“ஆமா, வச்சுக்கோங்க. எங்கட்ட சொல்லாம என் கல்யாணத்தை நீங்க முடிவு பண்ணுனீங்க. அதான் நானும் போலீசை வரவழைச்சேன். போதுமா?…” என்று சொல்லிவிட்டு,
“ம்மா உள்ள வாங்க. இந்த கதவையும் பூட்டிக்கட்டும்…” என சொல்லி உள்ளே அழைத்து சென்றுவிட்டாள் வேதாவை.
கதவு தாழிடவில்லை. கட்டிலில் அமர்ந்திருந்த பெண்ணுடன் வேதா என்னவோ பேசுவது தெரிய தனக்கு கேட்கவில்லை என காதை தீட்டிக்கொண்டு அந்த குரல் விழுந்துவிடாதா என ஒருபக்கமாய் காதை திருப்பவும், முகத்தை திருப்புவதுமாக இருந்தார் அனலரசு.
“உங்கப்பா வித்தை காமிக்கிறார் பார்…” என வேதா மகளிடம் முணுமுணுக்க வேகமாய் திரும்பி பார்த்த ஓவியா,
“என்ன? ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்லையே. உன்கிட்ட நான் எதுக்கு கேட்க போறேன்? அடங்காத கழுதைக்கிட்ட பேச்சு வச்சுக்க நான் என்ன ரோஷமில்லாதவனா?…” என பதட்டமாக சொல்லிவிட்டு எழ,
“கழுதைட்ட யாரும் பேச்சு வச்சுக்க மாட்டாங்க. அப்பறம் கதவை பூட்டாம போறீங்க? மறந்துட்டீங்களா?…” என்றாள் நக்கலுடன்.
“எனக்கு தெரியும், உன் வேலையே பாரு…” என சொல்லியவர் கதவை பூட்டவேயில்லை.
ஓவியாவின் திருமணம் பின்னுக்கு சென்று வேதாவின் பேச்சுக்குரலை கேட்கவே பிரயத்தனப்பட்டுக்கொண்டு இருந்தார்.
திறந்திருந்த அறைக்கு முன்னும் பின்னுமாக அவரும் சுற்றித்தான் வந்து பார்த்துவிட்டார். சின்ன சத்தம் கூட கேட்கவில்லை.
ஆனால் மகளிடம் என்னவோ பேசிக்கொண்டே தான் இருக்கிறார். எதையோ சொல்லிக்கொண்டே தான் இருந்தார்.
கண்களில் ஜீவனற்று போயிருந்தது. எனினும் அதில் அத்தனை தெளிவும் தீட்சண்யமும்.
தன்னை கொண்டுதான் தன் மனைவி என்றிருந்தவருக்கு இந்த சில மாதங்களாக அப்படி அல்ல என்று காட்டியிருந்தார் வேதா.
வைராக்கியத்துடன் அவர் இருக்க இருக்க தனது இயலாமையை எண்ணி அனலரசு வெதும்பிக்கொண்டிருந்தது தான் உண்மை.
இதோ மேலும் இரண்டு மாதத்தில் திருமணம் என முடிவு செய்துவிட்டார்கள். சம்மதிக்க வைக்கப்பட்டார் அனலரசு.
விருப்பத்தை தெரிவிக்கவில்லை. அதே நேரம் விருப்பமின்மையையும் சொல்லமுடியாமல் மௌனமாகவே இருந்தார்.
இளங்கோவும், ஷோபாவும் வந்து அனலரசுவிடம் கடமைக்கு முறையாய் பேசிவிட்டு சென்றுவிட்டார்கள்.
திருமணத்தை முடிவு செய்து கோவிலில் அதற்கென இருக்கும் பரிகாரத்தையும் செய்து திருமண வேலைகளை சிறப்புடன் ஆரம்பித்துவிட்டனர்.
ஓவியாவின் நேரம் நடனத்திற்கென அவள் ந்யூயார்க் செல்ல வேண்டிய ப்ரோக்ராம் மாற்றியமைக்கப்படிருந்தது.
அதுவும் ஒருவகையில் நல்லதுதானே என நினைத்துக்கொண்டாள். அதற்கு முன்பே செல்வதாக இருந்தாலும் வேதாவை மட்டுமே அழைத்து செல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.
நாட்கள் நகர திருமணத்திற்கென ஒருவாரம் இருக்க எல்லோரும் புறப்பட்டு வந்து சேர்ந்துவிட்டார்கள் கிராமத்திற்கு.
கிராமத்திலிருந்து அன்று முகிலனுடன் சண்டையிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று இப்போது வரை ஏழு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது.
இப்போது மீண்டும் இத்தனை மாதங்கள் கழித்து அந்த மண்ணில் கால் பதித்திருக்க அனலரசுவின் முகம் போன போக்கில் கமலாவிற்கு அடிவயிறு கலங்கியது.
‘என்ன செய்வாரோ என்ன பேசுவாரோ?’ என கமலா விழுந்து விழுந்துதான் கவனித்தார் அவரை.
அவர்கள் வந்ததும் அக்கம்பக்கத்தின் உறவுகள் சிலர் பார்க்க வந்திருக்க வந்தவர்கள் பேச்சு பேச்சுவாக்கில் சஞ்சயின் பக்கம் திரும்பியது.
அதிலேயே அனலரசு முகம் கடுக்க அமர்ந்திருந்தார் சகிக்க முடியாத பாவனையுடன்.
அந்த வீட்டில் அவர் சற்று தன்மையுடன் பேசிய ஒரே ஆள் என்றால் அது ஷோபா மட்டுமே. அவரிடத்தில் தான் எதுவும் பேசுவதும், கேட்பதற்கு பதில் சொல்வதும்.
கமலா சென்று பேசினால் கூட பெரிதாய் எந்த பதிலும் வாயை திறந்து சொல்லிவிட மாட்டார்.
முகத்தை உர்ரென்று வைத்துக்க்ண்டு தலையசைப்பு மட்டுமே. ஆமாம், இல்லை இதுதான். அது இளங்கோவை கடுப்பேற்ற,
“சும்மா பேசுங்க மாப்பிள்ளை. நாங்க எதுவும் நினைச்சுக்க மாட்டோம்…” என கிண்டலாக வேண்டுமென்றே வெறுப்பேற்றினார்.
“ஷோபா சொல்லி வைம்மா…” என சொல்லி கோபத்துடன் உள்ளே சென்றுவிட ஷோபா இளங்கோவை பாவமாய் பார்த்தார்.
“ஏங்க?…” என கேட்க,
“ஏன் வாயை திறந்து பதில் சொன்னா முத்து உதிர்ந்திடுமாக்கும்?…”
“அதுக்கு இப்படியா? இப்பத்தான் வந்திருக்கார். இன்னும் கல்யாணம் வேற இருக்குது. தேவை இல்லாம பிரச்சனையை நாமளே கிளப்ப வேண்டாம். சும்மா இருங்க. பாருங்க அத்தை முகமே மாறிச்சு…” என கமலாவை சுட்டி காட்ட அவர் அப்படித்தான் நின்றிருந்தார்.
“ம்மா, விடுங்க. இனி பேசலை. இப்படி இருந்து உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. வேதாவை கவனிங்க…” என்று இளங்கோ சொல்ல,
வந்ததில் இருந்து வேதாவின் முகத்தையே பார்த்து பார்த்து பெற்றோர்கள் மருகிக்கொண்டு இருந்தார்கள். முகத்தில் சிரிப்பிருந்தாலும் கண்களை அது எட்டவில்லை.
நிமிடத்திற்கொருமுறை வேதாவை ஏதாவது பேசி திசைதிருப்பிக்கொண்டே தான் இருந்தார்கள்.
முன்பு போல கணீர் பேச்சு இல்லை. பேசினாலும் மிக மெல்லிய குரலில் தான். வேண்டுமென்று இல்லை, ஆனால் அவருக்கு அப்படித்தான் பேசவும் வந்தது.
பெற்றோர்கள் இருவரும் தன்னை கண்டு கவலையுடனே இருக்க அவரை அங்கேயே இருக்கவிட வேண்டாம் என்று சம்பந்தம் இளங்கோவிடம் சொல்லி தோப்பிற்கு அழைத்து செல்ல சொன்னார்.
“இங்கயே இருந்தா இவ மனசும் மாறாது. முகமும் தெளியாது. என்னவோ என் பொண்ணை இப்படி பார்க்க நெஞ்சை அறுக்குது இளங்கோ…” என்றார் சம்பந்தம்.
“சரியாகிடும்ப்பா. அப்பனும், மகனும் கொஞ்சமாவா பேசிருக்காங்க. அவ இவ்வளோ திடமா இருக்கறதே பெருசு. சரி நான் நீங்க சொன்ன மாதிரி தோப்புக்கு கூட்டிட்டு போறேன். முகிலனை பார்த்தாலாச்சும் தெளிவாகட்டும்…” என சொல்ல ஓவியாவும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.
அவனே ஏதாவது முக்கிய விஷயமாக பேச வந்தால் சொல்லும் பதிலை சொல்லி முடித்துக்கொள்வாள்.
அத்தனை கோபம் அவன் மீது. வீட்டில் நடக்கும் களேபரங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும்.
தெரிந்தும் தன்னை தவிக்கவிட்டு அவனுமல்லவா வேடிக்கை பார்த்தான் என்பதில் இருந்து அவள் இறங்கவில்லை.
முகிலனும் முதலில் சொல்லி பார்த்துவிட்டு விட்டுவிட்டான். தன்னிடம் வருவாள் தானே? பார்த்துக்கொள்ளலாம் என்று.
இருவருக்கிடையில் சத்தமில்லாத ஊடல் உறவாடிக்கொண்டிருக்க இப்பொழுது தோப்பிற்கு என்றதுமே ஓவியாவிற்கு மனது பரபரத்தது அவனை காண்பதற்கு.
திருமணம் பேசிய பின்னர் அவன் சென்னை வரவில்லை. பார்த்தும் மாதங்களாகிற்று என்பதால் இப்போது பார்க்க வேண்டும் போல இருந்தது.
ஆனாலும் ஒரு வீம்பு, அவனே தன்னை பார்க்க நினைக்கவில்லையே என மனதிற்குள் முறுக்கிக்கொண்டாள்.
இங்கே தாங்கள் வருகிறோம் என்றதும் முதலில் அனரலரசு மறுத்துவிட்டார் சம்பந்தத்திடம்.
“இங்க பாருங்க, பொண்ணையும் அவனையும் ஒரே வீட்டுல எல்லாம் வச்சிருக்க முடியாது. அதான் எல்லாம் உங்க இஷ்டத்துக்கு செய்யறீங்களே? இதையும் அப்படியே செய்யனும்னு நினைக்காதீங்க. நாங்க முதல்நாள் வந்துக்கறோம்…” என சொல்ல,
“அதெல்லாம் இல்லை மாப்பிள்ளை. முகிலன் தோப்பு வீட்டுல தான் தங்கிப்பான். இங்க வரமாட்டான்…” சம்பந்தம் உறுதி கொடுத்த பின்பு தான் அனலரசு கிளம்புவதற்கே சம்மதித்தார்.
வேதா கூட தோப்பில் எப்படி புதுமாப்பிள்ளை தங்கலாம் என மறுத்து சம்பந்தத்திடம் பேச,
“நம்ம தோப்புலையே சாமி இருக்கு தானேம்மா. மாலைக்கழுத்துன்னு நீ பயப்படறது புரியுது. ஆனா ஒன்னும் பிரச்சனை இல்லை. அதோட அவனுக்கு வேலைகளும் இருக்கே அங்க. அவன் நாம சொன்னாலும் கேட்க மாட்டான்…” என சொல்லி மகளை வரவழைத்தார்.
வந்தும் வேதா அப்படியே இருக்க வருபவர்களும் வேதாவின் முகத்தையே உற்று பார்க்க மனமாற்றத்திற்காக அங்கே அழைத்து செல்ல சொல்லிவிட்டார்.
“என்னம்மா? உனக்கும் தோப்புக்கு போகனுமா?…” என ஓவியாவிடம் கேட்க,
“நான் ஏன் போறேன்? அதெல்லாம் வேண்டாம்…” என்று சொன்னலும் கண்கள் பளபளத்தது ஆசையில்.
ஆனால் செல்ல முடியாதே? தானே சரி என்றாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என தெரியும். அதனால் மறுத்துவிட்டாள்.
“சரி நீ போய் வேதாவை அங்க விட்டுட்டு வா…” என்றார் மகனிடம்.
“திரும்ப கூட்டிட்டு வரனுமே பா. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு கூட்டிட்டு வரேன்…”
“இங்க வேலை கிடக்குதுய்யா. சாயங்காலம் முகிலனே அனுப்பி வைப்பான்…” என்றதும் சரி என இளங்கோவும் கிளம்பிவிட்டார்.
“கூட மருமகளை அனுப்பிருக்கலாம்ல…” கமலா கூட கேட்டார்.
“இங்க உன் மருமகன் பேசற ஒரே ஆளு ஷோபா தான். அங்க உன் மக மனசு விட்டு பேசற ஆளு உன் பேரன் தான். தனியா விடு. முகிலன் பார்த்துப்பான்…” என்று சொல்லி எழுந்து உள்ளே வந்தார்.
ஜன்னலின் வழியே இதை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார் அனலரசு. ஒன்றும் செய்யமுடியவில்லை.
இளங்கோ போனை எடுத்து காதில் வைத்தால் கூட அந்த அதிகாரிக்கு தான் பேசுகிறாரோ என நினைத்தார்.
அதனாலேயே வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டிய நிலைமை. தனது கோபத்தை எல்லாம் முகத்திலேயே காண்பித்துக்கொண்டு வலம் வந்தார் அவ்வீட்டில்.
தன்னால் முடிந்தது அத்தனை பேரையும் முறைப்பில் அடக்கி வைப்பது ஒன்றே. அதை செய்ய முயன்றுகொண்டிருந்தார்.
ஆனால் அதை எல்லாம் கவனிக்க அங்கே யாருக்கு நேரம்? பம்பரமென தான் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அனலரசு ஒரு வேலையும் செய்யவில்லை.
வீடே திருவிழா கோலம் தான். ஊரே ஆர்ப்பாட்டத்துடன் கூடிவிட்டனர் திருமணத்திற்கு.
அனலரசுவின் சொந்தங்கள் சிலர் திருமணத்தின் முந்தைய நாள் வந்து இறங்கினார்கள்.
திருமணமும் வெகு சிறப்பாக நடந்தேறியது. முறைத்துக்கொண்டே திரிந்த அனலரசுவை போனை காட்டியே இளங்கோ எல்லா சம்பிரதாயங்களையும் செய்ய வைத்தார்.
“மேடம் எங்க வந்திட்டிருக்கீங்க? நீங்க வந்துட்டீங்களா? இப்ப வந்துருவீங்களா? வாங்க வாங்க…” என ஒரே டயலாக்கை சொல்லி சொல்லியே அனலரசுவை மேடையை விட்டு நகரவிடவில்லை.
மகளுக்கு திருமணம். ஆனால் கொஞ்சமும் முகத்தில் அந்த சந்தோஷமில்லாத மனிதரை வெறுமையுடன் பார்த்தார் வேதா.
திருமணம் முடிந்ததும் ஊருக்கு கிளம்புகிறேன் என்றவரை நிறுத்தி வைத்தது ஷோபா தான்.
கோவிலுக்கு செல்ல வேண்டும் இருந்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு போகலாம் என சொல்லி கோவில் வரை அழைத்து வந்துவிட்டவரின் வேண்டுதலை தெரிந்ததும் ஒரு ஆட்டம் ஆடினார் அனலரசு.
“என்னது மொட்டையா? யாரை கேட்டு இந்த வேண்டுதல் வச்ச நீ?…” என ஷோபாவை மிரட்டலாய் பார்க்க அதற்கு மேல் முடிந்தால் தானே?
கோவிலில் அனலரசுவிற்கு மொட்டையும் போடப்பட்டு அலகு குத்தப்பட்டு வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.