திருமணம் முடிந்த பின்னர் தான் வேதாவின் முகத்தில் அத்தனை நிம்மதி. மனதின் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது அப்பட்டமாய்.
முகிலனின் கையை கையை பிடித்துக்கொண்டு மகளையும் அணைப்பில் நிறுத்தி நிறைவான ஒரு புன்னகை புகைப்படமாய் பதிவாகியது.
ஒவ்வொரு நிகழ்வையும் பார்வையாளராய் அனலரசு பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
தந்தையாய் மகளின் வாழ்க்கை அடுத்த நிலைக்கு செல்வதை கண்டு நெகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கொஞ்சமும் நெகிழ்வற்று பார்த்துக்கொண்டு இருந்தார்.
மனது மகனுக்கடுத்து மகளின் விஷயத்திலும் தான் தோற்றுவிட்டதாகவே எண்ணியது.
எங்கே எவ்விடத்தில் இத்தகைய மனப்பான்மை தன்னில் முளைத்தது என்று கூட உணராத வறட்டு பிடிவாதத்தில் வெறித்து நின்றார்.
தாலிகட்டி சடங்குகள் முடியும் வரை இளங்கோ அவ்வப்போது போனில் பேசிக்கொண்டே இருந்தார் தான்.
ஆனால் கடைசி வரையிலும் அந்த அதிகாரி வரவில்லை. போனில் மட்டுமே பேசினார்.
“உங்க வீட்டுக்கு வந்திட்டிருந்த வழியில தான் இந்த ஊர் ஸ்டேஷன்ல ஒரு பிரச்சனை. நான் அங்க போய்ட்டிருக்கேன். அதனால் முடிச்சுட்டு எப்ப வருவேன்னு தெரியாது. மறுவீட்டுக்கு வரும் போது அவசியம் வரனும்…” என சொல்லி வைத்துவிட்டார்.
ஏமாற்றம், ஆத்திரம், கோவம், இயலாமை என அதனையும் அவரை ஆட்டுவிக்க அங்கிருந்து கிளம்புவதாக சொல்லி தன்னுடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தார் மணமக்கள் வீடு வந்து சேர்ந்ததும்.
“என்னண்ணே, ஏன் இப்படி பன்றீங்க? எல்லாரும் கேள்வி கேட்பாங்க. நீங்க இங்க இருங்க. எனக்காக இங்க இருங்க…” என சொல்ல,
“இல்லம்மா, அதெல்லாம் முடியாது. அதான் நினைச்சதை சாதிச்சிட்டீங்க தானே?…”
“என்ன வெறுப்பு ண்ணே எங்க மேல? போன வருஷம் வரைக்கும் இனிச்ச உறவு இப்ப கசக்குதுன்னு சொல்றது எந்தவிதத்துல நியாயம்?…” என்று ஷோபா கேட்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. போன வருஷம் மாதிரியா இந்த வீட்டு மனுஷங்க இருக்காங்க? மதிப்பில்லாத இடத்துல எனக்கு என்ன வேலை?…”
“அப்படியெல்லாம் இல்லை. யாருமே உங்களை மதிக்காம இல்லை. உங்களுக்கு ஏன் அப்படி தோணுது?…” என்று கண்கலங்கி சொல்ல அமைதியாக நின்றார்.
அவருக்கே தெரியவில்லை தனக்கேன் இப்படி தோன்றுகிறது என்று. அந்த வீட்டின் முடிசூடாத ராஜாவாக தான் அனுபவித்தவை என்ன?
இப்போது முகிலன் என்ற ஒருவனின் நிமிர்வு அத்தனைபேரையும் தன்னை கேலிக்குரியதாய் பார்க்கவைத்துவிட்டதே?
தன்னிடத்தின் தவறும், தன் பார்வையின் மாறுபாடும் அவரை யோசிக்கவிடவில்லை. தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என தன் நினைப்பு மட்டுமே சரி என்று இருந்தார்.
“வேதாவை பாருங்க, இப்பத்தான் ஒரு நிம்மதியா இருக்காங்க ஓவி பாவமில்லையா? நீங்க கிளம்பினா எல்லாரும் அவளை தானே கேட்பாங்க…”
“கேட்கட்டும், எல்லாம் இங்க என்னை கேட்டா நடக்குது?…”
“உங்களை கேட்காம இங்க எதுவும் நடக்காதுண்ணே. அப்பறம் இன்னும் ரெண்டு நாள்ல கோவிலுக்கு போகனும். வேண்டுதல் ஒன்னு பாக்கி இருக்குது…”
“வேண்டுதலா? அதுக்கு நான் எதுக்கு இருக்கனும்?…”
“நம்ம வீட்டுல நீங்க இல்லாம எந்த காரியம் நடந்திருக்குது? நீங்க கண்டிப்பா இருக்கனும் ண்ணே…” என்றதும் ஏதோ ஒருவகையில் அது அனலரசுவை திருப்தி படுத்தியது.
“ஹ்ம்ம், என்னவோ சொல்ற? பாப்போம். இந்த வீட்டுல நீ ஒருத்தி தான் மரியாதை தெரிஞ்ச ஆளு. யாருக்கு என்ன மதிப்பு குடுக்கனும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு….” என்றவர்,
“பாரு நான் பெத்ததும், கட்டிக்கிட்டதும் என்னை என்னன்னு கூட பார்க்கலை…”
“அப்படி எல்லாம் இல்லைண்ணே. வேதா எங்கட்ட சொல்லிருக்கா. உங்களை கவனிச்சுக்க சொல்லி. அப்பப்ப கேட்டுட்டே இருப்பா சாப்ட்டீங்களா என்ன செய்யறீங்கன்னு…” என்றதுமே அனலரசுவின் கண்களில் ஒரு மிதப்பு.
“ஆனா வாயை திறந்து பேசாம திமிர் தானே? நானா ஒன்னும் பேச போறதில்லை…”
“அதெல்லாம் பேசுவாண்ணே. இதுவரைக்கும் ஓவி அங்க உங்க கூட இருந்தா. இனி ஓவி இங்க தான இருப்பா. அங்க நீங்க மட்டும் தானே? பேசித்தான் ஆகனும்…” என்று சொல்லவும் தான் நிதர்சனம் உரைத்தது.
‘ஆமாம், இனி என் பெண் என்னுடன் இருக்க போவதில்லை’ உள்ளுக்குள் என்னவோ செய்தது. மனது பிசைந்தது. அமைதியாக மகளை பார்த்தார்.
மணப்பெண்ணின் அலங்காரத்துடன் விருந்தினர்களுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க உடன் முகிலன் பதில் சொல்லிக்கொண்டு நின்றான்.
இருவரின் பொருத்தமும் மனதில் ஒட்டிக்கொண்டது. பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே தான் இருந்தார்.
“அண்ணே, நீங்க உட்காருங்க. வேதா கூப்பிடறா. உங்களுக்கு தான் எதாச்சும் குடுக்க சொல்லிருப்பா…” என ஷோபா சொல்லி செல்ல தலையசைத்தவரின் முகத்தில் சிறு வெளிச்சம்.
உள்ளே வந்து கட்டிலில் சாய்ந்துகொண்டார் அனலரசு. வேறு எதையும் யோசிக்கவில்லை. உறக்கம் வர கண்களை மூடிக்கொண்டார்.
கிட்சனிற்குள் ஷோபா நுழைவதை கண்டு முகிலனும் செல்ல அவனை திரும்பி பார்த்து சிரித்தவர் சாத்துக்குடியை பிழிய ஆரம்பித்தார்.
“என்னம்மா கிளம்பின மாமனார் அப்படியே இருந்துட்டார். இந்த நேரத்துக்கு வண்டி எல்லையை தாண்டிருக்கும்ன்னு நினைச்சேன்….”
“சும்மா இரு முகில். நீ வேற…” என அவனின் கையில் அடித்தார்.
“அப்பறம் அத்தை தான் இந்த ஜூஸை குடிக்க குடுக்க சொன்னாங்களா?…” அத்தனை நக்கல் முகில் முகத்தில்.
“கேட்டுட்டியா?…” அசடு வழிந்தார் ஷோபா.
“லைட்டா…” என்றவன்,
“உங்களை கூப்பிட வந்தேன். பேசிட்டிருந்தது கேட்டுச்சு. அப்படியே திரும்பி போய்ட்டேன்…”
“வேற என்ன செய்ய முகிலா? அவரும் பாவம் தானே? நம்மால முடிஞ்சது அவர் மனசுக்கு கொஞ்சம் அமைதி கிடைக்கும்…”
“ஏன் வீம்பு பிடிக்கனும்? ஏன் அமைதிக்கு தவிக்கனும்? கொஞ்ச பேச்சா பேசினார்…”
“அதுக்கு வருஷம் முழுக்க பேசாம இருந்திருவாங்களா? வேதாவும் எப்போ பழைய மாதிரி ஆகறதாம்?…”
“ஹ்ம்ம் சரிதான். அதுக்கு அத்தை மட்டும் இறங்கி போகனுமா என்ன? ஏன் இவர் யார்க்கிட்டையாச்சும் இப்படி கேட்டு விட்டாரா? இல்லையே?…” என சொல்ல ஷோபா முகம் வாடியது.
“ப்ச், சும்மா இப்படி வச்சுக்காதீங்க. இதையும் யோசிக்கனும்…”
“இப்படியே மாத்தி மாத்தி வீம்பு பிடிச்சுட்டே இருந்தா ஆளுக்கொரு திசையா இருக்க வேண்டியது தான். இப்ப என்ன? அதான் வேதா உங்களை விசாரிச்சான்னு சொன்னான்னதும் அவருக்கு சந்தோஷமா இருந்துச்சுல. அப்பவே அச்சோ நாம கேட்கலையேன்னு தோணும்ல…”
“ஆமா ஏன் ஓவிட்ட சகஜமா பேசறதில்லை…” என கேட்கவும் முகிலனும் முகத்தில் கூடுதல் ஒளிர்வு.
“இதையெல்லாம் உங்களை யார் நோட் பண்ண சொன்னா?…”
“உங்க ரெண்டுபேர் முகத்தை பார்த்தாலே தெரியுதே?…”
“ஓஹ்…” என்றவன தலையை கோதிக்கொள்ள ஞாபகம் வந்தவனாக,
“ம்மா அந்த வேண்டுதல்…”
“ஷ் சத்தமா பேசாத. வழக்கம் போல வேண்டுதல் உனக்குன்னு நினைச்சுட்டு இருக்காங்க. கோவிலுக்கு போய் சொல்லிக்குவோம்…” என்று சொல்லி தம்ளரை எடுத்துக்கொண்டு சென்றதும் தானும் ஹாலுக்கு வந்தான்.
நேரம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனை பேரும் கலைந்து சென்றார்கள்.
அக்கம்பக்கத்து உறவுகளும் இரவு உணவை முடித்துவிட்டு செல்ல முகில் மாடிக்கு சென்றதும் சடங்கிற்கு ஓவியாவை தயார் செய்து மாடிக்கு அனுப்பிவிட்டு அனைவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள்.
வேலைகள் அதிகம், அந்த களைப்பு வேறு. அதனால் இலகுவாக அமர்ந்திருக்க மேலே சென்ற ஓவியாவுடன் சிறிது நேரத்தில் பைக் சாவியுடன் கீழே வந்தான் முகிலன்.
“என்னடா? என்ன கீழே வந்து நிக்கிற?…” இளங்கோ கேட்கவும் தான் மற்றவர்களும் நிமிர்ந்து பார்த்தனர்.
அனலரசு தூங்குகிறேன் என சென்றுவிட்டிருக்க அவரை தவிர மற்ற அனைவருமே இருந்தார்கள் வீட்டில்.
“முகிலா? என்னாச்சு?…” என ஷோபா அருகே வர,
“இங்க தூக்கம் வரலைம்மா. அதான் தோப்பு வீட்டுக்கு போகலாம்ன்னு…” என சொல்ல,
“என்ன விளையாடுறியா? இந்த நேரத்துல அதுவும் இன்னைக்கு யாராவது அப்படி கிளம்புவாங்களா? அதுவும் அதுவும்…” என கமலா திணற ஓவியாவின் முகத்தில் குறுஞ்சிரிப்பு.
“ஏன் கிளம்பினா என்ன? என்ன? எனக்கு அங்க போகனும். ஓவியாவும் தான்…” என அவளை பார்க்க அவள் தலையை அசைப்பேனா என்பதை போல நின்றாள்.
“சொல்லு…” என்றவனை பார்த்து இம்மியும் வாயை திறக்கவில்லை.
“மேல சரின்னு சொன்ன இப்ப இங்க வந்து பேசாம நிக்கிற? சொல்லு ஓவி…” என்றான் அவளை நெருங்கி கிசுகிசுப்பாக.
ம்ஹூம், லேசாய் தோளை குலுக்கிக்கொண்டவள் அவனை விட்டு கமலா பாட்டியை பாவம் போல பார்த்தாள்.
“அடிப்பாவி, என்னவோ நான் உன்னை மிரட்டி கூட்டிட்டு போற மாதிரி அங்க லுக் விடற?…” என வாயில் கை வைத்தான் முகிலன்.
“அங்க என்னடா பேச்சு? ஏன் அவளை முறைக்கிற?…” கமலா பாட்டி கேட்க,
“பாட்டி இவ தான்…”
“என்ன இவ தான்? அதெல்லாம் போக கூடாது. பேசாம மேல போங்க…” என அதட்ட சம்பந்தத்திற்கு சிரிப்பு முகிலனின் முகம் போன போக்கில்.
“பாட்டி நீ இரு…” என்றவன்,
“மேல என்னவோ சரின்னு சொல்லிட்டு இங்க வந்து மாட்டி விடுறியா? இப்ப நீ வர போறியா இல்லையா?…” என அவன் இப்போது மிரட்டவே செய்ய,
“அம்மாச்சி…” என்றாள் ஓவியா கமலாவிடம்.
“அதெல்லாம் அவளும் வர மாட்டா நீயும் போக கூடாது…”
“முதல்ல எல்லாரும் உள்ள போங்க. கமலா பேசிப்பா…” என மகன், மகள், மருமகளை உள்ளே அனுப்பிய சம்பந்தம் அவர்கள் சென்றதும்,
அவனின் ஆசைகளில் இதுவும் ஒன்று. அவனின் முதல் நாள் இரவு எங்கே என்று எப்போதோ முடிவெடுத்திருக்க இன்றானால் இத்தனைபேர் மத்தியில் தன்னை நிறுத்திவிட்டாளே என ஒருபக்கம் வெக்கமாகவும் இருக்க இன்னொரு பக்கம் கோபமும் வந்தது.
இதென்ன விளையாட்டு விஷயமா பொதுவில் பேச என பிடிக்காமல் போனது ஓவியாவின் செய்கை.