“ஆமா வெளிநாட்டுக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணுன்னு சொன்னேனே போனவாட்டி வந்தப்ப? உன்னோட ஆபீஸ்ல கேட்டியா?…” ரகசியமாக சம்பந்தம் கேட்க முகிலனுக்கு சிரிப்பு வந்தது.
“இல்லையே?…” என்றான் அவனும் அதே போல.
“அட போடா…” என்று அவர் சலித்துக்கொண்டார் இப்போது.
“புரிஞ்சுக்க தாத்தா, இப்போ நினைச்சா நான் கிளம்பி இங்க வந்திரலாம். ஆனா பாரின் போய்ட்டா அத்தனை ஈஸியா வர முடியாது. அதான் நான் கேட்கலை…”
“பொழைக்க தெரியாத புள்ளைடா நீ. நம்ம சஞ்சய்யை பாரு. கமுக்கமா இருந்துட்டு பாரின் போக ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கான்….” எனவும் முகிலனுக்கு இன்னுமே புன்னகை தான்.
சஞ்சய் விட்டால் போதும் என்னும் விதமாக ஆபீசில் இருந்து ஸ்டேட்ஸ் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.
இல்லை என்றால் இந்தியாவிற்குள்ளேயே அவர்கள் கம்பெனியின் வேறு கிளையில் மாற்றல் வந்தாலும் போதும் என்னும் விதமாக.
இந்த மொட்டை அடிக்கும் வைபவத்திற்கு வராமல் இருப்பதன் காரணமும் முகிலனுக்கும், சம்பந்தத்திற்கும் தெரியும்.
இந்த மூன்று நாட்களேனும் நிம்மதியாக இருந்துகொள்கிறேன் என சொல்லி வேலை இருக்கிறது, விடுமுறை இல்லை என வீட்டினரை அனுப்பியிருந்தான்.
ஆனால் அதையும் தாண்டிய உண்மை காரணம் முகிலன் மட்டுமே அறிந்தது. சஞ்சயின் காதல் விஷயம்.
“எனக்கும் வர ஆசைடா முகி. ஆனா எங்கப்பா இல்லைன்னா நான் தான் முதல் ஆளா அங்க வந்திருப்பேன்…” என சொல்லியவனுக்கு பெஸ்ட் விஷஸ் சொல்லியிருந்தான் முகிலன்.
“சும்மா தான் தாத்தா. என்னையே நீங்களும் ஏன் பார்த்துட்டே இருக்கீங்க?…” என்றான்.
“நானும் சும்மா தான்…” என சொல்லவும் இருவரும் சிரிக்க ஓவியா வந்துவிட்டாள் அங்கே.
“என்னம்மா?…” என சம்பந்தம் கேட்க,
“மீன் பிடிச்சாச்சுன்னா வாங்கிட்டு போக வந்தேன்…” என்றவள் முகிலனை பார்க்க அவன் கால்களை ஆட்டியபடி,
“ஏன் உங்கப்பாவுக்கு அப்படியே வைக்கவா? அவசரம் போகுது? அவர் வச்ச ஆளா? உடனே இந்தான்னு நீட்ட?…” என்றான் நக்கலாக.
“உங்களுக்கு என்னாச்சுத்தான்? இன்னைக்கு ஏன் இப்படி பேசறீங்க? நீங்க இப்படி எல்லாம் பேச மாட்டீங்களே?…”
“உனக்கும் அதான் பிரச்சனையா?…” என கேட்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
“என்னம்மா?…” பேத்தியின் முகத்தை கண்டு சம்பந்தம் கேட்க நடந்ததை விவரித்தாள்.
“ஹ்ம்ம், அவனும் எவ்வளவு தான் பொறுமையா இருப்பான்?…”
“இப்ப என்னை கோவிச்சுட்டு போறாங்க…”
“நீ போய் சமாதானம் பண்ணு…”
“அச்சோ அப்பா பார்த்தா தொலைஞ்சேன்…” பதறினாள் அவள்.
“மீன் தான வாங்க வந்த? கேட்டா சொல்லிக்கலாம். என்கிட்டே பேசிட்டு இருந்தேன்னு சொல்லு. போய் அவன்கிட்ட பேசு. ஊருக்கு போய்ட்டா திரும்ப எப்ப பார்க்க போறீங்க?…”
அவர் சொல்வதும் உண்மை தானே? ஒரே ஊர். அத்தனை தொலைவில் இல்லை அவர்கள் வீடும். ஆனாலும் முகிலனை பார்ப்பது அரிது.
பார்க்கவேண்டும் என முயற்சி எடுத்தாலாவது எப்படியும் பார்த்துவிடலாம். ஆனால் எதற்கு என பார்க்க வேண்டாம் என இருக்க அதற்கான வாய்ப்புகள் என்பது இல்லாமலே போனது.
எப்போதாவது பார்த்தாலும் சிறு புன்னகை, ஓரிரு வார்த்தைகள். அனலரசு இருந்தால் தான் ஒருத்தி இருப்பதையே அவன் மறந்துவிடுவான்.
என்ன வாழ்க்கை? திருமணத்திற்கு பின்னும் இப்படி தானோ? என்று தோன்றாமல் இல்லை.
அவனிடத்தில் ஆர்வமான பார்வைகளையும், ஆசையான வார்த்தைகளையும் கேட்க தவித்திருக்க உரிமையான பார்வைக்கு கூட பஞ்சம் தான்.
கேட்டால் உன் அப்பாவால் என முடித்துவிடுவான். இப்படி ஒரே நேரத்தில் எப்போவாவது ஊருக்கு வரும் நேரம் தான் பேசவும் முடியும்.
தேட வேண்டியவனே தள்ளி நிற்க தான் முயன்று என்ன செய்வது என ஓவியாவும் சில நேரம் சலித்துக்கொள்வாள்.
இந்த முறை முகிலனின் கோபமான முகம் வேறு கிளம்பி இங்கே வந்ததில் இருந்து அலைகழித்துக்கொண்டு இருந்தது அவனுக்கு என்ன பிரச்சனையோ என்று.
பம்புசெட்டில் தண்ணீர் வாரி இறைத்தபடி ஓடிக்கொண்டிருக்க அதன் அருகே உள்ள தொட்டியில் அமர்ந்திருந்தான் முகிலன்.
“கோவமா த்தான்?…” ஓவியா தேடி வர திரும்பி பார்த்தான்.
“ஏற்கனவே உங்கப்பா அங்க அடுப்புல உட்காராத குறையா பேசிட்டு இருக்கார். இதுக்கே ஊருக்கு போகவும் இருக்கு வேடிக்கை. இப்ப நீ என்னோட தனியா நின்னு பேசறதை பார்த்தாருன்னா…” என்று சொல்லவும் எதையும் யோசிக்காமல் அவனருகே அமர்ந்துவிட்டாள் அவள்.
“ஓவி…” என திகைத்து அவன் இறங்க பார்க்க,
“இங்க இருந்து போனீங்க, அப்படியே உள்ள குதிச்சிருவேன்…” என்றாள் கோபத்துடன்.
“ஹேய் என்ன பேசற நீ? நான் ஏதோ…”
“ஒன்னும் தேவை இல்லை. எப்ப பார்த்தாலும் அப்பா அப்பான்னு பேசிட்டே இருக்கீங்க? அப்போ அவர் நீங்க இப்படி முறைச்சுட்டு பிரச்சனை பன்றதால என்னை குடுக்க மாட்டேன்னா விட்டுடுவீங்களா?…” என கேட்க முகிலனிடம் பதிலில்லை.
அவள் வந்து அமர்ந்ததே அதிர்ச்சி என்றால் இப்போது பேசும் பேச்சும், அதன் பொருளும் அவனை தாக்கியது.
இல்லை என மறுக்க கூட முடியாமல் அவன் அமர்ந்திருக்க அதுவே ஓவியாவை காயப்படுத்தியது.
“உடனே அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்னு சொல்லமாட்டீங்க இல்லையா அத்தான்?…” என்றாள் கண்ணீர் நீர் தேங்க.
“ச்சே, ச்சே. நீ ஏன் அப்படி யோசிக்கிற?…” என்றான் உடனே தன்னுணர்வு வந்து.
“என்னோட அப்பா அப்பான்னு பார்த்துட்டு என்னை பக்கத்துல கூட வர விடாம, நீங்களும் தள்ளியே இருக்கீங்க. எனக்கு எதுக்கு நமக்கு கல்யாணம் பேசினாங்க? எதுக்கு இப்படி நடத்துறாங்கன்னு எரிச்சலா இருக்கு. சாதாரண பேச்சு கூட இல்லை…”
“பேசினா தானா? என்ன இது? நீ என்ன குழந்தையா? உனக்கு என்னை தெரியாதா ஓவி?…”
“இல்லை. எனக்கு உங்களையும் தெரியாது. உங்களுக்கு என்னையும் தெரியாது. நமக்கு கல்யாணம் நடந்தா எப்படி இருக்கும்ன்னு கூட தெரியாது…” உடைந்த குரலி அவள் பேச முகிலனை சுட்டது.
நான், எனக்கு, என் நிம்மதி, என்னுடைய பெயர் என இருந்து இருந்து ஓவியாவை காயப்படுத்தியிருப்பதை உணர்ந்துகொண்டான்.
ஆனால் அதனை சரி செய்ய முடியுமா என அவனுக்கே தெரியாதபட்சத்தில் அவளிடம் எப்படி சொல்ல? யோசனைகளை சூழ அவளின் கண்ணீரை பார்த்தபடி இருந்தான்.
“சும்மா தான் பேச வந்தேன். ஆனா நீங்க இன்னைக்கு…”
“நானும் பொறுமையா இருக்கேன். ஆனா உன் அப்பா விடமாட்டேன்றார்…”
“நான் ஒன்னும் அப்பாவை பேசினதுக்கு சொல்லலை. நீங்க ஏன் அப்பாவையே நினைச்சுட்டு இருக்கீங்க? எனக்கு இதுதான் பிடிக்கலை…”
“ஓகே, உன்னை நினைக்கறேன். உன் கூட சகஜமா பேசறேன். எனக்கென்ன ஆசை இல்லையா? கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணுட்ட பேசாம தள்ளி நிக்கனும்னு வேண்டுதலா?…” என்றான் சின்ன சிரிப்புடன்.
“நிஜமா?…”
“ஆமா, சத்தியமா. ஆனா நீயும் பேசனுமே?…”
“இப்போ பேசிட்டு தானே இருக்கேன்?…”
“ம்ஹூம், இங்க இல்லை. தனியா இல்லை. எங்கயும். எப்பவும். முடியுமா?…” என கேட்க திகைத்தாள் ஓவியா.
“இதுதான் இந்த ரீசனுக்கு தான் தள்ளியே இருக்கேன். இன்னும் கொஞ்சம் நாள் கல்யாணம் ஆகட்டும். அதுக்கப்பறம் யார் கேட்பா?…”
ஓவியா அமைதியாகிவிட்டாள். அவனின் பேச்சின் நியாயமும் புரிந்தது. ஆனாலும் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை.
“என்னால உனக்கும் கஷ்டமா போய்டும் ஓவி. இப்போ கூட உன்கிட்ட நான் உரிமையா பேசலாம். ஆனா அதுக்கப்பறம் உனக்கான ரிஸ்ட்ரிக்ஷன் ஜாஸ்தி ஆகிடும். உன்னை படுத்துவார் உங்கப்பா. அந்த கஷ்டம் உனக்கு வேண்டாம்ன்னு பார்க்கறேன்…” என்றவன்,
“என்ன புரியுதா?…”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்?…” என அவளை போலவே சொல்லி,
“உன்னோட நிறைய பேசனும்னு தான் ஆசை. ஆனா ஒருதடவை பேசிட்டா அதுக்கப்பறம் தினமும் பேசனும்னு தோணும். பேசலாம். உன்கிட்டதானே பேச போறேன்? அப்பறம் என்ன?…”
“ஓகே த்தான். புரியுது. கோவமா பேசிட்டேன்ல?…”
“அதெல்லாம் இல்லை. ஆனா எனக்கு பிடிச்சிருக்கு நீ இப்படி பேசினது. ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்…” என்று முகிலன் சிரிக்கவும் அவனின் கையில் கிள்ளியவள்,
“உங்களுக்கு இன்னைக்கு என்னவோ ஆகிடுச்சு த்தான்…” என்றபடி துள்ளி இறங்கும் முன் தடுமாறி பின்னால் தொட்டிக்குள் விழ அவளை பிடிப்பதற்குள் அவனும் சேர்ந்து விழுந்தான்.
தண்ணீர் வேறு அந்த பெரிய குழாயில் இருந்து அடித்துக்கொண்டிருக்க மேலே எழும்பும் முன் மூச்சு முட்டிவிட்டது. முகிலனை பிடித்துக்கொண்டே எழுந்து நிற்க கழுத்து வரை நீர் அமிழ்த்தியது.
“ஓவி அடி எதுவும் படலையே?…” என்றான் முகிலன் தன் முகத்தின் தண்ணீரை வழித்துவிட்டு.
“இல்லை இல்லைத்தான்…” என்றவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை.
இப்படியே வெளியே சென்றால் என்னவென்று கேட்பார்களே? என்ன பதில் சொல்ல என நினைக்க,
“கையை பிடிச்சுக்கோ. மேல ஏறு…” என்று முகிலன் அவளை தொட்டியிலிருந்து தூக்கிவிட பார்க்க தொட்டிக்குள் இருந்த பாசி காலை வழுக்கியது.
“நானே தூக்கி விடறேன்…” என்று இடுப்பை பிடித்து தூக்கி தொட்டியின் கைப்பிடி சுவற்றில் அமர்த்தினான்.
ஆளுயர தொட்டி அது. தண்ணீர் ஒருபுறம் வெளியேறிக்கொண்டே இருந்தாலும் நிரம்பியே தான் இருந்தது.
முகிலனும் தம்க்கட்டி அதில் இருந்து வெளியே குதிக்க எதிரே தொட்டியை சுற்றி குடும்பத்தினர் சற்று தள்ளி.
பார்வையால் இவர்களை பொசுக்கியபடி அனலரசு வேறு நின்றிருக்க ஓவியா நடுங்கி போக முகிலன் ‘அட இதேதடா?’ என்பதை போல தான் பார்த்தான்.
அடுத்த உரசல் மாமனார் மருமகனுக்கிடையே. இதை எப்படி சமாளிக்கவென குடும்பத்தினர் பார்த்து நிற்க அனலரசுவின் முறைப்பிற்க்கு சளைக்காத பார்வையை கொடுத்தான் முகிலன்.