இருட்ட துவங்கியதும் முகிலன் தோப்பிலிருந்து கிளம்பி வீடு வந்திருந்தான்.
“இவ்வளவு நேரமா தோப்புல சுத்திட்டு இருப்ப? ராத்திரி அங்க தங்காதன்னு எத்தனைவாட்டி உனக்கு சொல்ல முகிலா?…” சம்பந்தம் தன் பேரனிடம் சொல்லிக்கொண்டிருக்க,
“அதான் வந்துட்டேனே தாத்தா…” என சொல்லியபடி பின்னால் சென்று கை கால்களை கழுவிக்கொண்டு வந்தான்.
இளங்கோ சம்பாதிக்க ஆரம்பித்ததும் வீட்டை இடித்து நவீன முறையில் கட்டவேண்டும் என்று எத்தனையோ முறை சொல்லிவிட அசைந்து கொடுக்கமுடியாதென மறுத்துவிட்டார் ஞானசம்பந்தம்.
வேண்டுமென்றால் உன் அறையை புதிப்பித்து கொள். கட்டிடத்தை இடிக்காமல் உன் அறைக்குள் மட்டும். மற்றபடி எதையும் மாற்ற அனுமதிக்க முடியாதென மறுத்துவிட்டார்.
வீடு பெரிது. ஆனால் பழைய காலத்து வீடு. இப்போது கிராமத்திலேயே அனேக வீடுகள் புதுமைக்கு மாறியிருக்க இப்படியும் சில வீடுகள் பழமைக்கு உதாரணமாக பொலிவுடன் காட்சி தந்தது.
உள்ளே வரும் பொழுதே தலையை தாழ்த்தி குனிந்து தான் வரவேண்டும். அது என்றுமே அனலரசுக்கு பிடித்தமில்லாதது.
“என்ன மச்சான் இது? நல்ல வேலையில இருக்கீங்க? தோப்பு துரவுன்னு எல்லாம் இருக்கு. வீட்டை எடுத்து கட்ட வேண்டியது தானே?…” என ஊசி ஏற்றி இளவேந்தனை அவ்வப்போது இதைப்பற்றி சம்பந்தத்திடம் பேச வைப்பார்.
மகன், மருமகன் வேலை என தெரிந்தும் அவரின் பிடியில் இருந்து மாற்றிக்கொள்ளவில்லை சம்பந்தம்.
ஆனாலும் அந்த வீட்டின் அமைப்பும், குளுமையும் என்றும் கண்ணை பறிக்கும் அனலரசுக்கு.
ஏற்றுக்கொள்ளத்தான் மனதிருக்காது. இதென்ன வீடு பெரிய வீடு என அலட்சியம் காட்டுவார்.
அன்றும் பெரிய வரவேற்பறையின் போட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு இளங்கோவுடன் பேசிக்கொண்டிருக்க முகிலன் வரவுமே அவன் பக்கம் கவனத்தை திருப்பினார்.
“ஓவி, நேரமாச்சு போய் தூங்குடா…” என மகனை செல்ல சொல்லியவர்,
“வேதா கூட போ. ஊருக்கு வந்தா நேரமே தெரியாது. ஊரே அடங்கிருச்சு. இன்னும் என்ன அரட்டை?…” என சொல்லி தாங்களும் எழுந்துகொண்டன்னர்.
பின்னால் இருந்து இதனை கேட்டபடி வந்த முகிலன் அமைதியாக சாப்பிட அமர்ந்தான்.
கீழே அமர்ந்ததுமே அவனுக்கு தண்ணீரை கொண்டு வந்து வைத்த ஓவியா சாப்பிடவும் எடுத்து வைக்க வர,
“உன்னை உங்கப்பா என்ன சொன்னாரு? நீ என்ன பண்ணிட்டு இருக்க?…” ஓவியாவை தடுத்தான் முகிலன்.
“அம்மா தான் எடுத்து வைக்க சொன்னாங்க. பாட்டிக்கு உதவ சொல்லி…”
“பாட்டியே இங்க இல்லை. அப்போ எங்கம்மா எடுத்து வைக்கட்டும். நீ போ…”
“ஏன் அத்தான் விரட்டிட்டே இருக்கீங்க? அப்பா கேட்ட நான் பதில் சொல்லிக்கறேன்…”
“சொன்னா கேட்க மாட்டியா நீ?…”
“யாராவது ஏதாவது சொல்ல நான் கேட்டுட்டே இருக்கனுமா? நானா இதை செய்ய கூடாதா? இல்லை உங்களுக்கு செய்ய கூடாதா?….” பதிலுக்கு பதில் அவள் கேட்க முகிலன் மௌனமாகிவிட்டான்.
“நமக்கு கல்யாணம் ஆக போகுது அத்தான்…”
“நான் இல்லைன்னு சொல்லலையே?…” என்றவன்,
“அம்மா…” என கத்தி அழைத்தான் ஷோபாவை.
“இப்ப எதுக்கு அத்தையை கூப்பிடறீங்க?…”
“அம்மாவை கூப்பிட்டா என்ன?…” என்றவன்,
“நீ சாப்பிட்டியா?…” என கேட்டான்.
“ஹ்ம்ம், ரொம்ப நேரமாச்சு. எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிட்டோம்…”
“அப்போ தூங்க வேண்டியது தானே? ஏன் முழிச்சிருந்த?…”
தன்னை காண என தெரிந்தாலும் வேண்டுமென்றே கேட்டு அவளை வெறுப்பேற்றினான்.
ஓவியா பதில் கூறும் முன் ஷோபாவும், வேதாவும் அங்கே வந்துவிட்டனர். அவளே முகிலனுக்கு பரிமாறி இருக்க,
“என் அம்மாவை கூப்பிட கூட உங்களை தான் கேட்கனுமா?…” அன்று என்னவோ முகிலனின் மனதிற்கு சஞ்சலங்கள் அதிகமாகவே இருந்தது.
என் வாழ்க்கையை நான் யாருக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்னும் விதமான எண்ணங்கள் அவனை அலைகழித்தது.
முகிலனின் கேள்வியில் ஷோபா கவலையுடன் பார்க்க ஓவியாவிற்கு வருத்தம் கூடியது.
‘இப்போதே அப்பாவின் அடக்குமுறை அதிகமாக இருக்கிறது. கல்யாணம் முடியவும் இன்னும் என்னவெல்லாம் பேசுவாரோ?’ என கவலையுடன் முகிலனை பார்க்க அவனும் சற்று இறங்கி வந்தான்.
“என்ன முகிலா இது? பாரு வேதா முகம் தொங்கி போச்சு. இப்ப எதுக்கு இன்னைக்கு காய்ஞ்சுட்டே இருக்க?…” என்றதும் தட்டில் இருந்ததை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்துகொண்டான்.
“அத்தான் இன்னும் ரெண்டு இட்லி…”
“போதும் ஓவியா. பசி போய்டுச்சு…” என்று சொல்லவிடு மாடியில் இருக்கும் தனதறைக்கு சென்றுவிட்டான்.
“வேதா நீ ஒன்னும் கவலைப்படாத. அவன் என்னவோ இந்த ரெண்டுமூணு மாசமாவே டென்ஷனா தான இருக்கான். இப்ப நான் வேற இப்படி செஞ்சிட்டேன்…” ஷோபா அவரை சமாதானம் செய்ய,
“விடுங்கண்ணி. இந்த மனுஷன் பன்றது மட்டும் குறைய என்ன? ஒரு வயசு வரை தான் பசங்களை தட்டி வைக்கனும். அதுக்கு மேல தட்டிக்குடுக்க தான் செய்யனும்…” என வேதா சொல்லவும் ஓவியா ஓரமாய் கதாவின் மேல் சாய்ந்து நின்றாள்.
“நீ போய் படு ஓவி. அம்மா வரேன்…” என மகளை அங்கிருந்து அனுப்ப அவளும் சென்றுவிட ஷோபாவின் பக்கம் திரும்பினார்.
“அதெல்லாம் எதுவும் ஆகாது. நல்லபடியா கல்யாணம் நடக்கும் பாரு…”
“நீங்க சொல்றீங்க? ஆனா மனசுக்கு என்னவோ சுருக்குனு இருக்கு. முகில் இயல்பாவே அவரோட பேசமாட்டான். அது வேற விஷயம். ஒரு அளவுக்கு தான் அவனும் பொறுமையா போறான். இவர் பேசற பேச்சுக்கு என்னைக்காச்சும் எடுத்தெறிஞ்சி பேசி…”
“அவன் அப்படி ஒன்னும் பேசற ஆள் இல்லை வேதா. நீ அனாவசியமா பயப்படற…”
“ம்ஹூம், நிஜமா தான் சொல்றேன். சின்ன வயசுல இருந்தே இவளுக்கு இவன்னு சொல்லி சொல்லியே வளர்த்துட்டோம். ரெண்டு பிள்ளைங்க மனசுலயும் அது பதிஞ்சு போய்டுச்சு. நானும் கவனிச்சுட்டு தானே வரேன் இவரோட அடாவடியை…”
“அட நீ ஏன் இத்தனை வருத்தப்படற? கல்யாணம் நல்லபடியே நடக்கவும் திருச்செந்தூர் முருகனுக்கு பால் காவடி எடுக்கேன்னு வேண்டிருக்கேன். அதெல்லாம் நல்லா சுமூகமா தான் நடக்கும். நீ பாரேன்…”
“என்ன பார்க்கவோ? அவன் வேலைக்கு எங்க போகனுன்ற வரைக்கும் இவர் தான் முடிவு பன்றார். இந்த அண்ணனும் என்னன்னு கேட்காம தலையாட்டறார்…”
கொஞ்சம் நாட்களாகவே வேதவல்லி இப்படி புலம்ப ஆரம்பித்திருந்தார் ஷோபாவிடம்.
வேறு யாரிடமும் பேசினால் வருத்தபடுவார்களோ என பேசாமல் இருந்தவர் மனதை திறக்கும் ஒரே நபர் ஷோபா மட்டுமே.
வயது பையன் போடும் சட்டையை கூட விமர்சித்து தன் அண்ணனிடம் சொல்ல அவர் அதற்கு மேல்.
“என் மாப்பிள்ளை அவன் மருமகன் மேல உள்ள அக்கறையில தானே பேசறான்…” என்பார் இளங்கோ.
வேதவல்லிக்கு முகிலனை போன்றே கோபம் அதிகமாகும். சரியான மண்ணாந்தை அண்ணன் என தன் அண்ணனை திட்டிவிடுபார்.
“உனக்கு தான்ம்மா அவரோட அருமை புரியலை…” என தங்கையை தான் திருத்த பார்ப்பார் இளங்கோ.
பேசி பேசி அவரும் ஓய்ந்துவிட்டார். தனது மகனும் மகளும் எப்படி தன் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்களோ அதே போல் முகிலனும் இருக்கவேண்டும் என அனலரசு நினைத்துக்கொண்டிருந்தார்.
பெரியவர்கள், உறவு என்னும் மரியாதைக்கு முகிலன் கொஞ்சம் தன்னை கட்டுப்படுத்தி அமைதியாக போக அதுவே அனலரசுவின் ஆதிக்கத்தை அதிகமாக்கியது.
இப்போதும் இங்கு வந்ததில் இருந்து அனலரசு இளங்கோவிடம் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு இங்கே இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற வழக்கமான பாட்டை ஆரம்பித்துவிட்டிருந்தார்.
இளங்கோவும் ஆமாம் என தலையாட்டி அவரின் சொல்லுக்கு தனது ஆதங்கத்தையும் சேர்த்து அங்கே பதிவு செய்துகொண்டிருக்க ஷோபாவிற்கு பழகிவிட்டது.
ஆனால் வேதவல்லிக்கு பழகி இருந்தாலும் இதென்ன வரும் நேரம் எல்லாம் இதே புராணம் என சலித்துவிட்டாலும் முறைப்புடன் இருந்தார்.
“சரி விடு, எல்லாம் நடக்கறது தானே? கல்யாணம் ஆகிட்டா முதல்ல முகிலனை வேற ஊருக்கு மாத்தல் வாங்கி அனுப்பிருவோம். அங்க இருந்துக்கட்டும் ரெண்டுபேரும்…” என ஷோபா பெரிதாய் எதையோ சொல்லியதை போல சிரிக்க,
“இப்ப எதுக்கு எதுவும் ஆகிருமோன்னு இப்பவே நினைச்சு வருத்தப்பட்டு நிம்மதியை தொலைக்கிற? போய் சாமியை கும்பிட்டு படு. சரியாகிரும். நான் போய் அத்தையை பார்த்துட்டு வரேன்…”