கிராமத்திற்கு வந்து மூன்று நாட்கள் ஆகிற்று. முகிலனை அசைக்க முடியவில்லை இளங்கோவால்.
ஷோபாவும் மகனின் விருப்பம் சரி என்பதை போல அமைதியுடன் இருக்க யாரும் இளங்கோவிற்கு ஆதரவாக இல்லை.
இளங்கோவுமே மகனின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுவதை போல தான் இருந்தது.
ஆனாலும் இனி இந்த கிராமத்திற்குள்ளேயே மகனின் வாழ்க்கை முடிந்துவிடுமோ என பயந்தார்.
தன்னைவிட இன்னும் பலமடங்கு வாழ்க்கையை மகன் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என நினைத்தார்.
இன்றுவரை இந்தியாவை தாண்டியதில்லை இளங்கோ. அவர் மட்டுமின்றி குடும்பத்துடன் அதற்குள்ளேயே தான் சுற்றுலா என சென்றுவந்தவர்.
மகன் ஒருவனே வேலை சம்பந்தமாக கடல் கடந்து சென்று வந்தவன். அதில் அத்தனை பெருமிதம்.
இன்னும் நிறைய அவன் அப்படி சாதிக்க வேண்டும் என்பதில் மனதில் பெருமளவு ஆசை இருந்தது.
அந்த ஆசைகள் இப்படி கானல் நீராகிவிடுமோ என அஞ்சி மகனிடம் பேச அவன் ஒருகட்டத்திற்கு மேல் நெருங்கவிடவில்லை.
“அப்பா என்னோட முடிவு இதுதான். இன்னும் உனக்கு இது நல்லது, அது நல்லதுன்னு சொல்லிட்டே இருக்காதீங்க. எதுவுமே மனசை பொருத்தது. எனக்குன்னு சில ஆசைகள் இருக்காதா?…” என கேட்கையில் அவனிடம் எப்படி சமாதானம் செய்வது?
“நீ இங்க வரும் போது இதை பாரு. வேண்டாம்ன்னு சொல்லலை முகில். ஆனா அதுக்கு அந்த வேலையை விடனுமா?…”
“அதுக்கு திரும்ப போய் அங்க வேலைக்கு வரேன்னு சொல்லி அந்த இடத்துல நான் நிக்கனுமா? ப்ச், இப்போ எதுக்கு அந்த பேச்சும். எடுத்த முடிவுல இருந்து என்னால மாற முடியாது. வேற பேசுங்க…”
இளங்கோவிற்கு மகனை வேறு எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அவனிடம் இத்தனை திடம் உள்ளது என்று அன்றுதான் அவருக்கு புரியவே செய்தது.
இவ்வளவு பிடிவாதமும், தன்னிச்சையாக முடிவெடுக்கும் துணிச்சலும் எங்கிருந்து வந்தது என எண்ணி செய்வதறியாத நிலையில் யோசித்தார்.
“அப்பா நீங்களாச்சும் சொல்லுங்க…” என ஞானசம்பந்தத்திடம் நிற்க,
“என் பேச்சை கேட்டாப்பா இங்க எல்லாம் நடக்குது?…” என்றார் அவர்.
“என்னப்பா நீங்க? இது அவன் வாழ்க்கை. அவன் சின்ன பையன். யோசிக்காம பேசறான். நாம தானே பெரியவங்களா எது நல்லதுன்னு எடுத்து சொல்ல முடியும்…”
“உன் வாழ்க்கையை நீ முடிவு பண்ணினப்போ கூட தான் முகிலை விட சின்ன வயசு உனக்கு. அப்போ நீ முடிவெடுத்தது சரின்னா முகிலனோட முடிவும் சரி தானே?…”
“அப்பா…” இளங்கோ வாயடைத்து நின்றார்.
“உண்மையை தானப்பா சொல்றேன்? அன்னைக்கு உனக்கு எது விருப்பமோ அதை நிறைவேத்திக்கிட்ட. உன்னோட ஆசை எதுவும் அதுக்கு தடை சொல்ல கூடாதுன்னு எத்தனை பேசின நீ? இன்னைக்கு அதையே உன் பையன் செய்யறான்…”
“அதுக்கு என் மகனை சேத்துலையும் சகதிலையும் புரள சொல்றீங்களா? அதுக்கா அவனை இத்தனை படிக்க வச்சேன்….” இளங்கோவிற்கு கோபம் ஏறியது.
இத்தனை பேசியும், கெஞ்சியும் தனது தந்தையும் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என.
இப்போது யோசித்தார் முகிலன் நினைத்த நேரமும், ஊருக்கு செல்ல கேட்ட நேரமும் எல்லாம் இங்கே கொண்டுவந்து மகனை விட்டுவைத்தது தவறென்று.
“உங்கக்கிட்ட இங்க விட்டு வச்சதால தானே இத்தனை தூரம் அவன் மனசை மாத்தி வச்சிருக்கீங்க?…” என சம்பந்தத்தையே எடுத்தெறிந்து இளங்கோ பேச மனது உடைந்து போனார் சம்பந்தம்.
“ம்மா, அப்பாவை பேசாம இருக்க சொல்லுங்க. இப்போ நான் என்ன பண்ணிட்டேன்?…” முகிலன் கோபப்பட,
“இன்னும் செய்ய என்ன இருக்கு? அதான் எல்லாரோட ஆசையையும் இப்படி ஒண்ணுமில்லாம செஞ்சிட்டியே?…” இளங்கோ மகனிடம் பாய்ந்தார்.
“அப்போ உங்களோட ஆசைக்காக தான் என்னை பெத்து வளர்த்தீங்களா? நீங்க உங்க விருப்பப்படி பிடிச்ச வேலையை செய்யலாம். நான் செய்ய கூடாதா?…”
“அதுக்கு புத்திசாலித்தனமான முடிவெடுக்கனும் முகில். நீ எடுத்திருக்கிற முடிவு முட்டாள்த்தனம்…”
“அப்போ ஏன் இந்த முட்டாள்த்தனத்தால வர சோறு, காய்கறின்னு சாப்பிடறீங்க? உங்க புத்திசாலித்தனத்தை நீங்க நிரூபிக்கிற இடத்துல இருக்கிற நட்டு, போல்டை எடுத்து சாப்பிட வேண்டியது தானே?…” என்றவனின் பேச்சில் அதிர்ச்சியுடன் மகனை பார்த்தார்.
“முகிலா, என்ன இது? அப்பாவ இப்படித்தான் பேசுவாங்களா?…”
“வேற என்னம்மா பேச சொல்றீங்க? நீங்களும் பார்க்கறீங்க தானே? அவங்க என்ன பேசறாங்கன்னு. என்னை பேச வைக்கிறது இவங்க தான்…” என்று ஓய்ந்து போய் அமர்ந்தவன்,
“இங்க வரும்ப்போதெல்லாம் தாத்தாட்ட எத்தனை பேச்சு. அப்பா இந்த அரிசி சரியில்லை. பிரியாணி அரிசி வேணும். இட்லி அரிசி சரியில்லை. எத்தனை குறை சொல்றாங்க. அதை இங்க இருந்து வாங்கிட்டு போறப்போவும், மாமா வீட்டுக்கு கட்டி விடும் போதும் எவ்வளவு பெருமை…”
“எங்க காட்டு அரிசி, எங்க தோப்புல விளைஞ்சது. எங்க தோட்டத்து காய்கறிகள்ன்னு அக்கம்பக்கத்துல சொல்லும் போது கர்வமா இருந்தது. அப்போ அது புத்திசாலித்தனம். அதையே விளைவிக்க நான் இறங்கறேன்றது முட்டாள்த்தனம் இல்லையா?…”
“என்ன வேணாலும் பேசிக்கோங்க. எனக்கு இதுல தான் இன்ட்ரெஸ்ட். இத்தனை வருஷம் எல்லாருக்காக வாழ்ந்துட்டேன். இனி என்னோட ஆசைப்படி நான் இங்க இருக்க போறேன்…”
“அதுக்கு நான் சம்மதிக்கலைன்னா?…” இளங்கோ கேட்க,
“எனக்கு யார் சம்மதமும் தேவை இல்லை. இது ஒன்னும் உங்க சொந்த சம்பாத்தியம் இல்லை. வழிவழியா வந்துட்டிருக்கிற சொத்து. முடியாதுன்னா நான் கேஸ் போடவும் யோசிக்கமாட்டேன்…” முகிலன் தடாலடியாக சொல்ல இளங்கோ முகம் விழுந்துவிட்டது.
“அடேங்கப்பா, பேரன் எல்லாத்தையும் யோசிச்சு தான் வந்திருக்கான் போல?…” கமலாவிடம் சம்பந்தம் கிசுகிசுத்தார்.
“கோர்ட்டு, கேஸுன்னு பேசறது உங்களுக்கு பெருமையாக்கும்? கிழவனுக்கு நினைப்பு. அங்க என் மகன் முகமே வாடி போய் இருக்குது. உங்களுக்கு கொண்டாட்டமாக்கும்…” கமலா பாட்டி இடித்துரைக்க,
“இன்னைக்கு உன் மகன் நின்ன அதே நிலமையில தான் அன்னைக்கு நான் நின்னேன். உனக்கு அப்ப இடிக்காதே? உன் மவன் நினைப்பும் ஆசையும் சரி, அதுவே அவன் மகன்னா முட்டாளா? போ கிழவி…” என்றார் சம்பந்தம்.
இத்தனை தூரம் முகிலன் பேசிவிட அதற்கு மேல் இளங்கோ ஒருவார்த்தை பேசவில்லை.
மௌனமாக உள்ளே சென்றுவிட்டார். இனி பேச என்ன இருக்கிறது என அவர் விட்டுவிட்டார்.
இதற்கு மேலும் முகிலன் முடிவை மாற்றிக்கொள்வான் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை அவருக்கு.
தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றவரை கவலையுடன் பார்த்த ஷோபா மகனருகே வர,
“நான் ஓகே தான்ம்மா. நீங்க போய் அப்பாவை பாருங்க. அவரை அமைதியா இருக்க சொல்லுங்க. வேற சொல்ல எதுவும் இல்லை. உங்களுக்கு புரியும்னு நம்பறேன்…”
“இல்லை முகில், அம்மா உன் ஆசைக்கு குறுக்க நிக்கலை. ஆனா அதை நீ சட்டுன்னு பேசியிருக்க வேண்டாம். அமைதியா புரிய வச்சிருக்கலாம்…”
“ம்மா, சொன்னாலும் புரியாதும்மா. நான் பேசினா என்னை கன்வின்ஸ் பண்ண தான் ட்ரை பண்ணுவாங்க. என்னோட விருப்பத்தை கன்ஸிடர் பண்ண மாட்டாங்க. அதனால தான் அந்த சாய்ஸ நான் அவங்களுக்கு குடுக்கலை…”
“எவ்வளவு நாளா இதையா நீ உன் மனசுல போட்டு வச்சுட்டிருந்த?…” என்று இன்னும் முடி வளராத தலையை கோதிவிட்டார்.
முள்ளென அப்போதுதான் முளைக்க இருந்த முடிகள் ஷோபாவின் கையில் பதிய முகிலனுக்கு அந்த இறுக்கத்தின் சூழல் தளர்ந்து லேசாய் சிரிப்பு வந்துவிட்டது.
“ப்ச், இதை விடுங்கம்மா. நீங்க போய் அப்பாவை பாருங்க…” என சிரித்தான்.
“நான் எவ்வளவு கவலையா பேசறேன். நீ சிரிக்கிற?…”
“வேற என்ன செய்ய? தலையில இன்னும் முடி வளரலை. நீங்க கோதும் போது குத்துச்சு தானே அறும்பு முடி. அதான் சிரிப்பு வந்திருச்சு…”
“போடா, விளையாட்டா போச்சா? இப்படி குடும்பத்துக்குள்ள பிரச்சனையா இருக்கே? அந்த கடவுள் தான்…” என்று முடிக்கும் முன்னர் ஷோபாவின் வாயை தனது கையால் அழுத்தமாய் மூடியிருந்தான் முகிலன்.
“கடவுள்ன்னு அடுத்து வேண்டுதல் எதாச்சும் வச்சீங்க. அவ்வளோ தான்…” என்று மிரட்டலாய் சொல்ல ஷோபா விழித்தார்.
வாய்க்குள்ளேயே எதோ சொல்ல அவன் கையை எடுக்கவே இல்லை. மிரட்டலுடன் பேச,
“முகிலா…” என கமலா வந்து கையை எடுக்க,
“சும்மா இருங்க பாட்டி. இனி மொட்டையடிக்க முடி கூட இல்லை. வேணும்னா அப்பாவுக்கு வேண்டுதலை வைக்க சொல்லுங்க…” என்றுவிட ஷோபாவுக்கும் சிரிப்பு.
“சத்தமா பேசாத. ஏற்கனவே நொந்த மனசு…” என கமலா பேச,
“அதான் போய் ரெண்டுபேரும் சமாதானம் செய்ங்க. இன்னும் இன்னொரு நாட்டாமை வருவார். அதுக்கு பேசவும் எனக்கு தெம்பு வேணும்…” என நக்கலுடன் முகிலன் சொல்ல அவனின் முதுகில் ஒரு அடி வைத்தார் கமலா.
“அவர் உன்னோட மாமா. மாமனார் ஆக போறவரு. கொஞ்சம் கூட உனக்கு மரியாதையும், பயமும் இல்லை…” என்றார் கமலா சிரித்தபடி.
“அதான் நாட்டாமைன்னு சொன்னேன். வெறும் ஆமைன்னா…” என்று குறும்புடன் சிரித்து நிறுத்த,
“வாய் கூடி போச்சு முகிலா உனக்கு. அவர் உன்னோட மாமா…” மீண்டும் கமலா அவனை அதட்டினார்.
“பார்ப்போம், என்ன பேசறார்ன்னு. மாமாவாம் மாமா…” என்று அவன் சொல்ல இளங்கோவை விடுத்து அனலரசுவை நினைத்து அப்போதே அஞ்ச ஆரம்பித்தார்கள்.