இரு குடும்பங்களும் சென்னை வந்து சேர்ந்துவிட்டார்கள். தோப்பில் இருந்து வந்ததில் இருந்தே இளங்கோவுடன் கூட சரியாக பேசவில்லை அனலரசு.
முறைத்துக்கொண்டே தான் சுற்றி வந்தார். ஷோபா வேதாவிடம் ‘சமாதானம் செய்’ என சொல்ல,
“சும்மா இருங்கண்ணி, என்கிட்டே கேட்டா கோவிச்சுக்கிட்டார்? அதெல்லாம் தானா சரியாகும். சும்மா தாங்கிட்டே இருக்க முடியாது….” என்று அசால்ட்டாக சொல்லிவிட்டார்.
ஓவியா தந்தையிடம் சென்று பேச முயற்சி செய்ய அதற்கும் முகம் திருப்பி சென்றார் மகளிடம்.
“அப்பா பேசலைம்மா…”
“ரொம்ப சந்தோஷம் நிம்மதியா இரு. இல்லைன்னா எதாச்சும் சொல்லிட்டே இருப்பார்…” அதற்கும் வேதா பதில் வைத்திருக்க அங்கே தன் குடும்பத்தினர் கூட தன்னை நெருங்கவில்லையே என அனலரசு யோசனையானார்.
இனி இங்கே வருவதை இன்னுமே குறைத்துவிட வேண்டும் என நினைப்புடன் தான் ஊரை விட்டும் கிளம்பி சென்றார்.
அனலரசு தான் நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்பதை மாற்றியமைக்கவே முகிலன் முடிவெடுத்திருந்தான்.
ஞானசம்பந்தமும், கமலாவும் அவர்கலை அனுப்பும் பொழுது வழக்கம் போல தோட்டத்தில் விளைந்தது, தேங்காய்கள், இளநீர்கள் என காரில் ஏற்ற,
“என்னவோ எங்க ஊர்ல கிடைக்காத மாதிரி…” என நக்கல் பேச்சு வேறு பேச வேதவல்லிக்கு சுறுசுறுவென வந்தது.
“ஏன் த்தை, அதான் மாமாவுக்கு இஷ்டம் இல்லையே. அப்பறம் எதுக்கு எடுத்துக்கறீங்க? அவர் ஆசை என்னவோ அப்படி தானே எப்பவும் இருப்பீங்க?…” என்றான் முகிலன் தனது கார் டிக்கியை மூடிக்கொண்டே.
‘இவன் என்ன ஓவரா வம்பு பேசறான் இந்த முறை?’ என குறுகுறுவென முகிலனை பார்க்க அவன் திரும்பினால் தானே?
பேச்சு வேதாவிடம் இருந்தாலும் பார்வை தனது வேலையில் இருந்தது. மனது இப்பொது ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.
ஆனால் தானாக எதையும் ஆரம்பிக்க போவதில்லை. அதுவரை அமைதியாக இருக்கவென முடிவெடுத்திருந்தான்.
“ஓகே தாத்தா, உடம்பை பார்த்துக்கோங்க. அடுத்த லீவ் இங்க தான். அறுவடைக்கு கண்டிப்பா லீவ் போட்டு வந்திருவேன்…” என முகிலன் சம்பந்தத்திடம் சொல்ல,
“விளங்கிடும். கம்பெனி என்ன தாத்தா வீட்டு சொத்தா? நினைச்சா லீவ் போட? நினைச்சா ஊருக்கு வரன்னு…” அனலரசு நக்கலாக பேச,
“அது என் இஷ்டம். எனக்கு ரிலாக்ஸ் பண்ணிக்கனும்னா நான் இங்க வர தான் செய்வேன். என்னோட ஊர் இது. எப்ப வரனும்னு யாரும் முடிவு பண்ண கூடாது…” என்றான் சூடாக.
“முகிலா…” கோபத்துடன் இளங்கோ அதட்டினார் தன் மகனை.
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்?…” அவரை பாராது அவன் பதில் தர,
“மாமா என்ன சொல்லிட்டார்ன்னு இப்படி பேசற நீ?…”
“நான் சொன்னது என் கம்பெனியை பத்தி. நான் வர போக நினைக்கிறதை கம்பெனி முடிவெடுக்க கூடாதுன்னு சொன்னேன்…” முகிலன் தந்தைக்கு பதில் கொடுக்க,
“ஒருத்தர்க்கிட்ட வேலை பார்க்கும் போது அங்க நாம தான் அடி பணிஞ்சு நடக்கனும். அத்தனை பெரிய கம்பெனி. வேலை கிடைக்காதன்னு அவனவன் அலையா அலையறான்…” என்ற அனலரசு,
“அதானே? எல்லாம் ஈஸியா கிடைச்சா இப்படித்தான் பேச தோணும்…” என்றார் முகிலனை கோபத்துடன் பார்த்து.
“ஈஸியா எதுவுமே கிடைக்கலை. நான் கஷ்டப்பட்டு படிச்சேன். என் படிப்புக்கான வேலை அது. அவங்களும் சும்மா ஒன்னும் தூக்கி குடுத்துடலை…” முகிலனும் பதிலுக்கு பதில் பேச அத்தனைபேரும் அதிர்ந்து தான் பார்த்தார்கள்.
ஞானசம்பந்தம் மனதிற்கு அது ஒப்புதலாக இல்லை. மருமகனை கண்டிக்கவியலாது. ஆனால் பேரனை கண்டிக்கலாம்.
“என்ன முகிலா இது?…” என்று சற்று தள்ளி தனியே அழைத்து வந்தவர்,
“எத்தனை நாள் இப்படியே இருக்க சொல்றீங்க? என் பிள்ளை வந்து தலை எடுக்கற வரைக்கா?…”
முகிலனின் பேச்சில் சம்பந்தம் திகைத்து போனார். ஏன் இத்தனை யோசிக்கிறான் என தெரியாமல் அவர் பார்த்தார்.
“விட்டா என் பிள்ளையையும் இப்படியே அடக்கி வைப்பார். நான் வளர்ந்தமாதிரி என் பிள்ளைங்க ஆக கூடாது…”
“முகிலா என்னப்பா? என்னென்னவோ பேசற?…”
“வேற எப்படி பேச? எனக்கு பொறுமை போய்டுச்சு. பாவம் ஓவியாவும்…”
“அதுக்குத்தான் நான் பேசறேன். கல்யாணம் முடியனும்டா. அதுக்குள்ளே வாக்குவாதம் பெருசாகி….”
“பெருசானா? பெருசானா என்னவாகும்? என்ன செஞ்சிருவார்?…”
சண்டைக்கு கிளம்புவதை போல சட்டையின் கையை மடித்துவிட்ட படி தூரத்தில் நின்ற அனலரசுவை முறைத்து தாத்தாவிடம் கேட்க அவனின் கையை பிடித்துகொண்டார் சமபந்தம்.
“அட நீ வேற ஏன்ப்பா?…” என அவனின் கையை தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டார்.
“என்ன பிரச்சனை உனக்கு? என்னவோ இருக்கு. இல்லைன்னா நீ இத்தனை பேச மாட்ட…” என்றதும் முகிலன் மௌனமாக நின்றான்.
“வேலை இடத்துல பிரச்சனையா?…” என்றவருக்கு பதில் சொல்லாமல்,
“ஏன் தாத்தா நான் இங்கயே வந்து விவசாயம் செஞ்சா உங்களுக்கு சந்தோஷமா?…” என கேட்க உள்ளுக்குள் திக்கென்றானது சம்பந்தத்திற்கு.
“என்ன என்ன கேட்கிற நீ?…” என அதிர்ச்சியுடன் பேரனை பார்த்தவரின் பார்வை அடுத்ததாக அனலரசுவை தொட்டு ஓவியாவை அடைந்தது.
எதுவோ சரியில்லை, என்னவோ காரணமின்றி மனஉளைச்சலில் பேசுகிறான் என நினைத்தால் முடிவு எடுத்துவிட்டு தான் பேசவே ஆரம்பித்ததை போலல்லவா உள்ளது என தோன்றியது சம்பந்தத்திற்கு.
“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அடுத்ததை நான் சொல்றேன்…” என்றான் முகிலன்.
“எப்படி சந்தோஷமில்லாம போகும்? எனக்கு பூரண திருப்தி. ஆனா…”
“அட என்னய்யா நீ? எனக்கு சந்தோஷமா இருந்தா மட்டும் போதுமா? உன் அப்பன், மாமன் சம்மதிக்கனுமே?…” என்றார் கலக்கத்துடன்.
“அதை நான் பார்த்துக்கறேன். பேசிக்கறேன்….”
“முகிலா…”
“என்னோட நிம்மதியையும் பாருங்க தாத்தா…” என்ற பின்னர் என்ன பேசுவார்?
“சரிப்பா, ஆனா இப்போ எதுவும் இங்க பேச வேண்டாம். எங்களுக்கும் நிம்மதியா இருக்காது…” என சொல்ல தலையசைத்துவிட்டான்.
“சரி வா போவோம். நல்ல நேரத்துல கிளம்புங்க…” என சொல்ல,
“நானும் வரும் போதெல்லாம் இதுதான் பன்றீங்க…” என சிரித்தபடி முகிலன் வர அனலரசு இளங்கோவிடம் இருந்து முகிலனிடம் கவனத்தை திருப்பினார்.
“ம்மா கிளம்புவோம்…” என்ற முகிலன் தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு காரை எடுக்க செல்ல அனலரசு அவனை விட்டு மாமனாரை பார்த்து பேசலானார்..
வேதவல்லியும் அங்கே திரும்ப முகிலன் ஓவியாவை தாண்டி செல்லும் பொழுது ஒருவரின் கவனத்தையும் கவராது லேசாய் அவளின் கைபிடித்து அழுத்தி விட்டுத்து நகர அதனை எதிர்பாராதவள் திடுக்கிட்டு போனாள்.
“ம்மா எவ்வளவு நேரம் நிப்பீங்க? கார்ல ஏற சொல்லுங்க…” என ஷோபாவிடம் சொல்லி தான் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கண்ணாடியின் வழியே அவளை பார்த்தான்.
இன்னுமே கலக்கம் சுமந்தவிழிகள், அவனின் தொடுகையை கூட ரசிக்கமுடியாமல் பயந்து பார்க்க முகிலனுக்கும் அந்த பார்வையில் வருத்தம் தான்.
“டேக் கேர் ஓவி…” என வாயசைக்க அவளுக்கு புரியவில்லை.
ஆனாலும் அவனின் கனிந்த பார்வையில் மனம் இனிக்க தலையை அசைத்தாள் அவனிடத்தில்.
அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அவளை பிடித்த தனது கையை உயர்த்தி காண்பிக்கவும் மனம் படபடத்தது ஓவியாவிற்கு.
அவனின் புன்னகையும் அந்த பார்வையும் உள்ளுக்குள் சிறகை விரிக்க பார்த்தபடியே தான் இருந்தாள்.
அவரின் அதட்டலில் ஓவியா காரில் ஏறி அமர இங்கே முகிலன் காரில் அவனின் பெற்றோர் அமர்ந்துகொண்டார்கள்.
இருவருமே ஒரே நேரம் கிராமத்தை விட்டு கிளம்ப முன்னும் பின்னுமாக தான் சென்னை வந்து சேர்ந்தார்கள்.
எப்போதும் சம்பந்தம் சொல்வது ஒரே இடத்தில் இருந்து இருந்து வருபவர்கள் ஒரே காரில் வந்தால் என்னவென்று கேட்டாலும் அனலரசுவை காரணம் காட்டுவார்கள்.
ஓன்று அனலரசு, தனியே தான் வர நினைப்பார். இன்னொன்று முகிலன். எத்தேர்ச்சையாகவேனும் வரவேண்டும் என்றால் அவருடன் வருவதை முடிந்தளவுக்கு தவிர்த்துவிடுவான்.
சென்னை வந்து சேர்ந்து இரண்டு வாரம் ஆகிவிட்டிருந்தது. முகிலன் வேலைசெய்யும் மென்பொருள் நிறுவனத்தின் சூழல் அவனுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை.
ஏற்கனவே அங்கே விருப்பமின்றி பணியாற்றி வந்தவனின் தன்மானம் இன்னொருவரால் வேண்டுமென்றே சீண்டப்பட எதுடா இங்கிருந்து செல்ல சாக்கு என பார்த்துக்கொண்டிருந்தவனின் பொறுமை சோதிக்கப்பட வெகுண்டுவிட்டான்.
அன்று பார்த்து நாட்டியாலயா சார்பில் நகழ்ச்சி ஓன்று சென்னையில் நடைபெற அங்கு செல்லவேண்டியதை எல்லாம் மறந்தான்.
அலுவலகத்தில் தான் தான் மட்டுமே அவனின் மனதில் இருந்தது. முகம் முழுவதும் உக்கிரம். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்? என ஆவேசம் மிக தனது கையிலிருந்த பேப்பரில் கோபத்தை காண்பித்தான்.
“முகில், முதல்ல நம்ம ஹெட்க்கிட்ட பேசுவோம். காம் டவுன் மேன்…” என அமைதிப்படுத்த பார்த்தான் உடன் வேலை செய்யும் தோழன்.