அனலரசுவின் அதிர்ந்த முகத்தில் இளங்கோவிற்கு ஒன்றும் புரியாமல் போக அவரருகே வந்து அமர்ந்தார்.
“பேசிட்டு வர லேட்டாகிருச்சு மாப்பிள்ளை…” என்ற இளங்கோ,
“ம்மா சாப்பாடு என்ன வச்சிருக்கீங்க?…” என்றார்.
“இட்லி ஊத்திருக்கேன், சாம்பார் இருக்கு. சட்னி இருக்குது. இப்ப எடுத்து வைக்கறேன்…” என கமலா அமைதியாக எடுத்து வைக்க,
“ஓவி நீ எடுத்து வை. பாட்டியாலா எழுந்திக்க முடியலை…” என்றான் முகிலன்.
இப்போது இளங்கோவும் ஆச்சர்யமாக பார்க்க அவன் கண்டுகொள்ளவே இல்லை.
“மதியத்துக்கு கோழியா?…” இளங்கோ பொதுவாய் கேட்க,
“ஆமாப்பா. கிணத்துல இறங்கி மீனை புடிக்க சொல்லிருக்கேன். அதையும் வச்சிருவோம்…” கமலா சொல்லவிட்டு இட்லி பாத்திரத்தை தூக்கிவிட அங்கே முகிலன் வந்து அமர்ந்து கோழியை வாட்ட ஆரம்பித்தான்.
“ஓவி இலையை தட்டு மேல வச்சு இட்லியை வை. சாம்பாரை எடுத்து ஊத்து. சட்னியை கேட்டுட்டு வை…” என கமலா சொல்லவும் கட்டிலில் இருவருக்கும் தட்டை வைத்து அதன் மீது நறுக்கி வைத்திருந்த இலையை எடுத்து வைக்க,
“நீ போய் அம்மாவை வர சொல்லு…” என அனலரசு சொல்லவும் ஓவியாவும் சென்றுவிட இளங்கோ சாப்பிட ஆரம்பித்தார்.
ஓவியா சென்று ஐந்து நிமிடத்திற்குள் வேதா வேகமாய் கையை துடைத்துக்கொண்டே வரவும் அவரையும் முறைத்தபடியே மௌனமாய் சாப்பிட்டவரை ஒன்றும் கேட்காமல் பரிமாறினார் வேதா.
“முகிலா அதை அப்படியே வெட்டி ஓரமா வை. மசால் ரெடின்னா அடுப்பை அணைக்காம அப்படியே குழம்பை கூட்டி வச்சிருவோம்…” கமலா சொல்ல,
“ம்மா, நான் வெட்டுறேன்…” என வேதா வந்து அமர்ந்துவிட்டார்.
“முகில் நீ போய் மீன் புடிச்சாச்சான்னு பாரு. அப்படியே இந்த வெங்காயத்தையும் நைய்ய நறுங்க தட்டி கொண்டுவர சொல்லி சொல்லிரு…” என முகிலிடம் சொல்ல,
“நீ போய் குடு. அவன் கிணத்துக்கு போட்டும்…” அதற்கும் முட்டுக்கட்டை போட்டார் அனலரசு.
“அத்தை அதை என்கிட்டே குடுங்க…” என அந்த கிண்ணத்தை வாங்கிக்கொண்டு சென்றான் முகிலன்.
வேண்டுமென்றே தான் செய்கிறான் என நன்றாகவே புரிந்தது. ஆனால் ஏன் இத்தனை நாள் இல்லாமல் இப்போது என குழப்பத்துடனும் பார்த்திருக்க மீண்டும் வந்தவனிடம் நேரடியாக கேட்காமல் இளங்கோவிடம் ஆரம்பித்தார் அனலரசு.
“இருந்திருந்து எவ்வளோ நாள் கழிச்சு தோப்புக்கு வந்திருக்கேன். மரியாதை ஒன்னும் சரியா இருக்கிற மாதிரி தெரியலையே மச்சான்?…” என இளங்கோவை கேட்க,
“என்ன மாப்பிள்ளை? என்ன சொல்றீங்க?…”
அப்போதுதான் உணவை முடித்து இருவரும் அமர்ந்திருந்தார்கள். கட்டிலை அடுப்பை விட்டு தள்ளி போட்டிருக்க அனலரசு சத்தமாக குடும்பத்தில் எல்லோருக்கும் கேட்கவேண்டும் என்றே பேசினார்.
“இப்ப என்னவாம் உன் புருஷனுக்கு?…” கமலா பாட்டிக்கு பொடுபொடுவென வந்தது.
ஓவியாவும், ஷோபாவும் அரைத்த மசால்களுடன் வந்துவிட இதை அவர்களுமே கேட்கத்தான் செய்தார்கள்.
“அங்க என்ன வேடிக்கை? ஓவி மீன் குழம்புக்கு வெங்காயத்தை உரிச்சு வை. அண்ணி தனியா உரிக்கிறாங்க…” என்றார் வேதா.
எப்படியும் வீட்டிற்கு சென்றோ, ஊருக்கு சென்றோ பெரிய சண்டை இருக்கிறது உறுதியாகிவிட அதை நினைத்து இங்கே இந்த சந்தோஷத்தை இழக்க வேண்டுமா?
போடுகிற சண்டையை வலுவாகவே போய் போட்டுக்கொள்வோம். இங்கே விட கூடாது என்பதை போல அனலரசுவின் கோபத்தை ஊதித்தள்ள காத்திருந்தார் வேதா.
“என்னண்ணே, என்ன சொல்றீங்க? இங்க சொல்லாம வந்துட்டோமேன்னு வருத்தப்படறீங்களா?…” ஷோபா கேட்டதும்,
“வருத்தப்பட இங்க என்ன ஒண்ணா ரெண்டா? வந்ததுல இருந்தே அதான…” என்று சொல்ல அனைவருக்கும் சுருக்கென்று இருந்தது.
சம்பந்தம் அனலரசு வரவும் வரவேற்றுவிட்டு அவ்விடத்திலிருந்து கிளம்பியிருந்தார். சாப்பிடும் நேரத்திற்கு வந்துகொள்வோம் என்று.
மற்றவர்கள் எல்லாம் கூடி இருக்க அனலரசுவிற்கு தன்னுடைய சம்மதமின்றி எப்படி இவர்கள் வரலாம் என்னும் அகம்பாவம் தலைதூக்கியது.
வீட்டு மருமகன் தான் வந்திருக்க தன்னிடம் சொல்லாமல் குடும்பத்துடன் தோப்பிற்கு வந்து இருந்துகொண்டதும் இல்லாமல், வந்த என்னை இவன் மதிக்கவும் இல்லையே என முகிலனை பார்த்தார்.
இபோதே இப்படி இருந்தால் பின்னாளில் இன்னும் அலட்சியமாகிவிடும் என அவனை கடும் பார்வையுடன் பார்த்தார்.
அனலரசுவிற்கு இன்னும் தான் அந்த வீட்டின் மருமகனாக வரும் போது முகிலன் எப்படி இருந்தானோ அப்படி இருந்ததை போலவே இப்போதும் இருக்கவேண்டும் என்ற எண்ணம்.
“என்னண்ணே நீங்க? இங்க உங்க முடிவை கேட்காம என்ன நடந்திருக்கு? திடீர்ன்னு தோப்புக்கு வரவும்…”
“நீ இரு ஷோபா…” என்ற இளங்கோ,
“என்ன மாப்பிள்ளை, இது சின்ன விஷயம். இதுக்கெல்லாம் சங்கடப்படலாமா? நான் பேசிக்கறேன்….” என வழக்கம் போல தாங்கி பேசினார்.
“நீங்க சொல்றீங்க? நானும் நம்ப குடும்பம்னு தான் பேசாம இருந்தேன். வந்த என்னை இவன் என்னனு கூட கேட்கலை. இப்ப வரைக்கும் எதாச்சும் வேணுமான்னு பார்த்தானா?…”
அனலரசு கோபத்துடன் முகிலனை இழுத்துவிட அனைவரும் அவனை தான் பார்த்தனர்.
பெரிதாய் அவன் ஒன்றும் பேசிவிடமாட்டான். வழக்கம் போல மௌனமாகவே இருப்பான் என நினைத்திருக்க,
“என்ன முகில்?…” என்ற தந்தையின் கேள்வியில்,
“என்ன முகிலன்னா? எல்லாரும் ஒண்ணா தானே ஊர்ல இருந்து கிராமத்துக்கு வந்தோம்? வீட்டுல இருந்து தானே இங்க வந்தீங்க? இதுல என்ன தனியா வரவேற்க?…” என்றுவிட்டான் வெடுக்கென்று.
“முகிலா…” இளங்கோவும், ஷோபாவும் ஒரே சேர அழைக்க அவனின் பேச்சில் மற்றவர்கள் விழிகள் விரிந்தது.
“நேத்து நான் கூடத்தான் வந்தேன். என்னை யாரும் இங்க வரவேற்க இல்லைன்னு கோவிக்கவா செஞ்சேன். இதென்ன அடுத்தவங்க தோப்பா வாங்க வாங்கன்னு கம்பளம் விரிக்க?…” என வேகமாய் சொல்லிவிட்டு முறைத்துக்கொண்டே தான் நின்றான்.
அத்தனைபேரும் வாயடைத்து போனார்கள் ஓவியா உட்பட. இல்லை இவன் பழைய முகிலனே இல்லை என்னும் விதமான உடல்மொழி.
எத்தனை நாள் தான் அவனும் அடங்கியே இருப்பது? அதுவும் எது இப்படி இவனை மாற்றியது?
எப்போதும் அமைதியாக கடந்து செல்பவனுக்கு இன்றைக்கு என்னவாகிற்று? என ஆளாளுக்கு ஒவ்வொருவிதமான யோசனைகள்.
எப்போதும் இப்படியான பேச்சுக்களில் மௌனமாக நிற்பான், இல்லை அந்த இடத்தில் நிற்கவே மாட்டான்.
இப்போது என்னவென்றால் திமிராய் நின்றதும் அல்லாது முறைப்பும் சேர்ந்திருக்க அனலரசு கொதித்து போனார்.
“என்ன வேதா நீயும் அவன் பேசினது சரின்னு சொல்ற? என்னை…”
“இருங்கங்க. அவன் என்ன சொன்னான்? இது நம்ம தோப்பு. அதுக்கு எதுக்கு அடுத்தவங்களை வரவேற்கிற மாதிரி கூப்பிடனும்னு சொல்றான். அதை தான சொல்ல வந்தான்…” என்றவர்,
“என்ன முகிலா நான் சொல்றது சரிதானே?….” என திரும்பி பார்த்து கண்ணடிக்க அத்தையின் ஆட்டத்தில் கலந்துகொள்வதை போல ஆமாம் என ஆமோதித்தான்.
“பின்ன…” என முகிலன் சொல்லவும்,
“பார்த்தீங்களா? என்னவோ சொன்னீங்க. அப்பறம் என்னை உங்க தோப்புல யாரையோ போல நடத்துனீங்கன்னு நாளைக்கே ஒரு பேச்சுக்கு நீங்க சொல்லிட்டா? அதுக்குத்தான் முகில் அப்படி பேசிட்டான். பாவம் கோழியை உரிச்சு கையெல்லாம் வலிச்சிருக்கும்…” என்ற வேதா,
“முகிலா நீ போ. போய் மீனை பிடிச்சுட்டு வா. உன் மாமாவுக்கு கோழியை விட மீன் தான் புடிக்கும். உனக்கு தெரியும்ல…” என்றதும் தலையை அசைத்துவிட்டு அனலரசுவை பார்த்துக்கொண்டே வேஷ்டியை மடித்துக்கட்டி அங்கிருந்து வேகமாய் சென்றான்.
“சினிமா வில்லன் மாதிரி இருக்கு, ஆளும், தலையும், நடையும்…” என முணுமுணுத்துவிட்ட அனலரசுவின் குரல் இளங்கோவிற்கு கேட்க அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
அதை கவனியாத அனலரசு வேதாவின் மழுப்பலையும், முகிலனின் கோபத்தையும் நினைத்து எரிச்சலுடனே அமர்ந்திருந்தார்.
இளங்கோவிற்கு மகனை இப்படி தன் முன்னே விமர்சித்தது ஏற்புடையதாக இல்லை.
இதற்கு முன்பும் முகிலனை இது ஏன், எப்படி என கேட்டு மாற்ற சொல்லும் நேரம் எல்லாம் அக்கறையாக தோன்றியது முதன் முதலில் தவறாக தோன்ற ஆரம்பித்தது.
அன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் தான் ஆரம்பித்திருந்தது.
கிணற்று அருகே சென்றவன் உள்ளே பார்க்க தண்ணீர் அடியில் இருந்தது. அங்கே ஒருசிலர் உள்ளே இருந்தார்கள்.