கோவிலிலிருந்து வேண்டுதலை முடித்துக்கொண்டு வீடு வந்த பின்னும் அனலரசு யாரிடமும் பேசவில்லை.
இதில் முகிலன் அவ்வப்போது தன்னை பார்த்துக்கொண்டே இருந்தது வேறு எரிச்சலை கிளப்பியது அவருக்கு.
“எம்மா அவனை கிளம்பி போக சொல்லும்மா…” என்றே சொல்லிவிட்டார் ஷோபாவிடம்.
பாவம் அவருக்கு புரியத்தான் இல்லை. அத்தனை மெதுவாகவும், உதட்டை அசைக்காமலும் அனலரசு பேச இதில் தொண்டை வேறு கட்டியிருந்தது அவருக்கு.
“என்னண்ணே, எதாச்சும் கொண்டு வரவா? குளிர்ச்சியா ஜூஸ் குடிக்கிறீங்களா?…” என அப்பாவியாய் கேட்க வேதாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது இதை கண்டு.
“ஜூஸா? வெயில் அதிகமா இருக்கேன்னு தான் மடக்கு மடக்குக்குன்னு ஒரு கடையில சர்பத் வாங்கி குடிச்சேன். என்ன தண்ணில போட்டானுங்களோ பேசவும் முடியலை…” நொந்து வெந்துகொண்டிருந்தார்.
சூடாக குடித்தால் வாய்க்குள் எரிந்தது. இன்னும் ஜில்லென்று குடித்ததால் சேராமல் இருமல் பிடித்துக்கொண்டது.
தொண்டை கட்டிக்கொண்டு ‘வெறும் காத்து தான் வருது’ என்னும் விதமாய் அனலின் பேச்சு அதில் கரகரவென கலந்துவிட்டது.
“அண்ணி, அலகு குத்தினதுல கன்னத்துல காய்ஞ்சிருக்கும். நல்லா தண்ணியா கரைச்ச சந்தனம் வைங்க…” என சொல்லவும் வேகமாய் திரும்பி பார்த்தார் அனலரசு.
அவர் திரும்பி பார்த்ததும் வேதா வேலை இருப்பதை போல வேகமாய் எழுந்து சென்றுவிட்டார் அந்த இடத்தை விட்டு. முகம் சுருங்கி போனது அனலரசுவிற்கு. ஆனாலும் மனது எச்சரித்தது.
‘ரொம்ப நாள் கழிச்சு நேத்து சத்தமா இவ குரலை கேட்டதும் தான் கொஞ்சம் ஜெர்க் ஆனேன். அசந்த கேப்புல சொருகிட்டானுங்க. திரும்ப எடுக்கும் போதும்’ என நினைக்கவே மனதும் சேர்ந்து வலித்தது.
“அண்ணே…” என ஷோபா அழைக்க,
“ஏம்மா இன்னும் போலியா நீயி?…” என கடுப்புடன் பார்த்தார் அவரை.
“என்ன சொல்றீங்கன்னு சத்தமா சொல்லுங்கண்ணே. ஒண்ணுமே புரியலை…” என்றார்.
அலகை மீண்டும் வெளியே உருவிய நேரம் முகத்தை அசைக்க அதன் முனை உள்ளே கோடு கிழித்துவிட்டது அனலரசுவிற்கு.
சத்தமாக பேசவும் முடியாமல், வாயை திறந்தால் கன்னம் இரண்டிலும் வலியுடன் கூடிய கோபத்துடன் அவர் இருந்தார்.
“சொல்லுங்க, சொல்லுங்க…” என ஷோபா கேட்கவும் அனலரசு என்னவோ சொல்ல வர,
“ம்மா, இங்க அப்பாவுக்கும் என்ன வேணும்னு கேட்கலாம்…” என்றான் முகிலன். ஷோபா மகனை நோக்கி வந்தவர்,
“இருப்பா வரேன். அண்ணே கோவமா இருக்காரு. அவருக்கு கேட்கறேன்…”
“புண்ணியவதிக்கு நான் கோவமா இருக்கேன்ற வரைக்கும் புரியுது…” என முனங்கினார் அனலரசு.
“அப்பாவுக்கும் தான் எல்லா வேண்டுதலும் செஞ்சீங்க. அங்க கேளுங்க…” முகிலன் சொல்ல,
“அட ஏன் முகிலா? அதை அத்தை பார்த்துப்பாங்க. இங்க அண்ணே அப்படியா? என்கிட்டே மட்டும் தானே பேசறார்…” என்றார் ஷோபா.
“ஏம்மா? மொட்டையடிக்கிறதும் அலகு குத்துறதும் ஒண்ணா? போமா அங்கிட்டு…” என முகத்தை அசைத்து சொல்ல தொண்டைவேறு இறுக்கியது.
“அடுத்தவாட்டி பழகிரும்…”
“திரும்பவுமா?…” என கத்தி கோபத்தை காண்பிக்க முடியாமல் விருட்டென எழுந்து வாசலுக்கு சென்றார்.
அங்கே திண்ணையில் அமர, போவோர் வருவோரெல்லாம் வந்து விசாரித்துவிட்டு போக இருக்கமுடியாமல் ஐந்து நிமிடத்தில் மீண்டும் வீட்டிற்குள் வந்து அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“என்னம்மா, மாமா கோவமா இருக்காறேன்னு யோசிக்கிறீங்களா?…” என்று முகிலன் கேட்க,
“அதெல்லாம் இல்லை இரு வாரேன்…” என உள்ளே சென்ற ஷோபா இரண்டு தம்ளர்களுடன் வந்தார்.
“இந்தாங்க இதை குடிச்சு எது வாய்க்கு நல்லா இருக்குன்னு சொல்லுங்க…” என இளங்கோவிடம் நீட்ட எட்டி பார்த்தார்கள் ஓவியாவும், முகிலனும்.
ஒன்றில் பழச்சாறு இருக்க, இன்னொன்றில் மிளகு, மஞ்சள் போடப்பட்ட பனங்கற்கண்டு கலந்த பால் சூடாக இருந்தது.
“அதுக்கு நீங்க டெஸ்ட் பீஸ்…” முகிலனும் சேர்ந்து கிண்டல் பேசினான்.
“அட ரெண்டுபேரும் சும்மா இருங்க. நேத்து கோவில்ல இருந்து வந்து ஒண்ணுமே சாப்பிடலை அண்ணன். காலையிலையும் வெறும் கஞ்சி தான் கேட்டாங்க…” கவலையுடன் சொன்னார் ஷோபா.
“அலகு குத்தி உடனைக்குடனே எல்லாம் சரியாகற ஆளுங்களை பார்த்திருக்கோம். இவருக்கு என்னவோ இப்படி இருக்கு…” கமலா அலுப்புடன் கூற,
“ம்மா, அலகை திரும்ப எடுக்கும் போது ஒரு குதி குதிச்சுட்டு மூஞ்சியை திருப்பினார்ல. உள்ள இடிச்சிருக்கும். மனுஷன் சும்மாவே ஒண்ணுன்னா ஒம்பதுன்னுவாரு. இதுக்கு சொல்லியா தரனும்…” வேதா தாயிடம் பேச கமலா மகளை கையில் கிள்ளி வைத்தார்.
“வாயை குறைன்னா கேட்கிறதே இல்லை. கொஞ்சநாள் பேசாம இருந்த. இப்ப என்னன்னா…”
“பாட்டி…” என்று அதட்டினான் முகிலன்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேனாம்?…” கமலா பேரனை முறைத்துக்கொண்டு எழுந்து உள்ளே சென்றுவிட வேதாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சரி விடுங்க. ஷோபா உன் ரிசல்ட் என்ன?…” வேதாவிற்கு ஷோபாவின் முகம் பார்க்க பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.
வாய் மட்டும் சரியாக இருந்திருந்தால் அனலரசு பேச்சிற்கு ஷோபா ஆளை விடுங்க என்று போயிருப்பார்.
அனலரசு ஒன்று பேச, ஷோபா வேறு நினைத்து பேச என பார்க்க பார்க்க அத்தனைபேருக்கும் சிரிப்பை அடக்கத்தான் கஷ்டமாக இருந்தது.
“என்னங்க? எப்படி இருக்கு?…” என்றார் ஷோபா இளங்கோவிடம்.
“ஜூஸ் தான் நல்லா இருக்கு. பால் சூடா இருக்கா, இதமா இருந்தாலும் அதோட அங்க மிளகு காரம் லேசா எரியுது…”
“சரி நான் அண்ணாவுக்கு ஜூஸ் குடுத்தடறேன்…” என சொல்ல,
“ம்மா, சளி பிடிச்சிருக்கு. ஜூஸ் குடுத்தா இன்னும் தான் தொண்டை கட்டிக்கும்…” முகிலன் குழப்பிவிட்டான் வேதாவை.
“இதுதான் சாக்குன்னு நீ ரொம்ப பண்ணாத. அதெல்லாம் பார்த்துக்கலாம்…” என சொல்லிய ஷோபா எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு தம்ளர்களையும் எடுத்துக்கொண்டு அனலரசுவை பார்க்க செல்ல முகிலனும், ஓவியாவும் பின்னால் சென்று மறைந்து நின்றனர்.
“அண்ணே…” என்ற அழைப்பில் கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தவர் ஷோபாவின் குரலில் சலிப்புடன் எழுந்து அமர்ந்தார்.
“என்னம்மா?…” வாயசைத்து கையை நீட்டி கேட்க,
“உங்களுக்கு தான். மத்தியானம் சாப்பாடு லைட்டா ரெடி பன்றேன். இப்ப இந்த ஜூஸையும், பாலையும் குடிங்க…” என நீட்ட,
“ரெண்டுமா?…” என்றார் அதிர்ச்சியுடன்.
“இல்ல இல்ல. உங்க வாய்க்கு எது நல்லாருக்கோ. குடிச்சு பார்த்துட்டு எடுத்துக்கோங்க. பால் மிதமான சூட்டுல தான் இருக்கு…” என சொல்லவும் பாலை மட்டும் எடுத்துக்கொண்டார்.
ஜூஸ் வேண்டாம் என சைகையில் சொல்லவும் ஷோபா அங்கேயே நின்று பார்க்கவும்,
“என்ன…” என்றார் அனலரசு.
“இல்ல நீங்க குடிச்சுட்டா தம்ளரை கொண்டு போய்ருவேன்…” என நிற்கவும் எரிச்சலுடன் ஒரு மடக்கு குடித்தவர் ஆவேன கத்த,
“ஐயோ என்னாச்சு? என்னாச்சு?…” என்று ஷோபா பதற முகிலன், ஓவியாவை தொடர்ந்து மொத்த குடும்பமும் உள்ளே வந்துவிட்டது.
“என்னன்னு வாயை திறந்து சொல்லுங்கண்ணே…” ஷோபாவிற்கு அழுகையே வந்துவிடும் போல இருக்க,
“ம்மா, பதறாதீங்க. என்னன்னு பார்ப்போம்…” முகிலன் சொல்லும் பொழுதே எரிச்சல் தாங்காமல் ஜூஸை எடுத்து குடித்துவிட்டார் அனலரசு.
அதன் பின்னர் தான் சற்று பரவாயில்லை போல இருந்தது. நெஞ்சை தடவிய படி இருந்தவருக்கு உடனே வியர்த்துவிட,
“ஷோபா இந்த தேனை வாய்ல ஊத்திக்க சொல்லு…” என வேதா தரவும் ஷோபா அனலரசுவிடம் நீட்ட வேகமாய் வேண்டாம் என்றவருக்கு கண்கள் கலங்கிவிட்டது காரத்தில்.
“எவ்வளவு மிளகு போட்ட?…” இளங்கோ ஷோபாவிடம் கேட்டார்.