“முதல்ல வா உன் புருஷன பார்ப்போம். மத்ததை அப்பறம் பார்ப்போம்…” என கமலா மருமகளை அழைத்துக்கொண்டு மகனை தேடி வந்தார்.
அறையில் இல்லாது பின்பக்கத்தின் கிணற்றடியில் இளங்கோ கவலையுடன் அமர்ந்திருந்தார்.
அனலரசு வேறு போன் மேல் போன் போட்டுக்கொண்டு இருக்க எடுக்கவே முடியவில்லை.
எடுத்தால் என்ன சொன்னான் முகிலன் என்றுதான் ஆரம்பிப்பார். என்னவென்று பதில் சொல்ல? எல்லாவற்றையும் விட மகன் பேசியவிதம் அவரை பாதித்தது.
இப்படித்தானே தன்னுடைய பிடிவாதமும் தனது பெற்றோரை பாதித்திருக்கும் என நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
அன்று அவர் என்னவெல்லாம் நினைத்து தவித்து துடித்திருப்பார் என்பதை கண்கூடாக கண்டதும், உணர்ந்ததும் இளங்கோவை மிகவும் தாக்கியது.
“இளங்கோ…” தாயின் தொடுகையில் திரும்பி பார்த்தவரின் கலங்கிய முகம் கமலாவை உலுக்க,
“என்னய்யா இதுக்கு போய் கலங்கிட்டு? யாரு உம்மவன் தானே பேசினான். சின்ன பையன்னு நீயே சொன்னியே?…” என்றார் கமலா.
“என்னங்க நீங்க? நம்ம பையன்ங்க. ஏதோ ஆசையில பேசிட்டான். நாமளே பெருசு படுத்தலாமா? விடுங்க. கொஞ்ச நாள்ல சரியாகிடுவான்…” ஷோபாவும் கணவனை தேற்ற இருவருக்கும் பதில் சொல்லமுடியாமல் மௌனமாய் இருந்தார்.
“என்னப்பா அம்மா இவ்வளவு சொல்றேன். இன்னும் மனசுக்குள்ள போட்டு வெம்பலாமா? விடு. டவுன்லையே வளர்ந்த பையன். கொஞ்ச நாள் போனா இங்க இருக்கற கஷ்டத்துக்கு தானா திரும்ப உங்கக்கிட்ட வந்துருவான்…” என கமலா சொல்லவுமே இளங்கோவின் முகத்தில் நம்பிக்கை கீற்று.
ஆனால் அந்த வாக்குறுதியை ஷோபாவால் தர முடியவில்லை. மகனின் ஆசையும், ஆர்வமும் எத்தனை ஆழம் என உணர்ந்தவராகிற்றே.
அமைதியாக நின்றார் கமலாவே இதை பேசட்டும் என்று. பொய்யாய் கணவனை நம்ப வைக்க அவரால் முடியவில்லை.
கமலாவிற்கு அதெல்லாம் தோன்றவில்லை. இப்போதைக்கு மகன் நிம்மதியாய் இருந்தால் போதும்.
சில நாட்களில் தானாக மனது ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடும் என தற்காலிக மருந்தை மகனுக்கு புகட்டினார்.
“என்னப்பா அம்மா சொன்னது புரிஞ்சது தானே? அவனுக்கு ஒரு ஆர்வம். இங்க காடு கரைன்னு வரும் போது சுத்தி வந்தது மாதிரி தான்னு நினைச்சுட்டான். விடு, கொஞ்சம் நாள் இங்க ஓய்வெடுத்துட்டு வரட்டும்னு நினைச்சுக்கோ…” என்றார் கமலா.
“ம்மா, நிஜமாவா?…” என இளங்கோ தாயின் கையை பிடிக்க,
“அட ஆமாங்கறேன். குளுகுளுன்னு வளர்ந்த பிள்ளை. இங்க எவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பான்?…” என்று கேட்க இளங்கோவிற்கும் சரி என்றே தோன்றியது.
“என்ன ஷோபா நான் பேசிட்டே இருக்கேன். கம்முன்னு நிக்கிற?…” மருமகளை கமலா கேட்க,
“இல்லைங்கத்தை, நீங்க பேசிட்டுருந்தீங்க இல்ல. அதான் நான் என்ன பேச? நீங்க சொன்னது சரிதான்…” என்றார் சிரிப்புடன்.
“அப்படி சொல்லு. இதுக்கு போய் இத்தனை சண்டை…” என மருமகளையும், பார்த்து சிரித்தவர்,
“இப்போ நிம்மதியா?…” என்றார் மகனிடம்.
“ஆமாம்மா, எங்க படிச்ச படிப்புக்கு நல்ல வேலை, பேர் புகழ்ன்னு என் மகன் இருக்கனும்னு நினைச்சா இப்படி எல்லாத்தையும் பாழாக்க பார்த்தானேன்னு பயந்துட்டேன். இப்போ தான் நிம்மதியா இருக்கு…”
“அவ்வளவு தான். இதுக்கு இத்தனை பேச்சு, வாக்குவாதம். மனஸ்தாபம்ன்னு. போய் பொழைப்பை பாரு. கொஞ்ச நாள்ல தானா முகிலன் வருவான். அதுவரைக்கும் எங்களோட இருக்கட்டும்…” என கமலா சொல்ல,
“நான் இப்பவே மாப்பிள்ளைக்கு கூப்பிட்டு சொல்லிடறேன்…” என்று தனது போனை எடுக்க,
அவருக்கு இருக்கும் பிரச்சனையை இன்னும் சிக்கலாக்க வேண்டுமா என்ற எண்ணம்.
மகனை சமாளித்துவிடலாம். ஆனால் மருமகனை சமாளிக்க முடியுமா? அனலரசுவின் ஆட்டம் எத்தனை தூரம் என நினைக்க முடியவில்லை.
இப்போதைக்கு மகனின் நிம்மதி முக்கியம். தான் கூறியதை மகன் மருமகனிடம் கூறி சொல்ல அவரும் அதை கேட்டு முகிலிடம் வார்த்தையை விட்டால் பிரச்சனை பெரிது.
நிச்சயம் அனலரசு அடங்கமாட்டார். வேண்டுமென்றே நக்கலாகவோ, இகழ்ச்சியாகவோ முகிலனிடம் பேசுவார். அதில் மாற்றமே இல்லை.
அதனால் மகனை இதை மருமகனிடம் சொல்லவிடாமல் தடுத்தும்விட இளங்கோவிற்கு அதுவும் சரி என்றே தோன்றியது.
“நீங்க சொல்றதும் சரிதான். இங்க வரவும் நீங்களே பேசி புரிய வைங்க. அவர் கோவத்துல இருக்கார். வரட்டும். நானும் கிளம்பறப்போ அவர்க்கிட்ட கோவமா பேசிட்டேன்…” என்று சொல்ல,
“சரிப்பா வரட்டும். நீ போய் படு…” என சொல்லவும் இளங்கோவும் நிம்மதியுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
“என்னத்தை நீங்க? அவர் சந்தோஷமா போறார். முகில் பின்வாங்கமாட்டான்….”
“அது தெரியும்த்தா, ஆனா இப்போதைக்கு அவன் அமைதியா இருக்கறது தான் முக்கியம். என் மகன் முகம் பார்க்கவே அத்தனை கஷ்டமா இருக்கு…”
“என்ன கஷ்டம்? இப்போ மட்டும் இது கஷ்டம் இல்லையா?…”
“ஷோபா, இப்போ கொஞ்சம் நிம்மதியா இருப்பான். கொஞ்ச நாள் போக அவனுக்கே அது பழகிரும். அவனே முகிலனை புரிஞ்சுப்பான். நீ எதையும் நினைச்சு கவலைப்படாத…” என மருமகளையும் அனுப்பி வைத்தார்.
அத்தனையையும் முகிலனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். முகத்தில் சிறு புன்னகை. பாட்டியின் சமயோசிதபுத்தியில் கூட சந்தோஷமே அவனுக்கும்.
ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து அவனும் சென்றுவிட்டான். அடுத்தடுத்த நாட்கள் எப்படி சென்றதென்றே தெரியாமல் ஓடிவிட அனலரசு குடும்பத்துடன் வந்திறங்கினார் வார இறுதியில்.
இளங்கோவிடம் என்ன என்று கேட்க இங்கே வந்து பேசிக்கலாம் என சொல்லிவிட அனலரசு கிளம்பி வந்துவிட்டார்.
வந்ததில் இருந்து முகிலனை காணமுடியவில்லை. காலையிலேயே தோட்டத்திற்கு சென்றுவிட்டான் என்று சொல்ல அவன் வரட்டும் என அமைதியாக இருந்தார் அனலரசு.
சஞ்சய் முகிலனை பார்க்க செல்ல கிளம்ப அவனையும் விடவில்லை அவர். போக கூடாதென்றுவிட்டார்.
“அவனே வரட்டும். நீ எதுக்கு போற? நாம வரோம்ன்னு தெரியும் தானே?…” என நிறுத்திவிட்டார் மகனை.
“மாப்பிள்ளை நீங்க இத்தனை கோபப்பட அவசியமே இல்லை. அவன்கிட்ட பேசினா சொன்னதையே தான் சொல்லுவான். அம்மா சொல்லிட்டாங்க கொஞ்சம் நாள்ல அவனே வந்திருவான்னு. எனக்கும் சரின்னு தான் தோணுது…”
“என்ன மச்சான் நீங்க? புரியாம பேசறீங்க? அதுக்கு அவ்வளவு பெரிய வேலையை விடமுடியுமா?…”
“இப்போ என்ன வேற எங்கையாவது வேலையை தேட முடியாதா? முகிலன் குவாலிபிகேஷனுக்கு எங்க வேணும்னாலும் வேலை கிடைக்கும்…”
“அட என்ன நீங்களும் சொன்னதையே பேசிட்டு இருக்கீங்க? மத்த கம்பெனியும், இதுவும் ஒண்ணா? நான் இந்த கம்பெனி தான் முக்கியம்ன்னு சொல்றேன். நீங்க திரும்ப திரும்ப வேற வேலைன்னு பேசறீங்க…” அனலரசு குரலை உயர்த்திவிட தள்ளி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள்.
“கோவமா? எனக்கு அத்தனை ஆத்திரமா இருக்கு. கொஞ்சமாச்சும் அறிவிருக்கறவன் செய்யற வேலையா இது? என்னளவுக்கு கூட உன் அண்ணனுக்கு ஆத்திரமில்லை?…” என்ற அனலரசு,
“எப்படி இருக்கும்? உங்களுக்கெல்லாம் சம்பாத்தியம் எங்கன்றதா முக்கியம்? வேலை பார்த்தா சம்பளம் யார் குடுத்தாலும் போதும்ன்னு நினைக்கிற ஆளுங்க, அப்படித்தான யோசிப்பீங்கே?…” என்று சொல்ல கோபத்துடன் எழுந்துவிட்டார் இளங்கோ.
“மாப்பிள்ளை பார்த்து வார்த்தையை விடுங்க…” என கோபத்துடன் சொல்ல,
“பொண்ணை குடுக்கற எனக்கு பேசற உரிமையும் இருக்கு. நான் பேசத்தான் செய்வேன். என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்களும் உங்க குடும்பமும். அவனை இந்த நிலைமைக்கு கொண்டுவர நான் எத்தனை பார்த்திருப்பேன்?…”
“நீங்க பார்க்கலைன்னு இங்க யாரும் சொல்லலை மாப்பிள்ளை. அதுக்குன்னு என்னவேணா பேசுவீங்களா?…”
“ஏன் பேசாம? உண்மையை தான சொல்றேன். வேலை பார்க்கிற இடம் முக்கியமில்லைன்னு சொல்றீங்களே? அதோட அருமை பெருமை தெரியுமா உங்களுக்கு? எங்க குடும்பத்துல கூட யாரும் அந்த கம்பெனில வேலைக்கு சேர முடியலை…”
“முகிலன் சாதிச்சிருக்கான். அத பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அதோட அருமை தெரிஞ்சா தானே? பார்க்கற வேலை மட்டுமில்லை, எங்க பார்க்கறோம்ன்றதும் முக்கியம். எனக்கு முக்கியம்…” என பேச அத்தனைபேரும் நிலைமை கைமீறி இருக்க யாருக்கு பேச என தெரியாமல் நின்றனர்.
“நீங்க என்ன வேணாலும் பேசலாம். ஆனா என் மகனுக்கு அங்க பார்க்க இஷ்டம் இல்லைன்றப்போ கட்டாயப்படுத்த எனக்கே உரிமை இல்லை…” என பதில் கொடுத்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் இளங்கோ சொல்லிவிட்டார்.
“எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றீங்களா நீங்க?…”
“அப்படி சொல்லலை. வேண்டாம்ன்னு எழுதி குடுத்துட்டு வந்த கம்பெனில திரும்ப போய் நிற்க முடியுமா? அங்க என் மகனுக்கு என்ன மதிப்பு இருக்கும்?…”
“அதைத்தான சொல்ல வரேன். அவன் இஷ்டத்துக்கு வேலையை எப்படி ரிசைன் பண்ணலாம். அப்போ வீட்டில பெரியவங்கன்னு நமக்கு என்ன மதிப்பு இருக்கு?…”
“அதான் வேலையை விட்டுட்டானே? எனக்குமே அவன் இங்க இருக்கறதுல இஷ்டம் இல்லை. ஆனா வேற வேலைக்கு அவன் சேருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு…”
“எத்தனை வேலை இருந்தாலும் விட்ட வேலை மாதிரி வருமா? அங்க என்ன பேரு. அந்த கம்பெனிக்கு என்ன பேரு. யோசிக்காம படிச்சவன் பார்க்கற வேலையா இது?…” அனலரசு அடங்கவில்லை.
“இப்போ என்ன செய்யனும்னுறீங்க? அதான் வேலையை விட்டுட்டானே? திரும்ப திரும்ப இப்படியே பேசறது நல்லா இல்லை. என்னவோ எங்க யாருக்கும் யோசிக்க தெரியாத மாதிரி…” எரிச்சலுடன் இளங்கோ சொல்ல,
“உண்மை தானே? யோசிக்க தெரியாதவங்க தான நீங்க எல்லாம். ஆனா நான் யோசிக்காம இருக்க முடியுமா? பொண்ணை பெத்தவனாச்சே…”
“என்ன யோசிப்பீங்க? பொண்ணை குடுக்கலாம்ன்னா வேண்டாமான்னா?…” முகிலன் வந்துவிட்டான் இந்த கேள்வியை கேட்டபடி.
அவனின் குரலே பயங்கர கோபத்தில் இருப்பதை உணர்த்தியது. அத்தனையும் கேட்டிருப்பானோ என அனைவரும் பயத்துடன் பார்க்க அதற்கெல்லாம் அனலரசு யோசிப்பவரா?
“ஏன் யோசிக்க மாட்டேனா? உன்னோட வேலையை கூட காப்பாத்திக்க முடியலை உன்னால. பொறுமையா ஒரு இடத்துல இருக்க முடியலை. எந்த நம்பிக்கையில பொண்ணை குடுப்பேனாம்? நான் பொண்ணோட அப்பன்…” என்றார் நெஞ்சை நிமிர்த்தி.
“எங்க குடுக்க முடியாதுன்னு தான் சொல்லி பாருங்களேன்…” என்றவனின் பார்வை ஓவியாவை தீண்டியது.
“ஏன் சொல்ல மாட்டேனா? மாட்டேனா?…” என அனலரசு கொதித்தார்.
முகிலனின் பேச்சில் வெகுண்டு நின்றார் அனலரசு. தான் பார்க்க வளர்ந்தவன் தன்னையே எதிர்த்து நிற்பதா என ஆவேசம் மிகுந்தது.
“சொல்லித்தான் பாருங்களேன்…” என்ற முகிலன்,
“சொல்ல மட்டும் தான் முடியும். சொல்ல மட்டும் தான் உங்களுக்கு அனுமதி…”
“என் பொண்ணை யாருக்கு குடுக்கனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்…”
“ஓஹ், பண்ணலாமே? உங்க முடிவு வெறும் முடிவாவே மட்டும் தான் இருக்கும். பார்க்கலாமா?…” என்றவனின் உறுதியில் அனலரசு ஆட்டம் கண்டார்.
அனலரசு பேசவேண்டும் என்று பேசவில்லை. ஆனால் பேச்சுக்கள் அந்த இடத்தில் வந்து நின்றுவிட அனலரசு இனி பின்வாங்கவும் முடியாது என முகிலனின் பேச்சில் ஸ்தம்பித்து நிற்க குடும்பம் நிலைகுலைந்து பார்த்தது அவர்கள் இருவரையும்.