அன்று வார இறுதி நாள். அனலரசு குடும்பத்துடன் கிளம்பி இருந்தார் கிராமத்திற்கு.
முகிலனின் வேலை விஷயம் அனலரசுவிற்கு தெரிந்து அவரால் உடனே கிளம்பிவர முடியாத நிலை.
ஆனால் இளங்கோவின் வீட்டிற்கு சென்று ஆடி தீர்த்திருந்தார். என்னவோ தான் பெற்ற மகனே வேலையை விட்டு நின்று குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டதை போன்ற ஆவேசம்.
“இதுக்குத்தான் இவனை படிக்க வச்சீங்களா? பாருங்க எத்தனை பெரிய முடிவை அசால்ட்டா எடுத்திருக்கான்னு…” இளங்கோவிடம் எகிறினார் அனலரசு.
“மாப்பிள்ளை, கொஞ்சம் அமைதியா இருங்க. அவன் ஊருக்கு போயிருக்கான் தானே? விசாரிப்போம்…”
“என்னத்தை விசாரிக்க? கொஞ்சமும் பொறுப்பு வேண்டாம். இதென்ன சின்ன பிள்ளைங்க கடைக்கு போகலாம்ன்ற விவகாரமா? வாழ்க்கை, எதிர்காலம். இது இவனோட முடிஞ்சு போறதா என்ன?…”
அனலரசுவிற்கு தாங்க முடியவில்லை. ஏமாற்றம். மிகப்பெரும் ஏமாற்றம். முகிலனுக்கு அந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததுமே அப்படி ஒரு பெருமை.
மகனுக்கும் வாங்க இருந்த வேலை. அவனுக்கு கிடைக்காமல் போக அதற்கு ஒருபாடு சஞ்சய்யை திட்டி தீர்த்தார்.
முகிலன் அளவிற்கு சஞ்சய் படிக்கவில்லை, திறமை இல்லை என மகனை அத்தனை பேசினார்.
மகளுக்கு முகிலன் தான் என்பதில் அவருக்கு என்றும் மாற்றம் இருந்ததில்லை. கைக்குள் வளர்பவன், இளங்கோவை போலவே அவனும் அடங்கி இருப்பான் என முகிலனை அவர் தேர்ந்தெடுத்துவிட்டார்.
அப்படியே அவனும் அமைதியாகவே இருக்க படிப்பு வேலை என அவரின் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளும் செவ்வனே நிறைவேறியது.
மருமகன் பெரிய வேலை. இன்னும் நான்கைந்து வருடத்தில் மேலதிகாரியாக மாறிவிடுவான்.
அவனுக்கு அந்த திறமையும், உழைப்பும் இருக்கிறது என அங்கிருக்கும் தன்னுடைய நண்பரின் மூலம் தெரிந்துகொண்டவருக்கு இன்னுமே ஆனந்தம்.
ஓவியாவின் ஜாதகப்படி இன்னும் ஒன்றரை வருடங்கள் கழித்து திருமணம் செய்தால் குடும்பத்திற்கும் அமோகம்.
அவளின் வழக்கையும் நன்றாக இருக்கும் என சொல்லியிருக்க இப்போதைக்கு திருமண பேச்சை ஆரம்பிக்கவில்லை.
ஆனால் முகிலன் தான் மணமகன் என்பதில் உறுதியாக இருந்தவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதை போல ஆனது.
தனது உறவினர்கள் மத்தியில் எத்தனை பெருமை பேசியிருப்பார்? அவரை சூழ்ந்தவர்கள் அனைவருமெ நகரத்தில் பிறந்து வளர்ந்து ஆளுக்கொரு வேலையில் இருப்பவர்கள்.
அதில் ஏக கர்வம் அனலரசுவிற்கு. வேதாவிடம் பீற்றிக்கொள்வார் எனது குடும்பம், அதனை சேர்ந்தவர்கள் எல்லாம் படித்து வேலையில் இருப்பவர்கள் என்று.
‘இருந்து என்ன பிரயோஜனம்? பொண்டாட்டியோட திறமையை அப்ரிஷியேட் பண்ண தெரியலையே உங்களுக்கு?’ என்று வேதா பேசி அவ்வப்போது அதற்கொரு சண்டை நடக்கும்.
வேதா எந்த வாய்ப்பு கிடைத்தாலும் விடமாட்டார். சின்ன விஷயம் என்றாலும் அதனை பேசி சண்டையிட்டேனும் தோற்பதில் தவறில்லை என நினைப்பவர்.
அது இன்னுமே அனலரசுவை வெறியேற்றும். இப்போதே இத்தனை பேசுபவர் வேலை என பார்த்து தனி சம்பாத்தியம் என்றால் நிச்சயம் மதிக்கமாட்டார் என இன்னுமே வேதாவை தனக்கு கீழ் அடக்கத்தான் பார்த்தார்.
இன்னும் ஒன்றரை வருடத்தில் திருமணம். சொந்தங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் அனைவரும் கூடுமிடத்தில் பெருமையாக பேசுவார்கள்.
“உனக்கென்னப்பா மாப்பிள்ளை நல்ல வேலை, சம்பளம். பேரான உத்தியோகம்…” என பெருமையாய் தன்னை பேசுகையில் மகிழ்ந்து போவார் அனலரசு.
அப்படி இருக்க அத்தனையிலும் மண்ணை கொட்டியவன் மேல் ஆத்திரங்களாய் கிளம்பியது.
“என்ன பெத்தவங்க நீங்க? நான் இவ்வளவு பேசிட்டு இருக்கேன். கொஞ்சமும் பதட்டம் இல்லாம நிக்கறீங்க?…” என்று அனலரசு பேச இளங்கோவிற்கு புரியவில்லை.
“நீங்க என்ன இப்படி நினைக்கறீங்க மாப்பிள்ளை? அவன் ஏன் இப்படி பண்ணினான்னு கேட்போம். ஆனா அக்காரணம் இல்லாம செஞ்சிருக்க மாட்டான்…”
இளங்கோ மகனுக்கு பரிந்து பேசிவிட அவ்வளவு தான். அனலரசுவை பிடிக்க முடியவில்லை.
“என்ன காரணம்? இல்லை என்ன காரணம்ன்னு கேட்கறேன்? இப்படி ஒரு வேலை கிடைச்சது எத்தனை பெருசு. அதை வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டு போறவன் நல்ல புத்தியோட இருக்கறவன் செய்யற வேலையா?…” அவரும் வார்த்தையை விட,
“மாப்பிள்ளை பார்த்து பேசுங்க. நானும் அமைதியா பேசிட்டு இருக்கேன்…” என இளங்கோவும் சொல்லவும் அனலரசுவிற்கு என்னவோ போல் ஆனது.
“நான் நம்ம முகில் நல்லதுக்கு தானே பேசறேன். எனக்கென்ன தலையெழுத்தா?…” என,
இளங்கோ அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாதாதை போல முகத்தை திருப்ப கோபத்துடன் கிளம்ப போனார் அனலரசு.
“அண்ணே இருங்க. எங்களுக்காக. ஒருநிமிஷம் என்னன்னு உக்கார்ந்து பேசுவோம்…” ஷோபா இறைஞ்சுதலுடன் சொல்லவும் தான் சற்றே அமைதியானார்.
“என்னம்மா என்ன அமைதியா இருக்க?…” என்று இருக்கையில் அமர சஞ்சய்யும், வேதாவும் மௌனமாக நின்றார்கள்.
ஓவியாவை வீட்டில் விட்டு வந்திருக்க அவளுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலை.
முகிலனுக்கு அழைக்கலாமென்றால் மனதில்லை. எதுவும் செய்யட்டும், ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் தானே என்ற ஆற்றாமையில் இருந்துவிட்டாள்.
வேதா அனலரசுவுடன் முகிலனின் வீட்டிற்கு கிளம்ப ஓவியாவும் கிளம்புவதை போல தெரிய,
“அங்கே உனக்கென்ன வேலை? பேசாம வீட்டில இரு…” என அதட்டிவிட்டு ஓவியாவை விட்டு சென்றார் அனலரசு.
இங்கே வந்து தனது கோபம் கூடியதே தவிர குறையும் பாடில்லை. தங்களிடம் சொல்லாமல் இவனாக எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என்னும் அகங்காரம்.
ஏற்கனவே என்ன நடந்தது என தெரியாமல் இளங்கோவும், ஷோபாவும் கிராமத்திற்கு கிளம்பி இருக்க அந்த நேரத்தில் வந்து பிரச்சனையை இன்னும் பெரிதாக்கினார் அனலரசு.
“இங்க பாருங்க, அங்க முகில்க்கு என்ன பிரச்சனையோ? அவன் என்ன நினைச்சு இந்த முடிவுக்கு வந்தானோ? நாமளா ஒன்னு நினைச்சு பேச கூடாது…” என்றார் வேதா.
“நீ ஏதாவது பேசின பார்த்துக்கோ. உன்கிட்ட எந்த புத்திமதியும் கேட்கலை…” அனலரசு வேதாவை அதட்ட இளங்கோவிற்கு பிடிக்கவில்லை.
முன்பும் வேதாவை அதட்டி பேசிய போதெல்லாம் மாப்பிள்ளைக்கு பரிந்து கொண்டு தான் தங்கையிடம் பேசுவார் இளங்கோ.
இப்போது அதை அப்படி எடுக்கமுடியவில்லை. இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலையே கிடைக்காதா? இதென்ன பெரிய விஷயமா? என்று தான் தோன்றியது இளங்கோவிற்கு.
இதற்கு மேல் இவரிடம் எதை சொல்லி புரியவைக்க என ஆயாசத்துடன் அமைதியாகிவிட்டார்.
மகனிடம் மனம் விட்டு பேசியிருக்க வேண்டுமோ என்ற காலம் கடந்த யோசனையில் அவர் இருக்க இங்கே அனலரசுவின் கோபம் எல்லாம் அர்த்தமற்றதாய் தோன்றியது.
‘நான் பெற்ற மகன் என்னிடமே சொல்லி எதையும் செய்யவில்லை. இவரிடம் கேட்கவேண்டுமா?’ என கோபம் வேறு வந்தது.
ஆனால் சட்டென காட்டிவிடும் சுபாவம் இல்லையே இளங்கோவிற்கு. இதுவரை ஒரு இடத்தில் வைத்து மதித்து வந்தவர் மேல் கோபப்பட முடியாமல் அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
இளங்கோவின் முகத்தின் இறுக்கம் வேறு வேதாவுக்கு கலக்கத்தை தந்தது. என்றுமே இப்படி இருந்ததில்லை தன் அண்ணன் என பார்த்துக்கொண்டு இருந்தவர் ஷோபாவை பயத்துடன் பார்த்தார்.
“நீயும் வந்து இப்படி உட்கார் வேதா…” என்ற ஷோபா அனைவருக்கும் டீயை தயாரிக்க செல்ல அவருடன் பின்னே சென்றான் சஞ்சய்.
“அத்தை. முகி கால் அட்டன் பண்ணவே இல்லை. நீங்க பேசினீங்களா?…” என்றான்.
“இல்லையே சஞ்சு, அவன் போகும் போது பேசினதோட சரி. திருப்பி உன் மாமா கூப்பிடும் போதும் பேசலை. அதான் ஊருக்கு கிளம்பிட்டு இருந்தோம்…” என்றார் கவலையுடன்.
“ஓகே, நீங்க முதல்ல பயப்படாம இருங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க. இப்போ நம்மோட சப்போர்ட் தான் அவனுக்கு வேணும்…”
“ஓவி எப்படி இருக்கா? அவளுக்கு விஷயம் தெரியுமா?…”
“தெரியாம என்ன? அதெல்லாம் அப்பா வரும் போதே ஒரு ஆட்டம் ஆடிட்டு தான் வந்தார்…”
“எப்படிடா சமாளிக்க? எனக்கு யார் பக்கம் பேசன்னே தெரியலை…”
“நீங்க யார் பக்கமும் பேச வேண்டாம். அமைதியா இருங்க. முகி கூட இருங்க. இப்போதைக்கு அதுதான் சொல்லுவேன்…” என சஞ்சய் சொல்லியும் ஷோபா மௌனமாக நிற்க,
“கல்யாணத்தை நினைச்சு பயப்படறீங்களா அத்தை?…” என்றதும் கண்கள் கலங்கி போனது ஷோபாவிற்கு.
“என்ன நீங்க? இதுக்கு போய் இப்படி நினைச்சிட்டு? எங்கப்பாவுக்கு அந்த தைரியமெல்லாம் இல்லை. நிறுத்தவெல்லாம் மாட்டார்…”
“இல்லை சஞ்சு, அண்ணன் பேசற தோரணையே வேற மாதிரி இருக்கு. முகிலை என்னவெல்லாம் பேசிட்டார். என்னதான் கோவமா இருந்தாலும் நாளைக்கு வீட்டுக்கு வர போற மாப்பிள்ளைக்கு தர வேண்டிய மரியாதையா இது?…”
“புரியுது அத்தை. அவர் இன்னும் முகிலை சின்ன பையனாவே பார்த்துட்டு இருக்கார்…”