“என்னடா என்ன நீபாட்டுக்கு தனியா கிளம்பிட்ட?…” என கமலா கேட்க,
“வேற என்ன பண்ண சொல்ற? அதான் உன் பேத்திக்கும் வர இஷ்டமில்லை. உனக்கும் அனுப்ப மனசில்லை…”
“என்னவோ உங்களை பிரிச்சு வச்ச மாதிரில பேசுற?…”
“மாதிரிலாம் இல்லை. அதுவே தான். நீயே வச்சுக்கோ உன் பேத்தியை. ரெண்டுபேரும் பல்லாங்குழி விளையாடுங்க. என்னை விடுங்க. நான் காட்டுக்கே போறேன்…” என சொல்லி கிளம்ப,
“அட நில்லுய்யா…” என்று கமலா சொல்லும் முன் அவன் பைக்கை ஸ்டார்ட் செய்திருக்க ஓடி சென்று ஏறிக்கொண்டாள் ஓவியா.
“ஒழுங்கா இறங்கிரு. நீ ஒன்னும் என்னோட வர தேவை இல்லை…” என அவன் கடுப்படிக்க பதில் சொல்லாமல் அவனின் இடையை கை கொண்டு அணைவுடன் பிடித்துக்கொண்டாள்.
“போன்றேன்ல. எல்லார் முன்னாடியும் என்னை எப்படி பார்க்க வச்சிட்ட?…”
“என்ன பார்த்தாங்க? ஒண்ணுமில்லை…”
“அதை நீ சொல்லாத. இறங்கு முதல்ல…”
“முடியாது…”
“இப்படிதான் மேல ஒன்னு சொன்ன. கீழ வரவும் எதுவும் சொல்லாம சாதிச்ச…”
“ஆமா, அப்படித்தான். என்னவாம்?…”
“ஓவி…”
“நான் அப்படித்தான். எனக்கு கோவம். இப்பவும் அதே கோவம் தான். அதான் அப்படி செஞ்சேன்…”
“அதுக்கு என்கிட்டே சண்டை போட்டிருக்கலாம். நான் தோப்புக்கு போலாம்ன்னு சொல்லும் போது நோ சொல்லிருக்கலாம். அதை விட்டுட்டு..”
“அதான் சொன்னேனே. எனக்கு கோவம்ன்னு…”
“இப்போ மட்டும் ஏன் வர?…”
“இப்பவும் கோவம் தான். ஆனாலும் வருவேன்…”
“ஆனா அங்க நீ எதுவும் சாதிக்க முடியாது…” என்றான் ரகசிய சிரிப்புடன்.
“இதுதான் ஆகாது. நான் கிளம்பும் போதே சொன்னேன். இங்க என்கிட்டே எதையும் சாதிக்க முடியாதுன்னு…” என்றவன் தன் அணைப்பிற்கு அவளை முழுவதும் கொண்டு வந்திருந்தான்.
“கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னீங்க. இப்போ மட்டும்…”
“இப்போ மட்டும்…” என்றவனின் சிரிப்பு அவளை பேசவிடாமல் செய்ய,
“அது கல்யாணத்துக்கு முன்னாடி. இப்போ நீ என்னை நிறுத்தவும் முடியாது. தள்ளவும் முடியாது. இந்த வனமுகிலன் வேற ஓவி…” என்றவன் அவளிடம் தன் மாற்றங்களை காண்பிக்க அவள் தான் திணறி போனாள்.
இறுக்கங்கள் கூடிக்கொண்டே செல்ல மூச்சுக்கு தவித்தவளுக்குள் அவனின் சுவாசம் இரவலாய் சென்று அவளுள்ளம் நுழைந்து நுரையீரல் நிறைத்தது.
உண்மை தான். அவன் பொய் சொல்லவில்லை. இந்த முகிலன் முற்றிலும் வேறு ஒருவன்.
அத்தனை அடிகள் அவனுக்கு. அசாத்தியமாய் தாங்கினான் அவள் தந்த பரிசுகளை.
விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது அவர்கள் விழிக்க. கொஞ்சமும் பதட்டமில்லாத ஒரு காலை. நிச்சயம் வீட்டில் என்றால் வேறுவிதமாய் இருந்திருக்கும்.
இங்கே நிதானமாய், சங்கடமின்றி எழுந்து குளித்து வர அவளுக்கான உடையை அவன் ஏற்கனவே அங்கே வைத்திருந்தான். எடுத்து உடுத்திக்கொண்டாள்.
வெளியே வர வைரவன் வேகமாய் பாய்ந்து வந்தான் அவளை நோக்கி. ஆனால் அவனை காண எங்கே அவள் கண்கள் சென்றது.
அந்த தோட்ட வீட்டை சுற்றிலும் எவ்வளவு காலி இடங்கள் இருந்ததோ அத்தனையும் சோலையாக மாறி இருந்தது.
சின்னஞ்சிறிய வனத்தையே உண்டு பண்ணியிருந்தான் முகிலன். சுற்றிலும் கொடிகளும், பூ செடிகளும் என தோப்பிற்கு நடுவே ஒரு பிருந்தாவனம்.
ஆசையாய் அவற்றை சுற்றிலும் பார்வையிட்டு நெருங்க அவள் மீது பாய்ந்தேவிட்டான் வைரா.
“அச்சோ, வைரா என்ன இது?…” என அவனை பிடித்து ஒரு நிலையில் நிறுத்த முயல முடியாமல் போனது.
அத்தனை நாட்கள் கழித்து அவளை கண்டத்தில் சுற்றி சுற்றி வந்து அவள் மீது தாவியது.
“வைரா…” என்றதும் திரும்பி முகிலனை பார்த்துவிட்டு அவனை நோக்கி ஓடி பின் மீண்டும் ஓவியாவை நோக்கி வந்து என வைரவனை கையில் பிடிக்கமுடியவில்லை.
சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு மதிய உணவின் பொழுது வீடு வந்து சேர்ந்தார்கள்.
உள்ளே நுழையும் பொழுதே அனலரசு கத்த ஆரம்பித்திருந்தார் நடு வீட்டில் வைத்து.
“என்னவாம்?…” என்றான் அவரிடத்தில் நேரடியாக.
“என்ன என்னவாம்? கொஞ்சமும் பொறுப்பிருக்கறவன் செய்யற வேலையா இது?…” என்று முகிலனிடம் எகிற அவரை பார்த்துக்கொண்டே ஓவியாவின் பக்கம் லேசாய் குனிந்தவன்,
“நேத்து பொறுப்பில்லாமையா நடந்துக்கிட்டேன்? ஏன் இந்த குதி குதிக்கிறார்?…”
“இரு உங்கப்பாட்டையே கேட்டு கிளியர் பன்றேன்…” என்று அனலரசுவை பார்க்க,
இனிமே இப்படி பண்ண கூடாதுன்னு சொல்லி வைம்மா…” என வேகமாய் சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டார் அனலரசு.
நடுவீட்டில் அத்தனைபேர் முன்னிலையில் முகிலன் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று ஓடியே வந்துவிட்டார்.
பல்லை கடித்துகொண்டு அங்கிருக்க மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்றதும் இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் பறந்தது.
முகிலனுக்கு மொட்டை என்று நினைத்திருக்க இரு மனைகள் போடப்பட்டு இருக்க யாருக்கும் யாருக்குமோ என அவர் நினைத்திருக்க ஒன்றில் இளங்கோ அமர்ந்தார்.
மற்றொன்றில் முகிலன் அமருவான் என அசட்டையாக இருக்க ஷோபா அவரருகே வந்தார்.
“என்னம்மா?…”
“அண்ணே நீங்க தான் உட்காரனும்…”
“என்னது?…”
“ஆமா வேண்டுதல் உங்களுக்கும் சேர்த்து தான்…”
“என்ன? எனக்கு மொட்டையடிக்கறேன்னு வேண்டினியா? அதான் குடும்பமா சேர்ந்து மொட்டையை அடிச்சுட்டீங்களே? இன்னும் அடிக்க என்ன இருக்கு? இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்….”
அவர் செய்த அலப்பறையில் மீண்டும் பெரிய பஞ்சாயத்து ஆகவிருக்கிறது என அனைவரும் பார்க்க,
“வேதா தான் நேர்ந்துக்க அன்னைக்கு சொன்னா. அதான் உடனே செஞ்சுட்டேன். சாமி காரியம் ண்ணே…” என்று பாவம் போல சொல்ல வேதாவை திரும்பி பார்த்தார் அனலரசு.
“உங்களுக்காக எவ்வளவு பன்றா. நீங்க இந்த ஒரு வேண்டுதலை வேதாவுக்காக நிறைவேத்த மாட்டீங்களா?…” ஷோபா கேட்டதும் இப்படி தன்னை கிடுக்கிப்பிடி போடுகிறாளே என முறைக்கவும் முடியாமல் மூச்சுவாங்க நின்றவர்,
“சரி மொட்டை தானே?…” என சொல்லி மனையில் சென்று அமர்ந்துகொள்ள மொட்டைக்கு தண்ணீர் தெளிக்கப்பட்டது அவரின் தலையில்.
மொட்டை போட்டு முடிக்கும் வரை மௌனமாக நின்ற ஷோபா முகிலனை பயப்பார்வை பார்க்க சிரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தவன் தாயை பார்த்து கண்ணடித்தான் அடுத்து என்பதாக.
குளித்து முடித்து சாமி சந்நிதானத்தில் வந்து நின்றதும் அடுத்து அலகு குத்தப்படவேண்டிய வேண்டுதல்.
“இப்படி உட்காருங்க…” என சொல்ல அவர்களும் அமர மற்றவர்களும் சுற்றி அமர்ந்தனர்.
“நெக்ஸ்ட்…” என்றான் முகிலன்.
‘என்ன சொல்றான்? என புரியாமல் அனலரசு மருமகனை பார்க்க அவன் ஷோபாவை பார்த்தான்.
“அடுத்து அப்படியே காதும் குத்தனும்…” என்றார் ஷோபா பயந்து கொண்டே.
“என்னது காதா? நான் என்ன சின்ன பையனா? காது குத்த?…” என்று கொந்தளித்து கேட்க,
“அதானே காது எல்லாம் எப்பவோ குத்திருப்பாங்க. கொஞ்சம் இறக்கி அலகு குத்திருங்க…” என்றவன் அனலரசு அடுத்து பேசும் முன்,
“என்னத்தை, அதான உன் வேண்டுதல்?…” என்று சொல்ல,
“ஆமா, வேண்டிருந்தேன்…” என்றார் வேதா சத்தமாக.
மனையை விட்டு எழுந்துகொள்ள இருந்த அனலரசு அத்தனை மாதங்களுக்கு பிறகான வேதாவின் கண்ணீர் குரலில் ஒரு நொடி மெய்மறந்து பார்க்க அசந்த அந்த நொடியில் சந்தனத்தை தொட்டு வைத்து அலகை இறக்கிவிட்டனர்.
ஆவென்ற சத்தத்துடன் கத்தவும் முடியாமல் விழிகள் வலியில் விரிய கண்கள் கலங்கி கண்ணீர் வந்துவிட்டது.
அடுத்து எங்கே மறுக்க? திரும்பி இளங்கோவை பார்க்க அவர் எதிர்பார்த்திருந்ததை போல அமர்ந்திருந்தார். மெல்ல சம்பந்தத்தின் கை பிடித்து எழுந்து நின்றதும்,
“பூ சட்டி மட்டும் இருந்தா பெர்பெக்ட்…” என்ற முகிலனை முடிந்தமட்டும் முறைக்க கண்ணீர் ததும்பி நின்றது அனலரசுவிற்கு.
“அண்ணே, அழுதுடாதீங்க. அப்படியே கன்னத்துல போட்டுக்கோங்க. இல்லைன்னா சாமி குத்தம் ஆகிரும்…” என்று கன்னத்தில் தட்டி காண்பிக்க பல்லை கடிக்கவும் முடியவில்லை.
‘கன்னத்துலையா? உன்னை நம்பி இங்க இருந்தேன்ல என்னை சொல்லனும்’ என மனதிற்குள் ஷோபாவை வாட்டி எடுத்துவிட்டார் அனலரசு.