ஜன்னலோர இருக்கை ஒன்றை இழுத்துப் போட்டு உடலை குறுக்கி அமர்ந்திருந்த துளசியின் விழிகள் இலக்கில்லாது எதையோ வெறித்த வண்ணமிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை அலையாக எண்ணம் எழந்தன. நேற்றை வேந்தன் குரலிலிருந்த வேதனையில் மனம் முழுவதும் பாரம். யாரிடமும் பகிர முடியாது எனத் தோன்ற, இன்னுமே நெஞ்சை அழுத்தித் தொலைத்தது. இந்த இளவேந்தனை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன்னுடைய செயல்களால் அவன் காயம்பட்டிருக்கிறான் எனப் அறிந்தாலும், அதை எந்த வகையில் சரிசெய்ய இயலுமென இவளுக்குப் தெரியவில்லை.
இது தான் காதலித்த இளவேந்தன் இல்லையென மனம் ஊமையாய் கண்ணீர் வடித்தது. நான்கு வருடங்களாக இவன் தனக்காக காத்திருந்திருக்கிறானா? என அவனை மீண்டும் கண்ட நாள் முதலாய் மனதில் வேதனையும் வலியும் தோன்றின. அவனுக்காகப் பார்த்து தானே அத்தனை நேசத்தையும் கொட்டி கவிழ்க்க முடியாது மனம் வலிக்க வலிக்க வேண்டாமென மறுத்திருந்தாள்.
தற்போதைய அவனின் ஒதுக்கத்திற்குத் தன்னுடைய வார்த்தைகளும் செயலும் தான் இதற்கு காரணம் எனப் புரிந்தாலும், சூழ்நிலைக் கைதியான தன்னை நிரூபிக்கும் முயற்சியைக் கூட அவன் தட்டிவிடுகிறானே என இமையோரம் ஈரம் துளிர்த்தது. கடந்த காலத்தைப் பற்றி பேசி இன்னுமே அவனைக் காயப்பட வைக்க அட்சர சுத்தமாய் இவள் எண்ணியிருக்கவில்லை. அவளுடைய சூழ்நிலையை எப்படியாவது அவனிடம் பகிர வேண்டும் என்றொரு எண்ணம். அவன் இல்லாத இத்தனை நாட்களும் நானும் எத்தனை வேதனைப்பட்டிருக்கிறேன், காயம் கண்டிருக்கிறேன் எனத் தாயைக் கண்டதும் கீழே விழுந்தக் குழந்தை ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக் கொண்டு அழும் மனநிலையிலிருந்தாள். ஆனால், உடையவனோ, அதைப் பற்றிய பேச்சைத் தவிர்க்கிறானே என மனம் விம்மியது.
கதவு திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து இளவேந்தன் உள்ளே நுழைந்ததும் இவளுக்குப் புரிய, கண்ணைத் துடைத்துக் கொண்டு அவன் முன்னே நின்றாள். வேந்தன் இவளைக் கண்டு கொள்ளாது நகர, கையை நீட்டித் தடை செய்தவள், “ஒரு ஃபைவ் மினிட்ஸ் நான் பேசுறதைக் கேளுங்க!” என அழுத்தமாக உரைத்தவள், அவனது பதிலை எதிர்பாராது தொடர்ந்தாள்.
“எனக்கு… எனக்கு இது பிடிக்கலை…” என்றாள் வேதனையான குரலில். வேந்தன் புருவ சுருக்கத்துடன் அவளைப் பார்த்தான்.
“அது… எனக்கு உங்களோட அன்பு, அக்கறை, புரிதல்னு எல்லாமே வேணும். எனக்கு என் பழைய இளா வேணும். அவரோட… அவரோட நான் சந்தோஷமா வாழணும். அவரை தான் நேசிச்சேன், நேசிக்கிறேன், இனிமேலும் அவரை மட்டும்தான் காதலிப்பேன்!” என்றவள் பேச்சில் அவனது பார்வையில் வெறுமை படர்ந்தது. காதல் என்ற வேம்பின் கசப்பை நான்கு வருடங்கள் வலிக்க வலிக்க உணர்ந்தவனாகிற்றே.
“நீ என்னை எப்போ லவ் பண்ண? அன்பு, அக்கறை எல்லாம் என்கிட்ட எக்ஸ்பெக் பண்ற. நான்தான் உன்னை லவ் பண்ணவே இல்லையே. பணம் காசு இருக்குன்னு வேலை வெட்டி இல்லாமதானே உன் பின்னாடி சுத்துனேன். என்னோட லவ் எல்லாம் வொர்த்லெஸ்… குப்பையில தானே போடணும்!” என்றவனை வேதனையுடன் பார்த்த துளசியின் கண்களில் குபுகுபுவென நீர் இறங்கியது. அவள் கூறிய வார்த்தைகள் தான் எனினும் அவன் வாய்மொழியாகக் கேட்கும்போது அதிகம் வலித்துத் தொலைத்தது.
“பொய் சொல்லாதீங்க!” என்றாள் குரல் கமற. கோபப்பட முயன்றாலும் வார்த்தைகள் தழுதழுத்தன.
“நோ… இட்ஸ் நாட் லவ்!” என்றவனை வெறித்தவள், “நான் பேசுனது எல்லாம் தப்புதான். இப்போ நீங்கப் பலி வாங்குறீங்களா?” என வேதனையுடன் கேட்டாள் துளசி.
அவளது கன்னத்தில் இறங்கிய கண்ணீரில் இவனுக்கு வலித்ததுத் தொலைத்தது.
ஒரே ஒரு நொடி நிதானித்தவன், “பாஸ்ட் இஸ் பாஸ்ட் துளசி. நடந்த எதையும் மாத்த முடியாது. இதைப் பத்திப் பேசுறது இதுதான் லாஸ்ட்டா இருக்கும்..” எனக் கோபத்தில் இரைந்துவிட்டு அகன்றிருக்க, துளசி பொத்தன இருக்கையில் அமர்ந்து முகத்தைக் கைகளில் தாங்கிக் கொண்டாள். விழிகளில் தேங்கி நின்ற நீர் இப்போது அணையைக் கடந்து உடலை நனைக்க, இவள் முகத்தை மடியில் புதைத்துக் கொண்டாள். கதறி அழ வேண்டும் என்றொரு உந்துதல். ஆசையாய் காதலித்தவனை கரம் பிடித்தும் அந்த வாழ்க்கை தனக்கு மட்டும் நரகமாகிவிட்டதே என மனம் வேதனையில் வெந்து தணிந்தது.
அடிவயிற்றிலிருந்து பயம் தொண்டையைக் கவ்வியது. எங்கே இப்படியே கடைசிவரை சண்டையிட்டுக் கொண்டே இருந்துவிடுவோமா என பயமாய் இருந்தது. என்றைக்கு இவன் என்னைப் புரிந்து கொள்ளுவான் என்ற ஏக்கம் மனதை பிசைய, இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள். கரங்கள் முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்த வண்ணமிருந்தன. புறத்தோற்றத்தை சரிசெய்தவளால் அகத்தை சரிசெய்ய முடியவில்லை. எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ தெரியாது. அலைபேசி இரண்டு முறை அழைத்து ஓய்ந்தப் பிறகு புறத்தூண்டல் உறைக்க, எடுத்துப் பார்த்தாள். சோனியா தான் அழைத்திருந்தாள்.
எழுந்து சென்று முகம் கழுவி வந்தவள், தண்ணீரை எடுத்து மடமடவென சரித்தாள். அழுத தடயங்களை கவனமாய் தவிர்த்தவள், தங்கையிடமும் தாயிடமும் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, சைந்தவியும் தீக்ஷிதாவும் இவளைப் பேச்சில் இணைத்துக் கொள்ள, ஒட்ட வைத்தப் புன்னகையுடன் அவர்களுடன் கலந்தாள். மனம் கோபத்துடன் சென்றவனை எதிர்பார்த்து பதைபதைத்துப் போக, அதை முகத்தில் காண்பிக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்த வேந்தன் ஒருவரையும் காணாது அறைக்குள் சென்றடைய, நளினி கேட்ட கேள்வி கூட அவனுக்கு உறைக்கவில்லை. துளசி அனைத்தையும் பார்வையாளராய்க் கண்டிருந்தாள்.
“அண்ணி, உங்களுக்கும் வேந்தனுக்கும் எதுவும் பிரச்சனையா?” சைந்தவி கேள்வியில் ஒரு நொடி தடுமாறிப் போன துளசி, “இல்லையே சைந்து…” என்றாள் வரவழைத்தப் புன்னகையுடன்.
“இல்லையே… நல்லா தானே போனார் சைந்து?” துளசி வினவ,
“இல்லையே அண்ணி…” என எதோ பேச வந்தவளை தீக்ஷி திசை திருப்பியிருந்தாள். திருமணமான புதிதில் சண்டை எல்லாம் இயல்பாய் வருவது என நினைத்தவள், சைந்தவியை துளசியின் முன்னே கண்டிக்க இயலாது விட்டுவிட்டாள்.
இரவுணவை அனைவரும் அமர்ந்து உண்ண வேந்தன் வரவில்லை. இவள் என்ன செய்வது எனத் தெரியாது திணறியபடி நிற்க, “வேந்தா… வேந்தா, சாப்பிட வா டா!” என நளினி குரல் கொடுத்தார். பதிலில்லை.
“எல்லாரும் சாப்பிடும்போது உன் மகன் வர மாட்டானா?” சந்தனவேல் கடிந்தார்.
“ஏங்க, எதாவது வேலையா இருப்பான்…” என்றவர், “சைந்து, அவன் என்ன பண்றான்னு பாரு” என சின்னவளை அனுப்பினார்.
“ப்ம்ச்… ம்மா, உம்மகன் அந்த ரூம்ல போய் அடைஞ்சுகிட்டான். இனி வெளிய வந்த மாதிரி தான்!” சைந்தவி அலுத்தவாறே கூறி இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தாள். துளசி புரியாது அவளைப் பார்த்தாள்.
“இந்தப் பையன் வேற… கிட்டார், வயலின்னு அதை கட்டிட்டே அழுவான். சாப்பிட கூட வரமாட்டான். கொஞ்சநாள் நல்லா இருந்தான்னு நினைச்சேன்!” என நளினியின் புலம்பலில் இவளுக்கு ஏதோ புரிந்தது.
“அண்ணி, அந்த ரூம்ல உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கூட இருக்கு. ஆமா, அந்த ரூமைப் பார்த்தீங்களா? இல்லையா?” சைந்தவி கிசுகிசுப்பாய் துளசியிடம் கேட்க, “சைந்து, சாப்பிடும்போது என்ன பேச்சு. அமைதியா சாப்பிடு!” என மகிழ் அதட்ட, அவனை முறைத்தவள் உணவில் கவனமானாள். துளசிக்கு உணவு உள்ளே இறங்க மறுத்து சதி செய்ய, பெயரளவில் உண்டு எழுந்து அறைக்குச் சென்றுவிட்டாள்.
வேந்தனைத் தேடி கண்கள் சுழன்று பின்னர் அந்தப் பூட்டிய கதவில் நிலைத்தன. அவள் வந்ததிலிருந்தே. அவ்வறையைக் கவனித்தாலும் அதையெல்லாம் சிந்திக்க நேரமில்லாது போனது. வேந்தன் அந்த அறைக்குள்தான் இருக்கிறான் என்பது புரிய, விளக்கை அணைத்துவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் கடக்க, அவன் வருவதாய் தெரியவில்லை என்றதும் படுக்கையில் படுத்து தலையணையில் முகம் புதைக்க, கண்கள் கலங்கின. இத்தனை நாட்கள் பழக்கமாக வேந்தனின் ஸ்பரிசமும், வாசமும் அருகிலிருப்பதாய் ஒரு எண்ணம். நீண்ட நேரம் கழித்தே உறக்கத்தை தழுவினாள்.
காலையிலே எழுந்ததும் கணவனின் அணைப்பிலே எழுந்து பழகியவளுக்கு, அது இல்லையெனப் புரிய நேரமெடுக்க, பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்; அவன் இல்லை. தூங்கவே வரவில்லையா என மனம் பரபரவென யோசிக்க, எழுந்து அந்தப் பூட்டிய அறையின் முன்பு நின்றாள். கைகள் ஒரு நொடித் தயங்கிப் பின்னர் மெதுவாய் அதைத் தட்ட, பதிலில்லை. கொஞ்சம் அழுத்தியதும் கதவு திறந்து கொள்ள, மெதுவாய் உள்ளே நுழைந்தாள். முதலில் விழிகள் கணவனில் நிலைத்தன. இருக்கையில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தான்.
பின்னர் மெதுவாய் அறையிலிருந்த இசைக் கருவிகளை நோட்டமிட்டவளின் விழிகள் அந்த ஆளுயரப் புகைப்படத்தில் நிலைத்தன. ஒரு நொடி ஆச்சர்யமான பாவனை அவளது முகத்தில். நடனாலயாவில் வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்தப் புகைப்படம் அது. அன்றுதான் வேந்தனை அவள் சந்தித்த தினமும் கூட.
ஏதோ மெலிதாய்க் கிறுக்கி வைத்திருந்தான். அருகில் சென்று பார்த்தாள் பெண்.
‘செவன் ஸ்டேஜஸ் ஆஃப் லவ்!” எனத் தொடங்கியிருந்தான்.
விழிகளுக்கு நேராக அட்ராக்ஷன் (Attraction), இதழ்களுக்கும் கழுத்துக்கும் இன்பாக்சுவேஷன்(infactuation), இதயத்திற்கு நேராக லவ்(love), ரெவரன்ஸ்(reverence), அடுத்தாக அவளது இடுப்பிற்கு நேராக வெர்க்ஷிப்(worship) அண்ட் காலில் கட்சியிருந்த சலங்கைக்கு நேராக அப்சஷன் (obsession )அண்ட் டெத்(death) என எழுதி இருந்தது. அதை உற்றுப் பார்த்து படித்தவளின் விழிகளில் நீர் பொங்க, உதடுகளில் புன்னகை ஏறின. இத்தனை வருடங்களாகியும் இந்தப் புகைப்படத்தை வைத்திருக்கிறானா இவன் என்ற ஆச்சர்யமும் தன் மீதான அவன் காதிலிலும் துளசியின் நெஞ்சம் கனிந்திருந்தது. ஏனோ நேற்றுப் பேசிய வார்த்தைகளில் பொய்யை இந்தப் புகைப்படத்தின் வாயிலாக அறிந்ததில், மகிழ்ச்சிப் பொங்கியது.
வேந்தனுக்கு தன் மீது கோபம் மட்டுமே, வெறுப்பில்லை என்ற நிம்மதியில் முகம் மகிழ்ச்சியில் தோய்ந்திருக்க, அமைதியாக அவனருகே சென்று நின்றாள். அவள் அரவம் உணராது ஆழ்ந்த நித்திரையில் இருந்த வேந்தன் கால்களை மற்றொரு இருக்கையில் தூக்கிப் போட்டு அமர்ந்திருந்தான். மெதுவாய்க் கரங்களைத் தூக்கி அவனது தலையைக் கோதினாள். அவன் செயலில் கடலளவு கோபமிருந்தாலும், ஏனோ இவனை தன்னால் வெறுக்கவோ மறக்கவோ முடியாது என்பது பெண்ணின் மனம் மட்டுமே அறிந்த ரகசியம்.
அவளது அரவம் உணர்ந்ததும் மெதுவாய் இமைகளைப் பிரித்த வேந்தன் விழிகள் முழுவதையும் துளசி நிறைந்து போனாள். மங்கலாகத் தெரிந்த இமையை சிலுப்பி எழுந்தவனுக்கு அப்போதுதான் அவள் அந்த அறையில் நிற்கிறாள் என்பது புரிய, படபடவென இதயம் அடித்துக் கொள்ள அவளுக்குப் பின்னே இருந்தப் புகைப்படத்தில் வழிகளைப் பதித்தான். இவள் சுவரில் சாய்ந்து நின்று கைகளைக் கட்டியபடி விழிகளில் நீருடன் அவனைப் பார்த்து உன்னை நானறிவேன் எனப் புன்னகைத்தாள். சர்வ நிச்சயமாய் அந்தப் சிரிப்பில் பொய்யில்லை.
முகம் மலர்ந்து அகமுவந்த புன்னகையில் வேந்தன் நொடியேனும் தடுமாறிப் போனான். அவனுக்கே அவனுக்கான அவளின் புன்னகையில் இவனுக்குள்ளே பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு நிகழ்ந்தது. இதயம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தன்னிருப்பை உணர்த்தப் போராட, அடிவயிற்றில் ஏதோ செய்தது.
“என்…” எனக் கூற வந்தவன், “இந்த ரூம்க்குள்ள என் பெர்மிஷன் இல்லாம வரக்கூடாது!” என்றான். வார்த்தைகள் தடுமாறின முன்னே இருந்தவளின் கனிந்த முகத்தில்.
“நான் உள்ள வரக் கூடாது. பட் என் ஃபோட்டோ மட்டும் உள்ளே இருக்கலாமா?” எனக் கேட்டவளின் உதடுகள் சுழிந்தன. அதற்கு என்னப் பதிலளிப்பது எனத் தெரியாது தடுமாறியவனின் கரங்கள் உயர்ந்து பின்னந்தலை முடியைக் கோதின. கணவனை ஆதுரமாகப் பார்த்தாள் பெண்.
“கோபப்படுத்தாம வெளிய போடி…” என்றவனைப் பார்த்து முடியாது எனத் தலையசைத்தவளைப் பார்த்து முறைத்துவிட்டு வேந்தன் வெளியேற, இவள் மென்னகையுடன் நகர்ந்தாள்.
இருவருக்கும் இடையில் பேச்சுகள் குறைவாக இருப்பினும், வேந்தன் ஒரு கணவனாக எல்லா இடத்திலும் அவளுக்கு அரணாகத் துணையாக நின்றான். அறைக்கு வெளியே ஆதர்ச கணவன் மனைவியாக அனைவரிடமும் உருவகப்படுத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை. தங்களது பிணக்குகளைக் குடும்பத்தார் கண்களுக்கு எட்டாத வகையில் பார்த்துக் கொண்டனர்.
அறைக்குள்ளே அடைந்திருந்த துளசிக்கு கொஞ்சம் வெறுமை எட்டிப் பார்த்தது. வீட்டில் சோனியா, தாய், தந்தை என அவர்களை சுற்றியே நகர்ந்தவளுக்கு இங்கே எந்த வேலையும் இல்லாது போனதில் வெறுமையை உணரத் தொடங்கினாள். அதை விரட்டியடிக்க தீக்ஷிதா மற்றும் நளினியுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள். அவ்வப்போது ஆரண்யாவுடன் நேரத்தை செலவிட்டாள். சைந்தவியுடன் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்தாள். வேந்தனைத் தவிர வீட்டிலிருந்த அனைவரிடமும் அவளுக்கென பிணைப்பும் இணக்கமும் உருவாகியிருந்தது.
எப்போதும் மாலை அழைத்துப் பேசும் சோனியா அன்று அலுவலக நேரத்தில் அழைப்பு விடுத்திருக்கவும் ஒரு நொடிப் பதறிப் போன துளசி, “என்ன சோனி, ஏன் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க?” எனப் பதற்றம் மேலிட வினவினாள்.
“ப்ம்ச்… அக்கா, நீ கூட சொல்லவே இல்லை. மாமாவுக்கு நான் அத்தனை தடவை தேங்க்ஸ் சொன்னேன். இருந்தும் உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு கா. நீ ஏன் கூட வரலை?” சோனியாவின் குரல் சந்தோஷ ஆர்பரிப்பில் மூழ்கி நெகிழ்ந்திருக்க, துளசிக்கு எதுவுமே புரியவில்லை.
“என்ன… என்ன சொல்ற சோனி?” என்று கேள்வி தொடுத்தவளின் மூளை என்னவென நொடியில் அலசி ஆராய்ந்தது.
“பொய் சொல்லாத கா. மாமா உன்கிட்ட சொல்லலையா என்ன? அப்பாவுக்கு ஹாஸ்பிடல்லயே வச்சு ட்ரீட்மெண்ட் பார்க்க ஏற்பாடு செஞ்சிருக்காரு. இப்போதான் நாங்க எல்லாரும் அப்பாவை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வந்தோம்!” என சின்னவள் கூறவும், இவளுக்குப் பேச நா எழவில்லை. ஒரே நொடியில் அமைதியில் ஆழ்ந்திருந்தாள். சிந்தையை சிக்கனமின்றி கொண்டவன் ஆட்கொண்டிருந்தான்.
“க்கா… இந்த டாக்டர் ரொம்ப ஃபேமஸ். அப்பாவை ஆறே மாசத்துல குணப்படுத்திடலாம்னு சொல்லி இருக்காங்க!” என்ற சோனியாவின் கண்கள் மகிழ்ச்சியில் பொங்கின. இத்தனை நாட்களாக அறைக்குள் அடைந்து கிடந்த தந்தை முன்பு போல தங்களிடம் வரப் போகிறார் என்ற செய்தியே சின்னவளுக்கு அழுகை வரும் போலானது.
“ரொம்ப தேங்க்ஸ் கா… மாமா கிட்ட சொன்னேன் சொல்லு. அவர் ரொம்ப நல்லவரு கா. அம்மா கூட வேணாம்னு சொன்னாங்க. ஆனால், அவர்தான் கட்டாயப்படுத்தி கூட்டீட்டுப் போனாரு. போகும்போது கூட நம்பிக்கை இல்ல. பட், டாக்டரைப் பார்த்துப் பேசுனதும் நிறைய ஹோப் வந்திருக்கு கா!” என சோனியா பேசியதற்கு என்ன பதில் கூறினோம் எனத் தெரியாது வசுமதியிடமும் பேசாவிட்டு அழைப்பைத் துண்டித்த துளசியின் விழிகள் பளபளத்தன. ஒருபுறம் தந்தை சீக்கிரம் மீண்டுவிடுவார் என மனம் சந்தோஷத்தில் திளைக்க, மறுபுறம் இளவேந்தன் குடும்பத்தை நினைத்து மனதில் ஆயிரம் சஞ்சலம். இவன் இப்படியொல்லவற்றையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வது தெரிந்தால் அவர்களது எதிர்வினை என்னவாக இருக்கும் என பயம் துளிர்த்தது.
இவனிடம் தன் நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே போகிறது என எண்ணத்தில் கொஞ்சம் தாழ்வாக உணர்ந்தாள். யாரிடமும் உதவிப் பெறக் கூடாது என தானே அனைத்தும் பார்த்தவளுக்கு, வேந்தன் செய்கைக்கு என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியவில்லை. ஏற்கனவே வீட்டுக் கடனை மீட்டுக் கொடுத்திருக்கிறான். இப்போதும் இதுவும் சேர்ந்து கொண்டது. போதும், இதற்கு மேலும் இவன் எனக்காகப் பார்த்துக் குடும்பத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம். தானே பார்த்துக் கொள்வதாய் கூறிவிட வேண்டுமென எண்ணி வேந்தன் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அவன் வந்ததும் அறைக்குள் செல்ல, துளசியும் அவன் பின்னே சென்றாள். அவளின் வருகையை எதிர்பார்த்தேன் என்பதைப் போல வேந்தன் முக பாவனைகள் தெரிவித்தன.
“சொல்லுங்க துளசி!” அலுவலகத்தில் எப்போதும் மரியாதையுடன் தான் பேசுவது அவனின் வழக்கம்.
“எனக்காகப் பார்த்து நீங்க செஞ்ச உதவிக்குத் தேங்க்ஸ். இதுக்கும் மேல என் ஃபேமிலி விஷயத்துல நீங்க தலையிடாதீங்க. நான் பார்த்துக்கிறேன்!” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், “நான் எதையும் ஃப்ரியா செய்யலை. வீட்டுக் கடனை உங்களோட சேலரில கொஞ்சம் கொஞ்சமாக கழிச்சுட்டு இருக்கோம்!” என்றவனை இவள் முறைத்தாள். நாற்தாயிரம் சம்பளத்தை நாற்பத்தைந்தாயிரத்திற்கு உயர்த்தி அதிலிருந்து இரண்டாயிரம் கழித்திருந்தான்.
“அப்போ ஹாஸ்பிடல் செலவு?” துளசி கேள்வியாக நிறுத்த, அவளின் முன்னே தனது அலைபேசியை நீட்டினான். கண்ணப்பனின் மருத்துவ செலவு முழுவதும் தனியார் தொண்டு நிறுவனத்தின் பெயரில் இருக்க, துளசியின் முகம் மாறியது. வேந்தன் நேரடியாகப் பணம் கொடுத்தால் அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் சங்கடப்படக் கூடுமென எண்ணித்தான் இப்படியொரு ஏற்பாட்டை செய்திருந்தான்.
“அது… தேங்க்ஸ். இதுக்கும் மேல என்னோட ஃபேமிலி விஷயத்துல நீங்க தலையிடக் கூடாது!” என்றவளின் முன்னே திருமண ஒப்பந்தத்தை நீட்டியவனை எரிச்சலாய்ப் பார்த்தாள். இந்தப் பத்திரத்தை எத்தனை நகலெடுத்து வைத்திருக்கிறானோ என மனதில் எண்ணிக் கொண்டே அதை வாங்கினாள்.
“இதை நல்லா படிச்சுப் பாருங்க மிஸஸ்ஷிவதுளசி இளவேந்தன்!” என்றவன் குரல் அழுத்தமாய் வெளிவர, ஒரு புருவச் சுளிப்புடன் அதைப் படித்து முடித்தவளுக்கு அத்தனை கோபம் வந்தது தன் மீதே. இதை முழுதாகப் படிக்காது கையெழுத்துப் போட்ட தன் தவறை எண்ணி நொந்தவள், “திஸ் இஸ் நாட் ரைட். சோனியா மேரேஜ் வரைக்கும் எழுதி இருக்கீங்க. அதெல்லாம் நீங்க பார்க்கணும்னு என்ன தலையெழுத்து. என்னைக் கல்யாணம் பண்ணா, நான் மட்டும்தான் உங்கக் குடும்பம். அவங்க என் குடும்பம்தான்!” எனக் கோபம் மிகப் பேசினாள். அவளது குடும்பத்தின் நல்லது கெட்டது என அனைத்திலும் இவனது பங்கிருக்கிறது என்றும், முக்கியமான முடிவுகளை எடுக்கும் உரிமையும் உள்ளதென எழுதி இருந்தான்.
“இதெல்லாம் சைன் பண்ணுறதுக்கு முதல்ல பேசி இருக்கணும்…” என முணுமுணுத்தவன், “யூ மே கோ நவ். எனக்கு வொர்க் இருக்கு!” என்றான் குரலை உயர்த்தி. அதில் அவனை கோபம் தீரும் வரை முறைத்துவிட்டு வெளியேறினாள் துளசி.
இவன் எதற்கு இத்தனை செய்ய வேண்டும் என மனதில் ஆற்றாமைதான். இப்படியொன்றும் யாருடைய தலையிலும் தன் பாரத்தை வைக்க ஒருநாளும் துளசி விரும்பியதில்லை. கோபம் இருந்தாலும், மனம் தந்தையைச் சுற்றி வந்தது. அவர் எப்படி மருத்துவமனையின் புதிய சூழலை ஏற்றுக் கொள்வாரோ என வயிற்றில் பயபந்து சழன்றது. இரவு வீட்டிற்கு செல்லும்போது அவரைப் பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டு வேலையைக் கவனிக்கலானாள்.
மாலை துளசி வேந்தனோடு செல்லாது பேருந்து நிலையம் நோக்கி நடை போட, மகிழுந்தை அவள் முன்னே நிறுத்தினான். “நான் அப்பாவைப் பார்த்துட்டு வரேன். நீங்கப் போங்க!” என்றாள் தகவலாய். அவன் அசையாதிருக்கவும், இவள் நிமிர்ந்து பார்க்க, மகிழுந்து கதவைத் திறந்துவிட்டான்.
“ஹாஸ்பிடல்தான் போறேன்!” என அவன் கூறவும், துளசி எதுவும் பேசாது ஏறியமற, வேந்தன் நேரே மருத்துவமனைக்கு மகிழுந்தை செலுத்தினான்.
துளசி முதலில் கண்ணப்பனைத்தான் காணச் சென்றாள். தனியறை அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்க, மருந்தின் உதவியால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் மனிதர். அவரைப் பார்த்ததும் இவளுக்கு மெதுவாய் விழிகள் கலங்கின. அருகே சென்று சில நிமிடங்கள் அமர்ந்தவள், மருத்துவரைப் பார்க்க வேண்டுமென காத்திருந்து அவரிடம் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தாள். துளசிக்கு அத்தனை வியப்பு. இத்தனை நவீன சிகிச்சை முறைகள் உள்ளன என்பதே இப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. அவரது பேச்சிலே தந்தை இன்னும் சில மாதங்களில் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கை வரப் பெற்றதில் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆற்றல் பெற்றன. தந்தை மீண்டுவிடுவார் என்ற எண்ணத்தில் நெஞ்சம் மகிழ்ச்சியில் திளைத்தது. வேந்தன் வெளியே இருக்கையில்தான் அமர்ந்திருந்தான். இருவரும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கிளம்பினர்.
துளசி முகம் சோர்விலும் சோபையாய் மிளிர்ந்தது. மருமகள் முகத்தைப் பார்த்த நளினி, “வா துளசி, அப்பாவைப் பார்த்துட்டீயா? இப்போ உனக்கு சந்தோஷமா?” எனக் கேட்டவரை இவள் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.
“ஹம்ம்… பார்த்துட்டேன் அத்தை. நல்லா இருக்காரு!” எனத் தயங்கியபடி அவர் முகம் பார்த்தாள்.
“சரி மா, கவலைப்படாதே. சீக்கிரம் அவரு சரியாகிடுவாரு. வேந்தன் போன வராமே சொல்லிட்டு இருந்தான். இப்போதான் டாக்டர் பார்த்துப் பேசி ஹாஸ்பிடல்ல அவரை சேர்த்தோம்னு சொன்னான்!” என்று அவர் கூறவும், தாயிடமும் கூறியிருக்கிறான் என நினைத்தாள்.
“ரெண்டு பொண்ணை வச்சுட்டு உங்கம்மா இத்தனை நாள் தனியா இருந்ததே பெருசு. ஆம்பளை துணை இல்லாத வீட்டோட கஷ்டம் எனக்குப் புரியும் துளசி. கடவுள் சீக்கிரம் உங்கப்பாவை சரி பண்ணி பழைய மாதிரி மாத்திடுவாரு!” என வாஞ்சையாய்ப் பேசி கன்னத்தை தட்டிவிட்டு நகர்ந்த நளினியின் பேச்சில் உதட்டில் முறுவல் தோன்ற, விழிகள் மெல்ல கலங்கின. அவரது அக்கறை இனித்தது.
“சித்தி… நான் ஹோம் வொர்க் செஞ்சுட்டேன்!” ஆரண்யா ஓடி வந்து துளசியை காலோடு கட்டிக் கொள்ள, குழந்தையைத் தூக்கி முத்தமிட்டவள், “ஆரு குட் கேர்ள்!” என்றாள் மனமுவந்து புன்னகைத்து. ஏனோ இதயத்தைக் கனக்கச் செய்த பாரம் இன்றைய நாளில் மெதுவாய் உதிரத் தொடங்கியிருக்க, அது பெண்ணின் உதட்டில் புன்னகையைப் பூக்கச் செய்தது.
“வா துளசி, அப்பா எப்படி இருக்காரு?” என்ற தீக்ஷி ஆரண்யாவைத் தூக்கி உணவு மேஜையில் அமர வைத்தாள்.
“அண்ணி… ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டீங்களா? உங்களுக்காக ஒரு சீக்ரெட் வச்சிருக்கேன்!” என சைந்தவி வரவும், இவளுக்கு அப்போதுதான் புரிந்தது. வீட்டில் உள்ள அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது தன்னைத் தவிர. ஏனோ பணமிருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்ற எண்ணத்தை அந்நொடி அழித்திருந்தாள். இருவரிடமும் பதிலுரைத்தவளுக்கு, கொஞ்சம் தனிமையில் அழ வேண்டும் என்றொரு எண்ணம்.
அறைக்குள் அடைந்து கொண்டாள். குளித்து முடித்து வந்த இளவேந்தன் அறையைவிட்டு வெளியேற, இவள் குளித்து உடைமாற்றினாள். அழுதழுது சிவந்திருந்த கண்களும் முகமும் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தன. இன்றைய நாளிற்குப் பின்னர் துளசிக்கும் வேந்தனின் குடும்பத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்னுமின்னும் கூடிப் போனது.
அடுத்தடுத்து நாட்கள் வேகமாய்ப் பறந்தன. திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியிருக்க, கண்ணப்பனின் உடல் நிலை மெதுவாகத் தேற ஆரம்பித்தது. வார்த்திற்கு ஒருமுறை துளசி சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தாள். இடையே தீக்ஷியும் நளினியும் உடன் வந்தனர்.
துளசிக்கு நாட்கள் வேலை, வீடு, தந்தை, அங்கே வசுமதி, சோனியா என கொஞ்சம் அதீத பரபரப்பில் சென்றது. இப்போது துளசியின் சம்பளம் முழுவதும் வசுமதியிடம் சென்றுவிடுவதால், அவர்களது பணக்கஷ்டம் வெகுவாக குறைந்திருக்க, அவர் சோனியாவின் படிப்பு, திருமணம் என அதற்காக சேமிக்கத் தொடங்கியிருந்தார். ஓரளவிற்கு எல்லோருடைய வாழ்க்கையும் நன்றாக நகரத் தொடங்கின.
துளசிக்கு அந்த வாரம் முழுவதுமே அத்தனை சோர்வு. எதிலுமே முழுதாய் கவனம் செலுத்த முடியாது தடுமாறினாள். உடல் மெலிந்து போயிருக்க, கன்னத்து சதை வற்றிப் போயிருந்தன. சத்து குறைபாடாய் இருக்குமென அவளே எண்ணிக் கொண்டாள். கணினி முன்னே அமர்ந்திருந்து வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு கண்ணை சொக்கியது. தூக்கமா? மயக்கமா எனத் தெரியாது காலையிலிருந்தே விழிகள் மங்கலாய் இருந்தன.
“என்ன துளசி, ஆர் யூ ஓகே?” தேனு வினவ, இவள் நன்றாய் இருக்கிறேன் என்பது போல தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
“ஏன் ரொம்ப டயர்டா இருக்க நீ? வெயிட் குறைஞ்சுப் போய்ருக்கு?” என அவளை விழிகளால் அளந்த தேனருவி, “துளசி, பிரக்னென்டா இருக்கீயா?” எனக் கேட்க, அவள் கூற்றில் மற்றவளின் கைகள் அப்படியே நின்றன. ஒரு நொடி அந்தக் கேள்வியை மூளை உள்வாங்கி அதன் சாரம்சத்தை உணர்த்த, மனம் நாட்களைக் கணக்கிடத் தொடங்கியது.
“ஐ யம் நாட் ஷ்யூர் தேனு. செக் பண்ணீட்டு சொல்றேன்!” என தோழியிடம் பதிலுரைத்தவளின் கவனம் அங்கில்லை.
கடந்த மாத மாதவிடாய் தவறியிருந்தது. இருபது நாட்களுக்கும் மேலாகியிருக்க, அதை கவனிக்கத் தவறியிருந்தாள். ஒரு சில மாதங்கள் இப்படி முந்தியும் பிந்தியும் வருவதால், அவளால் உறுதியாக நம்ப முடியவில்லை. இப்போதே சோதித்துப் பார்க்க வேண்டும் என மனம் உந்த, எழுந்துவிட்டாள்.
“தேனு, நான் வீட்டுக்குப் போறேன். நீ எனக்கொரு பெர்மிஷன் மெயில் போட்டுடு!” என்றவள், கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டினாள்.
“துளசி, தனியா போய்டுவீயா? சார் வேற இல்ல. நான் கூட வர்றேன்!” தேனருவி எழ, “இல்ல தேனு, நான் போய்க்கிறேன்…” என அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு செல்லும் வழியில் கர்பத்தை உறுதி செய்யும் கருவியொன்றை வாங்கிக் கொண்டு சென்றாள்.
மதிய வேளையில் மருமகளை எதிர்பாராத நளினி, “என்ன துளசி, ஏன் இந்நேரம் வந்திருக்க?” என வினவினார்.
“அத்தை, கொஞ்சம் தலை வலி. அங்க சிஸ்டம் முன்னாடி உட்கார முடியலை. அதான் வந்துட்டேன்!” என்று பொய்யுரைத்தாள்.
“சரி துளசி, லஞ்ச் டைமாச்சு. சாப்ட்டு கொஞ்ச நேரம் தூங்குனா, சரியாகிடும்…”
“கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்றேன் அத்தை. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணீட்டு!” என அறைக்குள்ளே சென்றதும் முதல் வேலையாக அந்தக் கருவியை எடுத்து சோதனை செய்தாள். அதில் இரண்டு கோடுகள் விழவும், இவளிடம் ஒரு நொடி மூச்சில்லை. சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது? அழுவதா? சந்தோஷப்பட வேண்டுமா? யாரிடமும் முதலில் பகிர்வது எனத் தெரியாது அப்படியே இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
என்னவென்று அவளால் விவரிக்க முடியவில்லை. இதை வேந்தனிடம் கூறியதும் அவனது எதிர்வினை எப்படியிருக்கும் என கற்பனைகள் சிதறின. தாயிடம் முதலில் சொல்லி விடலாமா? மாமியார் அதற்கு கோபித்துக் கொள்வாரோ? என எண்ணங்கள் சுழன்றன.
தனக்கு வந்த துளசியின் அனுமதி கடிதத்தை நெற்றியை சுருக்கிப் பார்த்த இளவேந்தன், நளினிக்கு அழைத்து என்னெவன வினவ, அவர் துளசி கூறியதை கூறவும், மதிய உணவிற்கு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
“வா டா… துளசி ரூம்ல தான் இருக்கா. அவளையும் கூப்பிடு, ரெண்டு பேரும் சாப்பிடுங்க.” என நளினி கூறியதை தலையசைத்து ஏற்றவன், அறைக்குள் நுழைந்தான்.
அவனை அந்நொடி எதிர்பாராது திகைத்த துளசியின் விழிகளில் மெது மெதுவாக கீழிமைத் தொட்டு மேழிமை வரை நீர் கோர்த்தன. உதடுகளை இறுகப் பூட்டிக் கொண்டாள். என்ன சொல்வது, எப்படிப் பேசுவது என அந்நொடி மூளையில் அட்சர சுத்தமாய் எதுவுமில்லை.
அவளைக் கேள்வியாகப் பார்த்தான் வேந்தன். பதிலுரைக்காது மேஜை மீது பார்வையைப் படரவிட்டாள் பாவை. இவன் யோசனையுடன் மேஜையருகே சென்றான். அந்தப் பரிசோதனைக் கருவியை கையிலெடுத்துப் பார்த்தவனின் மூளை அதன் உட்பொருளை உணர்த்த, அதை பார்த்தபடியே அப்படியே நின்றான். துளசி உதட்டைக் கடித்துப் புன்னகைத்தபடி விழிகளில் வழியும் நீரை துடைத்தவாறே அவனது முகபாவனைகளை அவதானிக்க முயன்றாள்.