முகிலனின் பேச்சும் தோரணையும் எதிர்த்து நின்று பேசும் விதமும் அனலரசுவை நிதானம் இழக்க செய்தது.
“என்ன பார்க்கலாம்? இல்லை என்ன பார்த்திருவ நீ? என் கண்ணுமுன்னாடி வளர்ந்தவன் நீ. உன்னை பார்க்க எனக்கு தெரியாதா?…” என்றார் கோபம் கொப்பளிக்க.
“பாருங்கன்னு தான் சொல்றேன். உங்க கண்ணுமுன்னாடி தான் வளர்ந்தேன். இல்லைன்னு சொல்லலையே. பார்ப்போம். என்ன நடக்குதுன்னு…” முகிலனும் விடாப்பிடியாய் பேசினான்.
“முகில் நீயும் என்ன கூட கூட பேசிட்டு இருக்க. அமைதியா இரு…” இளங்கோ சொல்ல அவரை ஒரு பார்வை பார்த்தான் முகிலன்.
“நான் உங்களுக்காக தான் மாப்பிள்ளை பேசினேன். பேச பேச இன்னும் தானே பிரச்சனை. அது நம்ம குடும்பத்துக்கு நல்லதில்லை. அதுக்காக தான் சொல்றேன்…”
“நல்லதில்லைன்னு உங்க மகனுக்கு சொல்லுங்க. ஒன்னும் சரியில்லை, பார்வையும் சரி. பேச்சும் சரி. எதுவும் முன்ன மாதிரி இல்லை. எகத்தாளம் தெரியுதே?…”
“என்ன எகத்தாளம்? இல்லை என்னன்னு சொல்லுங்க. நான் இங்க தான இருக்கேன். நேரா சொல்லுங்க…” என்றான் முகிலன்.
“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? நான் என்ன பேசறேன்? இவன் சொல்ல சொல்றான்? பெரியவங்க அப்படிங்கற மதிப்பு தெரியலை. நான் என்னவோன்னு நினைச்சா இவன் பேச்செல்லாம் தினுசா இருக்கு…”
அனலரசு முகிலனிடம் பேச முடியாதென தெரிந்து மற்றவர்களை தனக்கு ஆதரவாக பேசும்படி மறைமுகமாக வலியுறுத்த வேதாவிற்கு புரிந்துபோனது.
“முகில் நாங்க பேசிட்டு இருக்கோம்ல. நீ அமைதியா இரு…” ஷோபா மகனை கண்டிக்க,
“இவ்வளோ நேரம் இவர் பேசினதை வாய் மூடி கேட்டுட்டு இருந்துட்டு இப்போ வந்து என்னை பேசறீங்க?…” அவரிடம் முகிலன் சொல்லவும் அனலரசு பெரியவர்களை பார்த்தார்.
“நீங்க இப்படித்தான். கேட்கிற ஆளை விட்டுட்டு உங்களுக்கு பதில் சொல்லாம இருக்கறவங்களை பேசுவீங்கன்னு தெரியும் அதான் நான் வந்தேன்…” என்றார் வேதாவும்.
“வேதா, என்ன இது அவரை எதிர்த்து பேசிட்டு?…” என கமலா மகளை அதட்ட,
“பார்த்தீங்களா? இதுதான் உங்களுக்கு வேணும். ஆனா இன்னைக்கு சும்மா எல்லாம் இருக்கமாட்டேன்….” வேதா அத்தனைபேரையும் பார்த்துக்கொண்டே சொல்ல அனலரசுவிற்கு அது பிடிக்கவில்லை.
“வேதா, பேசாம இரு…” என்றார் மீண்டும்.
“அப்ப நீங்க முகில்கிட்ட மட்டும் பேசுங்க. வேலையை விட்டது அவன். வேலைக்கு அங்க போகமாட்டேன்னு சொன்னதும் அவன். அதுக்காக தான இங்க வந்தீங்க. அதை விட்டுட்டு மத்தவங்கட்ட பேசறீங்க?…” என்றவர்,
“முகிலா நீ ஏன் வேலையை விட்ட? அவர்க்கிட்ட அதுக்கு பதில் சொல்லறதும் சொல்லாததும் உன் இஷ்டம். இதை வச்சு தேவை இல்லாம என் பொண்ணை பேசற வேலை வச்சுக்காதீங்க…” என்றார் கோபமாய்.
“நான் எங்கத்தை ஓவியாவை பேசினேன்?…”
“பேசினேன்னா நீ மட்டுமா? அவரையும் சேர்த்து தான் சொல்றேன். சும்மா இத்தனை வருஷம் சொல்லி சொல்லி வளர்த்துட்டு இப்ப இஷ்டத்துக்கு பேச்சை மாத்துவாங்களா? இப்பவே சொல்லிட்டேன் தேவை இல்லாத விஷயத்தை பேச வேண்டாம்ன்னு. இங்க எதுக்கு வந்தோமோ அதை மட்டும் பாருங்க…”
“ஓவி போய் எல்லாருக்கும் குடிக்க தண்ணி கொண்டுவா. பேசி பேசி தொண்டை காய்ஞ்சு போச்சு…” என்றார் ஆசுவாசமாய்.
முகிலன் வரும் வரை அவராலும் எதுவும் பேச முடியவில்லை கணவரிடம். முகிலன் வந்ததும் இல்லாமல், திருமண விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஸ்திரமாய் பேசியது பெரும் பலத்தை தந்திருந்தது அவருக்கு.
அதனால் தன் பக்க பேச்சையும் பேசிவிட்டு தண்ணீருக்கு அமர்ந்துவிட அங்கே அனலரசு மனைவியை பார்த்துகொண்டே நின்றார்.
“நின்னுட்டே பேசினா கால் வலிக்காதா? உக்காருங்க. உக்கார்ந்து பேசுங்க…” என்ற வேதா,
“ம்மா, சாப்பிட என்ன இருக்குது? ஏதாவது செய்ங்க. காலையில வர வழியிலையே சாப்பிட்டு தான் வந்தோம். மத்யானத்துக்கு செய்ங்க. அண்ணி நீங்க கொஞ்சம் அம்மாவுக்கு ஓவியை வச்சு பாருங்க. எனக்கு கார்லயே உக்கார்ந்து வந்தது கால் வலிக்குது…” என்றவர்,
“நீங்களும் என்ன நின்னுட்டு இருக்கீங்க? உட்கார்ந்து பேசுங்க. நாளைக்கு தான ஊருக்கு போக போறோம். இப்பவே இதை பேசனுமா? உட்காருங்க. முகில் சஞ்சுவோட போய் தோப்புல இளநீர் வெட்டி கொண்டுவாயேன்…”
மற்றவர்களுக்கு உத்தரவு போல அடுத்தடுத்து ஒவ்வொன்றாய் சொல்ல இருந்த படபடப்பு அடங்கியதை போல இருக்க அனலரசுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
இவள் என்ன என்னை என்ன நினைத்து பேசுகிறாள் என அனலரசு முறைப்புடன் வேதாவை பார்த்த நிமிடம் அத்தனைபேரும் அப்போது இருக்கவிருந்த பெரும் பிரளயத்தில் இருந்து தப்பித்துவிட்ட நிம்மதி.
ஆளுக்கொரு திசையை தேடி ஓடிவிட திரும்பி பார்த்தவருக்கு அந்த வரவேற்பறையில் தான் மட்டுமே இருக்கும் நிலைமை. ஒருவரும் இல்லை அவரை சுற்றி.
தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த வேதாவும் இப்போது இல்லை. எங்கே எழுந்து ஓடினாரோ என கடுப்புடன் ஊஞ்சலில் சென்று அமர்ந்துகொண்டார்.
அங்கே வந்தால் பேச்சுத்துணைக்கு இருக்கும் இளங்கோ கூட அனலரசுவின் அருகே வரவில்லை.
வெகுநேரம் தனியாகவே அமர்ந்திருந்த மனிதருக்கு பொறுமை தாங்கவில்லை. இளநீரை வெட்டிக்கொண்டு வந்து மகன் சஞ்சய் வந்து நீட்ட வாங்கி வைத்துவிட்டு நிமிர அவனும் இல்லை.
‘என்னடா இது?’ என இன்னுமே எரிச்சலுடன் இருக்க அதுவே கோபத்தை இன்னும் அதிகமாகியது.
‘நான் என்ன முட்டாளா? இல்லை என்னை வைத்து இவர்கள் விளையாடுகிறார்களா?’ என்ற எண்ணம் மேலோங்க,
“வேதா…” என கத்தினார் அனலரசு.
“என்னங்க?…” என்று வேகமாய் ஓடி வந்தவர்,
“ஓவி அப்பாவுக்கு மோர் கொண்டு வா…” என உள்பக்கமாக பார்த்து குரல் தர,
“வாயை மூடு. எதுவும் வேண்டாம். கிளம்பு முதல்ல. இனி ஒரு நிமிஷம் இங்க இருக்கமாட்டேன்…” என்று பேச மீண்டும் ஒவ்வொருவராய் வந்து ஆஜர் ஆனார்கள் ஹாலில்.
“பாரு, இப்ப ஒண்ணொண்ணா வரவங்களை. அப்ப என்னோட குரலுக்கு நான் அதட்டி பேசினா தான் இங்க மரியாதை. இல்லைன்னா எதுவும் இல்லை. அதானே?…” என்றார் அனைவரையும் பார்த்து.
“இப்ப எதுக்கு இவ்வளவு கோவம்? சாப்பாடு ரெடி ஆகிருச்சு. சாப்பிட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறம் சாயங்காலம்…”
“டீ குடிச்சு எல்லாரோட அரட்டை அடிச்சுட்டு நைட் தூங்கிட்டு நாளைக்கு எந்திச்சு பேசிக்கலாமா?…” வேதாவின் பேச்சை நிறுத்தி தானே அதற்கு முழுமையை தர.
“என்னங்க நீங்க? நான் எப்ப அப்படி சொன்னேன்? சாயங்காலம் பொறுமையா பேசுவோம்ன்னு தான் சொன்னேன். வந்ததுமே நீங்க பேசினதே சரியில்லை. கோபத்தோட பேசினா பிரச்சனை தான் ஆகும்…”
“அப்போ உன் அண்ணன் மகன் பேசினது தப்பில்லையா? என்னவோ மிரட்டற மாதிரி பேசறான்…”
“மாமா, எதுவானாலும் என்கிட்டே பேசுங்க. எதுக்கு அத்தையை கோவிச்சுக்கறீங்க?…” என முகிலன் முன்னே வந்தான்.
“கோவிக்காம, இவ என்ன என்னை சின்ன பையன்னு நினைக்கறாளா? என்னை பார்த்தா எப்படி இருக்குது?…” என்றார் முகிலனிடம்.
“எப்படியும் இல்லை. பொறுமையா இருங்கன்னு அத்தை சொன்னா அது உங்களுக்கு தப்பா?…”
“அவளை சொன்ன உனக்கு ஏன்டா கோவம் வருது…” என்று முகிலனை முதல்முறையாய் டா என்று பேசிவிட அத்தனைபேரும் ஸ்தம்பித்த பார்வையுடன் அனலரசுவை பார்த்தனர்.
“என்ன பேச்சு இது? அவனை மரியாதை இல்லாம பேசறீங்க? அவன் எனக்கு பேசாம யாருக்கு பேசுவான். எனக்கு மருமகனா இருந்தாலும் என்னோட மகனை மாதிரி தான். அவன் கேட்கத்தான் செய்வான். அதுக்கு நீங்க டா போட்டு பேசுவீங்களா? எங்கப்பா உங்களை பேசினா ஒத்துப்பீங்களா?…” வேதா ஆரம்பித்துவிட்டார் முகிலனருகே வந்து நின்றுகொண்டு.
“அத்தை நான் பேசிக்கறேன். நீங்க அமைதியா இருங்க…” என்றவனின் கையை பிடித்தவர்,
“என்ன பொறுமையா இருக்க? உரிமையா சொல்றேன்னு எங்கப்பா வா போன்னு பேசினா ஏத்துப்பாரா உன் மாமா? உன்னை டா சொல்றார். நாளைக்கு அவரும் மாமனார் ஆக போறவர் தானே? எங்கப்பாக்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாரோ அவரும் அப்படித்தானே நடந்துக்கனும்…”
வேதா முகிலனுக்கு ஆதரவாக பேச இளங்கோ, ஷோபா மௌனமாக நின்றார்கள்.
ஷோபாவும், கமலாவும் இளங்கோவின் இருபுறமும் நின்றுகொண்டார்கள் அவர் எதுவும் பேசிவிட வேண்டாம் என்று.
வேதா பேசிவிட்டால் அது வேறு. ஆனால் நிதானமிழந்து இளங்கோ பேசிவிட்டால் பிரச்சனை இன்னுமே பெரிது என அவர்களை அடக்கி நின்றார்கள்.
“என்ன பேச்சு ரொம்ப ஓவரா போகுது. புருஷன் நான் இங்க இருக்கேன். அங்க என்ன பேச்சு?…” என்றார் அனலரசு.
“நீங்க எப்படி பேசறீங்களோ அப்படித்தான் பதிலும் இருக்கும்…” என்ற வேதாவை,
“அத்தை நான் தான் சொல்றேன்ல அமைதியா இருங்க…” என்றான் முகிலன்.
“பாரு என்னால என் பொண்டாட்டியை அதட்ட முடியலை. என் முன்னாடி இவன் நாட்டாமை பன்றான்…” என்ற அனலரசு,
“வேலையை விட்டானே? அடுத்த வேலைக்கு என்ன செய்வான்னு கேட்டியா நீ? வேலைவெட்டி இல்லாதவனுக்கா பொண்ணை கொடுக்க முடியும்? நான் ஏன் இத்தனை பேசறேன்னு யோசிக்காம பதிலுக்கு பேசற?…” என அனலரசு ஆரம்பித்த இடத்திலேயே நிற்க,
“எனக்கு வேலை இல்லைன்னு யார் சொன்னா? நான் இங்க தான் இனி இருக்க போறேன்…” என்றான் முகிலன்.
“இங்க தான்னா? இங்க நீ செய்ய என்ன இருக்கு?…”
“ஏன் இல்லை? இங்க விவசாயம் இருக்கு. அதை தான் இனிமே செய்ய போறேன்…” என்றதுமே அனலரசுவின் நெஞ்சு வெடித்துவிட்டது.
“என்னது விவசாயமா?…” என அதிர்ந்துபோய் கேட்டவர் ஒருநொடி அடுத்த எதுவும் பேச தோன்றாமல் முகிலனையே கூர்ந்து பார்த்தார்.
வேலையை விட்டதற்கே அடுத்து எப்படி வேலை கிடைக்கும், அது முந்தைய வேலை போல இருக்குமா என யோசித்தவருக்கு இப்படி ஒரு பதில் அதிர்ச்சியை தந்தது.
“விவசாயம்லாம் ஒரு வேலையா? என்ன விளையாடுறியா?…” கோபத்துடன் முகிலன் அருகே வந்து நிற்க,
“என்னங்க…” வேதா இடையே வர,
“அத்தை நான் பேசிக்கறேன்…” என்றான்.
“ஆமா, விவசாயம் தான் பார்க்க போறேன். என்னோட இன்ட்ரெஸ்ட் அதுல தான் இருக்கு. அதனால இனிமே இங்க தான். இந்த கிராமத்துல தான் நான்…” என தெளிவாய் சொல்ல,
“இதுக்கு நான் சம்மதிக்க முடியாது. எனக்கு மருமகனா வரவும் ஒரு தகுதி இருக்கனும். விவசாயம்லாம் ஒரு வேலையா? நாளைக்கு என் சொந்தபந்தத்துக்கிட்ட சொல்ல முடியுமா என் மாப்பிள்ளை இந்த வேலை பார்க்கறான்னு…”
“ஏன் சொன்னா என்ன? என்னன்றேன். விவசாயம் என்ன அத்தனை குறைச்சலா போயிருச்சா உங்களுக்கு?…” என்றான் முகிலன்.