“இந்த இடத்துல முன்னாடி எதுவுமே இல்லையே முகிலா…” அனலரசு கேட்டார்.
“ஆமா, முன்னாடி எதுவும் போடாம சும்மா போட்டு வச்சிருந்த நிலம் தான்…”
“யாருக்கும் குடுத்துட்டீங்களா? குத்தகைக்கா? இல்லை விலை பேசியாச்சா?…” என கேட்கவும் முகிலன் சிரித்தான்.
“எதுவும் இல்லை. நம்ம தான் சோளத்தட்டை போட்டிருக்கோம்…”
“என்னது? இதுல எப்படி?…” என ஆச்சர்யமானார்.
“ஆமா மாமா, சும்மா இருக்கிற நிலத்துல எதுவும் போடலைன்னு மண்ணை டெஸ்ட்டுக்கு குடுத்திருந்தேன். அவங்க அட்வைஸ்படி மண்ணை உழுது நம்ம தயாரிக்கிற இயற்கை உரம் மூலமா செழிம்பாக்கி இப்ப முதல் ஈடா இதை போட்டிருக்கோம்…”
“வேற எதுவும் போடவேண்டியது தானே?…”
“போடலாம் தான். ஆனா முதல்ல இதை பார்த்துருவோம். பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருவோம். இந்த சோளத்தட்டை மாடுகளுக்கு தீவனமா போடலாம். பால் நல்லா கணிசமா வரும் இதன் மூலமா…”
“நல்லாருக்குப்பா…” என்றார் முழுமனதுடன்.
செல்லும் வழியெங்கும் அத்தனை செழிம்பு. முன்பும் இருந்தது தான். ஆங்காங்கே பயன்படுத்தாமல் கைவிட்ட சில நிலங்களும் சிறுக சிறுக இடைவெளிவிட்டிருக்கும்.
இப்போது அத்தனையும் ஈடுகட்டி காய்கறி தோட்டம், சோளத்தட்டை, கரும்பு, மல்லிகை, முல்லை தோட்டம் என்று விரிவுபடுத்தி இருந்தான்.
பார்க்க பெருமிதமாகவும் இருந்தது. இத்தனை நாள் இதனை உணராமல் போய்விட்டோமே என்று நினைத்துக்கொண்டார்.
தோட்ட வீட்டிற்கு சென்றதும் பைக்கை ஓரமாய் நிறுத்த வைரா பாய்ந்துகொண்டு வந்துவிட்டான்.
முகிலனை மேல் விழுந்து சுற்றிக்கொண்டு நிற்க தள்ளி நின்றார் அனலரசு. அவருக்கு முன்புமே பயம் தான்.
பிடிக்கவும் செய்யாது. அதனால் வைரவனை பெரிதாய் தன் அருகே வர விடமாட்டார்.
“வைரா சரி சரி. இரு வரேன்….” என்று அவன் தலையில் தட்டியவன்,
“உட்காருங்க மாமா…” என்றான் முகிலன்.
தோட்ட வீடுமே பார்த்து மாதங்கள் ஆகியிருந்தது. கடைசியாய் அங்கே எப்போது வந்தோம் என யோசிக்க தாங்கள் சமைத்து சாப்பிட என வந்து முகிலனும், ஓவியாவும் தொட்டியில் விழுந்த நாள் தான் ஞாபகம் வந்தது.
இப்போது எத்தனை மாற்றம். அந்த காலி இடங்களும், வீட்டை சுற்றிய பூ செடிகளும் என ரம்யமாய் இருந்தது. அங்கிருந்து செல்லவே மனது வராது போல இருந்தது.
“இதை எல்லாம் இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேனே?…” என முகிலனிடம் சொல்லியவர்,
“கிராமம் கிராமம் தான். சிட்டி சிட்டின்னு நான் கிடந்ததுக்கு நல்லா அனுபவிச்சுட்டேன். கல்லு மண்ணும் தானே அங்க. மனுஷங்க எங்க…” என தன் போக்கில் புலம்பிக்கொண்டு இருந்தார்.
“அப்படி சொல்லாதீங்க மாமா, இத்தனை வருஷம் அங்க தானே நாம நம்ம வாழ்வாதாரத்தை வச்சிருந்தோம். எதுவும் எதுக்கும் சளைச்சதில்லை…”
“அட போப்பா. என்ன இருக்கு? இங்க மாதிரியா அங்க?…”
“மாமா, விவசாயம் எந்தளவுக்கு முக்கியமோ விஞ்ஞானமும் அந்த அளவுக்கு முக்கியம். எல்லாம் நாம வாழறதை பொருத்து தான்…” என்றவன்,
“உட்காருங்க அம்மாவும், அப்பாவும் வந்திரட்டும்…” என சொல்லி அவன் ஓவியாவை தேடி சென்றான்.
அவன் அழைத்து வர செல்லும் முன்பே எதிரே ஓவியாவே வந்துவிட்டாள் அவன் முன்னில்.
“ஜல் ஜல்லுன்னு மோகினி மாதிரி வந்து நிக்கிற…” என அவளை பார்த்ததும் கிண்டல் செய்ய,