“ஹம்ம்… அக்ரீமெண்ட்ல சொன்ன ஃபர்ஸ்ட் நைட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் ஞாபகம் இருக்கு தானே மிஸஸ் துளசி இளவேந்தன்?” என்றவனை இவள் அதிராமல் அதிர்ந்து பார்க்க, கணவனின் இதழ்கள் கேலியாய் வளைந்தன.
“டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷனா?” அன்றைய நாளின் முதல் அதிர்ச்சியில் துளசியின் கால்கள் தன் போல எழ, காகிதத்தை அவளிடம் நீட்டினான். அதைப் படித்துப் பார்த்தவளின் முகம் முதலில் கோபத்தில் சிவந்து பின் வெட்கத்தில் கவிழ்ந்தது.
“என்ன… என்ன இது?” எனத் திக்கியவளின் வெகு அருகே சென்று காதருகே குனிந்து, “ஹஸ்பண்டா உன்கிட்ட எனக்கு எல்லா ரைட்ஸூம் இந்த நூறு வருஷத்துக்கு உண்டு. சோ, எதில இருந்தும் நீ தப்பிக்க முடியாது!” என்றவன் குரலில் என்ன இருந்தது எனத் தெரியாது தவித்த துளசி அவனை விழிகள் இடுங்கப் பார்த்தாள்.
“ப்ம்ச்… ஈச் அண்ட் எவ்ரி டைம் நான் உன்கிட்ட அக்ரிமெண்ட் பத்தி சொல்லீட்டு இருக்க முடியாது. சோ, இந்த காபியை நீயே வச்சுக்கோ ஷிவதுளசி” என்றவன் அந்தக் காகிதத்தை அருகிலிருந்த மேஜையில் திணித்தான். சில பல நிமிடங்கள் மௌனம் துளசியின் அடிவயிற்றில் எதையோ திகைக்ககச் செய்தது.
இத்தனை நேர கேலி பேச்சுகள் சற்றே பின்னகர்ந்திருக்க, வேந்தனின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக அவளில் படியத் தொடங்க, துளசி முகத்தைத் திருப்பினாள். முன் நெற்றிப் பரப்பில் துளிதுளியாய் வியர்வைத் துளிகள் படர்ந்தன. அகத்தை மறைக்க வெகுவாய்ப் பிரயத்தனப்பட்டவளை அதி சுவாரஸ்யமாய் நோக்கியவன், “சும்மா இருக்கதுக்கு நான் கல்யாணம் பண்ணலை… ஹம்ம், நான் சாமியாரும் கிடையாது பொண்டாட்டியைப் பக்கத்துல வச்சிட்டு நல்லவனா நடிக்க” இளவேந்தன் குரல் தொனியில் துளசியின் இதயத்தில் மத்தளம் கொட்டத் தொடங்கின. இன்னுமே பேசித் தீர்க்கப்படாத ஆயிரம் பிணக்குகள் கணக்கு வழக்காக நிலுவையில் நிற்க, இடையில் வழுக்கிக் கொண்டு நின்றது அவர்கள் வனவாச நேசம்.
சுவரோடு ஒட்டி நின்றவளின் இடையில் வேந்தனின் கை சென்று சமீபிக்க, மனைவியைத் தன்னருகே இழுத்து அணைத்தான். சுழிய எதிர்ப்பும் திணறலுமாய் அவனுள் அடங்கிய துளசியிடம் பெருந்தயக்கத்திற்கு முன்னான மெல்லிய சங்கோஜம் ஒட்டிக் கொண்டது.
மெதுவாய் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவளது வாசத்தையும் நேசத்தையும் நுகர்ந்தான். பெண்ணிடம் உதறல். “ஈஸி துளசி… ஈஸி!” என்றவன் வார்த்தைகளின் சமாதானம் எல்லாம் அண்டப் பெருவெளியில் எதையோ தேடித் துழாவியவளுக்கான விடைதனில் சுழியத்தை தோற்றுவித்தது.
கலக்கமும் தவிப்புமாய் அவனை நிமிர்ந்து பார்த்தவளில் வேந்தன் கரைந்து உருகி தோய்ந்திருந்தான். சிக்க மறுத்து சதிசெய்த ஒற்றை வார்த்தையை உதிர்க்காது அவளைத் தவிக்க விட்டிருந்தவன் குனிந்து அவளது உதட்டில் தன் உதடுகளைப் பொறுத்தி இருந்தான். முதல் முத்தம் சத்தமில்லாது பிரபஞ்சத்தோடு இருவரையும் உறைய வைத்திருந்தது.
எட்டிப் பிடிக்கும் தூரத்திலும்
தொட்டுவிட முடியாதவாறு
கண்ணாமூச்சி ஆடிய நேசம் இருவருக்கும் கைக்கூடியிருக்க, விடுதலை பெற எண்ணமில்லை. அதில் காலம் முழுவதும் கட்டுண்டு கிடக்க, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவே இதத்தின் இறுதியென அக்கணம் மனம் நம்பத் தொடங்கியிருந்தது. கணவனின் கைகள் அவளில் அத்துமீறின. மெதுவாய் மனைவியைத் தனக்குள் அடக்கத் தொடங்கினான். துளசியிடம் எதிர்ப்பை எதிர்பார்த்த மனம் தோல்வியைத் தழுவியிருக்க, அவளது விழிகள் மூடிக் கொள்ள இமையோரம் மெலிதாய் ஈரம் கசிந்தது. அதை சகித்துக் கொள்ள முடியாதவன், “ஷிவா…” எனத் தவிப்பும் தயக்கமுமாய் செவியோரம் துளிர்த்தக் குரலில் இவளிடம் பெருங்கேவல். இத்தனை நேரம் இந்த வார்த்தைக்காகத்தான் காத்திருந்தேன் என தாவி இளவேந்தனை அணைத்திருந்தாள் பெண்.
“இளா… இளா!” என கமறிப் போன குரலில் அழைத்தவளின் விழிகள் பளபளத்தன. ஒளித்து வைத்த
உணர்வுகளின் கற்றைகள்
சிறையிலிருந்து மெதுவாய் சிறகுகளை விரிக்கத் தொடங்க, இத்தனை நேரத் தயக்கமெல்லாம் அந்த அணைப்பின் கீழே மடிந்து போனது. வார்த்தைகளில்லாத போதிருந்த இயந்திரத் தன்மை வடிய, பெண் அவனுள் ஆழ்ந்து போனாள். தயக்கங்களை உடைத்து சிதறச் செய்திருந்தது அவர்களின் பேரன்பினாலான நேசம். வேண்டாம் என்றவளும் வேண்டும் என்றவனும் இந்தக் காதலின் பிரதான அத்தியாயத்தில் தோயத் தொடங்கினர். எட்ட நின்று தவித்த தவிப்புகள் எல்லாம் ஓரிரவில் ஓராயிரம் முறை அவர்களை மூழ்கச் செய்திருந்தது.
இத்தனை நாட்கள் தவிக்கவிட்ட நேசத்தை இறுகப் பற்றியிருந்தாள் பெண். வேந்தனின் உடல் அவளது உடல் சூட்டில் வெந்து தணிந்திருந்தது. உணர்வுகளின் போராட்டத்தில் நித்தம் நித்தம் கானலாய் உணர்ந்த பெண்மையின் மெய்யோடு அவனது வாசமும் கலந்திருக்க, அவளில் நிறைந்து போனான். அமைதியாய் ஆர்ப்பட்டமில்லாது முதல் கூடல். வெட்கம் கொண்டு முகத்தை திருப்பியவளுக்கு இன்றைய இரவின் நிதர்சனம் உறைத்திருக்க, எதிர்பார்த்தும் பாராததுமாய் தயங்கியவளிடம் முத்தமிட்டு மோட்சம் பெற்றான் இளவேந்தன்.
நேற்றைய கோபங்கள், வார்த்தைகள், வலிகள், வாதைகள் என அனைத்தும் கடந்த காலமாய் மாறியிருக்க, மனைவியைப் புதிதாய் உணர்ந்தான். கைவிடப்பட்ட இரவின் மிச்சங்களாய் மெதுவாய் அவசரமில்லாது அதிராது அதிமுக்கியமாய் நேசத்துடன் நித்தியப் பூரணமாய் முழுதாய் அவளை உயிர்ப்பித்திருந்தான். அவர்களின் அன்பு நீர்த்துப் போகாது நீட்சியாய்த் தொடர்ந்து இரவை வெட்கிப் போகச் செய்திருந்தது. இருவரது பக்க நியாய அநியாயங்கள் எல்லாம் கானல் நீராய் நேசத்தை தழுவி கரைந்திருக்க, காதலால் காயம் கண்டு வனவாசம் சென்றவர்களின் அன்பு மொத்தமும் இருவரிடமும் முழுதாய் பகிரப்பட்டிருந்தது.
மனைவியின் சூட்டில் களித்திருந்தவன், அவளது காது மடல் தகிக்கும் முத்தத்தோடு, “ஐ லவ் யூ ஷிவா!” என ஒரேயொரு வார்த்தையில் சரணாகதியடைந்திருக்க, துளசி விழிகள் பளபளக்க அவனைப் பார்த்தாள். இதயம் அந்நொடி உறைந்திருந்தது. ஏதாவது பேசு எனக் கட்டளையிட்ட மூளைக்கும் மனதிற்கும் இடையே இவளது வார்த்தைக் சிக்கிக் கொள்ள, முகத்தை இடம் வலமாக அசைத்தவளை தன் மார்போடு அணைத்திருந்தான் இளவேந்தன். அவன் மார்பில் முகத்தைப் புதைத்தவளிடம் மெல்லிய தேம்பல். உதடுகளை குவித்து வார்த்தைகளைக் கூற வந்தவளின் முதுகில் இவனது கரங்கள் மெதுவாய் படர்ந்து, ஆதுரமாகத் தடவியப் போது பெண் மொத்தமாய் உடைந்திருந்தாள். இத்தனை நாட்களின் வேதனைகளும் வலியும் அந்த ஆதுரமான அணைப்பிலும் தேற்றுதலிலும் மலிந்து நலிந்து போயின.
“இளா…” எனப் பேச வந்தவளின் உதட்டில் கையை வைத்து பேசாதே என்றவன் சற்றே எக்கிப் படுத்து மேஜையின் விளக்கை உயிர்ப்பித்ததான். இத்தனை நேர அடர் கருமைக்கு கீழான உணர்வு போராட்டத்தில் இருந்தவளுக்கு இந்த வெளிச்சம் வெட்கத்தை வரவழைக்க, அப்படியே போர்வையில் சுருண்டு தள்ளிப்படுத்தாள். அதைப் பிடிக்கவில்லை என்றுணர்த்தியவன் கரங்கள் நீண்டு மனைவியைத் தன்னோடு இழுத்தணைத்தன.
‘இந்த அணைப்பில், என் உடல் சூட்டில்தான் உன்னுடைய மிச்சமான இரவுகள்!’ என்று வார்த்தையில்லாது உணர்த்தியவனுள் அமைதியா அடங்கிப் போன துளசிக்கு உறக்கம் சர்வ நிச்சயமாய் விழிகளைத் தொடவில்லை. இளவேந்தன் முகத்தையே பார்த்தபடியே அவளிருக்க, கண்களை மூடியிருந்தவனும் அதை உணர்ந்தான்.
“தூங்காம இப்படியே பார்த்துட்டே இருக்கப் போறீயா?” என விழிகளைத் திறந்து வேந்தன் கேட்க, தலையை மெதுவாக இடம் வலமாக இல்லையென்று அசைத்தவள், மெதுவாகப் பார்வையை மாற்றினாள். நீண்ட நேரம் இரவில் எதையோ தேடித் துழாவிய நான்கு விழிகளும் தாமதமாய் உறக்கத்தைத் தழுவின.
மறுநாள் காலையில் நேற்றைய சலசலப்பில்லாதிருப்பினும் கொஞ்சம் உறவினர்கள் வீட்டை ஆக்கிரமித்திருந்தன. நீண்ட நேரம் திறக்கப்படாத கதவை தட்டுவற்கு தயங்கியபடி நளினி அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். இரண்டாவது நாளாக சடங்குகள் சம்பிரதாயங்கள் மிச்சமிருக்க, அதற்காக மகனையும் மருமகளையும் எதிர்பார்த்து காத்திருந்தார் பெண்மணி.
ஒரே போர்வையில் சுருண்டிருந்தவர்களில் வேந்தனுக்கு முதலில் விழிப்புத் தட்ட, துளசியை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்துவிட்டு எழுந்து சென்று குளித்து வந்தான். அசையாது ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் பெண். நீண்ட நேரம் சென்று தூங்கிய சோர்வில் முகம் கலைந்து களைத்திருந்தது.
“துளசி…” செவியோரம் கசிந்தக் குரல் எங்கோ அசரீரியாக இவளுக்கு கேட்டது.
“துளசி…” இப்போது மெதுவாய் அவளை இளவேந்தன் உலுக்க, அதில் உறக்கம் கலைந்து விழித்தவள் நிமிர்ந்து பார்க்கும் முன்னே அவன் நகர்ந்திருந்தான். அப்படியொரு கோலத்தில் தன் முன்னே அவளிருக்க தயங்குவாள் என கணவன் வெளியே சென்றிருந்தான்.
முதலில் எங்கிருக்கிறோம் என்பதை உணரவே துளசிக்கு நொடிகள் தேவைப்பட, மூளை புறத்தூண்டல் உறைத்ததும் எழுந்து குளித்து முடித்து வந்தாள். அறையைவிட்டு வெளியேருகையில் அழையா விருந்தாளியாய் மெலிதான தயக்கமும் வந்து ஒட்டிக் கொண்டது. இவள் வந்ததும் உறவினர்கள் ஒரு சிலர் பார்வை இவளில் படர, கால்கள் தயங்கின.
யாரிடம் சென்று என்னப் பேச, என்னக் கேட்க எனத் தெரியாது தடுமாறியவளின் மனம் பரிட்சயமான முகம் எங்கேனும் தென்படுகிறதா எனத் தேடித் துழாவியது. நேற்றையப் வழக்கமாய் சைந்தவியும் சாம்பவியும் கூட இன்று கண்ணுக்கு அகப்படாது போனதில், இவளுக்கு அடுத்த என்னவென தெரியவில்லை. அதைவிட காலையிலே வயிற்றில் அமிலம் வேறு சுரக்கத் தொடங்கியிருக்க, பசித்தது. தன் வீடாய் இருந்தால் யாரையும் கேட்காது சமையலறைக்குள் நுழைந்திருப்பாள். ஆனால், இங்கே அப்படியெல்லாம் எளிதில் அவளால் வலம் வர முடியாதே. வேந்தனைத் தவிர வேறு ஒருவரும் பரிட்சயமும் இல்லை.
தவித்து நின்றிருந்தவளுக்கு, “அக்கா, எழுந்துட்டீயா?” என்ற சோனியாவின் குரல் உதவிக்கரம் நீட்ட, உடல் தளர்ந்து போக, உதடுகள் விரிய, சோபையாய் புன்னகைத்தாள் துளசி. அதை தூரத்தில் அமர்ந்திருந்த இளவேந்தனும் கண்டிருக்க, அவன்தான் சோனியாவை மனைவியிடம் அனுப்பியிருந்தான்.
“அண்ணி… கெட் ரெடி… முதல்ல வந்து சாப்பிடுங்க!” என சாம்பவி இருவரையும் உணவுண்ண அழைத்துச் சென்றாள். அடுத்தடுத்து ஏதோ சடங்கு என அன்றைய நாளும் அப்படியே கழிந்திருந்தது. இரவிருந்த இணக்கத்தின் நீட்சியாய் ஒரு ஆதரவான பார்வைக்காக நாள் முழுவதும் துளசி வேந்தனின் முகத்தைப் பார்க்க அவன் கண்டு கொண்டதாய் தெரியவில்லை என்று இவளிடம் சுணக்கம் தோன்றியது. அவன் கோபம்தான் காரணமும் அறிந்திருந்தவள் ஏதும் கேட்க விழையவில்லை. ஆனால் வேந்தனின் பார்வை அவ்வப்போது மனைவியைத் தொட்டுக்கொண்டு தான் இருந்தன. அவள் காணாத நேரம் அவளது தேவைகளை நிறைவேற்றிய வண்ணமிருந்தான்.
இரவு கவிழ்ந்ததும் அறைக்கு வந்தவள் அமைதியாய் படுத்துவிட்டாள். சிந்தனை வீட்டைச் சுற்றி வலம் வர, இளவேந்தன் அறைக்குள் நுழைந்து விளக்கை அணைத்துவிட்டு அருகே படுத்தான். சில நிமிடங்கள் அவனிடம் அசைவில்லாதிருக்க, தூங்கிவிட்டான் எனத் துளசி திரும்பிப் பார்த்ததும் இதற்காகத்தான் காத்திருந்தேன் என அவளை இடையோடு இழுத்தணைத்திருந்தான் கணவன்.
ஒரு நொடி அச்செயலில் திடுக்கிட்டவளின் சிந்தனையை மொத்தமாய் களவாடியிருந்தன இளவேந்தனின் கரங்கள். அவளை நுகர்ந்து ஊர்ந்து சுவைத்தவனிடம் இவள் வெட்கம் கொண்டு விலகப் பார்க்க, அவன் விடவில்லை.
“துளசி…” அதட்டலிட்டவன் குரல் கரகரத்து மோகத்தில் கிறங்கிவந்தது. அவளைத் தன் கைவளைவில் களவாடியவன், நேற்றைய மிச்சம் எதுவுமில்லாது புதிதாய் புத்தம் புதிதாய் கையாண்டவனிடம் துளசி திணறித் திக்கிக் கரை சேர்ந்தாள். மனதினோரம் அவன் பாராமுகம் கண்முன்னே தோன்றி மறைந்தாலும் அந்நொடி அதையெல்லாம் கடந்திருந்தாள். வெட்கம் கொண்டு இரவே மறைந்துவிடுமளவிற்கு வேந்தன் மனைவியை சிவக்கச் செய்ய, நீண்டு கிடந்த இரவில் கலைந்து களைத்து உறங்கிப் போயினர்.
மூன்றாம் நாளும் கொஞ்சம் மெதுவாக கடந்து முடிந்திருக்க, நான்காம் நாள் வேந்தன் அலுவலகம் கிளம்பத் தயாராக, துளசியும் குளித்து முடித்து அவனுடன் கிளம்பினாள். திருமணத்திற்கான பரப்புகள் நன்றாய் மட்டுப்பட்டிருந்தது. ஆரண்யா பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, சைந்தவியும் கல்லூரிப் பையுடன் நகர்ந்திருக்க, அனைவரது வாழ்க்கையும் இயல்பை நோக்கி ஓடத் தொடங்கி இருந்தது.
துளசி அந்த வீட்டில் பொருந்திப் போக வெகுவாய் திணறினாள். அத்தனை எளிதில் அவளால் இந்த மாற்றத்தை வரவேற்க முடியவில்லை. அவளிருந்த குடும்ப சூழ்நிலை முற்றிலும் இதிலிருந்து மாறுபட்டதாக இருக்க, மெதுவாய் இந்தக் கூட்டில் பொருந்திப் போக முயற்சித்த வண்ணமிருந்தாள்.
திருமணத்திற்கு முன்பே வேலையைத் தொடருவேன் என இவள் திட்டவட்டமாய் கூறிவிட, வேந்தன் அதற்கெல்லாம் எவ்வித எதிர்ப்பும் காண்பிக்கவில்லை. ஆனாலும் இவளது மனதில் பயம்தான். நளினி அல்லது குடும்பத்து ஆட்கள் என்ன சொல்வார்களோ என மனம் தவித்துதான் கிடந்தது.
நேற்றைக்கு மாலை நளினியிடம் மெதுவாய் இவள் விஷயத்தைக் கூற, “துளசி, நம்ப ஆபிஸ் தானே. நீ போய் வேலை பார்த்தா நல்லா இருக்காது மா. நம்ப முதலாளியாதான் இருக்கணும்!” என அவர் எண்ணத்தைக் கூற, துளசி பதிலுரைக்காது வேந்தனைப் பார்த்தாள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன், “ம்மா… அவ வேலைக்குப் போகட்டும். நம்ப ஆபிஸ்ல தான் அவ சுதந்திரமா வேலை பார்க்க முடியும். அதுமில்லாம எனக்கும் ஹெல்ப்பா இருப்பா!” என அப்பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தான்.
சந்தனவேலிற்கும் இதில் உடன்பாடில்லை. வேந்தன் அவரிடமும் அழுத்திக் கூறியிருக்க, சரியென்று விட்டுவிட்டார்.
துளசிக்கு இந்த வேலை அத்தனை முக்கியமாகப்பட்டது. இப்படி குடும்பத்தை பாதியிலே விட்டு வந்துவிட்டோம் என்ற குற்றவுணர்வே அவளை கொன்று குவித்த வண்ணமிருந்தது. அவளுடைய வருமானம் தானே அவர்கள் வீட்டின் பணத்தேவையைப் பூர்த்தி செய்கிறது. அதனால் வேலையை விடும் முடிவை அவளால் நிச்சயமாக எடுக்க முடியவில்லை.
வைரமுத்துவிடம் பணத்தைக் கொடுத்து வீட்டுப் பத்திரத்தை இளவேந்தன்தான் மீட்டுக் கொடுத்திருந்தான். அந்தப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தன்மானம் அவளை முடுக்கிவிட்டிருந்தது. இதற்கு மேல் அவனிடம் எதையும் கேட்க வேண்டாம் என்ற முடிவெடுத்திருந்தாள். கணவனாய் இருந்தாலும் அவனிடம் ஓரளவிற்கு மேல் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆரம்பத்தில் அவன் செய்து சுகம் கண்டுவிட்டு, பின்னர் இது இல்லையென்றால் வாழ்க்கை அப்படியே ஸ்தம்பித்து விடுமே. எதையும் நம்பி, யாரையும் நம்பி இருக்கக் கூடாது. தன்னுடைய கடமையை முடிந்தளவு செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் எப்போதும் துளசியிடம் உண்டு. அதுவும் இல்லாது வேந்தனுடைய பெருந்தன்மையான மனம் அவர்களின் வீட்டு ஆட்களிற்கும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லயே. இதையெல்லாம் முன்பே யோசித்து அலுவலைத் தொடர அவனிடம் பேசியிருந்தாள்.
உண்டு முடித்து இருவரும் அலுவலகம் கிளம்பினர். வேந்தனின் மகிழுந்தில் இருவரும் செல்ல, துளசியின் அலைபேசி இசைத்தது. சோனியா அழைத்திருக்க, அவளுடன் பேசிவிட்டு தாயிடமும் பேசினாள். இந்த நான்கு நாட்களில் மனம் அதிகமாய்க் குடும்பத்தைத் தேடியது. இருபத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து மொத்தமாய் அனைத்தையும் பறித்துக் கொண்டு புதிதாய் ஓரிடத்தில் வாழ்வதை அத்தனை எளிதில் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பயணம் முழுவதும் இருவரிடமும் பேச்சில்லை. தேவைக்கு மட்டும் பேசிக் கொண்டனர். வேந்தன் இவளது தேவைகளைக் கவனித்துக் கொண்டு, அவள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலியம்பினான். துளசியால் இந்த நான்கு வருட இடைவெளியை சட்டென நிரப்ப முடியவில்லை. அதிலும் அவளுடைய இளவேந்தன் இல்லையே இவன். வயதின் முதிர்ச்சி வந்திருக்க, தோற்றத்திலும் மாற்றம்தான். அவளைப் பார்த்ததும் புன்னகைக்கும் உதடுகளுக்கு இவளது மனம் ஏங்கின. நாட்கள் செல்ல இவனது கோபம் கரைந்ததும், இணக்கம் வருமென மனதைத் தேற்றிக் கொண்டாள். தன்னிடம் இந்த அளவிற்குப் பாராமுகம் காட்டாதிருப்பதே தற்போதைய நிலையில் பெரிய நிம்மதியை அளித்திருந்தது. தன்னால் பிளவுப்டட்ட உறவை தான்தான் சரிசெய்ய வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும், தயக்கம் தடை போட்டிருக்க, காலம் கொஞ்சம் கனியட்டும் எனக் காத்திருந்தாள்.
வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தவளின் மனம் சந்தோஷை சுற்றி வந்தது. அவர்களது திருமண விஷயம் தெரிந்ததும் இவளிடம் அழைத்து மனதார வாழ்த்துக் கூறியிருந்தான். துளசிக்குத் தான் இப்பிரபஞ்சத்தின் பெரியதொரு குற்றவுணர்வு தொண்டையை அடைக்க, எதையும் பேச இயலாத நிலை. மறுநாள் அவனை நேரில் சந்தித்து தயங்கித் தயங்கி நடந்தவற்றை உரைத்திருக்க, சந்தோஷிடம் கோபமில்லை. ஆனாலும் ஏகவருத்தமிருந்தது. எதையும் காண்பிக்காது அவளது காதல் கைக்கூடியதற்கு மனதார வாழ்த்தி உன் சந்தோஷம் ஒரு நண்பனாய் எனக்கு திருப்தியாக இருக்கிறது என்று செயலிலும் சொல்லிலும் கண்பித்துவிட்டான். துளசிக்குத்தான் சத்தியமாய் தாங்க இயலவில்லை. ஏனோ இவனைக் கஷ்டப்படுத்தியிருக்கிறோம் எனப் புரிந்து வருந்தியிருந்தாள்.
துளசியும் இளவேந்தனும் திருமணம் முடிந்தப் பின்னரான முதல் முதலில் ஒன்றாக உள்ளே நுழைய, “வாழ்த்துகள் சார்… வாழ்த்துக்கள் துளசி! வாழ்த்துகள் மேடம்!” எனப் பூங்கொத்தோடு அனைவரும் வரவேற்றனர். இளவேந்தன் சிறு புன்னகையுடன் அனைவரிடமும் நன்றி கூறி நகர, சிலர் துளசியிடம் சிறிது நிமிடங்கள் பேசிவிட்டே அகன்றனர்.
புயலடித்து ஓய்ந்ததைப் போலிருக்க, துளசி பெருமூச்சுடன் தன்னிருக்கைக்கு வந்தமர்ந்தாள். எப்போதும் புன்னகையுடன் தன்னுடன் பேசும் தேனருவியின் அமைதியில் இவளுள் சிறு வருத்தம். திருமணப் பேச்சு எடுத்ததிலிருந்தே தேனுவின் நடவடிக்கைகளில் மாற்றம்தான். ஏன் தன்னிடம் இவள் காதலைப் பகிரவில்லை என அவள் முகத்தைத் திருப்ப, துளசி எத்தனை சமாதானம் செய்தும் அவள் இறங்கிவரவில்லை.
துளசிக்கு மனதில் வருத்தம்தான். அவளொன்றும் ஆனந்தமும் மகிழச்சியுமாய் காதல் கைக்கூடியதில் திளைத்தா திருமணம் செய்து கொண்டாள். வேண்டாமென கருகிவிட்ட செடி போல தூக்கியெறிந்த நேசம் மீண்டும் துளிர்விடுமென அவள் கிஞ்சிற்றும் எண்ணி இருக்கவில்லை. ஏற்கனவே இளவந்தேனின் பேரன்போடு மனதில் பெரும் சஞ்சலங்களும் சலனங்களும் ஒட்டிக்கொண்டு அவளைப்படுத்தி எடுத்துக் கொண்டிருக்க, இதில் இப்படி உறவுகள் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்களே என்ற எண்ணமும் தோன்றி அவளை சோர்வுறச் செய்தது.
அந்த வாரம் மெதுவாக நகர்ந்தது. துளசி வார இறுதியில் தந்தையைப் பார்த்துவிட்டு வந்தாள். அவர்களைவிட்டு இங்கே வர மனதில்லை. ஆனாலும் உடனிருக்க முடியாத சூழ்நிலை. எதுவாக இருந்தாலும் தனக்கு உடனே அழைக்குமாறு சோனியாவிடம் வற்புறுத்திவிட்டே வந்தாள். இருசக்கர வாகனத்தை விற்ற பணம், வசுமதி கொடுத்தப் பணம் என அனைத்தையும் தாயிடமே திருப்பிக் கொடுத்து வீட்டுச் செலவிற்கு வைத்துக் கொள்ளுமாறு கூறியிருக்க, தற்போதைக்கு அவர்களுக்கு பணத் தட்டுபாடின்றி நாட்கள் நகர்ந்தது.
திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்தும் இளவேந்தனிடம் எந்தவித மாற்றமும் இல்லை. அலுவலகத்தில் வேலை சம்பந்தப்பட்ட பேச்சின்றி வேறில்லை. வீட்டில் அனைவரின் முன்பு சம்பிரதாய பேச்சுக்கள் மட்டும்தான். அறையினுள் இவளாகப் பேசினால் பதிலுரைத்தான். தேவையான வார்த்தைகள் மட்டுமே உதிர்ந்தன. துளசிக்கு வருத்தம்தான். இருந்தும் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.
நாட்கள் மெதுவாக நகர, துளசி அன்றைக்கு வேந்தனிடம் கடந்தகாலத்தைப் பற்றி, தன் பக்க நியாயத்தைப் பற்றி பேச வேண்டும் என நினைத்திருக்க, அவளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வெளியே வேலை என கிளம்பிவிட்டான் வேந்தன். எப்படியும் வீட்டிற்குத்தானே வந்தாக வேண்டும் நினைத்து உள்ளே நுழைந்தவளை ஆரண்யா கட்டிக் கொண்டாள்.
சமீபகாலமாக துளசிக்கும் ஆரண்யாவிற்கும் நன்கு பொருந்திப் போக, சிறிது நேரம் அவளுடன் விளையாடுவதை வழக்கமாக்கி இருந்தாள். குழந்தையைத் தூக்கி கொஞ்சி முத்தமிட்டுப் பேசியவள் அறைக்குள் நுழைந்தாள். உடல் அசதியாக இருக்க, குளித்தால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, இரவு உடையை எடுத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வந்தமர்ந்தாள். பார்வை அறை வாயிலிலே இருந்தன.
“அண்ணி… என்ன பண்றீங்க?” என்ற வினாவுடன் சைந்தவி அறைக்குள் நுழைய, அவளின் பின்னே டீவாவும் வந்தான். அவனைக் கட்டிப் போட்டிருந்தாலும் சில சமயம் இப்படி அவிழ்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைவான்.
“சும்மாதான் இருக்கேன் சைந்து…” எனப் பதிலுரைத்தவள் நாயைக் கண்டதும் அஞ்சி நடுங்கி, “ஐயோ… சைந்து…நாய், நாயை வெளியே அனுப்பு!” என கத்த, நளினியும் தீக்ஷியும் என்னவெனத் தெரியாது பதறிக் கொண்டு அறைக்குள் நுழைந்தனர்.
“என்னாச்சு துளசி?” தீக்ஷி பதற்றப்பட, “அது… அக்கா நாய்!” என அவள் திணற, டீவா துளசியருகே சென்று அவளது உடையைப் பிடித்திழுத்தது. துளசி அசைவற்று நின்றுவிட்டாள்.
“ஐயோ, அண்ணி… டீவா ரொம்ப நல்லப் பையன். என்னோட குட்டித் தம்பி, எதுவும் பண்ண மாட்டான்!” சைந்தவி சிரித்தாள். ஆனால் டீவாவைத் தூக்கவில்லை.
ஆரண்யா ஓடி வந்தவள், “டீவா… இங்க இருக்கீயா?” என நாயைத் தூக்கிக் கொஞ்ச, மற்றவர்கள் முகத்தில் புன்னகை. துளசியின் முகம் லேசாய் கன்றிச் சிவந்தது.
“நல்ல பொண்ணு மா நீ… அவன் நம்ப வீட்ல ஒரு ஆளு. ஒன்னும் பண்ண மாட்டான்!” என நளினி வெளியேற, தீக்ஷி சின்ன சிரிப்புடன் நகர்ந்தாள்.
ஆரண்யாவின் கையிலிருந்த நாய் துளசியை நோக்கித் தாவ, அவள் மிரட்சியுடன் அதைப் பார்த்தாள். “ப்ம்ச்… அண்ணி, இவன் ஒரு டம்மி பீஸ். குலைக்க மட்டும்தான் செய்வான்!” என அந்த நாயைத் தூக்கி அவள் முன்பு நீட்டினாள் சைந்தவி.
“சித்தி… டீவா குட் பாய்!” சின்னவள் கேலியாய் சிரித்தாள். அதில் இவளுக்கு ரோஷம் வர, பயத்துடன் நாயைத் தூக்கினாள். அது அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவளோடு ஒன்றியது. பயந்தாலும் வெளியே காண்பிக்காது நாயைத் தடவிக் கொடுக்க, அவளிடம் வாலை ஆட்டியது நாய். சில நிமிடங்கள் பயம் விலக, நாயை நன்றாய்த் தூக்கினாள். பின்னர் முகத்தில் மெது மெதுவாய் சிரிப்பு ஏறியது.
அவளை புன்னகையுடன் பார்த்த சைந்தவி, “அவ்வளோதான் அண்ணி. இதுக்குப் போய் பயந்தீங்களா?” எனக் கூறி அமர, துளசியும் கட்டிலில் உட்கார, டீவா அவளது மடியில் படுத்துக் கொண்டான். சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருக்க, நளினி உணவுண்ண அழைத்தார்.
“அவன் வெளிய ஏதோ ப்ரெண்ட் கூட சாப்பிட்டுக்கிறானாம். நீ வந்து எங்களோட சாப்பிடு துளசி!” என அவர் கூறியதும், இவளது முகம் மாறாதிருக்க பிரயத்தனப்பட்டாள். தாயிடம் அழைத்துக் கூறியவனுக்கு என்னிடம் பேச நேரமில்லையா என மனம் சுணங்கிப் போனது. பெயருக்கு உண்டுவிட்டு அறைக்குள் வந்தாள். அலைபேசியைக் கையிலெடுத்துப் பார்க்க, இவளுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதில் முகச்சுணக்கம் கரைந்திருக்க, நிம்மதியில் உதடுகள் விரிந்தன.
சாய்வு நாற்காலியில் அமர்ந்தவள் தலையை காய வைப்பதற்காக மின்விசிறிக்கு கீழே அமர, டீவா அவள் மடி மீது ஏறி அமர்ந்து கொண்டான். அதில் புன்னகையோடு அவனைத் தடவிக் கொடுக்க, அவளோடு ஒன்றியது டீவா.
வேந்தன் வருகிறானா எனப் பார்த்துக் கெண்டே இருந்தவளின் விழிகள் சொக்கிப் போக, தன்னயறியாது கண்ணயர்ந்தாள். தாமதாய் வந்தவன் உள்ளே நுழைந்ததும் ஒரு நொடி புருவத்தை ஆச்சர்யமாய் உயர்த்தினான். பின்னர் துளசியின் மார்போடு ஒன்றியிருந்த டீவாவை இவனது கண்கள் பொறாமையுடன் நோக்கின. இவன் அரவம் உணர்ந்தும் துளசி துயில் கலையவில்லை. சப்தமிடாது தன்னை சுத்தம் செய்துகொண்டு உடை மாற்றி வந்தவன், முதலில் நாயைத் தூக்கவும், துளசி விழித்துவிட்டாள்.
அவன் வந்ததும் பேச வேண்டும் என உருப்போட்டிருந்த வார்த்தைகளை இவள் வரிசைப்படுத்தியபடி நின்றாள். நாயை வெளியேவிட்டு கதவை அடைத்துவிட்டு வந்தவன் துளசியின் இடையில் கைவைத்து தன்னை நோக்கி இழுத்தான். மேலுடையைத் தளர்த்தி வெற்றிடையில் கரங்களை அழுத்தியவனின் உடல் வெப்பம் துளசிக்கு கடத்தப்பட்டதில் அவளிடம் மெல்லிய சிலிர்ப்பு. குளிர்ந்த உடல் அந்த சூட்டில் தகித்தது. குனிந்து குளித்து வாசமாய் இருந்த மனைவியை மெதுவாய் நுகர்ந்தான். புதிதாய் பூத்திருக்கும் மலர் போல உள்ளே நுழைந்ததும் பளிச்சென்றிருந்த மனைவி பரபரவென அவனுள் எதையோ செய்து தொலைத்து, தொலையச் சொல்லி கற்பனைகளைத் தூவினாள்.
நொடியில் இதெல்லாம் நடந்துவிட்டிருக்க, துளசி பேச வந்த வார்த்தைகள் அமிழ்ந்து போயின. தன் கழுத்தில் புதைந்திருந்த அவனது தலைமுடியைப் பற்றி நிமிர்த்தியவள், “நான் உங்களோட பேசணும்!” என்றாள் அழுத்தமாய். தன் செயல்கள் தடைபட்டதில் முகத்தைச் சுளித்தவன், “அப்புறம் பேசிக்கலாம்!” என்றான் மங்கிய குரலில்.
“இப்போவே பேசணும். காலைல பேச டைம் இல்ல!” துளசி அடமாய் நின்றாள்.
“எனக்கு கேட்க இஷ்டம் இல்ல!” வேந்தன் குரலில் அழுத்தம் வந்திருந்தது.
“இப்போ கேட்க இஷ்டம் இல்லையா, எப்பவுமே இல்லையா?” சரியாய்க் கேட்ட மனைவியை மெச்சுதலாய்ப் பார்த்தவன், “யூ ஆர் ரைட். நடந்து முடிஞ்சதைப் பத்தி பேச எப்பவுமே விருப்பம் இல்ல. யாரு மேல தப்பு சரின்னு ஆராயுற நேரம் கடந்திருச்சு. எனக்காக பேச வேண்டிய நேரத்துல நீ எங்கேயும் பேசலை!” எனக் குற்றப் பார்வை சுமத்தியவனின் குரலில் மெல்லிய வேதனைப் படர, துளசி மனம் கலங்கியது. அவள் வேறு எதோ பேச வர, வேந்தன் அதை தன் இதழுக்குள் விழுங்கியிருந்தான்.
அவனது அணைப்பில் இவள் மெலிதாய் எதிர்ப்புக் காண்பிக்க, அவனிடம் தளர்வில்லை. துளசியைத் தூக்கிக் கொண்டு கட்டிலில் விழுந்தான். மனைவி உடல் இளகாதிருக்க, “ஷிவா…” என செவியோடு முனங்கியவனில் இவளது எதிர்ப்பு சுழியமானது.
“என்னோட ப்ளேஸ் இது, என்னோட வொய்ஃப். அது டீவாவா இருந்தாலும், யாராய் இருந்தாலும் இடமில்லை!” என்றவனின் முகம் அவளது மார்பு சூட்டில் புதைந்திருக்க, இடையோடு இறுக்கி அணைத்தவனின் செயலில் இவளுக்குப் பேச்சு வரவில்லை. கலக்கத்திலிருந்த முகமும் அகமும் சிவந்து போனது.
நித்தம் நித்தம் புதிதாய் தெரிந்த மனைவியை நித்தியமாய் ஆராதித்தான் இந்த இளவேந்தன்.