“மாமா நீங்க இத்தனை முகத்தை சுளிக்கிற அளவுக்கு அது ஒன்னும் மோசமான வேலை இல்லை. சொல்ல போன அது கடமை. பெருமையும் கூட…” என்றான் முகிலன்.
“யாருக்கு வேணும் உன் கடமையும், பெருமையும். எனக்கு என் குடும்பத்தோட மரியாதை தான் முக்கியம்…”
“அந்த மரியாதை ஒருகிலோ அரிசியை விளைவிச்சு தருமா? மரியாதையாம். உங்களுக்கு இப்போ என்ன மரியாதை இருக்குன்னு நீங்க நினைக்கறீங்க?…”
“என் மரியாதைக்கு என்ன குறைச்சல்? நான் மரியாதையா நல்ல வேலையில இருக்க போய்தான் உன் அப்பாவே தேடி வந்து எனக்கு உன் அத்தையை கட்டி குடுத்தாரு. அப்படி இருக்கனும். உனக்கு நான் எப்படி பொண்ணை குடுப்பேன்?…” என்றார் அனலரசு.
“இந்த விவசாயம் வேண்டாம்ன்னு தானே உன் அப்பாவே சிட்டிக்கு வேலைக்கு வந்து பதவி, சுபயோக வாழ்க்கைன்னு இருக்காரு. அதுதானே உனக்கும் படிப்பை குடுத்துச்சு…”
அனலரசுவின் குரலிலத்தனை இளக்காரமும், அகம்பாவமும் அதனை உடைத்தே ஆகவேண்டும் என்று முகிலன் முறைத்து நின்றான்.
“படிப்பு, அது நான் எங்க படிச்சாலும் படிசிஸ்ருக்க முடியும். இது நீங்க சொன்னதாலையோ, இல்லை சிட்டில படிச்சதாலையோ இல்லை. எனக்கு விருப்பமும், ஆர்வமும் இல்லைன்னா எங்கையும் என்னால படிச்சிருக்க முடியாது…” என்றவன்,
“இதுல உங்களோட பங்குன்றது கை நீட்டி காமிச்சது மட்டும் தான். அதை யார் வேணாலும் செஞ்சிருக்க முடியும். ஏன் இதே வழியை உங்க மகனுக்கும் காமிச்சீங்க? முடிஞ்சதா?…” என்று வேண்டுமென்றே குத்தி பேசினான் முகிலனும்.
“பார்த்தியா சஞ்சய், இதுக்குத்தான் படி படின்னேன். இவன்லாம் பேசறான் பாரு..” என மகனிடம் பாய்ந்தார் அவர்.
சஞ்சய்க்கு புரியத்தான் செய்தது முகிலனை பேசும் நிலைக்கு தள்ளுவது தனது தகப்பன் மட்டுமே என்று. அதனால் அமைதியாய் நின்றான்.
அங்கே ஓவியாவை பற்றி துளி எண்ணமும் இல்லை அனலரசுவிற்கு. தான் நினைப்பதே சரி என வாதிட்டுக்கொண்டு இருந்தார்.
“இப்போ முடிவா என்ன சொல்ற?…”
“நான் இங்க தான் இருப்பேன். எனக்கு அங்க வேலை செய்ய பிடிக்கலை. அதான் பிடிச்ச இடத்துக்கு வந்துட்டேன்…” என்று சொல்ல,
“அப்போ நானும் என் முடிவை மாத்திக்க வேண்டியதா வரும்…” என்றார் அனலரசு.
“அது உங்களால முடியாது. ஓவியாவை நான் விட்டுக்குடுக்கமாட்டேன்…” என நடுசபையில் அவளின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு வந்து தனக்கருகே நிறுத்திக்கொண்டான்.
மற்றவர்கள் முன்னிலையில் நின்றுகூட இதுவரை பேசியிறாதவன் இன்று பேச்சாக பேசியபடி இருந்தவன் அத்தனை பேர் நடுவில் ஓவியாவை கைபிடித்து அழைத்து வந்ததோடு கைகோர்த்து அவளின் தோளோடு உரசி நிற்க திகைத்து போனார்கள்.
“என்ன பன்ற முகிலா?…” என்று ஓவியாவை தன் பக்கம் இழுத்தவர்,
“படிச்சு என்ன புண்ணியம், இன்னும் இந்த புத்தி தானே உனக்கு இருக்குது. நாகரீகம் இல்லாத உனக்கு என் பொண்ணா?…” என்று சொல்லியதில் இளங்கோ வெகுண்டுவிட்டார்.
“ஒன்னும் தேவை இல்லை. பொண்ணும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். முதல்ல கிளம்புய்யா இங்க இருந்து…” என கத்தி சொல்லிவிட அத்தனைபேரும் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தனர்.
எந்த வார்த்தை வர கூடாது என வீட்டினர் நினைத்தார்களோ அது இளங்கோவின் வாயிலிருந்தே வந்துவிட்டது.
மகனை மரியாதை இல்லாமல் பேசியதுமே தன் பொறுமை இழந்தவர் இப்போது அதற்கு மேலும் பொறுக்க இயலாது சொல்லிவிட்டார்.
“என்னங்க?…” என ஷோபா வர,
“ஒன்னும் பேசவேண்டாம். நானும் எவ்வளோ பொறுமையா போனா ரொம்ப ஓவரா பேசறார். என் மகனை அக்கறையோட கண்டிச்சு சொன்னா நான் பொறுத்துப்பேன். சந்தோஷப்படுவேன். எவ்வளோ பேச்சு பேசிட்டார்…”
இளங்கோவிற்கு அத்தனை ஆத்திரம் அனலரசுவின் மேல். அவரின் இந்த ஒற்றை செயல் மொத்தமாய் அவரின் அதிகாரத்தை படம்பிடித்து காட்டிவிட்டது இளங்கோவிற்கு.
“என்ன நான் வெளில போகனுமா? என்னையே பேசிட்டியா நீ?…” என அனலரசுவும் மரியாதையை கைவிட்டு பேச யாருக்கு பரிந்து பேசுவதென தெரியாமல் போனது மற்றவர்களுக்கு.
“ஆமா போகனும். ஒரு அளவு தான் எல்லாம். என்னை சொல்லனும், உனக்கு இவ்வளவு இடம் குடுத்தேன்ல. என் குடும்பத்து முடிவுகளை உன்னை எடுக்க விட்டேன்ல. என்னை சொல்லனும். அதான் இன்னைக்கு என் பிள்ளையையே பேச வச்சிருக்குது…” என்றவர்,
“என் மகன் அவன் விருப்பப்படி தான் இருப்பான். இங்க தான் இருப்பான். உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ…” என்றுவிட்டார் இளங்கோ.
ஓவியாவும், பெண்களும் அழுதுகொண்டே இருக்க அனலரசு அதற்கு மேலும் அங்கிருக்க விரும்பாமல்,
“இதுக்கு மேல ஒரு நிமிஷம் இந்த வீட்டுல இருக்கமாட்டேன். இனி இந்த குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாராச்சும் என் வீடேறி வாங்க. பேசிக்கறேன்…” என்று மகளையும் சேர்த்தே அழைத்துக்கொண்டு கிளம்ப,
“மாப்பிள்ளை மாப்பிள்ளை அவன் ஏதோ தெரியாம பேசிட்டான். கோவத்துல பேசிட்டான்…” என சம்பந்தம் சமாதானம் செய்ய முயல வெடுக்கென அவரின் கையை தட்டிவிட்டார் அனலரசு.
“அப்பா நீங்க விடுங்க. இவர்கிட்ட ஏன் கெஞ்சறீங்க? இவர்மட்டும் பேசலாம். ஆனா அண்ணன் பேச கூடாதா? இப்பவாச்சும் உங்க மகனுக்கு புத்தி வந்துச்சேன்னு சந்தோஷப்படுங்க…” என்றார் வேதா.
“நீ இதே மாதிரி பேசிட்டே இருந்தா உன்னை இங்கயே கிடன்னு விட்டுட்டு போய்டுவேன்…” வேதாவை அனலரசு மிரட்ட,
“எங்க விட்டுட்டு போங்க பார்ப்போம். வருஷமெல்லாம் வச்சு வாழ்ந்துட்டு காலம் போன கடைசியில பாரமேன்னு தள்ளிவிட்டு போற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். என் பிள்ளைங்க முடிவை எடுக்க உங்களுக்கு எவ்வளோ உரிமையோ அவ்வளவு எனக்கு இருக்கு…” என்றவர்,
“ஓவி, என்னத்துக்கு அழற? அழுகையை நிப்பாட்டு. இவர் சொல்லிட்டா, என் அண்ணன் சொல்லிட்டா எல்லாம் ஆச்சா? இவங்க போதைக்கு நாம ஊறுகாயா? எங்க பார்த்திருவோம்…” என்ற வேதா இளங்கோவிடம்,
“உனக்கு என் புருஷன்கிட்டே பேசி ஜெயிக்க முடியலைன்னா என் பொண்ணை வேண்டாம்ன்னு சொல்லுவியா?…” என்று பேச இளங்கோவிற்கு கஷ்டமாக போய்விட்டது.
“உங்க கோவத்துக்கு ரெண்டு சின்ன பிள்ளைங்களை, வாழ போறவங்களை தண்டிப்பீங்களா? முடிவெடுக்கறதா இருந்தாலும் நீங்களே முந்திப்பீங்க. வேண்டாம்ன்னு சொன்னாலும் கோவத்துல கொந்தளிப்பீங்க. ஆனா நாங்க சரிங்கன்னு போகனுமா?…” என்றார்.
“முகிலா, நீ எதுக்கும் பயப்படாத. இங்க தான இருக்க போற? எனக்கு சந்தோஷம். தாராளமா இருந்துக்கோ. ஆனா உன் அப்பாவை மாதிரி என் புருஷனை வச்சு என் பொண்ணை எதாச்சும் பேசலாம்ன்னு நினைச்ச…”
“அத்தை என்னை தெரியாதா?…”
“உன்னை தெரியும் தான். ஆனா நீயும் இந்த ஆம்பளைங்க வர்க்கம் தானே? இவங்களை பார்த்து தானே வளர்ந்த? அதான் யோசிக்கறேன். என் மகனா இருந்தாலுமே இதத்தான் சொல்லுவேன்…”
“இன்னும் என்ன? ஓவி எல்லார்ட்டையும் சொல்லிட்டு வா…” என்ற வேதா,
“சஞ்சய் நீ போய் கார் எடு. உன் அப்பாவால கார் ஓட்ட முடியாது. நீ தான் ட்ரைவ் பண்ணனும்…” என்றதும்,
“வேதா…” என்று கத்தினார் அனலரசு.
“இங்க தானே இருக்கேன். கத்தாதீங்க. நீங்க போய் கார்ல உட்காருங்க. நான் சாப்பாட்டை பாக்ஸ்ல போட்டு எடுத்துட்டு வரேன். போற வழில சாப்பிட்டுக்கலாம்….” என்று சொல்ல விழி பிதுங்கி நின்றார் அனலரசு.
“அண்ணி முகிலன், ஓவி கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும், என் புருஷனுக்கும் உங்க புருஷனுக்கும் ஒரே மேடையில காதுகுத்தி மொட்டையடிச்சிடுவோம்ன்னு வேண்டிக்குவோம்…” என்றார் வேதா ஷோபாவிடம்.
“வேதா என்ன பேசிட்டு இருக்க நீ?…” அனலரசு கோபத்துடன் கேட்க,
“கிளம்புங்க நீங்க. போங்க, இன்னும் ஏன் நிக்கறீங்க?…” வேதா சொல்ல,
“ஊர்க்கு தானே வர. அங்க வச்சு நீ பேசு பார்த்துக்கறேன்…” என உறுமிவிட்டு அனலரசு வெளியேறி சென்றதும் ஓவியாவும், ஷோபாவும் வேதாவை அணைத்துக்கொண்டார்கள்.
அதுவரை திடமாய் பேசிக்கொண்டிருந்த பெண்மணிக்கும் கண்ணில் இருந்து கண்ணீர் நிறைந்து வழிய முகிலன் அதனை துடைத்துவிட்டான்.
“என்ன த்தை நீ, நான் பேசிக்கமாட்டேனா? இதுல நீ இன்னும் பேசனுமா? இப்ப உன் மேல தான் அவ்வளவு கோபமும் இருக்கும்…” என்றவனின் கையை பிடித்துக்கொண்டார் வேதா.
“அதெல்லாம் சமாளிப்பேன் முகிலா. இத்தனை வருஷமா ஓட்டலையா? அந்த மனுஷன் தான் புத்தி இல்லாம பேசினா இங்க இருக்கறவங்களும் என் பொண்ணை வேண்டாம்ன்னு சொல்றாங்க…” என இளங்கோவை பார்த்துக்கொண்டே சொல்ல,
“வேதாம்மா, நான் ஏதோ கோவத்துல…”
“சும்மா இருண்ணே, உனக்கு கோவம்ன்னா அந்த மனுஷனை பேசு. சண்டை போடு. உனக்கு அந்த உரிமை இருக்கு. நியாயமும் இருக்கு. ஆனா என் பொண்ணை வேண்டாம்ன்னு நீ எப்படி சொல்லலாம்? அவருக்கு தான் அறிவில்லை. உனக்குமா?…”
வேதாவின் பேச்சில் தனது தவறை உணர்ந்து அமைதியாய் நின்ற இளங்கோவின் முன்னால் ஓவியாவையும், முகிலனையும் நிறுத்தினார்.
“இவங்களோட வாழ்க்கையை பத்தி கொஞ்சமாச்சும் யோசனை செஞ்சியா நீ? அப்படி என்ன ஆத்திரம் உன் கண்ணை மறைக்குது? அவருக்கு உனக்கும் என்ன வித்யாசம்?…” என்ற கேள்வியில் தலைகுனிந்தார் இளங்கோ.
“அத்தை…” என்றவனின் குரலில் கோபத்தை விடுத்தவர்,
“இங்க பார் முகிலா என் உடம்புல தெம்பிருக்கற வரைக்கும் என்னால என் பொண்ணை பார்த்துக்க முடியும். அடுத்து நீ தான் பார்க்கனும்…” என்று சொல்லியவர் முகத்தை துடைத்துவிட்டு,
“இரு தண்ணியை குடிச்சுட்டு வரேன்…” என உள்ளே சென்றார்.
அவ்விடமே கனத்து போனது. எத்தனை தைரியமாக எதிர்கொண்ட பெண் இப்படி கலங்கி போனது மற்றவர்களின் தைரியத்தையும் சோதித்தது.