திருப்புக்கொளியூர் என்ற பெயர் வழக்கொழிந்து இன்றைய திருப்பூராய் வலம் வரும் நகரம் அது. எப்போதும் திங்களுக்கே உரிய காலை பரபரப்பில் கலைந்து கிடந்தன சாலைகள். பேருந்துகளும் சிற்றுந்துகளும் அப்பகுதியை நிறைத்த வண்ணமிருக்க, அவிநாசியப்பர் திருக்கோவில் அன்று அத்தனை கூட்டத்துடன் காணப்பட்டது. கோவில் வாயிலின் இரண்டு புறமும் வரிசையாக சிறு சிறு கடைகள் அமைந்திருக்க, இன்னுமே நெருக்கடியில் மூழ்கிப் போனது அந்தத் தெரு.
“எலும்பிச்சம்பழம், மல்லிப்பூ, கனகாம்பரம், சாமந்தி பூ, மாலை!” என்ற வார்த்தைகள் செவியை நிறைக்க, வாயிலில் குங்குமத்தோடு சந்தனமும் நாசியை நிறைத்து நாபி வரை மணம் பரப்பியது. உள்ளே நுழைந்ததும் செவிப்பறையை மோதிய மணியோசையில் பக்தர்கள் மனம் லயித்துப் போயின.
அபிஷேகம் முடிந்து அவிநாசியப்பர் சர்வ அலங்காரத்தில் கண்களை கவர்ந்து கொண்டிருக்க, வரிசையில் நின்றிருந்த மக்கள் தங்களது மனக்குறைகளை அவரிடம் இறக்கி வைக்கும் மும்முரத்திலிருந்தனர்.
செவியோரம் பக்தி பாடல்கள் கசிந்த வண்ணமிருக்க, வாயிலின் ஓரத்தில் நெய் மணக்கும் பொங்கலை ஒரு சாரர் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருந்தனர். காலையிலே அத்தனை ஜெகஜோதியாய் இருந்தது அந்தப் பகுதி.
வரிசையில் நின்று இரண்டு தொண்ணைப் பொங்கலை கேட்டு பிரசாதம் கொடுப்பவரிடம் முறைப்பை பெற்று, அசட்டுப் புன்னகையை உதிர்த்து தமக்கையை கண்களால் துழாவினாள் சோனியா. அணிந்திருந்த துப்பட்டா ஒரு பக்கம் வழிய, அதை முட்டியால் சரி செய்தவாறு மூக்கு கண்ணாடியை தலையை சிலுப்பி மேலேற்றினாள்.
உள்ளத்தையும் விழிகளையும் குளிர்வித்த அவிநாசியப்பரை மனம் முழுவதும் நிறைத்தபடி உதடுகளில் மென்னகை தவழ கண்களை திறந்தாள் ஷிவதுளசி. அகத்தைப் போலவே முகமும் அமைதியாய் ஆர்ப்பட்டம் இல்லாதிருக்க, கண்கள் தங்கையிடம் குவிந்தன.
“அக்கா, எவ்வளோ நேரம் சாமியைக் கும்பிட்டுட்டே இருப்ப நீ? ரொம்ப நேரம் நின்னுட்டே இருந்தா, உன் வேண்டுதலை ஃபர்ஸ்ட் கேட்டுடுவாரோ?” உதடுகளை சுழித்தாள் சோனியா.
“பம்ச்… கோவில்ல நின்னு என்ன பேச்சு இது?” மெலிதான அதட்டலுடன் அவளது நெற்றியில் குங்குமத்தையும் விபூதியையும் பூசினாள் துளசி.
“இங்க பாரு கா, நானே உனக்காக பொங்கல் வாங்கிட்டு வந்துட்டேன். நீ இந்த வரிசையில நின்னு எப்போ வாங்க?” என அங்கலாய்த்தவள் துளசியின் கையில் பொங்கலை திணித்தாள்.
“இதை கைல வச்சுட்டு ஷாலை சரி பண்ண முடியலை. கண்ணாடி வேற கழண்டு விழுது!” என்று புலம்பியவளின் வலதுகை உயர்ந்து துப்பட்டாவையும் மூக்குக் கண்ணாடியையும் அதனிடத்தில் சரியாய் பொறுத்தின. தங்கையின் செயலில் துளசியின் உதடுகள் மென்னகையை உதிர்த்தன.
“நெய் வாசம் மூக்கை துளைக்குது. அங்க உட்காரலாம்க்கா!” என்று சின்னவள் ஓரிடத்தை தேடி அமர, இவள் சிரிப்புடன் அவளைப் பார்த்தாள். கீழே அமர்ந்ததும் பொங்கலில் கவனமானவள் துளசி அருகே வராது அங்கே நிற்க, நிமிர்ந்து அவளை முறைத்தாள்.
“அக்கா, வா!” என சோனியா மீண்டும் அழைக்க, “டைமாச்சு டி. நீ சாப்ட்டு வா, இதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம். அப்பா சாப்பிடுவாரு!” என்று பதிலுரைத்தாள் நேரத்தைப் பார்த்துக் கொண்டே. தந்தைக்கு நெய்ப் பொங்கல் என்றால் அத்தனை இஷ்டம் என மனம் அவரது நினைவில் கனிந்து போனது. ஒவ்வொரு பிறந்த நாளிற்கும் அவருடைய பரிசுகள் இன்னுமே பசுமையாய் மனதை நிறைத்தன. வெறும் நினைவாய் இருந்தவற்றை மனம் அசை போட, நிதர்சனம் முகத்தில் அறைந்ததில் விழிகள் லேசாய் பனிப்பது போலிருக்க, இமையை சிலுப்பி உள்ளிழுத்துக் கொண்டாள். இமைகள் தாழந்து பின் மீண்டும் அவிநாசியப்பரிடம் குவிய, மனம் நூறாவது முறையாக தன் வேண்டுதலை அவரிடம் வைத்தது.
சோனியா பொங்கலை உண்டு முடித்தவள் எழுந்து துளசியருகே விரைந்தாள். “சாமி பிரசாதம் கா. ஒரு வாய் மட்டும் சாப்பிடு!” என தமக்கைக்கு ஊட்டினாள். மெல்லிய புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள் துளசி.
மீண்டும் ஒருமுறை அவநாசியப்பரை விழிகளில் நிறைத்தபடி இருவரும் வெளியே வந்தனர். துளசி தனது இருசக்கர வாகனத்தை உயிர்பிக்கவும், அவர்கள் இருவரும் வீட்டிற்கு விரைந்தனர்.
“அக்கா, சாரி கா!” நேற்றிலிருந்து இதோடு பத்தாவது முறையாக மன்னிப்பை வேண்டிய தங்கையைக் கண்ணாடி வழியே முறைத்து வைத்தாள் துளசி.
“ப்ம்ச்… பாரு, உனக்கு அந்த க்ரீன் கலர் சேரி ரொம்ப அழகா இருந்திருக்கும். என்னாலதானே அதை நீ எடுக்க முடியலை. இந்த காட்டன் சேரி ரொம்ப சிம்பிளா இருக்கு!” என்ற சோனியாவின் விழிகள் துளசியின் மீது வருத்தத்துடன் படிந்து மீண்டன.
“சோனி, பல் வலியெல்லாம் சொல்லிட்டா வரும். ரெண்டாயிரத்துக்கு எடுத்தாதான் நல்ல சேலையா. இதுவே அழகா இருக்கு. நீ கில்டா ஃபீல் பண்ணாத!” என்று தங்கையை சமாதானம் செய்தாள்.
“இது உன்னோட இருபத்தி அஞ்சாவது பெர்த் டே, சில்வர் ஜூப்ளி கா. இன்னைக்கு நீ ப்ரைட்டா ஆஃபிஸ் போக வேணாமா?”
துளசியின் தாய் வசுமதி மகளின் பிறந்த நாளிற்காகவென இரண்டாயிரம் ரூபாயில் புடவை எடுத்துக் கொள்ள அவளை வற்புறுத்தி இருந்தார். முதலில் எதற்கு இவ்வளவு செலவு என மறுத்தவள், அவரது கட்டாயத்தின் பேரில் சம்மதம் தெரிவித்திருத்திருந்தாள்.
ஆனால், சோனியா கடந்த வாரம் பல்லில் ஏதோ கோளாறு காரணமாக வலியில் துடிக்க, அந்தப் பணத்தை தங்கைக்காக செலவழித்துவிட்டாள் துளசி. வசுமதியின் கையிலிருந்த இருப்பு முழுவதும் மாதக் கடையில் கரைந்திருக்க, மகளின் பிறந்தாளிற்கு புது உடை எடுத்துக் கொடுக்க முடியவில்லை என அவருக்கும் கவலை பிறந்தது. ஆனால் அதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத துளசி, ஏற்கனவே உடுத்தாமல் புதிதாக வைத்திருந்த பருத்திப் புடவை ஒன்றை அணிந்து கொண்டாள்.
சோனியாவும் தன்னால்தான் இப்படி என மனதிற்குள் வருந்தினாள். அதன் பொருட்டே சின்னவளுக்கு வார்த்தைகளில் வருத்தம் மேவியிருந்தது. தங்கையின் முகத்தைப் பார்த்தவள், “சோனி, புக் ஏதோ வாங்கணும்னு சொன்ன? ஸ்டேஷனரி ஷாப்ல நிறுத்தவா? வாங்கிக்கிறீயா?” எனக் கேட்கவும், சோனியாவின் மனதும் அதில் திரும்பின.
“ஆமா கா, மறந்தே போய்ட்டேன். இன்னைக்கு மட்டும் புக் இல்லாம கிளாஸ்க்குப் போனேன், மேம் என்னை வெளியத் துரத்திடுவாங்க!” என்று சிரித்தாள்.
“இத்தனை நாள் புக் வாங்காம என்ன பண்ண சோனி, என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்ல?” துளசி கடிந்தாள்.
“அக்கா, இந்த புக் நானூறு ரூபாய். நான் ஆல்ரெடி பழைய எடிசன் வச்சிருக்கேன். பட், அந்தம்மாவுக்கு புது எடிசன்தான் வேணுமாம். நானும் சமாளிச்சிடலாம்னு பார்த்தேன், முடியலை!”
“படிக்க தானே புக் வாங்க சொல்றாங்க. புத்தகத்துல போட்ற காசு வேஸ்ட் இல்லை டி. வாங்கிக்கலாம்…” என்ற துளசி வாகனத்தை புத்தகக் கடையின் முன்பு நிறுத்தினாள்.
இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த துளசியின் பார்வை சாலையில் குவிந்தன. ஓரிரு வாகனங்கள் அவர்களை கடந்த வண்ணமிருக்க, “ஏய் துளசி?” என்ற கூச்சலுடன் மகிழுந்தை நிறுத்தியிருந்தாள் ஒரு பெண்.
“ஹே, பாபி..” என்ற துளசியின் முகம் நொடியில் மலர்ந்துவிட்டது. வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து சென்றவள்,
“எப்படி இருக்க? குழந்தை, ஹஸ்பண்ட் எல்லாம் எப்படி இருக்காங்க?” என வினவினாள்.
“எனக்கென்ன துளசி, குழந்தை குட்டின்னு ஜெக ஜோதியா இருக்கேன். நீ எப்போ கேர்ள் மிங்கிளாகப் போற?” என மற்றவள் வினா தொடுத்தாள். இவளிடம் அதற்குப் பதிலில்லை, புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.
“ஹேப்பி பெர்தடே மேடம்… மிட் நைட்டே சீனியர் ஸ்டேட்ஸ் வச்சுட்டாரே. அந்த மனுஷனுக்காக கொஞ்சம் யோசிடி!” பாபி அவளது கைகளை எட்டிப் பிடிக்க, துளசி தலையை மட்டும் அசைத்தாள். வார்த்தைகள் இல்லை. இருவரிடமும் கனத்த மொளனம் சூழ்ந்தது.
அதை உடைக்க எண்ணிய பாபி, “ட்வென்ட்டி ஃபைவ்ல நாங்க ஆன்ட்டி ஆகிட்டோம். நீ மட்டும் வயசு கூட கூட அழகாகிட்டே போற துளசி!” என்றாள் சிரிப்பும் கிண்டலுமாய். இவளது முகத்தில் மென்முறைப்பு.
“ஹே, சீரியஸா டி. நீ நம்ப மாட்டீயா?” என்று மற்றவள் கூறவும், இவளது தலையை மெதுவாய் அசைந்து அதை ஏற்றன. நெற்றியில் பூசியிருந்த குங்குமமும் உதட்டிலிருந்த மென்புன்னகையும் துளசிக்கு மேலும் அழகு சேர்த்தன. மாநிறத்திற்கும் குறைவாய் இருந்தவளின் கூந்தல் இடைக்கு சற்றே மேலே புரண்டந்தது. அதில் சிறிதாக மல்லிகைப் பூவை வைத்திருந்தவள், காலையிலே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு கோவிலிக்கு விரைந்திருந்தாள். அதனாலே முடிகற்றைகள் எல்லாம் அத்தனை சீராய் இல்லாது ஒவ்வொன்றும் ஒவ்வொருபுறம் பறந்தன. அதை சிறிய இழுபட்டையில் அடக்கி இருந்தவளை சாம்பல் வண்ண பருத்திப் புடவை பாந்தமாகத் தழுவி இருக்க, அமரிக்கையான அழகுடன் இருந்தாள். பேரழகி இல்லையெனினும் அமைதியான அழகு துளசி.
“அக்கா, இப்போ உனக்கு டைம் ஆகலையா?” சோனியா முறைப்புடன் கத்தினாள். அவளது செயலில் துளசி சங்கடமாகப் புன்னகைத்தாள்.
“நீ போ துளசி, உன் தங்கச்சி முறைச்சிட்டு நிக்கிறா. அப்புறம் அடிச்சிடப் போற…” பாபி கேலி சிரிப்புடன் விடை பெற, இவள் சாலையைக் கடந்து மறுபுறம் வர யத்தனித்த நொடி வேகமாய் வந்த மகிழுந்து ஒன்று அவளை இடிப்பது போல வரவும், “அக்கா...” என சோனியா கத்தியிருக்க, துளசி செய்வதறியாது திகைத்துப் போய் நின்றுவிட, நொடி நேரத்தில் அந்த ஓட்டுநர் வலதுபுறம் மகிழுந்தை ஒடித்து திருப்பியிருந்தார். அதில் சாலையில் தேங்கி நின்ற சேற்றுடன் நீரும் அவளது சேலையில்பட்டுத் தெறித்தன.
அதற்குள் கத்திக்கொண்டே அவளருகே விரைந்திருந்தாள் சோனியா. மகிழுந்து நின்றதை விழிகள் பார்த்து புலன்கள் உணர்ந்தும் துளசியின் இதயத்துடிப்பு சீரற்றுப் போனது. முகத்தில் ஆங்காங்கே வியர்வை துளிகள் படர, இன்னுமே பயம் விலகாத பாவனை முகத்தில். விழிகளை சிமிட்டி ஒரு முறை தன்னை சுயபரிசோதனை செய்தவளின் முகத்திலிருந்த பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய, இதயம் சீராய் துடிக்கத் தொடங்கியது.
“அக்கா, உனக்கு ஒன்னும் இல்லைல? ஓகே தானே?” சோனியா பதறியபடி வினவினாள். சின்னவளின் விழிகளில் நீர் கோர்த்தன. அதில் தன்னிலை அடைந்த துளசி, “சோனி, ஐ யம் ஓகே. ஒன்னுமில்லை!” என்று தங்கையை சமாதானம் செய்தாள்.
“ஏம்மா அறிவில்ல, ரோட் கிராஸ் பண்ணும்போது பார்த்து வர மாட்டீங்களா?” ஓட்டுநர் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார்.
அதில் சீற்றமடைந்த சோனியா, “யாரைப் பார்த்து வான்னு சொல்றீங்க, நீங்க தான் தப்பா வந்தது. இடிச்சு கொல்லப் பார்த்ததும் இல்லாம, சத்தம் வேற… ட்ரெஸ் எல்லாம் ஸ்பாயில் ஆகிடுச்சு!” என இவள் பொரிந்தாள்.
“ஏம்மா, நான் சரியாதான் வந்தேன். நீங்க கார் வர்றதைப் பார்க்காம இடையில வந்தது, என் மேல தப்பா?” அந்த ஓட்டுநர்விடாது சத்தம் போட, சோனியாவும் பதிலுக்கு இரைந்தாள்.
“சோனியா, பிரச்சனை வேணாம். நீ வா, டைமாச்சு. அதான் ஒன்னும் ஆகலை இல்ல?” என்ற துளசி தங்கை கையைப் பிடித்திழுத்தாள்.
“அக்கா, ராங்கா வந்ததும் இல்லாம, அந்தாளு ராங்கா பேசிட்டு இருக்காரு. நீ பேசாம வர சொல்ற?” என சோனியா சிலிர்க்க, இத்தனை நேரமாக இந்தப் பரபரப்பு தன்னை பாதிக்கவில்லை என்பது போல பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன், மெதுவாய் மகிழுந்து கண்ணாடியை கீழிறக்கினான். அவனது பார்வை பெண்கள் இருவரிடமும் குவிந்தது. அவர்கள் இவனை கவனிக்கவில்லை.
சற்றே வலது காலைத் தூக்கிக் கையை கால்சராயில் நுழைத்து சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்தவன், “எக்ஸ்யூஸ்மி…” என்று அழைத்து துளசியிடம் பணத்தை நீட்டினான். இவ்வளவு நேரம் அவனது முகத்தைக் கூட கண்டிராதவளின் விழிகள் அவனது கையில் நிலைத்தன. அவன் அணிந்திருந்த விலை உயர்ந்த கடிகாரத்தை நொடி நேரத்தில் உற்று நோக்கியவள், நிமிர்ந்து அவனது முகத்தை அழுத்தமாய்ப் பார்த்தாள். அதில் சிறிதாய் அலட்சியமும் ஏளனமும் அதைவிட கோபமும் இருந்தன.
“சோனி, வா போகலாம்!” என்றவள் விறுவிறுவென தனது இருசக்கர வாகனத்தருகே செல்லவும், சோனியாவும் அவள் பின்னே ஓடினாள். அந்தப் பார்வையில் இவனது விழிகள் அவளையே தொடர்ந்தன.
“தப்பா வந்துட்டு, எவ்வளோ ராங்கா பேசீட்டுப் போகுதுங்க தம்பி, சரியான அராத்துக!” என்ற ஓட்டுநர் மகிழுந்தை இயக்கினார்.
“அக்கா, இன்னும் ரெண்டு வார்த்தை கேட்டிருக்கலாம். பணத்தை எடுத்து நீட்டுறான், ராஸ்கல். எல்லாம் பணக்காரத் திமிறு!” என இவள் திட்ட, துளசி எதுவும் பேசாது வாகனத்தை இயக்க, இருவரும் அகன்றனர். கண்களில் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை இறக்கியவனின் பார்வை அந்தப் பகுதியைக் கடக்கும் வரை துளசியிடம்தான் நிலை பெற்றன.
“ஏன் டி, கோவிலுக்குப் போய்ட்டு வர இவ்வளோ நேரமா?” வசுமதி உள்ளே நுழைந்த சோனியாவிடம் வினவினார்.
“ப்ம்ச்… ரோட்ல ஒரு இடியட் ட்ரைவர் இரிடேட் பண்ணிட்டான் மா!” என்று மீண்டும் அந்த ஓட்டுநரோடு அவனையும் வறுத்தெடுத்து நடந்ததை விவரித்தாள்.
துளசி உள்ளே வர, “துளசி, பார்த்து வர மாட்டீயா? பிறந்தநாள் அதுவுமா இப்படி நடந்துடுச்சே. சாயங்காலம் சுத்திப் போடணும் புள்ளைக்கு!” என அவர் கவலையாய்க் கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்ல மா, நான் தான் ரோட்டை கவனிக்காம கிராஸ் பண்ணிட்டேன்…” என்றுவிட்டு அவருக்கு விபூதியைப் பூசிவிட்டு பொங்கலைக் கொடுத்தாள்.
“சரி, அபிஷேகம் பார்த்தீங்களா? சாமி கும்பிட்டாச்சா?” என அவர் வினவியவதற்கு சோனியா பதிலளிக்க, துளசி அடைக்கப்ட்டிருந்த ஒரு அறையின் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தாள்.
ஜன்னலருகே ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்திருந்தார் கண்ணப்பன். அறுபது வயது என்று கணிக்க முடியாத உடல்வாகு. ஆனால் தலையில் நிறைய வெள்ளிக் கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்க, முன்பக்க நெற்றியில் முடிகள் சொற்பம்தான்.
இவளைக் கண்டதும், “துளசி… துளசி!” என முகம் மலர்ந்தவர், கையைத் தூக்க முயன்றார். ஆனால் முடியாது போனதில் முகம் சுருங்கியது. காலையும் அசைக்க முடியாது அப்படியே நின்றார். அவரது இரண்டு கரங்களும் கால்களும் வலிமையான இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருந்தன.
“அப்பா…” என சின்ன சிரிப்புடன் அவரருகே சென்றவள், “கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன். பிரசாதம் சாப்டுறீங்களா?” என வினவியவாறே கையிலிருந்த பொங்கலை அவர் வாயருகே கொண்டு சென்றாள்.
“நான், நானும் கோவிலுக்கு வரேன் துளசி…” என்று குழந்தை போல பிதற்றியவாறே பொங்கலை ஒரு வாய் உண்டார்.
“இப்போ நான் போய்ட்டு வந்துட்டேன் பா. அடுத்த தடவை போகும்போது உங்களைக் கண்டிப்பா கூட்டீட்டுப் போறேன்!” என்றவளின் கையிலிருந்த பொங்கல் தூரச் சென்று விழுந்திருந்தது.
“இப்பவே… இப்பவே கூட்டீட்டுப் போ. நானும் வரேன், இந்தக் கம்பியை அவித்து விடு துளசி!” என அவர் கையையும் காலையும் பிடித்திழுக்க ஏற்கனவே அவர் இழுத்ததில் புண்ணாகி இரத்தம் கசிந்த இடத்தில் இன்னும் குருதி வழிந்தது.
“அப்பா, கம்பியை இழுக்காதீங்க பா. நாளைக்குப் போகலாம். நிச்சயமா நாளைக்கு உங்களைக் கூட்டீட்டுப் போவேன். நீங்க சமத்தா இருக்கணும்!” என அவரை அணைத்துப் பேசி சமாதானம் செய்தாள். அந்த தொடுதல், ஸ்பரிசம் என்ன உணர்த்தியதோ, அதில் என்ன உணர்ந்தார் எனத் தெரியாவிடினும் அவரது உடல் தளர, மனம் அமைதியானது. மனிதர் குரல் அடங்கிப் போனது.
சில நொடிகளில் அவரிடமிருந்து விலகியவளின் விழிகள் பனித்திருந்தன. “அப்பா, எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் பா. விஷ் பண்ணுங்க!” என கண்ணப்பனின் காலில் விழுந்து வணங்கினாள். அவளது தலையிலிருந்த பூவைப் பிய்த்து எடுத்தார் அவர். நிமிர்ந்து அவரை வேதனையுடன் பார்த்தாள் மகள்.
நான்கு வருடங்களுக்கு முன்னான பிறந்தநாள் நினைவை நிறைத்தன.
தலையிலிருந்த பூவை எடுத்து அவர் கையில் துளசி கொடுக்கவும், அதை ஒவ்வொன்றாக உதிர்த்துப் போடத் துவங்கினார் கண்ணப்பன். சில நொடிகள் அவரைப் பார்த்திருந்தவள், கலங்கிய விழிகளை சரிசெய்து கொண்டு வெளியே சென்று கதவை இழுத்துப் பூட்டினாள்.
நேரம் கடப்பதை உணர்ந்து தனதறைக்குள் நுழைந்து அந்தப் புடவையை கலைத்துவிட்டு பழய புடவை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். விறுவிறுவென கைக்கடிகாரத்தை எடுத்தணிந்து பின் கைபையைத் தோளில் மாட்டியபடி அவள் வெளியே வர, வசுமதி மகளுக்கு மதிய உணவை டப்பாவில் அடைத்துக் கொடுத்தார். காலை உணவாக இட்லியும் கேசரியும் அவளுக்காகக் காத்திருந்தன.
“டைம் இல்ல மா… மதியம் சாப்ட்டுக்கிறேன்!” என்று பேசிக் கொண்டிருந்வளின் வாயில் இட்லி துண்டை அடைத்தாள் சோனியா.
“டைமானது ஆச்சு, இன்னும் ஒரு ஐஞ்சு நிமிஷம் லேட்டா போ, தப்பில்லை கா!” என இரண்டு இட்லிகளை முழுதாக ஊட்டி முடித்த தங்கையைப் பார்த்ததும் இவளது உதடுகள் புன்னகை உதிர்த்தன.
“சிரிச்சது போதும், போ…” என்று சோனியா நகர, இவள் அலுவலகத்தை அடைந்தாள். ஐந்து நிமிடத் தாமதம்தான் என்றாலும் எப்போதும் நேரத்திற்கு சென்றுவிடுபவளுக்கு அது பெரிதாய் தெரிந்தது. காலையிலே ரூபாய்த் தாளை நீட்டியவன் முகம் ஒரு வித எரிச்சலைத் தோற்றுவிக்க, நவீன வருகை பதிவேட்டில் முகத்தையும் கையும் பதிந்துவிட்டு விறுவிறுவென நுழைந்தாள்.
“ஹேப்பி பெர்த் டே மேடம்!” என்று முகமும் அகமும் மலர ஊதா நிறமும் ஆழ் சிவப்பு நிறமும் கலந்த ரோஜா பூங்கொத்தை நீட்டியபடி முட்டிப் போட்டு நின்றான் சந்தோஷ். அவனது செயலை எதிர்பாராது திகைத்தாள் துளசி. பின்னர் முகத்தில் சிரிப்பும் முறைப்பும் மாறி மாறி மையலிட்டன.
“தம்பி, இதான் நம்ப செகண்ட் மெயின் பிராஞ்ச்!” உதவியாளர் கூறியதும் தலையைப் புரிந்தது போல அசைத்தான் இளவேந்தன. கண்களிலிருந்த கருப்பு கண்ணாடியையும் மீறி விழிகள் அந்தக் கட்டிடத்தை ஊடுறுவின.
இறுக்கிப் பிடித்த ஜீன்ஸ் துணியிலான கால்சராயும் இளம் பச்சை நிற மேல் சட்டையும் அணிந்திருந்தவன் அந்த கட்டிடத்தின் முதலாளி என்பது அவனைத் தவிர ஒருவரும் அறியார். ஒரு கையை கால்சராயில் நுழைத்து மகிழுந்தில் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.
“நான் உங்களோட வந்து எல்லாரையும் இன்ட்ரோ பண்ணீட்டு, சுத்திக் காட்டவா தம்பி?” எனப் பணிவாய்க் கேட்டவரிடம் மறுப்பாய்த் தலையை அசைத்தவன், “நோ நீட் அங்கிள், நானே பார்த்துக்கிறேன். நீங்க உள்ள வந்து என்னை இன்ட்ரோ பண்ணதும் எல்லாரும் என்னை டெவில் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணவா? ஐ கேன் ஹேண்டில். நீங்க அண்ணாவுக்கு பி.ஏ வேலை பார்த்தா போதும்!” என்றான் சிரித்தபடியே. ஆனாலும் வார்த்தைகளில் அழுத்தம்.
“இல்ல தம்பி, அவர்தான் உங்களைப் பார்த்துக்க சொன்னாரு…” என உதவியாளர் குமரேசன் இழுக்க, “ஓகே, நோ பிராப்ளம். நீங்களே பார்த்துக்கோங்க. நான் கிளம்புறேன்!” என கால்களை பின்னோக்கி இரண்டு எட்டுகள் வைத்தான் இளவேந்தன்.
அதில் பதறியவர், “ஐயோ, வேணாம் தம்பி. ஐயாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரு. நான் வரலை, உள்ளே அஸீம்னு ஒருத்தர் இருப்பாரு, எதாவது உதவி வேணும்னா அவர்கிட்ட கேளுங்க. நான் ஏற்கனவே நீங்க வர்றதைப் பத்தி சொல்லிட்டேன்!” என அவன் முறைப்பைப் பெற்றுக் கொண்டு அவர் விடை பெற்றார்.
அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் இளவேந்தன். வாயிலை ஒட்டி வலதுபுறம் யாருடைய பேச்சோ இவனது சிந்தனையை சிதறச் செய்ய, திரும்பியவன் விழிகளில் முட்டிப் போட்டு அமர்ந்திருக்கும் சந்தோஷூம் நின்று கொண்டிருந்த துளசியும் விழுந்தனர். அவர்களது பேச்சும் சிரிப்பும் இவனைத் தவறாமல் அடைந்தன.
“ஓஹோ… லவ் பேர்ட்ஸ்?” என்றவன் இதழ்கள் வளைய, அந்தப் பெண்ணை சற்றே ஊன்றிக் கவனித்தான. அரைமணி நேரம் முன்பு தன்னை அலட்சியமாகப் பார்த்த விழிகள் அவை என மூளை எடுத்துக் கொடுக்க, அவளை அழுத்தமாய்ப் பார்த்தான். முன்பிருந்த கோபம், பதற்றம் என எதுவுமே இப்போது இல்லை. மாறாக அவளது முகம் சிரிப்பில் கனிந்திருந்தது. இவனது புருவங்கள் உயர்ந்தன.
“துளசி… அக்செப்ட் மீ…” என சந்தோஷ் குரல் இவனை அடைய, ‘துளசி!’ என உச்சரித்துப் பார்த்தவன் இதழ்கள் கேலியாய் வளைந்தன.