ரிசப்ஷன் போல் இல்லாது ஒரு பார்ட்டி என்பதை போல ஏற்படு செய்ய சொல்லிவிட்டான் முகிலன்.
இளங்கோவை சேர்ந்தவர்களுக்கு அவரே அழைப்பு விடுத்துவிட்டார். முகிலன் அவனுடைய நண்பர்களுக்கு அழைக்க ஓவியாவும் தன்னுடைய தோழிகளுக்கு என வளையம் பெரிதாகிக்கொண்டே இருந்தது.
இதில் கோவத்துடன் யாரையும் அழைக்க முடியாதென மறுத்தது அனலரசு மட்டுமே. கோபத்துடன் இருந்தார். இதையும் இவர்களே முடிவு செய்வார்களா என்று.
அனலரசு, இளங்கோ இருவருக்கும் பொதுவான நண்பர்களை இளங்கோவே அழைத்துவிட அங்கேயும் அனலரசு வெறுமனே வேடிக்கை பார்த்தார்.
“என்ன அரசு, உன் மச்சானே கூப்பிட்டுட்டான். நீ கூப்பிடவே இல்லையே?…” என வாய்விட்டே ஒருசில நெருக்கமானவர்கள் கேட்டுவிட,
“ஏன் தனிதனியா தான் கூப்பிடனுமோ? அதான் அவர் சொல்லிட்டாரே. அப்பறம் என்ன?…” என்றார் பதிலுக்கு.
“என்னப்பா, உன் மாப்பிள்ளை இப்படி பேசறான்?…” என வருத்தப்பட்டு மீண்டும் இளங்கோவிற்கு அழைத்து சொல்லியவர்களும் உண்டு.
“அவருக்கு கொஞ்சம் வருத்தம். அதான் இப்படி இருக்கார். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…” இளங்கோ தான் சமாதானம் செய்தார்.
கிராமத்தில் முகிலன் தன்னுடைய வேலைகளை எல்லாம் பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பி வந்திருந்தான் சென்னைக்கு.
வந்ததும் வேதாவின் வீட்டிற்கு செல்வோம் என்று நிற்க ஓவியா முடியாதென மறுத்துவிட்டாள்.
இப்படி ஏதாவது செய்வான் என்று வேதா கிளம்பி இங்கே வந்துவிட முகிலன் தான் முறைத்துக்கொண்டு திரிந்தான்.
“இப்படியே செய்ங்க, அவர் இன்னும் உச்சாணில ஏறி நிப்பாரு. இப்ப நான் அங்க வரதனால எனக்கொண்ணும் குறைஞ்சிட போறதில்லை. சும்மா சும்மா அவரையும் போட்டு சீண்டிட்டே இருக்கீங்க? பார்ட்டிக்கு வரமாட்டேன்னு சொல்ல போறாரு….” முகிலன் அனைவரையும் கடிய,
“அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ எதுக்கு டென்ஷன் ஆகற? பேசாம ரெஸ்ட் எடு. இல்லைன்னா பேசிட்டு இரு. நான் ஹோட்டலுக்கு கால் பண்ணி எல்லாம் ரெடியான்னு பார்க்கறேன்…” என்று இளங்கோ சொல்லிவிட்டார்.
“ஹ்ம்ம், பேசவேண்டிய நேரமெல்லாம் ஒருத்தரும் பேசலை. இப்போ வந்துட்டு என் உரிமை, என் கடமைன்னு வசனம் பேசறது…” முகிலன் சொல்ல,
“சரிய்யா, இப்ப எதுக்கு இவ்வளோ கோவம்? நாளைக்கு வேணும்னா எல்லாருமா போவோமே? என்ன சொல்லுற?…” கமலா பாட்டி பேசவும்,
“ம்மா, பேசாம இருங்க…” என அதட்டினார் வேதா.
“இவ ஒருத்தி, நான் புடிச்ச முயலுக்கு முக்கா காலுன்னு நிப்பா. சும்மா தான் இரேன்….” கமலா சொல்லவும் அவரை முறைத்துவிட்டு வேதா ஓவியாவுடன் பேச ஆரம்பித்தார்.
இரவு விருந்திற்கு உடுத்தவிருக்கும் உடைகள், அணிமணிகள் என அனைத்தையும் எடுத்துக்க வைக்க ஆரம்பித்தார்கள்.
“இங்க இருந்து மூன்றரைக்கு கிளம்பிருவோம். அங்க எல்லாம் ரெடியாம். ரெண்டு ரூம்க்கு சொல்லிட்டேன். அங்க போய் ரெடியாகிடலாம். இல்லைன்னா இங்க இருந்து வரதுன்னா இன்னும் கொஞ்சம் லேட்டா கிளம்பலாம்…” இளங்கோ சொல்ல,
“அங்கயே போய் ரெடியாகிடலாம் ண்ணே. அதுதான் சரியா இருக்கும். ஓவியாவுக்கு அவளே மேக்கப் பண்ணிப்பா. அதனால வேற எந்த வேலையும் இல்லை…” வேதா சொல்லவும் தலையாட்டினார்.
“எங்க முகிலனை காணும்?…”
“இவ்வளோ நேரம் இங்க தான் இருந்தான். கொஞ்ச நேரம் தூங்கறேன்னு உள்ள போனான். கிளம்பும் போது எழுப்பிப்போம். இப்பலாம் அவன் தூங்கற நேரமே குறைஞ்சிருச்சு…” ஷோபா கவலையுடன் சொன்னார்.
“அதெல்லாம் பழகிரும். சரி எல்லாம் எடுத்து வை. நீங்க முன்னாடி கிளம்புங்க. நான் போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு அங்க இருந்து வந்திடறேன்…” இளங்கோ சொல்லவும் சரி என தலையசைத்தார் ஷோபா.
“ஒண்ணுமில்லை. நீ மட்டும் தனியா போறியே. எதாச்சும் பேசுவார்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன்…”
“அவர் பேசறது எனக்கென்ன புதுசா? அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன். நீ ஒன்னும் வருத்தப்படாத…” என்று கூறவும் மௌனமானார்.
சரியாக மூன்று மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டனர். அரைமணி நேரத்திற்கு முன்பே கிளம்பிவிட அவர்களை அனுப்பிவிட்டு இளங்கோவும் அனலரசுவை அழைக்க சென்றார்.
அனலரசு தனியே வீட்டில் இருந்தவர் ஹால் சோபாவில் படுத்திருந்தார். கதவு பூட்டப்படாமல் இருக்க உள்ளே நுழைந்ததும் இளங்கோ பார்த்தது இதைத்தான்.
கையில்லா பனியனும், லுங்கியும், சோர்ந்த முகமும் என இருந்தவரை பார்க்க வருத்தமாய் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை இளங்கோ.
“என்ன மாப்பிள்ளை, இன்னும் ரெடி ஆகலையா…” என இளங்கோ கேட்க படக்கென்று எழுந்தமர்ந்தார் அனலரசு.
“நீ எங்க இங்க?…” என கோபத்துடன் கேட்கவும்,
“உங்களுக்கு நல்லா தெரியும் நான் கண்டிப்பா வருவேன்னு. அப்பறம் எதுக்கு தெரியாத மாதிரி பேசிட்டு?…” என்றதும் கோபமாய் முகத்தை திருப்பிக்கொண்டார்.
“சும்மா கோவப்பட்டு நேரத்தை கடத்த வேண்டாம். கிளம்புங்க. ஹோட்டலுக்கு போவோம்…” இளங்கோ அழைக்க,
“முடியாது. அதான் குடும்பமா எல்லாம் முடிவு பண்ணிட்டீங்களே? அப்பறம் நான் எதுக்கு? என்னவோ என்னை தலையில தூக்கி வைக்கிற மாதிரி…”
“அப்போ அதுதான் உங்க பிரச்சனையா? இதுவரைக்கும் நாங்க உங்களை தலையில தானே தூக்கி வச்சு கொண்டாடினோம். ஆனா கீழே இறங்கினது நீங்கதான. உங்களை நீங்களே இறக்கிட்டீங்க…”
“இந்த பசப்பு பேச்சு வேண்டாம். கிளம்பு முதல்ல…”
“உங்களை கூட்டிட்டு போகத்தானே வந்திருக்கேன். நீங்க வராம நான் மட்டும் எதுக்கு போக?…”
“ஏன் நான் வரலைன்னா அங்க கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியாமா போய்டும்ன்னு தானே உப்புக்கு சப்பாணியா கூப்பிடறீங்க?…”
“பதில் சொல்ல எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. ஆனா சொல்லிட்டா உங்களை தான் எல்லாரும் பேசுவாங்க மாப்பிள்ளை. இன்னும் எதுக்கு இவ்வளவு வீம்பு பிடிக்கறீங்க? கிளம்பி வாங்க…”
“முடியாது…”
“நீங்க வந்து தான் ஆகனும். சும்மா தேவை இல்லாம எதுக்கு இவ்வளோ வறட்டு கௌரவம்? இப்ப என்ன குறைஞ்சிருச்சு உங்க வாழ்க்கைல? என் பையன் அவன் ஆசைப்படி வாழனும்னு நினைக்கிறான். கூட வாழற உங்க பொண்ணே அதுக்கு சந்தோஷமா சம்மதிச்ச பின்னால எதுக்கு இந்த வீம்பு?…”
“இன்னைக்கு இந்த வியாக்கியானம் தேவைன்னு நான் ஒன்னும் சொல்லலை. வரமுடியாதுன்னு சொல்றேன்ல. கிளம்புய்யா முதல்ல. சும்மா வெறுப்பேத்திட்டு…”
எத்தனை பேசியும் அனலரசு கிளம்புவதாக தெரியவில்லை. கோபமும், எரிச்சலும் ஒருங்கே தோன்ற அங்கிருந்து கிளம்ப இருந்த இளங்கோ,
“வேதா அப்பவே சொன்னா…” என முணுமுணுத்தார்.
“ஏன் அவ கூப்பிட மாட்டாளாமா? உன்கிட்ட தான் சொல்லுவாளா…” என்று மீண்டும் அனலரசு கேட்க இளங்கோவிற்கு என்ன சொல்ல வருகிறார் இவர் என்று தோன்றியது.
“புருஷன் நான் ஒருத்தன் இங்க ஒத்தையில இருக்கேன். விட்டுபோட்டு கிளம்பி போனா என்ன அர்த்தம்? இருந்து கூப்பிடனும்னு அவளுக்கும் தோணலை. இப்ப உன்னை அனுப்பினா வந்துருவேனா?…” என்றதும்,
“தப்பு தான் மாப்பிள்ளை. அவ சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்ப வாங்க. திரும்ப வந்ததும் நானே வேதாவை சத்தம் போடறேன்…” என்று அனலரசுவின் மனம் குளிர இளங்கோ பேச யோசிப்பதை போல நின்றார் அவர்.
அவருக்கும் போக வேண்டும் என்னும் ஆசை தான். இல்லை என்றால் வருகிறவர்கள் விருந்தில் தான் இல்லாது தன்னை கேட்டு தன்னை என நினைப்பார்கள் என்னும் நினைப்பும் ஓடிக்கொண்டே இருந்தது.
எப்படியும் யாராவது வரட்டும் பேசிக்கொள்வோம் என்றிருக்க இளங்கோ வரவும் அத்தனை பேச்சு பேசினார்.
“இதெல்லாம் முன்னாடியே கேட்டிருக்கனும்? இப்ப கேட்டு என்ன பிரயோஜனம். கொஞ்ச ஆட்டமா ஆடினா? பேசாம இருந்து சாதிக்கிறா…” என திட்டிக்கொண்டே அறைக்குள் சென்றவர் உடனே உடையை மாற்றிக்கொண்டு வந்தார்.
“இது ஒன்னும் உனக்காக இல்லை. அங்க என்னோட மரியாதையை யாரும் குறைச்சிட கூடாதுல. அதுக்கு தான். நீயும் இவ்வளவு தூரம் வந்து கெஞ்சுற. போனா போகுதேன்னு வரேன்…” என்று கிளம்பிவிட்டார்.
இளங்கோவிற்கு அத்தனை சிரிப்பு இப்படி வீம்புக்கென்று கோமாளித்தனம் செய்கிறாரே என்று.
“போகலாம். போலாம். நம்ம கார்லயே போகலாம்…” என சொல்ல,
“ஏன் என்கிட்டே இல்லையா?…”
“இருக்குது மாப்பிள்ளை. ஆனா தனிதனியா எதுக்கு? அதான் நம்ம கார்லயே வாங்க. நான் நைட்ல வந்து ட்ராப் பன்றேன்…” என சொல்ல முறுக்கிக்கொண்டு தான் வந்தமர்ந்தார்.
இல்லை என்றால் நிச்சயம் அங்கே கேட்பவர்களிடம் வேதா சொல்லாவிட்டாலும் விடுவார். போதாததற்கு கமலா புலம்புகிறேன் பேர்வழி என்று தனது சொந்தங்களிடம் பேசினால் ஒன்றுக்கு இரண்டாக தன்னை கேலி பார்வை பார்க்க கூடும் என கிளம்பி வந்துவிட்டார்.
இப்படி ஒன்று நினைத்து வர தங்கள் வீட்டருகே இருக்கும் சிலரும் அங்கே வந்திருந்தார்கள் விருந்திற்கு.
இவர்களுக்கு எப்போது அழைப்பு வைக்கப்பட்டதோ என பார்க்க வேதா அனைவரையும் வரவேற்றுக்கொண்டு இருந்தார் இன்முகமாக. விருந்தும் நல்லவிதமாக நடைபெற ஆரம்பித்தது.
ஹாலுக்குள் நுழையும் பொழுதே அனலரசுவை பார்த்துவிட்ட முகிலன் நேர சென்று பேசினான்.
“வாங்க மாமா, மேல ரூம்க்கு வந்திருக்கலாமே?…” என கேட்க,
“உன் வேலையை பாரு…” என்று சொல்ல,
“அதான் பார்க்கறேன். உங்களை கவனிக்கிறது தானே என் வேலை…” என சிரிப்புடன் முகிலன் பேசவும் முறைத்தார்.