“வேதா என்ன பேசற நீ? சரி வா கிளம்பு….” என்றார் அனலரசு.
“எங்க?…”
“தோப்புக்கு தான்…”
“நான் வரமாட்டேன்னு சொல்லிட்டேன். உங்களுக்கு பிடிக்காதுன்னு. இப்ப போய் நிக்கவா?…”
“நீ ஏன் அப்படி சொன்ன?…”
“அட என்னங்க நீங்க? இத்தனை வருஷம் வந்து போகறோம்? தெரியாமலா? அதான். அம்மா கூட சொன்னாங்க. நீங்களும், அண்ணனும் எந்திச்சா வர சொல்லி. நான் தான் அதெல்லாம் இல்லை நீங்களே உங்க வேலையை முடிச்சுட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்….”
வேதா விடாமல் பேச அனலரசுவிற்கு நிலைகொள்ளவில்லை. தன்னை கேட்காமல் எப்படி முடிவெடுக்கலாம் என கோபத்துடன் நின்றார்.
“சரி சொல்லுங்க. என்ன வேணும் சாப்பிட?…” எனும்பொழுதே இளங்கோவும் எழுந்து வந்துவிட்டார்.
“வாண்ணே, காபி தரட்டா?…” என வேதா கேட்க
“குடும்மா. என்ன வீடே வெறிச்சோடி இருக்கு? யாரையும் காணுமே?…” என அவர் கேட்க வேதா அனலரசுவிடம் சொல்லியதையே சொல்ல,
“அப்படியா? சரி நாமளும் போவோம்…” என்ற இளங்கோ,
“அம்மா இப்படி திடீர்ன்னு அங்க சாமி கும்பிடனும்னு சொல்லுவாங்க. அப்படியே மத்தியான சமையலும் அங்க தான். வாங்க மாப்பிள்ளை…” என அழைத்தார்.
“சரி அப்ப நான் போய்ட்டு வரேன்…” என சொல்ல அனலரசு தலையை பிய்த்துக்கொள்ளாத குறை தான்.
“நீங்க ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை, நான் வந்திடறேன்…” என்ற இளங்கோ,
“வேதா இப்ப மட்டும் அவருக்கு செஞ்சு குடு. மத்தியானம் அங்க சமைக்கிறதை குடுத்தனுப்பறேன்…” என உடை மாற்ற செல்ல,
“குளிக்கலையா நீ?…” என்றார் வேதா.
“அங்க போய் கிணத்துல குளிச்சுப்போம்…”
“அண்ணே, ஆத்துல தண்ணி வருது. அங்க போய் குளி. அடுத்து நாம வரப்போ சீசன் இருக்காது. தண்ணி வைத்திடும். எல்லாரும் அங்க தான் குளிப்பாங்க…”
“என்னது?…” அனலரசுவிற்கு அங்கே இருக்க முடியவில்லை.
“நீ ஏன் ஓவியை அனுப்பின?…” என முறைத்தார்.
“அண்ணே நீ கிளம்பு. நாங்க பார்த்துக்கறோம்…” என்று வேதா இளங்கோவை அனுப்ப,
“இல்ல இல்ல. கிளம்பு. நாம மட்டும் இங்க இருந்து என்ன செய்ய போறோம்?…” என அனலரசு சொல்லவும் இளங்கோவிற்கு அத்தனை மகிழ்ச்சி என்றால் வேதாவிற்கு ‘அப்படி வா வழிக்கு’ என்னும் நக்கல் சிரிப்பு.
“வேதா உனக்கும், மாப்பிள்ளைக்கும் துணி எடுத்து வை…” என இளங்கோ சொல்ல,
“அங்க குளிக்கவா? நான் குளிச்சுட்டு வரேன். இருங்க…” என சொல்லி செல்ல,
“அவரை விடுண்ணே, நீ போய் எடுத்துட்டு வா. நானும் இன்னொரு உடுப்பு எடுத்து வைக்கறேன். அங்க போய் பேசிக்கலாம்…” என சொல்லி கிளம்பி வர தோப்பிற்கு மூவரும் வந்து சேர்ந்தார்கள்.
அங்கே தடுமாறி நடப்பது அனலரசுவிற்கு பிடிக்காத ஒன்று. என்ன பாதையோ என ஏதேனும் சொல்லிக்கொண்டே தான் நடப்பார்.
அத்தகையை சமயங்களில் இளங்கோவிற்கு கூட எரிச்சல் எட்டிப்பார்க்கும். இதென்ன இயற்கையை கூட ரசிக்காத மனிதன் என்று தோன்றும்.
“இங்க எல்லாம் ரோடு போடமுடியாதே மாப்பிளை…” என நக்கலுடன் தான் சொல்வார் இளங்கோ.
“என்ன கிண்டலா?…” என கேட்டு அங்கே செல்வதையே ஓரளவு தடுத்துவிடுவார் அனலரசு.
இப்போது கிளம்பி வந்திருக்க வரும் பாதை எல்லாம் குறை சொல்லிக்கொண்டே நடக்க தோப்பிற்கு வந்த சந்தோஷமே போய்விட்டது இளங்கோவிற்கு.
அதற்குள் தெரிந்தவர் ஒருவர் இளங்கோவை பார்த்துவிட அனலரசுவையும் நலம் விசாரிக்கவும் அவர் பதில் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொள்ள,
“வேதா நீயும் மாப்பிள்ளையும் முன்னால நடங்கம்மா. நான் பேசிட்டு வரேன்….” என அவர்களை அனுப்பி வைத்தார்.
தனியே சென்றேனும் நிம்மதியாய் சென்றுவிடலாம் என பேச்சுவார்த்தையில் இளங்கோ நின்றுவிட அனலரசுவின் பேச்சு இப்போது வேதாவிடம்.
“இதுக்குத்தான் உங்க ஊருக்கு வந்தா தங்கறதே இல்லை. தங்கினாலே ஏடாகூடம் தான்…”
“ரொம்ப கஷ்டமா இருந்தா வாங்க வந்த வழில திரும்பிருவோம். இன்னும் இதுமாதிரி மூணு பங்கு நடக்கனும்…”
“எல்லாம் உன்னை சொல்லனும். என்னை அப்பவே எழுப்பிருக்க வேண்டியது தானே?…” என திட்ட,
“உங்களுக்கு தான் தூக்கத்துல எழுப்பினா கோவம் வருமே?…” வேதா சொல்ல தன்னுடைய அத்தனை குணங்களையும் இப்பொது சொல்லி காண்பித்ததில் இன்னும் எரிச்சலுடன் நடந்தார் அனலரசு.
“எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லு…” என திட்டிக்கொண்டே வர தோப்பிற்கு வந்து சேர்ந்தார்கள்.
முகிலனும், ஓவியாவும் பேசியபடி கமலாவுக்கு உதவி செய்துகொண்டு இருந்ததை தூரத்திலேயே பார்த்துவிட்டார் அனலரசு.
நடை வேகமெடுக்க விறுவிறுவென அவர் வந்த வேகத்தில் அனைவருமே யார் என நிமிர்ந்து பார்த்தனர்.
“வாங்க மாப்பிள்ளை…” என கமலா எழுந்து நிற்க,
“உட்காருங்க. முகிலா அந்த கட்டிலை எடுத்து இங்க போடுப்பா…” என்றார் ஞானசம்பந்தம்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” என்றவர் தோப்பில் வேலை செய்பவர்களும் சுற்றி இருக்க அவர்கள் முன்னிலையில் வைத்து எதுவும் பேசவேண்டாம் என பல்லை கடித்தபடி முகிலன் எடுத்து போட்ட வயர் கட்டிலில் அமர்ந்துவிட்டார்.
“வேதா எதாச்சும் சமைச்சு குடுத்தியா?…” என மகளிடம் கேட்க,
“ஓவியா நீ அப்பாவுக்கு சாப்பாடு எடுத்து வை. நான் போய் அத்தைக்கு உதவறேன்…” என சொல்லி அங்கிருந்து சென்றுவிட முகிலன் கோழியின் இறக்கையை எடுத்துக்கொண்டு இருந்தான்.
“முகிலா அதை அப்படியே மஞ்சளை தடவு. நீயே வாட்டிரு….” கமலா சொல்ல,
“நான் பார்த்துக்கறேன் பாட்டி. நீ அங்க கவனி…” என வேலையில் கவனமாக இருந்தான்.
அனலரசுவை வாங்க என்று கூட அழைக்கவும் இல்லை. பேசவும் இல்லை. திரும்பி பார்க்கவும் இல்லை.
‘இவன் என்ன என்னை மதிக்கலை?’ என கோபத்துடன் பொருமிப்போய் பார்த்துக்கொண்டு இருக்க அவன் கண்டுகொள்ளவே இல்லை.
“ஏன் ஓவி, அப்பாட்ட சொல்லிட்டு வரமாட்டியா?…” என மகளிடம் அந்த கோபத்தை காட்ட முகிலனுக்கு அத்தனை எரிச்சல்.
அவள் பதில் சொல்லமுடியாமல் முறைத்த தந்தையை கண்டு கையை பிசைந்துகொண்டே நிற்க முகிலனுக்கு இன்னுமே கோபம்.
“அப்பாட்ட சொல்லிட்டு வரனும்னு தெரியாதா உனக்கு? இதுக்குத்தான் இங்க கூட்டிட்டு வரனும்ன்னா எனக்கு பிடிக்கவே இல்லை. அடுத்து வரனும்னு சொல்லு, பேசிக்கறேன்….” என சொல்ல ஓவியாவின் விழிகள் கலங்கி விட்டது.
முகிலனுக்கும், கமலா பாட்டிக்கும் தெளிவாக கேட்டாலும் ஒன்றும் சொல்லமுடியாமல் போக முகிலனின் பொறுமை பறந்தது.