கணினியில் பதிந்த விழிகளை நகர்த்தாது வேலையில் மூழ்கி இருந்தாலும் எண்ணங்கள் என்னவோ சந்தோஷ் அறையை மொய்த்த வண்ணம் இருந்தன. அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் வந்துவிட்டானா எனப் பார்க்கச் சொல்லி உந்திய மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள் துளசி. சிந்தை முழுவதும் அத்தனை எண்ணச் சிதறல்கள். விரல்கள் விசைப்பலகையை தஞ்சமிட்டிருக்க, விழிகளை இருமுறை சிமிட்டியபடி அதன் பணியைத் தொடர்ந்தன.
சந்தோஷ் அவளிடம் பேசிச் சென்று பன்னிரெண்டு மணி நேரங்கள் முடிந்துவிட்டன என மூளை கூற, தான் உடைத்துவிட்ட அந்த அன்பின் இதயம் என்னக் காயம் கண்டிருக்குமோ என இரவெல்லாம் அதே சிந்தனைதான். அதை விரட்டி, இரவு தமாதமாய் உறங்கி தாமதமாக எழுந்து காலையிலே அவசரமாக அவசரமாக அலுவலகம் வந்திருந்தாள் பெண்.
உள்ளே நுழைந்ததும், ‘குட்மார்னிங் துளசி!’ எனப் புன்னகைத்துவிட்டு நகருபவனை ஒரு நண்பனாய் மனம் எதிர்பார்த்துத் தொலைத்தது.
“ஹே துளசி, என்ன சந்தோஷ் சார் லீவ் இன்னைக்கு, உன்கிட்ட சொன்னாரா?” தேனருவி குரல் செவியில் விழிவும் சிந்தை கலைந்து நிமிர்ந்தவள், “ஹம்ம்… அது தெரியலையே தேனு. என்கிட்ட சொல்லலை!” என்றாள் மெய்யும் பொய்யுமாக.
அவனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றொரு மனம் நச்சரித்தாலும் துளசி எதையும் செய்ய விழையாது அப்படியே இருந்தாள். வேண்டாம் என அவனிடம் நேரடியாய்க் கூறிவிட்டப் பின் எந்த வகையிலும் இருவருக்கும் தொடர்பு தற்போதைய நிலைக்கு தேவையற்றது. கண்டிப்பாக சந்தோஷ் மனம் மாறிவிடும். வீட்டில் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என நம்பியவள், அவனைப் பற்றி ஆராய ஆர்வம் காட்டவில்லை. எப்போதும் போல தன் வேலையில் சிரத்தையாய் இருக்க முயற்சித்த வண்ணமிருந்தாள்.
‘அவன் நன்றாய் இருந்தால் போதும்!’ என்றெண்ணம் மனம் முழுவதும் விரவியிருந்தது. தொடர்ந்து நான்கு நாட்கள் கடந்திருக்க, சந்தோஷ் அலுவலகம் வரவேயில்லை. அவனுக்கு நிச்சயதார்த்தம் என்ற செய்தி மட்டும் யார் மூலமாகவோ அலுவலகத்தை அடைய, அனைவரும் கலந்து கொள்வதாக திட்டமிட்டிருந்தனர். விடுமுறை நாளில் நிச்சயதார்த்தம் நடைபெறவும் அது இன்னுமே வசதியாகிப் போக, ஒருவர் விடாது அனைவரும் வருவதாய் உறுதியளித்திருந்தனர்.
“துளசி, நீ அந்தப் பிங்க் கலர் சேரி கட்டீட்டு வா டி. நானும் சேம் கலர் கட்றேன்!” காலையிலிருந்து தேனருவி நாளை செல்லவிருக்கும் நிகழ்வைப் பற்றியே உரைத்த வண்ணமிருக்க, துளசி வெறும் புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.
“என்ன துளசி, அமைதியாவே இருக்க, நீயும் சந்தோஷ் சாரும் ரொம்ப க்ளோஸ். நான் கூட நீங்க கமிட் ஆகிடுவீங்க, ட்ரீட் கேட்கலாம்னு நினைச்சேன். கடைசியில இப்படியாகிப் போச்சே!” அவள் வருத்தமும் ஆதங்கமுமாய்க் கேட்க, அதற்கும் துளசி பதில் புன்னகைதான்.
“இப்படி சிரிச்சே மழுப்பிடு நீ…” எனக் குறைபட்ட தேனு, “ஆமா, நாளைக்கு நீ வருவ தானே?” என சந்தேகமாய்த் தோழியை நோக்கினாள்.
சில நொடிகள் மௌனமாய் இருந்த துளசி, “தேனு, நாளைக்கு அப்பாவுக்கு அப்பாய்ன்மெண்ட் இருக்கு டி. அவரை ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போகணும். சோ, வர்றது கஷ்டம்…” என்று உண்மையாய்க் கூற, தேனருவி முகம் சுருங்கியது.
“என்ன துளசி இது, கண்டிப்பா அந்த மனுஷன் உன்னை எதிர்பார்ப்பாரு. நீ வராம எப்படி?”
“ப்ம்ச்… தேனு, எப்பவுமே அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். நான் வந்தாலும் வரலைனாலும் என் மனசு அங்கதான் இருக்கும். சீனியர் லைஃப் நல்லா அமைய நான் வேண்டிப்பேன்!” என்றாள் மென்னகையுடன்.
“துளசி, உங்களுக்குள்ள எதுவும் ப்ராப்ளமா? பொய் சொல்லாம சொல்லு, அவர் என்னடான்னா நாலு நாள் ஆஃபிஸ் வரலை. திடீர்னு மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. இது எதுவும் உனக்குத் தெரிஞ்ச மாதிரி தெரியலை?” தேனருவி தானாய் யூகித்து வினவினாள்.
“தேனு, ஏன் பிரச்சனை வந்தாதான் பிரியணுமா என்ன? ரெண்டு பேரோட நல்லதுக்கும் பிரிஞ்சுப் போகுறது இல்லையா? அவர் வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் இந்தப் பிரிவு. நான் அங்க வந்தா, தேவையில்லாத சங்கடம்தான். அதான் வரலை, போதும் இந்த டாபிக்!” என்றவள் கணினியில் கவனத்தைப் பதிக்க, ஒரு கரம் விசைப்பலகையில் பதிந்தது.
“துளசி, சீரியஸா ஆன்சர் பண்ணு. டூ யூ லவ் ஹிம்?” தேனருவி குரலில் தோழிக்கான வேதனைக் கொட்டிக் கிடந்தது. இந்தப் பெண் ஏன் இப்படி செய்தாள் என கனிவும் கரிசனமுமாய் அவளை நோக்கினாள்.
பக்கவாட்டாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்த துளசி, “லவ்னா அன்பு தானே தேனு, அந்த மனுஷன் மேல எனக்கு நிறைய அன்பு, பாசம், பிடித்தம் எல்லாமே இருக்கு. ஏன்னா, நான் கஷ்டம்னு வாயைத் திறந்து சொல்லாமலே என் முகத்தைப் பார்த்து கண்டுபிடிச்சிடுவாரு. இதெல்லாம் ப்ரெண்ட்ஷிப்ன்ற ஒரு கோட்டுக்குள்ள தான் டி. ஹம்ம், என் வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு வரலை, எனக்குத் தோணலை, கண்டிப்பா தோணாது!” என்றவளின் உதடுகளில் மெல்லிய புன்னகை. அவள் உரைத்தது எல்லாம் சந்தோஷிற்கான அவளின் உணர்வுகள். ஏனோ எத்தனையே ஆண்கள் பார்வை வக்கிரத்துடனும் தவறான எண்ணங்களுடனும் தன் மீது பதியக் கண்டிருக்கிறாள். ஆனால், கண்ணைத் தவிர எங்கேயும் பார்த்துப் பேசாத இந்த சந்தோஷை அவளுக்கு நிரம்ப பிடிந்திருந்தது, இனிமேலும் பிடிக்கும். ஆனால், அது நட்பென்ற புள்ளியிலே தேங்கிவிடும் அவர்களுக்கான நேசக் கணைகள். அதைத் தாண்டி அவள் செல்ல விழையவில்லை. அவனையும் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.
மறுநாள் அலுவலகம் முழுவதும் சந்தோஷ் நிச்சய விழாவிற்கு செல்ல, துளசி காலையிலே தந்தையை மருத்துவமனை அழைத்துச் செல்ல தயார்படுத்தினாள். வசுமதி கண்ணப்பனை குளிக்க ஊற்றி உடை மாற்றிவிட, இவள் உணவை ஊட்டிவிட்டவள், அதில் தூக்க மாத்திரையைக் கலந்திருந்தாள். ஏனென்றால் வெளியே அழைத்துச் செல்லும்போது கண்ணப்பன் செயல்கள் கொஞ்சம் அதிகபடியாக இருக்கும். அவரது பேச்சு, நடத்தை என அனைத்தும் வேறுபடுவதால், பலரது விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என தவிர்த்துவிடுவாள்.
அதுமட்டுமின்றி மருத்துவமனையைக் கண்டதும் கண்ணப்பன் அவர்களிடமிருந்து தப்பித்து எங்கேனும் ஓடிச் செல்ல முயன்றுவிடுவார். இதற்கு முன்பு அப்படியொரு சம்பவம் நடந்து லாரியில் அடிபட இருந்த மனிதர் நொடியில் உயிர் தப்பியிருக்க, இவர்கள் மூவரின் உயிரும் ஒரு நொடி சென்று திரும்பியிருந்தது. அதிலிருந்தே இது மாதிரியான விபரீதங்களைத் தவிர்க்க, அவரைத் தூக்க நிலையில் வைத்தே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
“துளசி, கார் வந்துடுச்சான்னு பாரு…” என்ற வசுமதி தயாராகி வெளியே வர, சோனியா உறங்கும் தந்தையின் தலையை மடியில் வைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
“ஹம்ம்… ஒரு டூ மினிட்ஸ்ல வந்துடுவாரு!” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே மகிழுந்து அவர்களது வீட்டு வாயிலில் வந்து நின்றது.
“வாங்க அண்ணா, எப்படி இருக்கீங்க?” என்ற துளசி அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு உள்ளே நுழைந்தாள்.
“ம்மா… கிளம்பலாம்!” என்றவள் நடந்து சென்று கண்ணப்பனைத் தூக்க, சோனியா ஒருபுறம் பிடித்துக் கொண்டாள். இருவரும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று மகிழுந்தில் அமர வைக்க, வசுமதி வீட்டைப் பூட்டி வர, நால்வரும் மருத்துவமனையை நோக்கிக் கிளம்பினர்.
“உங்கப்பாவுக்கு நல்லா இம்ப்ரூமெண்ட் தெரியுது துளசி. முன்ன மாதிரி ரொம்ப அரொகண்டா நடந்துக்குறாரா? இல்ல தானே?” மருத்துவர் முன்பு மூவரும் அமர்ந்திருக்க, அவர் கேள்வி எழுப்பினார்.
“முன்ன மாதிரி ரொம்ப கத்துறது இல்ல டாக்டர். பட், புதுசா யாரையும் பார்த்தா ஹார்ஷா நடந்துக்கிறாரு…” என்று துளசி பதிலுரைக்க, “ஹம்ம்… அது அவரோட மென்டல் இன்ஸ்டெபிலிட்டிதான் காரணம். போக போக சரியாகிடுவாரு. இந்த டைம் நான் டேப்லெட் மாத்தி எழுதித் தரேன். சிம்ப்டம்ப்ஸ்ல இம்ப்ரூமெண்ட் இருக்கான்னு பார்த்துட்டு நெக்ஸ்ட் என்னென்னு டிஸ்கஸ் பண்ணலாம்!” என்றவர்,
“ஒவ்வொரு டைமும் உங்ககிட்ட சொல்றேன், இங்கேயே அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் பார்த்தா எங்களுக்கும் அவரைக் கேர் பண்ண ஈஸியா இருக்கும். வீட்ல இருந்து பார்க்குறதைவிட இங்க இருக்கும்போது அஸ் அ டாக்டரா அவரை நான் நல்லா அப்சர்வ் பண்ண முடியும்மா. இல்ல, உங்களுக்குத்தான் டிலே ஆகும்!” என்று மருத்துவர் கூற, மூவரிடமும் பதிலில்லை.
“வி வில் ட்ரை அவர் லெவல் பெஸ்ட் டாக்டர்!” என துளசி அமைதியைக் கலைத்தாள். மேலும் சில பரிசோதனைகள் முடித்து மருந்து மாத்திரையை அவள் வாங்கிவர, வீட்டை நோக்கிப் பயணமாகினர். எப்போதும் வாங்கும் மருந்து மாத்திரைகளும் சிகிச்சையும் பத்தாயிரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், இந்த முறை கூடுதலாக ஒரு ஐந்தாயிரம் வந்திருக்க, வீடு பார்க்க வைத்திருந்த காசை மருத்துவமனையில் செலுத்திவிட்டாள். தற்போதைய சூழ்நிலைக்கு இது அவசியமாகத் தெரிந்தது. வீட்டு வாடகைக்கு வேறு எதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம் என நினைவில் அது பின்னகர்ந்திருக்க, தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். மாத்திரையின் உதவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார் கண்ணப்பன்.
அவரது தலையைக் கோதியவள், ‘சீக்கிரம் சரியாகிடுவீங்க பா. பழைய மாதிரி நம்ம நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம் பா!’ என்று மனதில் கூறிக் கொண்டவளுக்கு அந்த நாள் என்று வருமோ என ஏக்கம் பிறக்காமல் இல்லை. அதையெல்லாம் உள்ளக்கிடங்கில் புதைத்துக் கொண்டாள்.
வீட்டிற்குச் சென்று சேர்ந்ததும் கண்ணப்பனை அவரது அறையில் படுக்க வைத்தனர். துளசிக்கு கையெல்லாம் வலித்தது, உதறிக் கொண்டாள். கண்ணப்பன் சற்றே உடல் பருமனுடையவர். அவரை இரண்டு பெண்கள் தூக்குவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.
“துளசி, சோனி… வாங்க சாப்பிடுங்க…” என்ற வசுமதி மூவருக்கும் உணவைப் பரிமாற அமைதியாய் உண்டனர். வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் அந்த ஓய்வு நாளிலும் துளசிக்கு வீட்டில் எதாவது வேலைகள் இருந்துவிடும். அதனாலே ஓய்வெடுக்க தனியாய் நேரம் ஒதுக்க முடியாது என கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வாள். இப்போது உடல் அசதியாய் இருக்க, அந்த நீள்விருக்கையில் சாய்ந்தவாறே விழிகளை மூடினாள்.
“அக்கா, தூக்கம் வந்தா ரூம்ல போய் தூங்கு கா. ஏன் சோபால படுத்திருக்க?” என்று சோனியா குரல் காதில் கேட்டாலும் அதை பொருட்படுத்தாமல் கால்களை மேலிழுத்து சற்றே குறுக்கிப் படுத்தாள். உடல் அலண்டு போயிருக்க, ஓய்விற்குக் கெஞ்சியது. மெதுவாய் விழிகளை மூடினாள். சுகமாய் இருக்க, முகத்தைப் பஞ்சு நீள்விருக்கையில் தேய்த்துக் கொண்டாள்.
வசுமதி கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்தவர், “சோனி, அப்பாவைப் பார்த்துக்கோ. அக்கா தூங்கட்டும், அவளுக்கே வாரத்துல ஒருநாள்தான் லீவ் கிடைக்குது, புள்ளை ஓடிக்கிட்டே இருக்கா!” என்றவர் குரலில் மகளின் மீதான வாஞ்சை நிரம்பி வழிந்தது.
“நான் அப்படியே மெதுவா நடந்து போய் மார்க்கெட்ல காய்கறி வாங்கீட்டு வர்றேன்!” என்று அவர் வாயிலைக் கடந்து காலணிகளை அணிய, துளசியின் தூக்கம் மொத்தமும் கலைய, எழுந்துவிட்டாள்.
“ம்மா… நடந்து போக வேணாம். இருங்க, நான் ஸ்கூட்டியை எடுத்துட்டு வர்றேன்!” என்றவள் ஆணியில் மாட்டியிருந்த சாவியைக் கையிலெடுத்தாள்.
“துளசி, பத்து நிமிஷத்துல நடந்து போய்ட்டு வந்துடுவேன். நீ போ, போய் தூங்கு, இன்னைக்கு ஒரு நாளாவது ரெஸ்ட் எடு!” என்றவரிடம் மறுப்பாய்த் தலையை அசைத்து வெளியே வந்தாள்.
“ப்ம்ச்… எனக்காவது ஒரு நாள் லீவ் கிடைக்குது. உங்களுக்கு மட்டும் வாரத்துல ஏழுநாள் வேலையா?” என மென்மையாய் அவரை முறைத்தவள் இருசக்கர வாகனத்தை இயக்க, அவள் பின்னே ஏறியமர்ந்தார் வசுமதி.
“ஏன் துளசி ஓடிட்டே இருக்க. ரெஸ்ட் எடுத்தா என்ன?” குறைபட்டத் தாயைப் பார்த்துப் புன்னகைத்தவள், “சோனி, பத்திரமா இரு. அரைமணி நேரத்துல வந்துடுவோம். எதுவும் எமர்ஜென்சின்னா, உடனே கால் பண்ணு…” எனத் தங்கையிடம் அறிவுறுத்திவிட்டு நகர்ந்தாள்.
விடுமுறை நாள் அப்படியே கழிந்துவிட, மறுநாள் திங்கட்கிழமை பரபரப்பில் நாள் துவங்கியது. காலையிலே அவள் வீடு பார்க்கச் சொல்லியிருந்த தனியார் நிறுவனத்திலிருந்து துளசிக்கு அழைப்பு வந்திருந்தது.
“மேடம், உங்களோட வசதிக்கு ஏத்த மாதிரி ரெண்டு வீடு இருக்கு. நீங்க எப்ப ஃப்ரீயோ வந்து பார்த்துட்டு ஓகேவான்னு சொல்லுங்க!” என்று அந்த வாலிபன் கூற, “ஈவ்னிங் நான் ஃப்ரீ தான் சார். இன்னைக்கே கூடப் பார்க்கலாம்!” என்று ஒப்புக் கொண்டிருந்தாள்.
“ம்மா… நைட்டு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வர நேரமாகும்!” என்றவாறு தன் கைப்பயைத் தோளில் மாட்டினாள் துளசி.
“சரி துளசி, முடிஞ்சளவுக்கு வேலையை சீக்கிரம் முடிக்கப் பாரு. இருட்டுல வராத!” என்ற வசுமதியின் பேச்சிற்குத் தலையை அசைத்துவிட்டு செல்லும் தமக்கையை யோசனையாய்ப் பார்த்தவாறே கல்லூரி கிளம்பினாள் சோனியா.
“துளசி, அந்த ஹோட்டல் கட்டுறதுக்கான டிசைன் இன்னும் நீங்க இன்கம்ப்ளீட்டா வச்சிருக்கீங்க? இதுக்கு முன்னாடி இப்படி நீங்க பண்ணது இல்லை. வாட் இஸ் ராங்க் வித் யூ?
இங்க வேலை செய்ய தானே வர்றீங்க?” என மேலாளர் காலையில் துளசியை அழைத்து குரலை உயர்த்தி திட்டிவிட, இவளது முகம் வாடிப் போனது. அவர் கூறியது போல துளசி இதுவரை எந்த வேலையும் பாதியிலே கைவிட்டதில்லை. ஆனால், இந்த இடத்தின் வரைபடத்தை வரைய முயற்சிக்கும் போது கைகள் நடுங்குவதை அவளால் தவிர்க்க இயலவில்லை. அதனாலே இந்தத் தாமதம் ஏற்பட்டிருந்தது.
“சாரி சார், திஸ் இஸ் மை மிஸ்டேக். ஐ வில் சென்ட் வித்தின் டுடே!” என உரைத்தவள் கணினியை உயிர்பித்ததும் அந்த விடுதி கட்டுவதற்கான வரைபடத்தை எடுத்து வைத்தாள். சில நிமிடங்கள் விழிகளை மூடி தங்களுக்காக மனதில் வரைந்திருந்த வடிவமைப்பைக் கண்முன்னேகொண்டு வந்தாள். இது எந்த வகையிலும் என்னைப் பாதிக்கவில்லை என மனதிலே உருப்போட்டவள், இரண்டு மணி நேரத்திலே அதை நேர்த்தியாய் வடிவமைத்திருந்தாள்.
“ஹே துளசி, இந்த டிசைன் ரொம்ப யுனிக்கா இருக்கே!” என்று தேனருவி ஆச்சர்யப்பட, “ஆமா துளசி, நல்லா டிசைன் பண்ணியிருக்க…” என சக ஊழியரும் அவளைப் பாரட்ட, அவளது உதடுகளில் புன்னகை. ஆனால், அதன் பின்னே இருக்கும் வலி அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
மேலாளர் அவளது வடிவமைப்பை ஒரு முறை பார்த்துவிட்டு வேந்தனுக்கு அனுப்பி வைக்க, அவனுக்கு ஏக திருப்தி. ‘ஃபைனலி யூ டிட்!’ என்றவன் இதழ்கள் கோணலாய் வளைந்தாலும் முறுவல் பூத்திருந்தது. துளசியும் வேந்தனும் பேசியே பல நாட்கள் கடந்திருந்தன. அவளுக்கு அதில் அத்தனை நிம்மதி. அவனைக் காணாதிருந்தாலே நல்லது என ஒதுங்கிக் கொண்டாள். ஏற்கனவே அவளுக்கென ஆயிரம் வேலைகள் வரிசையில் நிற்க, இவன் வேறு அதில் ஒன்றாய் தொல்லையைக் கொடுத்த வண்ணமிருந்தான். இப்போது அதிலிருந்து விடுதலை கிடைத்ததும் இவளுக்கு மனதிரோம் சிறு கீற்று மகிழ்ச்சி பரவியது.
மாலை அலுவலகம் முடிந்ததும் அந்த வாலிபனோடு வீட்டைப் பார்க்கச் சென்றாள். இரண்டு வீடுமே அவளுக்கு சரிவரவில்லை. ஒரு வீடு மனதிற்கு ஒப்பவில்லை என்றால் மற்றொன்றில் வீட்டின் உரிமையாளர் அத்தனை கெடுபிடியாய் பேசிவிட்டார்.
“உங்கப்பா அப்படின்னு இந்த தம்பி சொன்னாரு மா. இருந்தாலும் ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க இருக்கீங்களேன்னு வீட்டைத் தரேன். முதல்ல இருந்தவங்க பத்தாயிரம் வாடகை கொடுத்தாங்க. நீங்க பன்னிரெண்டாயிரம் கொடுங்க. மோட்டர் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் போடுவேன். அதுக்கு மேல தண்ணீர் வேணும்னா தெரு குழாய்ல பிடிச்சுக்கோங்க. கரண்ட்பில் நீங்க யூஸ் பண்றதுதான். முக்கியமான விஷயம், இது கொஞ்சம் அமைதியான ஒழுக்கமான தெரு. குடும்பமா தான் இருப்பாங்க. ஆம்பள பசங்க சகவாகம் கூடவே கூடாது. பத்து மணிக்கு மேல வீட்டுல இருந்து சத்தம் வரக் கூடாது. உங்கப்பா அர்த்த ராத்திரில கத்தீட்டு இருந்தாருன்னா, உடனே நீங்க வீட்டைக் காலி பண்ணணும்!” என அவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற போது துளசிக்கு இந்த வீடு தங்களுக்கு ஒத்து வருமெனத் தோன்றவில்லை.
“இந்த கண்டிஷன் எல்லாம் ஓகேன்னா நீங்க அடுத்த மாசமே குடிவரலாம்மா. பத்து மாசம் வாடகை அதாவது ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூவா அட்வான்ஸா கொடுக்கணும்!” என்று அவளின் பதிலிற்காக முகத்தை நோக்கினார் வீட்டின் உரிமையாளர்.
“இல்ல சார், இந்த வீடு எங்களுக்கு செட்டாகாது!” என சம்பிரதாயப் புன்னகையுடன் விறுவிறுவென படிகளில் இறங்கிவளின் முகம் வேதனையில் கசங்கியிருந்தது. இன்று எப்படியும் வீடு அமைந்துவிடும் என எண்ணித்தான் வந்தாள். இன்னும் பத்து நாட்களில் வைரமுத்து கொடுத்திருந்த காலக்கெடு முடிவடையப் போகிறது. அதற்குள்ளே வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேறு எதையும் அவளை சிந்திக்க விடவில்லை.
“மேடம், வேற எதுவும் வீடிருந்தா உங்களுக்கு நான் கால் பண்றேன்…” என அந்த வாலிபன் கூற, “சார், டென் தௌசண்ட்க்கு கம்மியாவே வீட்டைப் பாருங்க. அட்வான்ஸ் அதிகமா கொடுக்க முடியாது!” என்றாள்.
“சரிங்க மேடம், நான் பார்த்து சொல்றேன். வேற எதாவதுன்னா கால் பண்ணுங்க!” என அவன் விடை பெற, இவளது கரங்கள் சாவியை இருசக்கர வாகனத்தில் நுழைத்து முடுக்கியது.
வீட்டிற்கு முன்பணம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தைத் துளசி மறந்திருந்தாள். அவளுக்கு பத்து மாத வாடகை முன்பணமாகக் கொடுக்க வேண்டும் என்ற விஷயமே இப்போதுதான் தெரிய வர, அதற்கு எப்படியும் ஒரு லட்சம் வேண்டுமென மூளை கணக்கிட்டது. என்ன செய்து அந்தப் பணத்தை ஏற்பாடு செய்யப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே வாகனத்தை இயக்கிய வண்ணமிருந்தவளை வேந்தன் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.
‘என்ன செய்கிறாள் இந்தப் பெண்? யார் வீடு இது?’ என்ற கேள்விகள் முளைக்க அவனது நெற்றி சுருங்கியது. எதுவும் பேசாது அவளது செயல்களை அவதானித்தான்.
அடுத்து துளசி எங்கும் செல்லாது வீட்டிற்குள் நுழைய, இவன் சில நொடிகள் அவளைப் பார்த்துவிட்டு நகர்ந்தாலும் அந்த வாலிபன் யாரென ஆராயும் முயற்சியில் இறங்கினான்.
“ரவா தோசை உனக்குப் பிடிக்குமேன்னு சுட்டேன் துளசி. இன்னும் ஒன்னு வாங்கிக்கோ!” என்ற வசுமதியை நிமிர்ந்து பார்த்தவள், “ம்மா… வாடக்கைக்கு வீடு பார்த்தா பத்து மாசம் பணத்தை அட்வான்ஸா கொடுக்கணுமா மா?” என வினவினாள்.
“ஆமா துளசி, முன்ன மாதிரி இல்ல. இப்போ எல்லாம் பத்து மாசம் வாடகையை அட்வான்ஸா வாங்குறாங்க. பத்மா போன் போடும்போது புலம்புனா. நல்ல வேளை, உங்கப்பா நமக்குன்னு சொந்த வீட்டை கட்டிட்டாரு. இல்ல, வாடகை வீட்டுல கஷ்டப்பட்டிருப்போம்!” என்றவர் பேசிக்கொண்டே மற்றொரு தோசையை மகளது தட்டிலிட, அவரைப் பார்த்து புன்னகைத்தவளின் உதடுகளில் வேதனையின் சாயல். சொந்த வீட்டில் நிம்மதியான வாழ்வும் இனிமேல் தங்களுக்கு இல்லை என்ற நிதர்சனம் உறைத்ததில், சொல்ல முடியாத உணர்வு குப்பென தாக்கி அவளைச் செயலிழக்கச் செய்தது.
‘இந்த வீடு தங்களுக்கில்லை எனும்போது இந்தப் பெண்மணி எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்?’ என்ற நினைவில் உணவு தொண்டையில் அடைத்துக் கொண்ட உணர்வு. கலங்கிய விழிகளை சிமிட்டி அவரைப் பார்த்தாள். துளசிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இந்த வீட்டில்தான் வசிக்கின்றனர். வசுமதிக்கு இந்த வீடும் குடும்பமும் தான் உலகம். இது வெறும் செங்கல் மணலாலான வீடு மட்டுமன்று; அவர்கள் உணர்வோடு உறைந்து போன ஒன்று. எத்தனையோ சந்தோஷங்கள், அழுகைகள் என அனைத்தும் இங்கே தானே கண்டிருக்கின்றனர். நினைக்க நினைக்க விழிகள் உள்ளம் துடித்தது பெண்ணுக்கு.
“உங்கப்பா நல்லா இருந்திருந்தா வீட்டை அப்படியே வச்சிருந்துப்பாரா என்ன? புதுசா பெயிண்ட் அடிக்கிறேன், கதவை மாத்துறேன்னு எதாவது அழிச்சாட்டியம் பண்ணி இருப்பாரு மனுஷன்!” என்ற வசுமதியின் குரலில் கேலி இருந்தாலும் இறுதியில் வருத்தம் மேவி குரல் தோய்ந்தது.
“இன்னும் ஒரு வருஷத்துல அப்பா சரியாகிட்டா, புதுசா பெயிண்ட் அடிக்கலாம் மா. நம்ம ரூம் கதவைக் கூட மாத்திடலாம்!” என்று சோனியா தாயை சமாதானம் செய்ய, துளசி அவர்களை வேதனையுடன் பார்த்தாள். துக்கம் நெஞ்சைக் கவ்வியது. எதுவும் பேசாது அறைக்குள் அடைந்தாள்.
வசுமதியும் சோனியாவும் அறைக்குள் வர, தலையணையில் முகம் புதைத்து உறங்குவது போல விழிகளை மூடிய துளசியின் கன்னம் உவர்நீரால் பிசுபிசுத்தன. அவளருகே படுத்த சோனியா தமைக்கையின் மீது கையைப் போட்டு உறங்கிப் போக, துளசி விழித்தே கிடந்தாள். பணத்திற்கு என்ன செய்யப் போகிறேன் என்ற கேள்வி அவளது தூக்கத்தைப் பறித்திருந்தது.
சிறிய தொகையாய் இருந்தால் யாரிடமும் கடன் கேட்டிருக்கலாம். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை யாரிடம் சென்று கேட்பது எனத் அவளுக்குத் தெரியவில்லை. இருளில் எதையோ வெறித்த வண்ணம் படுத்திருந்தவள், சோனியாவின் கையை எடுத்துவிட்டு எழுந்து அமர, “க்கா… எங்கப் போற?” என சோனியா தெளிவற்ற குரலில் முனங்க, “தூங்கு சோனி, ரெஸ்ட் ரூம்தான் போறேன்…” என்றுவிட்டு எழுந்து தந்தை படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.
“ப்பா… வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க காசு வேணும்பா. யார்கிட்டே கேட்கன்னுத் தெரியலை பா. அம்மாகிட்ட, சோனிகிட்டே இன்னும் நான் சொல்லலை. சொன்னா வருத்தப்படுவாங்க இல்ல, அதான் பா!” என்றவள் அவரது கையைப் பிடித்தாள்.
“சீக்கிரம் சரியாகி வாங்கப்பா. எப்பவும் உங்க கையைப் பிடிச்சே நடக்கப் பழகிட்டு திடீர்னு தனியா நடன்னு விட்டுட்டுப் போய்டீங்க. இவ்வளோ சுமையை சுமக்க முடியாம தத்தளிச்சிட்டு இருக்கேன் பா. வந்து என் பாரத்தைக் கொஞ்சம் வாங்கிக்கோங்க பா!” என்று குரல் உடையப் பேசியவளிடம் மெல்லிய விசும்பல். இத்தனை பாரத்தை சுமக்க முடியவில்லை எனக் கத்திக் கூச்சல் போட்டது மனது. ஏன் தங்களுக்கு மட்டும் இத்தனை கஷ்டம் என எண்ணித் துவண்டு போனாள். ஒவ்வொன்றாய் சரி செய்ய அடுத்தடுத்த பிரச்சனைகள் வரிசையில் நின்றதில் மொத்தமும் உடைந்து போனாள். இதற்கு மேலும் முடியாது என மனம் ஊமையாய் அரற்ற, தன் பாரத்தை இறக்கி வைக்கும் மடை தெரியாது தத்தளித்துப் போனாள். எத்தனை நாட்கள் இந்தப் போராட்டம் என எண்ணும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.
தங்களது அறையில் அழுதால் தங்கைக்குத் தெரிந்துவிடுமே என இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் குபுகுபுவென வழிந்தது. அப்படியே அங்கே இத்தனை நேரம் அமர்ந்திருந்தவளின் முகத்தில் ஜன்னல் வழியே சாலையில் சென்ற வாகன ஒளி முகத்தில் பட, மூளை எதையோ கூற அடுத்த நொடி எழுந்துவிட்டாள்.
‘ஸ்கூட்டீ…’ என உதடுகள் முணுமுணுக்க, தனது இருசக்கர வாகனத்தை விற்றுவிடலாம் என சிந்தையில் சிந்தனை உதித்தது. அதை விற்றால் ஒரு கணிசமான தொகை கிடைக்கும் என்று தோன்ற, கொஞ்சம் நிம்மதி வந்திருந்தது இந்தப் பெண்ணிடம். தங்களுக்கேறற வீடு அமைந்ததும் வாகனத்தை விற்றுவிடலாம் என எண்ணம் வலுப்பெற்றது. தற்போதைக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
‘அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று வரலாம். அது ஒன்னும் அத்தனை கஷ்டம் எல்லாம் இல்லை. அவர்கள் அலுவலகத்திலே ஒரு சிலர் பேருந்தில்தான் வந்து செல்கின்றனர். நானும் அவர்களைப் போல சென்று வருகிறேன்!’ என நினைத்தவள், எழுந்து ஜன்னல் வழியே இருசக்கர வாகனத்தைப் பார்த்தாள். கண்ணப்பன் இறுதியாண்டு படிக்கும்போது மகளுக்காக வாங்கிக் கொடுத்திருக்க, இப்போது வீட்டு தேவைக்காக அதை விற்க வேண்டிய சூழ்நிலை.
‘அப்பாவுக்கு சரியாகிட்டா, புது ஸ்கூட்டீ வாங்கிடலாம்!’ என நினைத்து முறுவலித்தபடி உறங்கச் சென்றாள். ஆனாலும் அதை விற்கும் எண்ணம் வந்ததும் மனம் ரணப்படாமல் இல்லை. உயிரில்லாத பொருளை விட உயிருள்ள தன் குடும்பமே இப்போது அவளுக்குப் பிரதானம்.
***
“சைந்து, காஃபியைக் குடிச்சுட்டே வேந்தனைப் போய் எழுப்பு டி. மணி எட்டாச்சு, இன்னும் அவன் எழலை!” என்று நளினி சைந்தவியின் கையில் குளம்பியைக் கொடுத்தார்.
“எம்.டி இவனே பத்து மணிக்குப் போனா, ஸ்டாப்ஸ் எல்லாம் எப்போ வருவாங்க மா?” மகிழ் தாயை முறைத்தான்.
“ப்ம்ச்… அவன் ஆஃபிஸ் போறதே பெருசு, நீ அவனை எதுவும் சொல்லாத!” நளினி கண்டிப்பாய்க் கூற, “அவனை எதுவும் சொல்லிடாதீங்க..” எனப் பெரியவன் முனைத்தான்.
“சரி டா… கோபப்படாத நீ…” நளினி மகிழை சமாதானம் செய்ய, “அத்தை, அவருக்கு இவ்வளோ எல்லாம் வேணாம். போங்க, போய் மாமாவுக்கு சாப்பாடு எடுத்து வைங்க!” என்று தீக்ஷிதா இடையில் வந்து கணவனுக்கு உணவைப் பரிமாற, தாயையும் தாரத்தையும் முறைத்தான் அவன். சந்தனவேல் உண்ண அமர, அனைவரது பேச்சும் தடைபட்டிருந்தது.
“ண்ணா… ண்ணா… ட்ரீம்ல டூயட்டா?” எனக் கதவை தட்டிய சைந்தவிக்குப் பதில் கிடைக்கவில்லை.
“என்ன பண்றான் இவன்?” என யோசித்துக் கொண்டே கதவை அவள் ஓங்கித் தள்ள, அது திறந்து கொண்டது.
வேந்தன் அறையில் இல்லை. கையிலிருந்த குவளையை மேஜை மீது வைத்தவள், “மிஸ்டர் வேந்தன்…” எனக் கத்திக் கொண்டே குளியலறையில் தேடி கிடைக்காத தமையனை உள்ளறையில் இருக்கக்கூடும் எனக் கருதி அதை திறந்தாள். நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தான் வேந்தன்.
“இங்கேயே தூங்க வேற செய்றீயா அண்ணா?” என உள்ளே நுழைந்த சைந்தவியின் பார்வை ஒருமுறை அறையை சுழன்றது. நீண்ட நாட்கள் கழித்து இந்த அறைக்குள் நுழைவதால் ஒவ்வொன்றையும் கவனித்தவாறு இருந்தவள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைக் கண்டு அதிசயித்துப் போனாள்.
“அண்ணி ஃபோட்டோ… திருட்டு அண்ணா!” என அவள் கூச்சலிட, வேந்தன் அதில் திடுக்கிட்டு எழுந்திருந்தான்.