“அப்பான்னா பயம் மட்டும் போதும். அப்படித்தானே?…” மீண்டும் மீண்டும் எதிர்த்துக்கொண்டே இருந்தாள் ஓவியா.
“அப்படித்தான், கொஞ்சமாச்சும் மனசுல பயமிருந்தா தான் பெத்தவங்களை தாண்டி போகாம இருக்க முடியும். உனக்கு என்ன உன் அண்ணனை போல புத்தி போகுதோ?…” என்று சொல்ல,
“முகிலன் அத்தானையும் அந்த ஸ்ரேயாவையும் ஒரே தராசுல நிறுத்தாதீங்கப்பா…”
“அப்படித்தான் நிறுத்துவேன். என்ன செய்வ? அவ உன் அண்ணனை மயக்கினா. இவன் உன் மனசை கலைக்கிறோனோ?…”
“யாரும் யார் மனசையும் கலைக்கலை. சொல்ல போனா என்னோட முடிவுக்கு அத்தான் இன்னும் சம்மதிக்கலை. நானா தான் கல்யாணம் பேச்சை எடுத்தேன். அதுவும் அம்மாச்சி, தாத்தாட்ட…”
“உனக்கு திமிர் கூடி போச்சு. பயம் அத்து போச்சு. அதான் இப்படி எல்லாம் என்கிட்டையே உளறிட்டு இருக்க…”
“என்ன உளறினாங்க? நான் ஒன்னும் அத்தான்கிட்ட நேரடியா இதை பேசலையே? தாத்தா, அம்மாச்சிட்ட தான் பேசினேன். அவங்க பேசட்டும்ன்னு சொன்னேன்…”
“அவங்க மட்டும் என்ன ஒழுங்கா? உனக்கு புத்தி சொல்றத விட்டு என்கிட்டே நாள் குறிக்க போறோம்ன்னு பேசறாங்க. இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்…”
“ஏன்? இதுல மறுக்க என்ன இருக்கு? நீங்க பேசி வச்சது தானே?…”
“அது அப்படித்தான், அதுவும் இத்தனை சண்டைக்கு பின்னால அவன் வீட்டுல உன்னை குடுக்கறதா? முடியாது…”
“என்னாலையும் என் மனசை மாத்திக்க முடியாது…” என்றவளை என்ன செய்வது என தெரியாமல் உடனே பேசி மாற்றினார்.
“அப்படியே இருந்தாலும் உனக்கு கல்யாணம் பண்ண இன்னும் ஒருவருஷம் வரை டைம் இருக்கு. அதுக்குள்ளே பண்ண முடியாது. உனக்கு தெரியும் தானே?..”
அனலரசு சொல்லவும் அவரை அழுத்தமாய் பார்த்தவள் வேதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“அப்போ இந்த ஒரு வருஷம் தான் உங்களை தடுக்குதா? இல்லன்னா பிரச்சனை இல்லை அப்படித்தானே?…”
“என்ன நீ திரும்ப திரும்ப என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்க? ஓங்கி ஒண்ணு விட்டேனா?…” என கையை நீட்டிவிட,
“நெக்ஸ்ட் மந்த் நியூயார்க்ல நடக்கற டான்ஸ் ப்ரோக்ராம்க்கு நான் வரலைன்னு சொல்லிட்டேன். ரிட்டன்ல சைன் பண்ணி சமிட் பண்ண போறேன்…” அவர் ஓங்கிய நேரத்தில் ஓவியா சொல்லிவிட அப்படியே கையை கீழே இறக்கினார் அனலரசு.
“என்ன? என்ன சொல்ற?…” என்றார் அதிர்ச்சி விலகாமல்.
“ஆமா, நான் முடிவு பண்ணிட்டேன்…”
“எல்லாம் உன் இஷ்டமா? அதெல்லாம் இல்லை. நீ போற. அவ்வளோ தான்…”
“சரி போறேன். ஆனா கல்யாணம் பண்ணிட்டு தான் போவேன். இதுக்கு உங்களுக்கு சம்மதமா?…” என்றாள் அவரை மடக்கியவிதமாக.
“இல்லை இல்லை. நீ யார் பேச்சையோ கேட்டுட்டு பேசற. ஓவியா ஒழுங்கா என் பேச்சை கேளு. இப்ப கல்யாணம் வேண்டாம். ஒருவருஷம் போகட்டும். அப்பறம் என்னவோ பண்ணி தொலை. உன்னை யார் கேட்க? ஆனா இந்த ப்ரோக்ராம் எத்தனை வருஷ காத்திருப்பு?…”
“ம்ஹூம், முடியாது…” என்றாள் பிடிவாதமாக.
அப்போதும் அவருக்கு மகள் எதற்கு இத்தனை பிடிவாதம் பிடிக்கிறாள்? உண்மை தெரிந்திருக்குமோ என்ற விதத்தில் இருமனதாக ஆமாம், இல்லை என்னும் மதில்மேல் பூனையாக தவித்தார்.
வேதாவிடம் எதற்கும் பதிலும் இல்லை. முக பாவனையும் இல்லை. வேடிக்கை பார்க்கும் பாங்கே இருந்தது.
“பார்த்தியா? உன்னோட அகம்பாவம் அப்படியே கொட்டி கிடக்கு உன் பொண்ணுக்கிட்ட. பெத்த தகப்பன் என்னையே எதிர்த்து பேசறதுமில்லாம தன் கல்யாணத்தை முடிவு பன்றேன்னு பேசறா. கேட்க உனக்கு அசிங்கமா இல்லையா?…”
“இதுல என்ன அசிங்கம் வந்துச்சு? நான் ஒன்னும் உங்க மகனை மாதிரி ஓடி ஒளிஞ்சி ஒன்னும் கல்யாணம் செய்யலை. நீங்க எனக்கு மாப்பிள்ளைன்னு சொன்னவரோட தான் என் வாழ்க்கையை அமைச்சுக்க பார்க்கறேன். அதுல எந்த தப்பும் எனக்கு தெரியலை…”
“தெரியலையா? நீ என் பேச்சை கேட்டு தான் ஆகனும். ந்யூயார்க் போகத்தான் செய்யனும்…”
“அப்போ நான் மிசஸ் வனமுகிலனா தான் போவேன். நாட்டியாலயால எழுதிக்கொடுத்தா அத்தானையும் சேர்த்தே நான் கூட்டிட்டு போகலாம்…” என்று சொல்ல நெற்றியில் அடித்துக்கொண்டார் அனலரசு.
“உன் தலையில நீயே மண்ணை அள்ளி போடனும்னு முடிவு பண்ணிட்டியா? அதான் ஒரு வருஷம் போகட்டும்ன்னு சொல்றேன்ல…” என்றார் உச்சகட்ட கடுப்புடன்.
“அப்போ நீங்க என் தலையில மண்ணள்ளி போட இருக்கீங்களே அது தப்பில்லையா? அப்போ அந்த ஒருவருஷ கணக்கு எங்க போகுதாம்?…” என கேட்க ஸ்தம்பித்து நின்றார் அவர்.
“எனக்கு எல்லாம் தெரியும். ரெண்டு நாள் முன்னாடி நீங்க பார்த்து வச்சிருக்கீங்களே மாப்பிள்ளை. அவர் கால் பண்ணிருந்தார்…” என்றதும் அனலரசு முகம் வெளிறிவிட்டது.
எப்படி எப்படி விஷயம் தெரிந்தது? என யோசிக்கையில் தான் பார்த்துவைத்த மாப்பிள்ளையின் மேல் கோபமும் பொங்கியது.
“கூறுகெட்டவன் கொஞ்சமாச்சும் புத்தி இருந்தா இப்படி செய்வானா? நானே அங்க வரவும் பேசலாம்ன்னு தானே சொல்லியிருந்தேன். ஆளா பறந்திருக்கானே பேசறதுக்கு’ என மனதிற்குள் அந்த மாப்பிள்ளைக்கு வசைபாடிக்கொண்டிருந்தார்.
“இவ்வளவு யோசிப்பீங்களா நீங்க? அப்போ அந்த ஒருவருஷம் ஒண்ணுமே இல்லை அப்படித்தானே?…”
“இல்லை, பரிகாரம் செஞ்சுக்கலாம்ன்னு சொன்னாங்க. அதான் நானும் சம்மதிச்சேன். அங்க போய் உன்னை பேசி சம்மதிக்க வச்சிடனும்னு இருந்தேன்…”
“அப்போ அம்மா இல்லாம என் கல்யாணத்தை நடத்த நினைச்சிருக்கீங்க?…”
“பெத்ததை தவிர அவ வேற என்ன செஞ்சிட்டா?…”
“மாசம் பொறந்தா வீட்டு செலவுக்குன்னு காசு குடுத்ததை தவிர நீங்க என்ன செஞ்சிட்டீங்க? நீங்க செஞ்சது ஒண்ணே ஒண்ணு தான். எங்களை அடக்கி அடக்கி ஒடிக்கிறது….”
“என்ன பதிலுக்கு பதில் பேசற? சரி போகட்டும். உனக்கு உண்மை தெரிஞ்சதுல. இது போதும். ஆனா நான் நினைச்ச மாதிரி தான் உன் கல்யாணம் நடக்கனும்…”
“எனக்கும் முகித்தானுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு கூட நீங்களும் தானே நினைச்சீங்க?…”
“அப்ப இருந்த சூழ்நிலையும் இதுவும் ஒண்ணா?…”
“அப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தான் நடந்துப்பீங்க. யோசிப்பீங்க. இந்த உண்மை, வாக்கு, நேர்மை இதெல்லாம் ஒண்ணுக்கும் இல்லை. அதானே?…”
“அதுக்கு அவங்களுக்கு ஒரு தகுதி இருக்கனும். மரியாதை தெரியாத குடும்பம். என்னையே எதிர்த்து பேசினாங்களே மொத்த குடும்பமும். உன்னை குடுத்த பின்னால இன்னும் அலட்சியமா இருப்பாங்க தானே? ஏன் நீயே இப்ப அப்படித்தானே பேசற….”
“அப்போ இந்த குடும்பம் மட்டும் உங்களுக்கு மரியாதையை கொட்டி தந்துட்டாங்களா? என்னை அங்க கல்யாணம் செஞ்சு வச்ச பின்னால உங்களை மதிக்காம போய்ட்டா? என்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்துருவீங்களா?…” என்றாள் ஆக்ரோஷத்துடன்.
“ஓவி, ரொம்ப பேசற. என் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்குது…”
“எங்களுக்கு எல்லாம் பொறுமையே இருக்க கூடாது நீங்க செய்யறதுக்கு. என்னவோ அம்மான்றதால தான் உங்களை போனா போகுதுன்னு பொறுத்துட்டு போறாங்க…” என்று சொல்ல,
“ஓவி…” என அவளை மீண்டும் அடிக்க கை ஓங்க வேதா குறுக்கே வந்து அவரின் கையை படித்து தடுத்துவிட்டார்.
கண்டனமாய் ஒரு பார்வை தான். அனலரசு ஒருநொடி செய்வதறியாமல் அந்த பார்வையில் நின்றுவிட பிடித்த கையை உதறிவிட்டு மகளை அணைத்து நின்றார் வேதா.
“அடிங்க, உங்களால பேசி ஜெயிக்க முடியலைன்னா இது ஒன்னு தானே ஆயுதம். முடிஞ்சா உங்க பக்கம் நியாயமிருந்தா சொல்லுங்க. பேசுங்க. அது முடியலைன்றப்பவே தெரிய வேண்டாமா நீங்க செய்ய இருக்கறது என்னன்னு…”
வேதாவின் அருகே நின்றுகொண்டும் ஓவியா விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
மனது உலையென கொதித்துக்கொண்டு இருந்தது தந்தையின் முடிவில். தன்னை சமாளித்துவிட முடியும் என்றளவிற்கு அவர் திட்டமிட்டிருக்கிறார் என்றால்?
நினைக்க நினைக்க தாளமுடியவில்லை. இதில் இந்த இரண்டு நாளும் முகிலன் அவளை பொறுமையாக இருக்க சொல்லி பேச இன்னுமே கோபமாகிவிட்டாள்.
“என்னை என்னன்னு நினைக்கறீங்க நீங்களும் அப்பாவும், மாத்தி மாத்தி தள்ளிவிடத்தான் பார்க்கறீங்க. எனக்கு எப்படி இருக்கும்ன்னு யோசிக்கவே மாட்டீங்க இல்லையா…” என முகிலனிடம் வாதாடிக்கொண்டு இருந்தாள்.
“நான் சொல்றதை கேளு ஓவி, அவர் தான் அவசரப்பட்டு முடிவெடுக்கார்னா, நீயும் ஏன் புரிஞ்சுக்கமாட்டேன்னு பிடிவாதமா இருக்க? என் மேல நம்பிக்கை இல்லையா?…”
“யார் மேலையும் நம்பிக்கை இல்லை. இதோ நான் சொல்லவும் எப்படி உனக்கு அவர் பேசி முடிவு பண்ணுவாருன்னு இங்க வந்து எங்கப்பாட்ட கேட்டு பேசியிருந்தா நம்பிருப்பேனோ என்னவோ? ஆனா நீங்க என்னை தான் அமைதியா இருக்க சொல்றீங்க. நான் நம்பனுமா?…”
“நம்பித்தான் ஆகனும்…”
“அப்ப அமைதியா அங்க ந்யூயார்க்லையே போய் இருந்திடறேன். நிம்மதியா இருங்க…” என சொல்லி போனை வைத்துவிட்டிருந்தாள்.
விஷயம் தெரிந்த இரண்டு நாட்களாக இதே மன போராட்டம், முகிலனுடன் போராட்டம், இப்போது தந்தையுடன் போராட்டம். ஆயாசமாக இருந்தது ஓவியாவிற்கு.
வேதா ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். ‘உன் வாழ்க்கை. நீ பேசு. யாரின் பின்னாலும் நின்றுவிடாதே’ என சொல்லியவரின் தைரியத்தில் தானே சம்பந்தம், கமலாவிடம் விஷயத்தை சேர்ப்பித்து திருமணத்தை ஏற்பாடு செய்யும் படி சொல்லிவிட்டாள்.
அவர்கள் இளங்கோவிடம் சொல்ல ஷோபாவும் இளங்கோவும் ஓவியாவின் முடிவு தான் சரி என்று அவளுக்கு துணையாய் நின்றனர்.
இளங்கோ தானே திருமணவேலைகள் எல்லாவற்றையும் பார்த்துகொள்வதாக சொல்லிவிட முதலில் இதை அனலரசுவிடம் தெரிவிக்க வேண்டும் என சொல்லியது பெரியவர்கள் தான்.
அதன்படி அவருக்கு அழைத்து சம்பந்தம் விஷயத்தை கூற அவரையே காச்மூச்சென போனில் கத்திவிட்டிருந்தார் அனலரசு.
வீட்டிற்கு வந்தால் ஓவியா கோவிலில் நிகழ்ச்சிக்கு சென்றிந்தாள். வந்து கேள்வி கேட்க தந்தை மகள் இருவருக்கிடையே பெரும் வாக்குவாதம்.
“இங்க பாரு, உன் அண்ணன் விஷயத்துல தான் நான் சறுக்கிட்டேன். ஆனா உன் கல்யாணம் என்னோட கௌரவம் சம்பந்தப்பட்டது…”
“உங்க கௌரவத்துக்கு எந்த விதத்துல இளங்கோ மாமா குடும்பம் குறையா போச்சு?…” ஓவியாவிற்கு பொறுக்கமுடியவில்லை.
“ஆமா, குறைவு தான். வீட்டு மருமகன் சம்பந்தியாக போறவன்னு பார்க்காம என்னையே எடுத்தெறிஞ்சு பேசறாங்க. நான் பொறுத்து போகனுமா?…”
“பொண்ணை எடுத்த நீங்க அவங்களை இத்தனை வருஷம் எப்படி நடத்துனீங்க? உங்களுக்கு ஈகோ இருக்கலாம். கௌரவம் இருக்கலாம். ஆனா அவங்களுக்கு இருந்தா அது தப்பா?…”
“நீ இப்பவே இப்படி பேசற, அந்த குடும்பத்துக்குள்ள போய்ட்டா மொத்தமா நாங்க வேண்டாம்ன்னு சொல்லிருவ…”
“அது உங்க பிரம்மை. அவங்கவங்க நடந்துக்கறதை பொருத்து தான் எல்லாமே அமையும்…”
“என்ன பண்ணுவீங்க? ஒன்னு வீட்டை விட்டு வெளில அனுப்புவீங்க. இல்லைன்னா வீட்டுக்குள்ள வச்சு பூட்டுவீங்க…”
“ஏன் செய்யமாட்டேனா?…”
“செய்ங்களேன்….” என்றதும் அவர்களை உள்ளே விட்டு கதவை பூட்டி சாவியை கையில் எடுத்துக்கொண்டார்.
“என் அனுமதி இல்லாம இங்க இருந்து யாரும் போக முடியாது. நான் பார்த்த பையனோட தான் உன் கல்யாணம். அதுவரைக்கும் இங்கயே இரு…” என சொல்ல வேதாவின் முகத்தில் முதன் முதலாய் ஒரு இகழ்ச்சி புன்னகை.
அதை பார்த்தவருக்கு உள்ளுக்குள் என்னவோ இடிக்க இருவரின் போனையும் பிடுங்க பார்க்க,
“நானே தரேன். வச்சுக்கோங்க…” என நீட்டிவிட்டவள்,
“ம்மா, வாங்க நாம ரூம்க்குள்ள போகலாம்…” என்று அழைத்து சென்றுவிட்டாள் தன் தாயை.
அனலரசு அவர்களை வெறுமனே பயம் காட்டுவதற்காக உள்ளே வைத்து அடைகிறேன் என்று ஒரு ட்ராமா செய்ய மகள் சற்றும் அசைந்துகொடுக்காமல் செய்துகொள் என்பதை போல போனையும் கொடுத்துவிட்டு செல்ல அனலரசுவிற்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.
மறுநாள் மதியம் வரை தானுமே வீட்டில் தான் இருந்தார். எங்கும் செல்லவில்லை.
மகளும் மனைவியும் வழக்கம் போல சமைத்து சாப்பிட்டு உறங்கி எழுந்து வர மாலை நேரம் கதவு தட்டப்பட்டது.
அனலரசு தான் போய் திறந்தார். வெளியே இளங்கோ, ஷோபா இருவரும் நின்றிருக்க ஒரு பெண் காவலதிகாரியும் உடன் இருந்தார்.
சர்வமும் ஆடிவிட்டது அனலரசுவிற்கு. இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை அவர்.
“என்ன மாப்பிள்ளை அதிர்ச்சியாகிட்டீங்க போல?…” என சிரித்துக்கொண்டே அவரை நகர்த்தி உள்ளே நுழைந்தார் இளங்கோ.
அனலரசு இதனை சுத்தமாக எதிர்பார்கவில்லை. தனியே அவர்கள் இருவரும் மட்டுமாவது வந்திருந்தால் நுழைய விட்டிருக்கமாட்டார். உடன் வந்திருப்பதோ காவல்துறை அதிகாரி.
“என்ன இன்னும் பேசமாட்டேன்றீங்க?…” என சகஜமாக பேசுவதை போல இளங்கோ பேச,
“எங்க வேதாவும், ஓவியும்?…” என ஷோபா தேட,
“இங்கயே நின்னுட்டு இருக்க? போய் ரூம்ல பாரு. அவங்களை பார்க்க தானே மேடம் வந்திருக்காங்க…” என்றார் இளங்கோ.
முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் கொப்பளிக்க அனலரசு அவர்களை பார்த்து திருதிருவென முழித்தார்.
“என்ன இளங்கோ ஸார், உங்க மாப்பிள்ளை முழியே சரியில்லையே? என்ன விஷயம்?…” என கேட்க வந்த அதிகாரி அடிவயிறு கலங்கியது அனலரசுவிற்கு.
“இளங்கோ எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். நான் அடுத்த வீதியில தான் இருக்கேன். இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் தான் நான். வழில இவங்களை பார்த்தேன். உங்களை பத்தியும், முகிலனுக்கும், உங்க பொண்ணுக்கும் கல்யாணம்னும் சொல்லி வீட்டுக்கு வாங்கன்னு அழைச்சார். அதான் சரி ரொம்ப கூப்பிடறாரேன்னு வந்தேன்…”
பேச்சு சாதாரணமாக இருந்தாலும் பார்வை அனலை துளைத்தது. ஊடுருவும் காவல் துறையின் பார்வையில் கால்கள் எல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.
“ரொம்ப நடுங்கறீங்களே? நிக்க முடியலையோ? குளிருதா? உட்காருங்க…” என்ற அதிகாரி,
“என்ன இளங்கோ சொல்லுங்க. நானே பேசிட்டு இருக்கேன்…”
“நீங்க பேசனும்னு தானே மேம் உங்களை கூட்டிட்டு வந்தேன்…” என்று இளங்கோவும் சொல்ல,
“என் பேச்சே வேற மாதிரி இருக்கும். முக்கியமா இவ்வளோ பேசமாட்டேன். கை தான் பேசும். நம்ம எக்ஸ்ப்ரீயன்ஸ் அப்படி…” என்று சொல்லவும் அனலரசு,
“பேசிட்டே இருங்க. ஒரு வேலை இருக்கு….” என சொல்லி உள்ளே ஓட்டமும் நடையுமாக சென்றுவிட்டார்.
“தேங்க்ஸ் மேம்…” என இளங்கோ நன்றி சொல்ல ஓவியாவும், வேதாவும் வெளியே வந்தனர்.
ஷோபா அவர்களிடம் சொல்லி அழைத்து வந்திருக்க வேதா அதிகாரியை நெருங்கி,
“ரொம்ப நன்றி மேம்…” என்றார்.
“இதுக்கெதுக்கும்மா நன்றி? இது என்னால முடிய கூடிய உதவி தான். இளங்கோ ஸார் என் அண்ணனோட ப்ரென்ட். அதனால கேஸுவலா என்னால வர முடிஞ்சது. இல்லன்னா ஆக்ஷன் தான்…” என சொல்ல,
“உண்மையில இவ்வளோ ஈஸியா யாரும் வரமாட்டாங்க. கண்டிப்பா நன்றி சொல்லித்தான் ஆகனும்…” என்றதும் தலையசைத்து ஏற்றவர்,
“உங்க ஹஸ்பண்ட் வீம்புக்கு தான் இதை செஞ்சிருக்கார். மத்தபடி ரொம்ப பயப்படறார். இனிமே யோசிப்பார்ன்னு நம்புவோம்….” என்றவர் தனது விசிட்டிங் கார்டை நீட்டி,
“எப்போ வேணாலும் கூப்பிடுங்க. நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் தான்…” என்று சொல்லிவிட்டு அனலரசு இருந்த அறையின் கதவை தட்டினார்.
பயந்துகொண்டே வந்து கதவை திறந்த அனலரசு காவலதிகாரியை பார்த்ததும் இன்னும் அச்சத்துடன் விழிக்க,
“கிளம்பறேன், கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க. வரேன்…” என விரைப்புடன் சொல்லி செல்ல மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டார்.
கோவத்தில் செய்தது எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என அரண்டு போனவருக்கு இளங்கோவின் மீது எரிச்சல் கூடியது.