“ஊருக்கு போக முடியுமான்னு பார்ப்போம். லாக்டவுன் போட்டுட்டா கண்டிப்பா போகமுடியாது. ட்ரைவர் யாராவது கிடைச்சா கிளம்பிருவோம்…” என சொல்ல,
“ஏன் ட்ரைவர் எதுக்கு?…” என்று கேட்கவும் தான் அனலரசு விழித்தார்.
“என்னன்னு சொல்லுங்க. நீங்க ஓட்ட முடியாதா?…” என கேட்க,
“இல்லை. எனக்கு முடியலை…” என அப்போது தான் தன் காலை காண்பித்தார்.
ஏற்கனவே சுகர் இருக்க காலில் காயம் ஏற்பட்டு இன்னும் ஆறாமல் இருந்தது அவருக்கு.
“இதை ஏன் சொல்லவே இல்லை நீங்க?…” என பதறினார் வேதா.
மனதில் இருந்த ஆதங்கம், கோபம் அத்தனையும் மொத்தமாய் மறைந்துவிட்டிருந்தது.
“இதுக்குத்தான் வேஷ்டி கட்டிட்டிருந்தீங்களா?…” என கேட்க,
“மருந்து போட்டாச்சு. ஆறிடும்…” என்று சொல்ல வேதாவிற்கு தலைக்கு கிறுகிறுவென்று வந்தது.
“ஊருக்கே போய்ருவோம்…” என்று சொல்ல அனலரசு ட்ரைவர்களுக்கு அழைத்தார்.
யாரும் வருவதை போலவே தெரியவில்லை. இப்படி என்று சொன்னால் முகிலனோ, இளங்கோவோ வந்துவிடுவார்கள் தான்.
ஆனால் அதை சொல்லி ஏன் பதட்டபடுத்துவானேன் என்று அனலரசு தானே முயன்றார்.
இன்னொன்று அவர்களிடமே செல்ல, அவர்களையே வர சொல்ல என இன்னும் அழைக்கவே தயக்கமாக இருந்தது.
அன்று இரவு வரை பார்த்துவிட்டு ஒருவரும் கிடைக்காமல் போக என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்.
“இன்னைக்கு விடுங்க. நாளைக்கு பார்த்துக்கலாம். போய் படுங்க…” என வேதா சொல்லவும் அனலரசுவிற்கு மனதே இல்லை.
“உனக்கு ஒன்னும் இல்லை தானே?…” என காய்ச்சல் உள்ளதா என தொட்டு பார்த்தார்.
“அதெல்லாம் இல்லை. தலைவலி, சளி பிடிச்சிருக்கு. அவ்வளோ தான். மாத்திரை போட்டேன் தானே?…” என்று சமாதானம் செய்து அவரை அனுப்பிவிட்டு தானும் தனது அறைக்குள் வந்து படுக்கையில் சாய்ந்துவிட்டார்.
விடியற்காலை எழுந்ததும் அனலரசு உடைகளை எடுத்து வைத்து கிளம்ப ஆயத்தமாகினார்.
முடிந்தளவு யாரும் வரவில்லை என்றால் தானே மெதுவாய் காரை ஓட்டி சென்றுவிடலாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.
இரவு உறங்க வந்துவிட்டாரே தவிர சுத்தமாய் தூக்கம் இல்லை. செய்திகள், வலைதள இடுகைகள் என்று அவரின் பயத்தை இன்னும் கிளறி இருந்தது.
இல்லை தாமதிக்காமல் இப்போதே கிளம்பிவிடுவோம் என்று முடிவுக்கு வந்துவிட்டார் அனலரசு.
எல்லாம் எடுத்துவைத்துவிட்டு வந்து வேதாவை எழுப்ப பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை போல இருந்தார் வேதா.
சரி இன்னும் கொஞ்சம் விடியட்டும் என்று நினைத்து இவர் அடுக்களைக்குள் வந்து காபி ஏதாவது தயாரிக்கலாம் என்று பார்க்க பால் இல்லை.
வெந்நீரை போட்டு நாட்டு சர்க்கரை கலந்து கடுங்காபி போட்டு எடுத்து வந்து வேதாவை அழைத்தார்.
“வேதா, எந்தி இந்த காபியை குடி. குடிச்சுட்டு நாமலே மெதுவா கிளம்பிருவோம்…” என அழைக்க பேச்சில்லை அவரிடத்தில் இருந்து.
“வேதா…” மீண்டும் அருகே சென்று அழைத்தார்.
மறுபக்கம் திரும்பி படுத்திருந்ததனால் அவர் உறங்குகிறார் என்று நினைத்திருக்க இல்லை.
உடல் நடுங்க கடுங்குளிர் காய்ச்சலில் மெல்ல அனத்திக்கொண்டு இருந்தார் வேதா.
உடல் நெருப்பாய் கொதிக்க அனலரசுவிற்கு உயிர் போனது அவரை அப்படி கண்டு.
“வேதா, வேதா இங்க பாரும்மா. எந்திச்சு பாரு…” என எழுப்ப பலன் இல்லை.
லேசாய் கண்ணை திறந்த வேதாவின் கண்களில் இருந்து சூடான கண்ணீர். பேசமுடியாமல் உதடு குழறியது.
“எந்திம்மா, எந்தி வேதா. மாத்திரையை போடு. என்ன செய்யுது? இப்படி காய்ச்சல் அடிக்குதே?…” என பயந்தார்.
வெந்நீரை இதமாய் ஆற்றி கொண்டுவந்து அவரின் வாயில் புகட்டியவர் மாத்திரையை எடுத்து போட மெல்ல விழுங்கிக்கொண்டவரின் நெற்றி கை கால்கள் என சூடு பறக்க தைலத்துடன் தேய்த்துவிட்டார்.
அந்த நேரம் வழக்கமாக அழைக்கும் முகிலன் அந்நேரம் அழைக்க இவர் எடுக்க முடியவில்லை.
“போன் அடிக்குதே?…” என எடுக்க எழுந்து செல்ல அருகே இருந்த டீப்பாயில் ஏற்கனவே காயம்பட்ட கால் பலமாக இடிக்க ஆவென்று அலறிவிட்டார் வலியில்.
“அம்மா…” என்று கத்தியவர் அழுதேவிட மெல்ல காலை இழுத்தபடி போனை எடுத்துக்கொண்டு வந்தார்.
வேதா எழுந்தமர முயன்று முடியாமல் போய் அவர் ஒருபக்கம் அழ, அனலரசு அவரின் கண்ணீரை துடைத்துவிட்டார் தனது வலியை அடக்கமுயன்றபடி.
“வேதா முகிலன் தான் கூப்பிட்டிருக்கான்…” என்று அவரே அவன் மீண்டும் அழைக்கும் முன் அழைத்துவிட்டார்.
“என்னத்தை இப்ப பரவாயில்லையா? நைட் நல்லா தூங்கினியா?…” என சரளமாக முகிலன் கேட்க,
“முகிலா…” என அழுகையுடன் கேட்ட அனலரசுவின் குரலில் மறுபக்கம் இருந்தவன் துணுக்குற்றான்.
“முகிலா எங்களை இங்க இருந்து கூட்டிட்டு போடா…” என்று கெஞ்சலுடன் தேம்பலும் கேட்க,
“மாமா, என்னாச்சு? என்ன செய்யுது? மாமா நல்லா தானே இருக்கீங்க? அத்தை அத்தை எங்க?…” என இவன் பேச இவனருகே குடும்பத்தினர் குரலும் கேட்டது.
“என்னாச்சு என்னாச்சு?…” என ஓவியாவில் இருந்து அத்தனைபேரும் பதட்டத்துடன் கேட்க உடனே கட் செய்து வீடியோ காலில் வந்துவிட்டான்.
அவன் திரையில் பார்த்தது அனலரசுவின் கண்ணீர் ததும்பிய முகத்தை தான். பார்த்ததுமே நெஞ்சை அடைத்தது.
“என்னாச்சு மாமா? அத்தை எங்க?…” என கேட்க,
“அவளுக்கு முடியலைடா. எனக்கும் என்னலாயும் முடியல. இங்க என்ன செய்யன்னு தெரியலையே?…” என சிறுபிள்ளை போல அவர் தேம்ப ஆரம்பிக்க,
“அய்யா, மருமகனே…” என சம்பந்தம் வாங்கி பேசினார்.
மாற்றி மாற்றி தைரியம் கொடுக்கும் வார்த்தைகளால் அனலரசுவை தேற்றினார்கள்.
அதற்குள் இங்கே முகிலன் தனது நண்பர்களிடம் அந்த ஏரியா நிலவரம் என்ன என விசாரித்து இங்கே அனுப்ப முடியுமா என கேட்க ஆரம்பித்தான்.
தங்களால் என்ன செய்ய முடியும் என பார்த்துவிட்டு சொல்லுவதாக அவர்களும் சொல்லிவிட அடுத்து இளங்கோவின் மூலம் அந்த காவல்துறை அதிகாரியிடம் பேசி ஒருமணி நேரத்தில் வேதாவிற்கும், அனலரசுவிற்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடிந்தது.
“மாமா, வைரல் பீவர் தான். அதனால பயப்பட ஒண்ணுமில்லை. மத்யானம் நீங்க அங்க இருந்து கிளம்பற மாதிரி இருக்கும். ரெடியா இருங்க. நான் எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன்…” என முகிலன் சொல்லவும் தான் உயிரே வந்தது.
இத்தனைக்குள்ளும் எத்தனை ஆர்ப்பாட்டம். மனதிற்கு எவ்வளவு பயம். சாதாரண காய்ச்சல் கூட இப்போதிருக்கும் கொரோனா என பயந்து அந்த பயத்திலேயே உடல்நிலை நலிந்து அப்பப்பா என அனலரசு பயந்துகொண்டு இருந்தார் இப்போதும்.
முதலில் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்னும் அளவிற்கு பயந்து போய் இருந்தார்.
தன்னுடைய உறவுகள் யாருக்கு அழைத்தாலும் விசாரிப்போடு நிறுத்திக்கொண்டார்கள்.
சாதாரண காய்ச்சல் என இவர் சொன்னாலும் நம்புவதற்கில்லை. இப்போதெல்லாம் இருமல், தும்மல் வந்தால் கூட வெளியில் சொல்ல அஞ்சிகொண்டு இருப்பவர்கள் மற்றவர்களுக்கு வந்துவிட்டால் அது இதுவாகத்தான் இருக்கும் என பட்டம் கட்டிவிடுகின்றார்கள்.
அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என அனலரசுவை வார்த்தைகளால் வகுந்தெடுத்தது தான் மிச்சம்.
போதாததிற்கு அத்தனை பேச்சுக்கள் எங்கே சென்று வாங்கி வந்தாயோ என்பதை போலவெல்லாம் பேச வெறுத்துவிட்டார்.
“இனி நல்லா இருந்தா கூட கூப்பிடலை….” என சொல்லி வைத்துவிட அவர்களும் கண்டுகொள்ளவில்லை.
ஒரு கஷ்டத்தில் தான் மனிதர்கள் யார் என்று தெரியும் என சொல்லி வைத்தது எத்தனை உண்மை என்று புரிந்தது அவருக்கு.
முகிலன் சொல்லியதை போல அவரை கிராமத்திற்கு அழைத்துக்கொண்டான். ஒவ்வொரு மாவட்டத்தை கடக்கும் பொழுது அத்தனை கட்டுப்பாடுகள்.
அத்தனையும் மீறி அவர்கள் கிராமத்திற்கு வர நேரே சென்றது தோப்பு வீட்டிற்கு தான்.
“என்னதான் நாம ஒண்ணுமில்லைன்னு சொன்னாலும் ஊர் ஜனங்களுக்கு தெரியாதே மாமா. எதுக்கு யாரோ எவரோ சொல்லி மனகஷ்டம் நமக்கு? இது நம்ம தோப்பு. யாரும் வந்து போக போறதில்லை. பதினாலு நாள் இங்க இருப்போம்…” என சொல்லிவிட்டான்.
அவர்கள் வரும் முன்னமே அனைவரும் அங்கே தங்குவதற்கு ஏற்பாடுகளும் ஆகியிருந்தது.
இளங்கோ, ஷோபா, சம்பந்தம், கமலா என அத்தனைபேரும் வந்துவிட்டிருந்தார்கள் தோப்பிற்கு.
“எல்லாரும் இங்க எங்க இருக்க முடியும்?…” என அனலரசு கவலையுடன் கேட்க,
“தோப்பு வீடு வரைக்கும் உங்களால நடக்க முடியாதுன்னு தெரியும். அதுவும் அங்க ஒரு ரூம், ஹால், கிட்சன் தான். அதான் இங்க டான்ஸ் கிளாஸ் நடக்கற இடத்துலையே தங்கிடலாம். ரோட்டுக்கு மேல. உங்களுக்கும் வசதியா இருக்கும்…” என்றான்.
அதுவும் அவர்கள் தோப்பு தான். பாக்கு தோப்பிற்கு இடையில் சிறு குடில்கள் போன்று நாட்டியத்திற்கென அமைக்கப்பட்டு இருந்தது.
பார்க்கவே அழகாய், ரம்யமாய் மனதிற்கு இதமாய் இருக்க தங்குவதற்கும் ஏற்புடையதாய் இருந்தது.
தங்களுக்காக பார்த்து பார்த்து செய்யும் அவர்களின் மேல் அந்த நிமிடம் மரியாதை கூடியது.
வேதாவிற்கு வைத்தியம் பார்க்க ஊரில் இருந்த மருத்துவரை முகிலன் சென்று அழைத்து வர அவருக்கு சாதாரண காய்ச்சல் என்பதால் வைத்தியமும் இலகுவாக இருந்தது.
அனலரசுவின் காயத்தை சுத்தம் செய்து மருந்துகட்டிவிட்டு செல்ல கமலா கை வைத்தியத்தை ஆரம்பித்துவிட்டார்.
அதிகமாக ஆள் அரவமற்ற தோப்பிற்கு மத்தியில் இயற்கையின் மடியில் சமைத்து, உண்டு, உறங்கி, உறவுகளுடன் வாழும் அந்த வாழ்வியல் புத்தம்புது பாடத்தை கற்றுக்கொடுத்தது.