“கொஞ்ச நாளைக்கு நீங்க அவங்களுக்காக வாழ்ந்து பாருங்களேன். கண்டிப்பா ஒரு புது வாழ்க்கைக்கான அர்த்தம் உங்களுக்கு கிடைக்கும் அதுல உள்ள சந்தோசம் உங்களுக்கும் ஒரு நிம்மதியை தரும். யோசிங்கப்பா…” என்றதும் மகளை தோளோடு அணைத்துக்கொண்டார்.
“புரியுதும்மா, வாழ்க்கையோட உண்மையான சந்தோஷம், மனநிம்மதி அப்படின்னா என்னன்னு இங்க வந்த கொஞ்ச நாள்ல என்னால உணர முடிந்தது. நீ சொன்ன மாதிரி எனக்கு வந்த கஷ்டங்கள் தான் என்னோட அகம்பாவத்தை அடக்கி இருக்கு…”
“நான் பேசி உங்களை கஷ்டப்படுத்திட்டேனாப்பா?…” என கேட்க,
“இல்லைடாம்மா…” என சொல்லவும்,
“ஓவியா…” என முகிலனின் குரல் கேட்டது.
“வா நாம போகலாம். சாப்பாடு நேரம். தேடி வந்துட்டார் உன் வீட்டுக்காரர்…” என சொல்ல,
“அப்பா உடனேவா? மாறுங்க. ஆனா சட்டுன்னு எல்லாம் எனக்கே சிரிப்பு வருது…” என கேலியாக ஓவியா சிரிக்க,
“கேட்டுட்டீங்களா?…” என ஓவியா வாயசைக்க அவனும் தலையாட்டினான்.
மூவரும் தோட்ட வீட்டிற்கு வர வாழை இலையை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட தயாராக இருந்தார்கள்.
கேரியர் வந்து சேர்ந்திருந்தது. அத்தனையும் எடுத்து பிரித்து வைத்திருந்தார்கள். எங்கே மழை வந்துவிடுமோ என்று வெளி மனையில் வைத்தே தரையில் பாய் விரித்திருந்தது.
அனலரசுவும் முகிலனும் கையை கழுவிக்கொண்டு அமர ஓவியா வேதாவை தந்தையின் அருகே அமர சொல்லி தான் பாத்திரத்தை கையில் வாங்கிக்கொண்டாள்.
இவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு மெல்ல தலை சாய்த்து வேதாவின் பக்கம் குனிந்த அனலரசு,
“ரொம்ப நல்லா வரைஞ்சிருந்த வேதா…” என்றார் சற்று கூச்சத்துடன்.
வேதாவிற்கு இன்னும் அதிசயம் அவர் பேசியதும், சொல்லியதும், சொல்லிய தினுசும். ஆவென அவர் பார்க்க அனலரசு மேலும் பேசினார்.
“ஆமா இன்னைக்கு நீ வரைஞ்ச கலரை என்ன சொல்லி கடையில வாங்கனும்? இல்லை பெயின்ட். பெயின்ட் தானே?…” என,
“ஏன் கேட்கறீங்க?…”
“இல்ல, இனி நானே கடைக்கு போறப்ப உனக்கு வாங்கிட்டு வரலாம் பாரு. அதான். பேர் சொன்னா ஞாபகம் வச்சுப்பேன். அந்த போர்ட் அதுவும் கடையில வாங்கனுமா?…” என கேட்க இன்னும் திகைத்த பார்வை தான் வேதாவிற்கு.
ஓவியா லேசாய் சைகை செய்து முகிலனிடம் இதனை காண்பிக்க ஒருவர் மாற்றி ஒருவர் என இந்த காட்சியை பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.
முகிலன் சொல்லவும் நமுட்டு சிரிப்புடன் ஓவியாவும் அவர்களை பார்க்க அத்தனைபேரின் பார்வையும் தங்கள் மீதுதான் என்பதை கண்ணுற்ற வேதாவிற்கு வெட்கமாய் போக,
“எங்கள கவனிக்கிறது தான் உன் வேலையா? ஒழுங்கா இலையை பார்த்து சாப்பிடு நீ…” என்று முகிலனை அதட்டினார் வேதா.
சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்ததும் சம்பந்தம் சொல்லிவிட்டார் நாட்டிய பள்ளிக்கு சென்றுவிடுவோம் என்று.
பெரிய மழை பிடித்துக்கொண்டால் இத்தனை பேருக்கு இந்த வீட்டில் இடம் காணாது என சம்பந்தம் சொல்ல இளங்கோவும், முகிலனும் ஆளுக்கொரு வண்டியில் மற்றவர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள்.
முதலில் ஷோபாவையும், கமலாவையும் ஏற்றிக்கொண்டு செல்ல சம்பந்தம் உணவு கொண்டு வந்தவனின் வண்டியில் ஏறிக்கொண்டார்.
அடுத்த முறையில் ஓவியாவை இளங்கோ பைக்கில் ஏற சொல்ல அவளை முறைத்து மறுப்பாய் தலையசைத்தான் முகிலன்.
“என்னம்மா நேரமாகுதே. ஏறு…” என்றார்.
“இல்லை, அப்பாவும், அம்மாவும் முன்னாடி போட்டும். அடுத்து அத்தான் என்னை கூட்டிட்டு வருவாங்க…” என சொல்ல,
“நான் ரெண்டாவது மாப்பிள்ளையை கூட்டிட்டு வருவேன். நீ வா…” என ஓவியாவை சொல்ல,
“ப்பா, அதான் வரலைன்றா தானே? நான் பார்த்துக்கறேன்…” என்றான் முகிலன் வேகமாய்.
“அப்படி சொல்ல வேண்டியது தானே?…” என சிரித்த இளங்கோ,
“என்ன மாமா, தோப்புக்குள்ள, வரப்புல ஒரு பைக் ரைட். கிளைமேட் வேற அள்ளுது. நீங்க வேணா அத்தைட்ட தனியா வண்டியை நிறுத்தி அது என்ன கலர் பெய்ன்ட்? எங்க வாங்கறதுன்னு விலாவாரியா விசாரிச்சுட்டு மெதுவா போகலாம் தானே?…” என்று சொல்ல,
“வாயை மூடு முகிலா..” என்ற வேதா,
“அண்ணே, அவர் முகிலன் வண்டில வரட்டும். நீ வண்டியை கிளப்பு…” என்றார்.
“அப்ப பைக் வேண்டாமா?…” முகிலன் இன்னும் விடாமல் வம்பிழுக்க,
“அவரால ஓட்ட முடியாதுடா. வாயை கிளறாத. ஒழுங்கா கூட்டிட்டு போ நீ…” என்று வேதா அதட்டிவிட்டு,
“பார்த்து வாங்க…” என அனலரசுவிடம் சொல்லவும்,
“ஆமாமா, பார்த்து. இல்லன்னா கீழ போட்டுட போறேன்…” என வேதாவை ஓட்டினான்.
“அடடே, அண்ணே நீ வண்டியை கிளப்பு. இருந்தா வம்புக்குன்னே பேசிட்டு இருப்பான். தூறல் போட ஆரம்பிக்குது பாரு…” என பைக்கில் நன்றாய் இளங்கோவை பிடித்துக்கொள்ள அவரும் வண்டியை கிளப்பிக்கொண்டு நகர்ந்தார்.
“சரிம்மா, பார்த்து இரு. உள்ளே போய் நில்லு…” என மகளிடம் சொல்லிய அனலரசு முகிலனுடன் ஏறிக்கொண்டார்.
அவர்களை அங்கே விட்டுவிட்டு மீண்டும் தோட்ட வீட்டிற்கு வருவதற்குள் மழை வலுவாய் பிடித்துக்கொண்டது.
தெப்பலாக நனைந்து வந்தவன் வெளியில் உள்ள கொடியில் சட்டையை கழற்றி வைத்துவிட்டு அங்கே காய்ந்திருந்த துண்டினால் தன்னை துடைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
ஓவியா ஹாலில் இல்லாது அறைக்குள் வேதா வரைந்திருந்த ஓவியத்தின் முன்பு நின்றிருந்தாள்.
அந்த ஓவியத்தின் ஒவ்வொரு இடத்திலும் இவள் தன் விரல்கொண்டு தூரிகை போல கோலமிட பின்னிருந்து அணைத்துக்கொண்டவன்,
“ஓவியமே தூரிகையாய்…” என்று கழுத்தில் முத்தமிட்டான்.
“அச்சோ நனைஞ்சதோட. தள்ளி போங்க த்தான். முதல்ல போய் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க…” என்று சொல்லவும் சலிப்புடன் உடையை எடுக்க திரும்ப கட்டிலில் சற்று முன்னர் அவள் அணிந்திருந்த உடையும், நகைகளும், பூக்களும் பரப்பி இருந்தது.
“ட்ரெஸ் மாத்தினா இதை எல்லாம் எடுத்து வைக்க மாட்டியா நீ?…” என்று முறைத்தான்.
“நான் வச்சுப்பேன். நீங்க போய் மாத்திட்டு வாங்க. சேராம போய்ட போகுது…” என்றவளின் தலையில் லேசாய் கொட்டிவிட்டு அவன் செல்ல,
“வாங்க வச்சுக்கறேன்….” என்று முறைத்தாள்.
உடை மாற்றி வர உள்ளே கிட்சனில் பால் கொதிக்கும் வாசம் வர அங்கே சென்றவன்,
“உன்னை யார் இப்ப இந்த வேலையை செய்ய சொன்னா? ரூம்ல இருக்க வேண்டியது தானே?…” என பொடுபொடுக்க,
“இண்டெக்ஷன்ல ஒரு டீ போடறது குத்தமா? சும்மா திட்டாதீங்க த்தான்…” என்றவளை தன் பக்கமாய் திருப்பி அணைத்தவன்,
“திட்டறதா? உன்னை என்ன செய்யறேன் பாரு. உன்னை யாரு உங்கப்பாட்ட போய் நான் சொன்னதை கேட்க சொன்னது?…” என்றதும்,
“அது தெரியாம பேச்சுவாக்குல வந்திருச்சுத்தான்…”
“எது தெரியாம வந்துச்சு? அவர் என்ன நினைப்பாரு? நாம சொன்னதை மகக்கிட்ட வத்தி வச்சிட்டானு நினைக்க மாட்டாரா?…”
“அத்தான்…”
“இப்பவும் இப்படி பேசராறேன்னு ஒரு ஆதங்கத்துல உன்கிட்ட ஷேர் பண்ணினா அதை நீ கட் காப்பி பேஸ்ட் பண்ணுவியா?…” என அவன் விடாமல் அவளை திட்ட ஆரம்பிக்க அவனை எப்படி நிறுத்தவென தெரியாமல் அணைத்துக்கொண்டவள்,
“தெரியாம பேசிட்டேன் சாமி. இனிமே சொல்லவே மாட்டேன். போதுமா? காது வலிக்குது த்தான்…” என்று சொல்லவும் அவளின் காதில் லேசாய் இதழ்களை பதித்து பின் அழுத்தமாய் கழுத்தில் முகம் புதைத்தான்.
“கோவம் போயிருச்சா த்தான்…” மெல்லிய குரலில் சிணுங்கலுடன் அவனை தன்னில் அனுமதித்து கேட்க,
“இன்னும் கோவமாவே இருக்கேன். டென்ஷன் ஆகுது ஓவி…” என்று அணைத்தபடி அங்கேயே சுற்றி வந்தான்.
“ஹ்ம்ம் த்தான்…” என்று அவனின் அணைப்பில் வாகாய் அடங்கிக்கொண்டவள் இன்னும் நெருங்க வெளியே பளீரென மின்னல் வெட்டியது.
“ம்மா…” என்று பதறி விலக,
“நத்திங் நத்திங்….” என்று அவளை அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்.
மழை குறைந்து தூறலாய் வேகம் இழந்திருக்க வெளியே இருந்த மாடிப்படியின் வழியே மொட்டைமாடிக்கு அழைத்து சென்றான்.
“நனைய போறோம். நான் வரலை. மின்னல் வெட்டினா கண்ணு கூசும்…” ஓவியா மறுக்க மறுக்க மேலே கூட்டிக்கொண்டு சென்றவனை தாண்டி அவ்விடத்தை சுற்றி பார்த்தவள்,
“வாவ்…” என சொல்லிக்கொண்டாள்.
“எப்படி இருக்கு இந்த சீனரி?…” என அவன் கேட்க,
“ஹ்ம்ம் சூப்பர் த்தான்….” என்று சுற்றிலும் பார்த்தாள்.
ஆள் அரவமற்ற தோப்புகளுக்கு நடுவே ஒற்றை வீட்டின் மொட்டை மாடியில் சுற்றிலும் வானாந்திரமான அற்புதமான காட்சியில் ஒரு வனம்.
கருமேகம் கூடி மாலை மயங்கி மெல்லிய இருள் படர, மழையும் தூறலுமாய் காற்றில் அசைந்தாடிய மரங்கள் நீர் சொட்ட நாட்டியமாட ஆரம்பித்த அந்த காட்சியில் மனது சிக்கிக்கொண்டது.
“பிடிச்சிருக்கா…”
“ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப…” என சொல்லி தன் இரு கைகளை விரித்து சுற்றயவளை புன்னகையுடன் ரசனையாக அவளை பார்த்திருந்தான்.
நனைந்த உடையுடன் விரிந்த கூந்தலில் ஈரம் சொட்ட பன்னீர் ரோஜாவாக மிளிர்ந்தவளின் மீதான பார்வை மாற,
“ஓவி…” என்றவனின் அழைப்பின் மாற்றத்தில் தானாகவே அவனின் கைகளுக்குள் அடங்கினாள்.
“கீழே போலாம் த்தான்…” குளிர் வேறு வாட்ட நடுக்கத்துடன் பேசினாள்.
“பெட் ஃபுல்லா உன்னோட அக்ஸசரிஸ். இடம் காலி இல்லை…” என ரகசிய சிரிப்புடன் அவளுடன் அங்கேயே சரிய,