
“இவ தானே உங்களை பெத்தா? அப்ப இவளை தான் கேட்கனும்…” என வேதாவை உறுத்து விழிக்க அவரிடம் எந்த சலனமும் இல்லை.
“பாரு, நீ பெத்து வளர்திருக்கற லட்சணத்தை பாரு. ஒன்னும் உருப்படி இல்லை. மகன் ஒரு சாக்கடையில. இவ அந்த விவசாய பூமின்ற சேத்துல. இதுதான் நீ வளர்த்த லட்சணம்…” என்றார் வேதாவிடம்.
“அப்ப அப்பான்னு நீங்க எதுக்கும் லாயக்கில்லை அப்படித்தானே? பிள்ளைங்களோட வளர்ப்பு மொத்தமும் தாய்க்கு மட்டும் தான். அப்போ நீங்க ஏன் உரிமை கொண்டாடிட்டு வரீங்க அவங்களோட தனிப்பட்ட முடிவுகள்ல?…” அத்தனை சூடு ஓவியாவின் பேச்சில்.
“ஏய்…” என மகளை அடிக்க பயந்தார்.
அவரின் கையை பிடித்துக்கொண்டவள் அவரை தீட்சண்ய விழிகளால் எதிர்கொண்டாள்.
இன்னும் நிகழ்ச்சிக்கு செய்திருந்த அலங்காரம் எதுவும் கலைந்திருக்காமல் அப்படியே கிளம்பி வந்திருந்தவளின் சர்வ அலங்காரமும், விரிந்த அஞ்சனம் பூசிய விழிகளும் என அந்த பராசக்தியை நினைவூட்ட கையை தளர்த்தினார் அனலரசு.