“சரி வாங்க, நாமளும் கொஞ்சம் நேரம் வெளில நிப்போம்…” என்று அடுப்படியை விட்டு வெளியே வர வரவேற்பறையின் அருகில் இருந்த அறையில் சென்று படுத்துவிட்டிருந்தார்கள் அனலரசுவும் இளங்கோவும்.
“ஹப்பா படுத்துட்டாங்க போல. நிம்மதி…” என வேதவல்லி நெஞ்சில் கை வைத்து சொல்ல,
“அட வா வேதா…” என்று ஷோபா வெளியே சென்றார்.
அங்கே கமலாவும், சம்பந்தமும் பக்கத்து வீட்டினருடன் பேசிக்கொண்டிருக்க இவர்கள் இருவரும் கதை பேச அமர்ந்துவிட்டார்கள்.
மிகப்பெரிய கல் திண்ணையில் வேப்பமரத்து காற்றில் அமர்ந்திருப்பதே அலாதி சுகமாக இருந்தது.
இன்னும் இரண்டு நாள் இங்கே தான் என்பதே இருவரின் மனதிற்கும் நிம்மதியாக இருக்க பேச்சில் கலந்துகொண்டார்கள்.
“ஏன் என்னை விரட்டிட்டே இருக்கீங்க த்தான். நான் என்ன பண்ணேன்? அப்பா மேல கோவம்ன்னா என்னை ஏன்…” என்றவள் பேச்சை அங்கேயே நிறுத்திவிட்டாள்.
அவனின் கூர்மையான பார்வையில் வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே அடங்கி போக அடுத்ததாக அவன் தொடர்ந்தான்.
“உன்னை என்ன பண்ணிட்டேன்? ஏன் உனக்கு தெரியாதா நான் ஏன் ஒதுங்கி போறேன்னு…” என்றதும் மௌனமாக நின்றாள்.
“இங்க பார் ஓவி, நான் இப்போ பயங்கர டென்ஷன்ல இருக்கேன். ஒரு முடிவுக்கும் வரமுடியாதபடி சூழ்நிலை என்னை கட்டி வச்சிருக்குது…”
அந்த சூழ்நிலைக்கு பெயர் அனலரசு, இளங்கோ என நன்றாக தெரியுமே ஓவியாவிற்கு. அவனின் விருப்பம் என்னவென்றும் தெரியும்.
ஆனால் இதில் தான் என்ன செய்துவிட முடியும் என இருந்தாள். அவளுக்கே தெரியாதது முகிலன் எடுக்க முடியாத முடிவை அவள் தான் எடுப்பாள் என்பது.
“என்னனு பேசினா தானே தெரியும் அத்தான். நீங்களா உங்களுக்குள்ள வச்சுட்டு இருந்தா எப்படி சரியாகும்?…”
“எனக்குள்ள நிறைய இருக்கு ஓவி. ஆனா அது எல்லாம் எனக்குள்ளையே முடிஞ்சிருமோன்னு தோணுது…”
குரல் குறைந்து தீனமாக ஒலிப்பதை போல இருக்க அவனின் வார்த்தைகளின் வலியை அவளால் உணர முடிந்தது.
“நீ ஏன் கண்ணு கலங்கற? உங்கப்பாவுக்கு தெரிஞ்சா இங்க என்னமோ நடந்திருச்சுன்னு நினைப்பாரு…” பல்லை கடித்துக்கொண்டு அவன் பேச ஓவியாவிற்கு இன்னும் கண்ணீர் வந்தது.
“நான் என்ன பண்ணேன்? என்கிட்டே இப்போவாச்சும் நல்லா பேசலாம் தானே?…” என்றாள் அவன் தன் தந்தையை பற்றி சொல்லியதை எல்லாம் கணக்கில் எடுக்காமல்.
“உன்கிட்ட எப்போ நல்லா பேசலை? சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணினா கூட வாட்ச் பன்றாங்க. பேசவே யோசிக்க வைக்கறாங்க. நார்மலா இருக்க விடறதில்லை. உன் அப்பாவை மட்டும் சொல்லலை. என்னோட அப்பாவும் தான்…”
“அவங்க பெரியவங்க…”
“பெரியவங்க கல்யாண பேச்சை எப்போ பேசனுமோ அப்போ பேசனும். அதை விட்டு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து சொல்லி சொல்லி வளர்த்துட்டு பார்த்தா, பேசினா கூட மானிட்டர் பன்றது எல்லாம் காண்டாகுது…”
அவனின் கடுப்பு வீட்டினதும், அலுவலக சம்பந்தபட்டதும் என இரண்டு போட்டு அழுத்திக்கொண்டு இருந்தது.
“அவ்வளவு பயம் இருந்தா முன்னாடியே பேசியிருந்திருக்க கூடாது இல்லையா கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு ஒதுங்கி இருக்கனும். ரெண்டும் இல்லாம ச்சே…” என்று எரிச்சலுடன் சொல்ல ஓவியா அவனின் பேச்சில் லேசாய் தலை கவிழ்ந்தாள்.
அதுவரை எரிச்சலுடன் இருந்தவனுக்கு இந்த சிறு நாணம் இளைப்பாற்றலை தர தலையில் முடி இருக்கும் பொழுது தலையை கோதுவதை போல செய்ய இப்போது மொட்டை மொழுக்கென்று வழுக்கியது.
“ப்ச், ச்சை…” என்றான் முகிலன்.
“ஹ்ம்ம், என்ன?…” என்றவள் பார்வையில் எதிர்பார்ப்பு தோன்ற,
“சரி கீழே போ. உங்கப்பா மூக்கு வேர்த்திரும்…” என சொல்லவும் முறைத்தாள் அவள்.
“எப்பவும் எங்கப்பா நினைப்பு தான் இல்லையா? என்னை யோசிக்கவே மாட்டீங்களா?…” மனத்தாங்கலுடன் கேட்கவும் அவனுக்குமே கஷ்டமாக போனது.
“உன்னை யோசிக்கலைன்னு யார் சொன்னா? நான் கோபமா இப்படி உன்கிட்ட பேசறதும், சில நேரம் பேசாமலே இருக்கறதும் தான் நமக்கு நல்லது. இன்னும் ஒன்றரை வருஷம் இருக்காம் நமக்கு கல்யாண யோகம் வர…” என சொல்ல,
“அதுக்கு உங்க முன்னாடி கூட வர கூடாதுன்னா? பார்க்கும் போதாச்சும் நல்லதா. இதோ இப்போ யாருமே இல்லை. பேசலாம் தானே? ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்லி அப்ரோச்…”
“நீ எனக்கு ப்ரெண்டா ஓவி?…” அவளை பார்த்து கேட்க என்ன பதில் சொல்வாள்?
“ஹ்ம்ம், ஓவி என்னால மேஜிக்கல் பொயட்ரி மாதிரி பேச முடியலை. அட் தி சேம் டைம் உன்கிட்ட இந்த பீலிங்கோட டெப்த் என்னன்னு இப்போ ப்ரூவ் பன்ற அவசியமில்லை. உனக்கு புரியுது தானே?…”
“புரியலைன்னாலும் நீங்க இதையே தான் பேச போறீங்க. நான் போறேன். அதுதானே வேணும்? சரியா சாப்பிடவும் இல்லை, தூங்கவும் இல்லை. என்னவோ பிரச்சனைன்னு தோணுச்சேன்னு வந்தேன். பை…” என சொல்ல,
“குட்நைட்…” என சொல்லி முகிலன் புன்னகைக்க,
“நீங்களே வச்சுக்கோங்க…” என்று சொல்லி கீழே இறங்கிவிட்டாள்.
மீண்டும் தனிமை, அந்த ஏகாந்த சூழ்நிலையை விட்டு செல்ல முடியாத அழுத்தம் முகிலனை சூழ்ந்தது.
சில முடிவுகள் தனக்கு விருப்பம் தான். ஆனால் அதனால் ஓவியாவை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்?
வரும். அதன்பொருட்டு அனலரசுவை பொசுக்க தானே களம் இறங்க போகும் காலமும் வரும் என முகிலன் அனுமானிக்கவில்லை.