“சீக்கிரமே. முடிஞ்சா நாளைக்கு நல்ல நாள்ன்னா பூமி பூஜை போட்டுடலாம். அத்தையும் இருக்கும் போதே…”
“அத்தைக்காக எல்லாத்தையும் மாத்திக்குவீங்களோ?…”
“அத்தை மகளுக்காகாவும் மாத்தலாம். ஆனா எனக்கு என்ன லாபம்?…” என்றவனின் கிசுகிசுப்பில் அவனின் தோளில் ஒரு அடி போட்டாள்.
“இதுங்களுக்கு வேற வேலை இல்லை. வீட்டுக்குள்ள உக்கார்ந்தும் பேசாதுங்க. கிளம்பவும் செய்யாதுங்க. ரோட்டுல நின்னு வாயாடிக்கிட்டு…” என கமலா சத்தமாய் பேச,
“உங்களுக்கு என்ன இப்போ? அவங்க பேசிட்டு போனா என்னவாம்?…” இளங்கோ சத்தம் போட்டார்.
“ஏலே சுத்த கூறுகெட்டவன்டா நீ. இப்பத்தான் கல்யாணம் ஆகிருக்கு. இப்படி நின்னு சிரிக்க சிரிக்க பேசினா பாக்கறவங்க கண்ணை உறுத்தாது?…”
“நம்மளை யாரும்மா பார்த்து கண்ணு படப்போறா?…”
“பொல்லா கண்ணு மட்டும் பவர் இல்லைப்பா. நல்ல கண்ணுக்கும் பவர் தான். அதுவும் திருஷ்டி தான். அடடா எம்புள்ளை எம்புட்டு அழகுன்னு நினைச்சு பூரிச்சு போற தாயோட கண்ணு கூட பிள்ளைக்கு ஒட்டும் தான். எங்கப்பத்தா சொல்லும்…”
கமலா இளங்கோவிடம் விளக்கமாக பேசிக்கொண்டிருக்கே உள்ளே வந்தாள் ஓவியா.
“என்னம்மா அனுப்பியாச்சா?…” கமலா கிண்டலுடன் கேட்க,
“ஏன் காலையில நீங்களும் தான் தாத்தாவை நேரத்தோட காட்டுக்கு அனுப்புனீங்க. நான் கேட்டேனா?…” ஓவியாவும் பதிலுக்கு கிண்டலடிக்க,
“உனக்கு இப்ப வாய் அதிகம் தான். ஷோபா சொன்னப்போ கூட நம்பலை. இப்பத்தான தெரியுது…”
“ஏன் எனக்கு வாய் அதிகம்ன்னு நான் உங்ககிட்ட எனக்கு கல்யாணம் செய்ங்கனு கேட்டபோ தெரியலயாக்கும்?…” என கமலாவை இடித்தவள்,
“சரி சரி சமையல்க்கட்டுல என்ன நடக்குதுன்னு பார்ப்போம் வனாக…” என்று கமலாவை இழுக்காத குறையாய் நகர்துக்கொண்டு சென்றாள் ஓவியா.
முகிலன் சொல்லியதை போல மறுநாள் கிணறு வெட்டுவதற்காக பூஜைக்கு நல்ல நேரம் குறித்துக்கொண்டு வந்துவிட்டான்.
இப்போது சென்றால் அடுத்து திரும்பவும் இதற்கென வர முடியாதென வேதா இருக்கும் பொழுதே செய்துவிடலாம் என நினைத்தான் முகிலன்.
அனைவரும் இரவு உணவிற்கு பின்னர் அதை பற்றி பேசிக்கொண்டு இருக்க மகளும் விலாவரியாய் முகிலன் பேச்சை விளக்கம் கேட்டு கவனித்துக்கொண்டிருக்க பார்க்க பார்க்க அத்தனை கோபம் அனலரசுவிற்கு.
இங்கே வந்ததில் இருந்து மகள் தனது பரதத்தை மறந்துவிட்டாளோ என நினைத்தார்.
அதிலும் முகிலனுக்கேற்ற மனைவியாய் விவசாயத்தில் ஆர்வம் காட்டி கேள்விகள் கேட்க தனக்கு தோன்றியவற்றையும் அவனுக்கு சொல்ல என அவளும் அந்த ஈடுபாடு சுத்தமாய் பிடிக்கவில்லை.
இதற்கா மகளை படிக்க வைத்து நாட்டியத்தில் சேர்த்து இத்தனை தூரம் கொண்டுவந்துவிட்டேன் என ஆற்றாமையாக இருந்தது.
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வேகமாய் எழுந்துகொண்டவர் மகளிடம் கோபமாய் எதையோ சொல்ல முயல குரல் ஒத்துழைக்கவில்லை.
“கோவமா இருக்கீங்கன்னு தெரியுது. ஆனா இது எதுக்குன்னு எனக்கு தெரியலைப்பா? தொண்டை வலிக்க போகுது….” என்றாள் அவள்.
தன்னுடைய கோபத்தை கூட காண்பிக்க முடியாத ஆதங்கத்தில் வேகமாய் உள்ளே சென்றவர் பேப்பரில் எதையோ எழுதிக்கொண்டுவந்து மகளின் முகத்தில் வீசிவிட்டு சென்றார்.
“என்னவோ எழுதியிருக்கார். எடுத்து படி…” என முகிலன் சொல்லும் பொழுதே வேதா எடுத்துவிட்டார்.
முகிலனிடம் அந்த தாளை நீட்ட வாங்கியவனுக்கு நிரம்பவே ஆயாசமாக இருந்தது.
“இதுதானா உன் வாழ்க்கை. உன்னை கோபுரத்தில் வைக்க வேண்டுமென நினைத்தால் நீ வயல் வரப்புன்னு தான் திரியற. இதுக்குத்தான் இந்த வாழ்க்கை வேண்டாம்ன்னு சொன்னேன் உன்னை…” என எழுதியிருந்தது அதில்.
“புரியுது. நானே அனுபவிச்சவன் தானே? பிள்ளைங்களுக்கும் மனசு இருக்குன்னு எங்கையாவது ஒரு இடத்துல புரிஞ்சதுன்னா உடனே சம்மதிக்கலைன்னாலும் அவங்க என்ன நினைக்கறாங்கன்னு காதுகுடுத்தாவது கேட்க தயாரா இருக்கனும். மாமா அதுக்கு ரெடியா இல்லை…”
“இப்ப இவ்வளவு கோவப்படறார். நம்ம கல்யாணம் முடிஞ்சும் கூட…”
“அவர் என்ன ரோபோவா ப்ரோக்ராம் செட் பண்ணின மாதிரி உடனே மனசு மாற? உணரனும். அது எப்போன்னு காலம் தான் முடிவு பண்ணும்…” என்றவனின் ஆறுதலான புன்னகையில் அவனுடன் ஒன்றிக்கொண்டாள்.
மறுநாள் நல்ல நேரத்தில் பூமி பூஜை போடப்பட்டு கிணறு வெட்டும் பணி துவங்கியது வாழை தோப்பில். செழிம்பான பூமி என்பதால் நீர் வரத்திற்கு பஞ்சமில்லை.
அன்று முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு அன்றிரவு தான் சென்னையை நோக்கி சென்றார்கள் இளங்கோ, ஷோபா, அனலரசு, வேதா நால்வரும்.
முகிலன் சொல்லியதை போல மனிதர்களை உணரவும், உணர்வுகளை புரியவும் அனலரசுவிற்கு காலம் பரிட்சை வைக்க காத்திருந்தது.
தான் என்னும் அகம்பாவம், இறுமாப்புகள், வறட்டு பிடிவாதங்கள் என அத்தனையும் தகர்க்க மனிதன் தேவையில்லை. உறவுகள் தேவையில்லை. சூழ்நிலை ஒன்றே போதும்.